Saturday, February 13, 2016

தேர்தல் 2016
ஸ்டாலினுடன் ஒரு சந்திப்பு

234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணத்தை முடித்த பின் நேற்று பத்திரிகையாளர்களுடன் நடத்திய உரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.முதல் கேள்வி எழுப்பும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நானெழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. எனவே அதைத் தனியாக விவரிக்கப் போவதில்லை. (நாளிதழ்கள் வாசிக்காத நண்பர்களுக்காக அவை கீழே தனியே தரப்பட்டுள்ளன.)

எல்லோருக்கும் மொத்தமாக ஒரு எலக்‌ஷன் கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்து நாற்காலியில் அமர்ந்து விடாமல், ஸ்டாலின் அறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்துக் கை குலுக்கினார். செய்தியாளர்கள் அருகிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவரது பயணம் பற்றி தயாரிக்கப்பட்டிருந்த குறும்படத்தைப் பார்த்தார். இதன் மூலம் அறையில் ஓர் இணக்கமான, தோழமையோடு உரையாடும் சூழலை உருவாக்கினார்.

பின் அவருக்கென்று தனியே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியில் அமராமல் நின்று கொண்டே உரையாற்றவும், பதிலளிக்கவும் செய்தார்.

அரசியலை நோக்கை ஒதுக்கிவிட்டு, ஒரு புரபஷனலாகப் பார்த்தால் அவரது உடை, கைகுலுக்கல், குறும்படம் எல்லாவற்றிலும் ஒரு திட்டமும் நுட்பமும் இருந்தது. தரமான தொழில்நுட்பமும், தொழில்முறை விளம்பர உத்திகளும் காணப்பட்டன. அதற்குக் காரணமாக இருந்த, பின்னிருந்து உழைத்த, மீடியா குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

அரசியல் தலைவர்களை, குறிப்பாக ஆளும் கட்சித் தலைவர்களை அணுகிப் பேசுவது, என்பது கடினமாகிவிட்ட இன்றையச் சூழலில் அடித்தள மக்களைத் தேடிச் சென்று சந்திப்பது என்ற அணுகுமுறை (அதன் பின் அரசியல் லாபம் என்ற நோக்கமிருந்தாலும்) வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

ஆனால் ஸ்டாலினின் இந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவருக்கு எப்போதும் அடித்தளத்தின் துடிப்பை, கட்சி நிர்வாகிகள் என்ற வடிகட்டிகளைத் தவிர்த்து விட்டு, நேரிடையாக அறிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் உண்டு. அறிவாலயத்திற்கு வரும் கட்சிக்காரர்களானாலும் சரி, மேயராக இருந்த போது நகரில் இருந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை அவர்கள் வசிப்பிடங்களில் சென்று சந்தித்த போதும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் சரி இதைக் கைவிடாது பின்பற்றி வந்திருக்கிறார். ஆனால் அவருக்குக் கிடைக்கும் feedbackஐ என்ன செய்கிறார் என்பது இன்றுவரைக்கும் தெளிவாகவில்லை.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல் என்ற இரண்டையும் கைவிடாது இருக்கிறார். அவரைச் சீண்டி கோபமடையச் செய்வது கடினம். இந்தப் பண்புகளையும், அடித்தளம் நோக்கிய outreachயும் தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் தனக்கென ஒரு வசீகரத்தை அவர் உருவாக்கிக் கொள்ள இயலும்

செய்தியாளர்களைக் கையாள்வதில் அவருக்குக் கருணாநிதியிடம் உள்ள சாதுர்யங்கள் இல்லை. சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளிக்கிறார் என்றாலும் அவரைப் போன்ற சிலேடை, சொல்விளையாட்டு, நகைச்சுவை இவரிடம் குறைவு. செய்தியாளர்கள் “யாருடன் கூட்டணி?” என்று கருணாநிதியிடம் கேட்டால்,”யாருடன் வைத்துக் கொள்ளலாம், நீங்க என்ன சொல்றீங்க?” என்று பதிலுக்கு கேள்வியை நம்மிடம் திருப்புவார். ஆனால் ஸ்டாலின் அதற்கு சின்சியராக பதில் சொல்ல முயல்கிறார்.(தவிர்க்க முடியாத இடங்களில் மழுப்புகிறார் என்ற போதும்)

அரசியல் வெப்பத்தில் இதையெல்லாம் இழந்துவிடாமல் இருந்தால், ஸ்டாலின், அன்புமணி போன்றவர்களால் ஒரு மேம்பட்ட அரசியல் கலாசாரம் தமிழ் நாட்டில் அரும்ப வாய்ப்புண்டு

இனி என் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்

கேள்வி: 234 தொகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள்? எல்லாத் தொகுதிகளிலும் காணப்படும் பொதுவான அம்சம் என்ன? அடித்தள மக்களின் பொது விழைவு, பொது தேவை என எதை உணர்கிறீர்கள்?

மக்களை பொறுத்தவரையில் அடிப்படை தேவையாக தமிழகத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதாக இருக்கிறது.
வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டுள்ளது

கேள்வி:- ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்று அறிவித்திருக்கிறீர்கள். வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவீர்கள்? இலவசங்களைக் கைவிடுவீர்களா? எங்கள் மீது அதிக வரி விதிப்பீர்களா?

பதில்:- வருவாயை பெருக்க மாற்று திட்டங்கள் வைத்திருக்கிறோம். அதை தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால் மதுவிலக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம்

கே. கடந்த சில நாள்களாக, மக்கள் நலக் கூட்டணி பற்றி திமுக தரப்பு விமர்சனங்களில் ஒரு பதற்றம் காணப்படுகிறது. நேற்று ஜி.ஆரை (ஜி.ராமகிருஷ்ணன், மார்க் கம்யூ) விமர்சித்து கருணாநிதியே எழுதியிருக்கிறார். ஏன் இந்தப் பதற்றம்? அவர்களை உங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் எனக் கருதுகிறீர்களா?

பதில்: அவர்களை நாங்கள் ஒரு பெரிய சக்தியாகக் கருதவில்லை. ஆனால் எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அவை உண்மை எனக் கருதப்பட்டுவிடும்

கே: காங்கிரஸ் -திமுக கூட்டணி எந்த நிலையில் உள்ளது?
பதில்: நாளை குலாம் நபி ஆசாத் வருகிறார்.அதன் பின் தெரியும்

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மிக நீண்ண்ண்ண்ண்ட
இடைவெளிக்குப் பின்
புதிய, சுவையான தகவல்களுடன் வந்துள்ளீர்கள்...!