Friday, November 19, 2010

ஆணுக்கும் அந்த வலி உண்டா?

முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது.

ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது .

எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் ஒன்றுதான்.அது: அன்பு இல்லம்

பலர் நினைப்பது போல பறவைகள் கூடுகளில் தங்குவது இல்லை. மனிதர்களைப் போல கூடுகளில் உறங்கி மறுநாள் விடிந்ததும் வேலைக்குக் கிளம்புவதில்லை. அவை கட்டுவது வீடுகள் அல்ல. விடுதிகள். பிரசவ விடுதிகள். முட்டையிடவும். முட்டைகளுக்குள்ளிருந்து முகிழத்தெழும் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், சிறகு முளைக்கும் வரை அவற்றைச் சீராட்டவும் உருவாக்கப்படும் இடம்தான் இந்தக் கூடுகள்.

காக்கையின் கூடுகள் சற்றுப் பெரிதுதான். விட்டம் ஒரடியாவது இருக்கும். முன்பக்கம் முரட்டுச் சுள்ளிகளால் அமைந்திருந்தாலும் உள்ளே இருக்கும் ’கிண்ண’த்தில், மூன்றங்குல ஆழத்திற்கு மெத்து மெத்தென்று வைக்கோல், தென்னை நார், சணல் கயிறு உலர்ந்த இலைகள் இவற்றைக் கொண்ட ஒரு ’மெத்தை’ இருக்கும்.

ஒரு குச்சியைப் பொறுக்கிக் கொண்டு உயரே பறந்த அந்தக் காக்கையைக் கண்ட போது எனக்குள் ஒரு கேள்வி வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கை ஆணா? பெண்ணா? தாயா? தந்தையா?

முட்டையிலிருந்து வெளிவந்து மூன்று வாரங்கள் வரை காகங்களுக்குப் பறக்கத் தெரியாது. (முதல் நாள் அதற்குக் கண்ணே தெரியாது) அந்தக் காலங்களில் அங்கும் இங்கும் நகராமல் அம்மா காக்கா அருகிலேயே இருக்கும். அப்பாக் காக்கா உணவு தேடிக் கொண்டுவரும். ஆனால் வீட்டைக் கட்டுவது இருவரும் சேர்ந்துதான் என்கின்றன புத்தகங்கள்.

இயற்கை இந்தப் பறவைகளுக்கு இயல்பாகக் கற்றுக் கொடுத்திருக்கிற செய்திகளை ஆற்றலும் அறிவும் மிக்க மனித குலம் போராடிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது விளக்கமுடியாத வேடிக்கைகளில் ஒன்று.

காக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த என்னைத் தொலைக்காட்சி அழைத்தது. இயற்கையின் அதிசயங்களிலிருந்து மனிதர்களின் விசித்திரங்களுத் திரும்பினேன். இந்திரா நோயியின் உரையாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரா இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி. இந்தியர். சென்னையில் வளர்ந்தவர். ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்திற்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்ற பிரமிப்பிலேயே ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டு வந்திருக்கின்றன. இந்தப் பேட்டியும் அந்தக் கோணத்திலேயே அமைந்திருந்தது.

“நீங்கள் மேற்கொள்ளூம் நிர்வாகச் செயல்பாடுகளை ஒரு பெண்ணின் அணுகுமுறை என்பதாகவே உலகம் பார்க்கிறது. அது உங்களை எவ்வளவு எரிச்சலடையச் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் பெண்களாகிய நாம் தொழில் முறையில் இதை நிறையவே எதிர்கொண்டு வருகிறோம்.” என்று உரையாடலுக்குக் களம் அமைக்கிறார் பேட்டி காணும் பெண். அவர் நாடறிந்த பத்திரிகையாளர் பர்க்காதத்.

”இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை”. என்கிற இந்திரா, தொடர்ந்து “எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிற்து. பெண்ணின் அணுகுமுறை என்பது ஒரு வணிக முயற்சியின் மனிதப் பக்கம்.( the human side of the enterprise,) என்கிறார். ” ஒரு உதாராணம் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன செய்தி சுவையானது.
“எங்கள் நிறுவனத்தில் இருக்கும் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஊழியர்களுக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நான் கடிதம் எழுதுகிறேன். வேறு வேலைகளின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதற்காக என் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒரு பதினைந்து நிமிடம் இதற்காகச் செலவிடுகிறேன்.. இந்தக் கடிதங்கள் ஒரு பக்க அளவில்தான் இருக்கும் ஒரே ஒரு பக்கம்தான். பிசினஸ் விஷயம், சொந்த விஷயம் எல்லாம் அதில் எழுதுவேன். இரண்டு வாரத்திற்கு முன் எழுதிய கடிதம் என் மகளைப் பற்றியது. அவள் இப்போது மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும் முதல் நாளன்று நானும் என் கணவரும், கையில் காமிராவை எடுத்துக் கொண்டு எங்கள் தெருமுனயில் உள்ள ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்று ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் அவளோடு படம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆண்டும் அவள் புறப்படும் போது நாங்களும் காமிராவும் கையுமாகக் கிளம்பினோம். அவள் “ அம்மா! நான் இன்றிலிருந்து காரில் போகப் போகிறேன். நானே காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். அவள் இப்போது சிறுமியல்ல, வளர்ந்த ஒரு இளம் பெண் என்பது அப்போதுதான் எங்கள் புத்தியில் உறைத்தது. ஒரு கணம் நிலை குலைந்து போனோம். அவள் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ந்டந்தது, நாங்கள் அவளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றி உட்கார வைத்தது, அவள் மூஞ்சியை ’உம்’ என்று வைத்துக் கொண்டு டாடா காட்டியது, பஸ் மெல்ல நகர்ந்து சென்றது எனப் பழைய காட்சிகள் நினைவில் வந்து போயின. ஸ்கூல் யூனிபார்மில் இருந்த அந்தச் சிறுமி என்ன ஆனாள்? இன்று ஒரு இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். காலம் பறந்து கொண்டிருக்கிறது. நான் இதை என் சக ஊழியர்களுக்கு எழுதினேன். காலம் பறந்து கொண்டிருக்கிறது நண்பர்களே உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். ஏனென்றால் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நாள் வரும் போது உங்கள் உள்ளம் உடைந்து போகும். அதன் பின் இந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது என்று எழுதினேன். ஒரு ஆண் தலைமை அதிகாரி இதை எழுதியிருப்பாரா?” என்று முடித்தார் இந்திரா. .

சொல்லுங்கள், ஆண் அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பார்களா? இந்திரா சொன்னதைப் பற்றி ஆண் காகங்கள், -மன்னிக்கவும் - ஆண் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Sunday, November 07, 2010

ஈரம் படிந்த இலக்கியம்

எழுந்திருக்கும் போது வீசி எறிந்த போர்வையைப் போல வீதியெங்கும் ஈரம் ஓர் ஒழுங்கற்றுப் படர்ந்து கிடக்கிறது. தீபாவளிக்கு நீர்ச்சேலை நெய்ய திரண்டு நிற்கின்றன மேகங்கள். எவரும் அழைக்காமலே வந்து நிற்கிறது மழைக்காலம். ”இப்ப இந்த ம்ழையில்லை என்று எவன் அழுதான்” என எரிச்சல்படும் நகரவாசிகள் மீது சரம் சரமாய் பூந்தூறல் தூவிப் புன்னகைக்கிறது வானம்.
கார்காலம் மனதில் கவிதையும் சுரக்கும் காலம். முன்பு எழுதிய வள்ளுவனிலிருந்து இன்று மலர்ந்த புதுக் கவிஞன் வரை மழையைப் பாடாத கவிஞர்கள் எவரும் இல்லை..மழையைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனும் இல்லை. இந்திய இலக்கியத்தின் ஏராளமான பக்கங்களை மழை நனைத்துக் நடக்கிறது. படித்தவற்றில் பல இன்று உலர்ந்து விட்டன. சில இன்னும் வடியாமல் உள்ளேயே தங்கிவிட்டன.

வானத்தினுடைய சிறப்பே மழைதான் என்கிறார் வள்ளுவர். இறைவனுக்கு அடுத்ததாக இரண்டாம் இடம் பெற்று அது குறளில் விரிகிறது. இரண்டு வரிகளுக்குள் அவர் தொன்மமும் பேசுகிறார். அறிவியலும் பேசுகிறார். தங்கக் காசின் இரண்டு பக்கங்கள் போல தமிழனின் இரண்டு முகங்கள் இவை.

கடலில் உள்ள நீர் ஆவியாகி, மேகமாகி மழையாக மண்ணுக்குத் திரும்புகிறது என்பது நாம் ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயின்ற அறிவியல். அதை இரு வரிகளில் இலக்கியமாகச் செய்திருக்கும் அற்புதம் திருக்குறள்.

முற்றும் அறிந்த ஓரு முது அறிஞானகப் பேசுகிறான் வள்ளுவன் என்றால் ஒரு குழந்தையைப் போலக் குதூகலிக்கிறாள் ஆண்டாள். வாளியிலிருந்து குவளை குவளையாக நீரை முகர்ந்து கொட்டுவதைப் போல ஆழியிலிருந்து மொண்டு மழையாகக் கொட்டு என்கிறாள் அவள். வெண்ணையைத் திருடி வாய்க்குள் ஒளித்து வைத்துக் கொண்டதைப் போல கண்ணன் மழையையும் மறைத்து வைத்திருக்கிறானோ என்ற சந்தேகத்தில் “ஆழி மழைக்கண்ணா! நீ ஒன்றும் கை கரவேல்!” என்று ஒரு அதட்டலுடன் ஆரம்பிக்கிறது அவளுடைய பாடல்.

பாரதிக்கோ மழையைக் கண்டால் கன குஷி. என்ன தெய்வீகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம், கண்டோம் கண்டோம்’ எனத் தாளங்கள் கொட்டிக் குதித்துக் கொண்டாடுகிறார்.

ஈரம் படிந்த இலக்கியத்தின் பக்கங்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒரு குடியானவனுடையது. பள்ளுப் பாட்டு என்று எனது பாடப் புத்தகங்கள் சொல்லின. 16ம் நூற்றாண்டில் விவசாயிகள் வளர்த்த இலக்கியப் பயிர் அது.

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி –மலை
யாள மின்னல் ஈழ மின்னல்
சூழ மின்னுதே
என்ற பாடலை நீங்களும் என்றேனும் ஒரு நாள் படித்திருக்கலாம்.

அநதப் பாடலை நடத்திய ஆசிரியை அந்த வகுப்பை ஒரு நாடகக் காட்சி போலவே அமைத்து விடுவார். 'மின்னுதே'வில் 'தே' விற்கு ஓர் அழுத்தம் கொடுத்து தரையை ஓங்கி உதைக்க வேண்டும். மொத்த வகுப்பும் அந்த மாதிரி செய்யும் போது ஒரு tap dance போல இருக்கும். 'கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே' என்னும் போது உய்ய்ய்ய் என்று சப்தமிட்டுக் கொண்டு ஒரு பையன் இடமிருந்து வலமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவான். 'சொறித் தவளை கூப்பிடுகுதே' என்னும் போது மாணவிகள் குரலை மாற்றைக் கொண்டு தவளை போல ஒலி எழுப்புவார்கள். குஷியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் கிழக்கே ஈழம். மேற்கே , மலையாளம் இந்த இரண்டு திக்கிலிருந்தும்தான் தமிழகத்திற்கு மழை வர வேண்டும். வடக்கிலிருந்து வராது. அங்கிருந்து எப்போதாவது குளிர்காற்று வீசும். தெற்கிலிருந்தும் அதாவது பொதிகை மலையிலிருந்தும் காற்று வீசும். ஆனால் அது இதமான தென்றல். வடக்கே இருந்து வருவது வாடை, தெற்கே இருந்து வருவது தென்றல் என்று தமிழர்கள் பெயர் வைத்தார்கள். மலையாளத்திற்கும் ஈழத்திற்குமாக அதாவது மேற்கிற்கும் கிழக்கிற்குமாக மின்னல் வெட்டுகிறது என்றால் வரப்போவது பெரிய மழையாகத்தான் இருக்கும். அந்தப் பெரிய மழை குறித்துக் கவலை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குஷிதான்.

மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது.

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்


இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

Friday, October 22, 2010

சின்ன தேசம் சொனன பாடம்

காலம் வீசி எறிந்த காகிதக் கணை போல வாசலில் வந்து கிடந்தது செய்தித்தாள்..எடுத்துப் பிரித்தேன். கர்நாடகத்தில் இந்திய ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்க காமன்வெல்த்தில் இளைஞர்கள் ஜெயித்துக் கொண்டிருந்தார்கள்.. ஆலம் விதை விழுந்த கோவில் சுவர் போல நம் அமைப்புக்கள் மெல்ல மெல்ல விரிசல் கண்டு கொண்டிருக்கும் அதே வேளையில், காட்டுப் புதர்களில் கண்விழிக்கும் மலர்கள் போல யாருடைய உதவியும் இன்றி நாட்டில் திறமைகள் மலர்ந்து கொண்டிருக்கின்றன.

மழைக்காலத்தில் மாநகரச் சாலைகளில் நடப்பவனைப் போல, விளம்பரங்களுக்கு நடுவே விழுந்து கிடந்த செய்தித் தீவுகளில் தத்தித் தாவி மேய்ந்து கொண்டிருந்தேன்.கண்கள் ஒரு செய்தியில் வந்து நின்றன

பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாள்களாகச் சிக்கிக் கொண்ட முப்பத்தி மூன்று சுரங்கத் தொழிலாளர்களும் முழுசாக மீட்கப்படட்ட செய்தி சிந்தையைக் கிளறியது. ‘மானுடம் வென்றதம்மா’ என மனம் கம்பனைப் போல மகிழ்ந்து திமிர்ந்தது.

அறுபத்தி ஒன்பது நாள்கள்! அவர்களது உள்ளத்தில் உலவிய உணர்வுகள் என்னவாக இருந்திருக்கும்? என் கற்பனைகள் விரியத் துவங்கின.

அச்சம். அதுதான் முதலில் தோன்ற்யிருக்கும்.ஏனெனில் அவர்கள் இருப்பது இரண்டாயிரம் அடிக்குக் கீழ். கேணிக்குள் வைத்து மூடியதைப் போல மண் சரிந்து வழி மூடிக் கிடக்கிறது.. சுரங்கத்தில் மாட்டிக் கொண்டவர்கள் மீண்டு வந்த சம்பவங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. அச்சம் அவர்களை நிச்சயம் தின்றிருக்கும்.

அந்த அச்சத்தை அவர்கள் ஒற்றுமை என்ற உளியால் உடைத்தெறிந்தார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உணமை அவர்களுக்கு உறைத்த நேரத்தில் ஒருவருக்காக மற்றொருவர் விட்டுக் கொடுக்க முன் வந்தார்கள். உணவைப் பகிர்ந்து கொண்டார்கள். உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு தனிமனிதனாக உள்ளே போனார்கள். நெருக்கடி நேரத்தில் ஒரு குடும்பத்தைப் போல ஒன்றுபட்டார்கள். வெளியேற வாய்ப்பு வந்ததும், நீ போ முதலில் என ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த நேசம் நமக்கு இதைச் சொல்கிறது. அவர்களுக்குள் இளையவராக இருந்தவரை முதலில் அனுப்பியதும், தலைவராக இருந்தவர் எல்லோரையும் அனுப்பிவிட்டுக் கடைசியாக வெளியேறிய்தும் தலைமைப் பண்பை மட்டுமல்ல மனிதப் பண்புக்கும் உதாரணமாக ஒளிர்கின்றன.

வருவார்களா, வந்தாலும் உடலாக வருவார்களா, உயிரோடு வருவார்களா என வெளியே கவலையோடு காத்திருந்தவர்களிடையே கனத்த நம்பிக்கைகளும் உலவின. அவர்கள் அந்தப் பாலைவனத்தில் தங்களது தற்காலிக முகாமிற்கு வைத்த பெயர் “நம்பிக்கை முகாம்” (Camp Hope)

இந்த வெற்றியின் ஆணிவேர் அந்த நாட்டு அரசாங்கம். சுரங்கம் அரசினுடையது. உலகில் தாமிரம் அதிகம் உள்ள நாடு சிலி. சிறிய தேசம். பொருளாதார ரீதியாகத் தலை நிமிர்ந்திருக்கும் லத்தீன் அமெரிக்க தேசம் அது ஒன்றுதான். சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை விரைந்து மீட்டெடுக்க என்ன வழி என அது யோசித்தது, மூன்று நிறுவனங்கள் துளைபோடும் பணியில் இறக்கி விடப்பட்டன. மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு தோண்ட்ட்டும் என அது முடிவு செய்தது.

கிறிஸ்யியன் சயின்ஸ் மானிட்டர் என்ற இதழ், இந்த வெற்றிக்கு ஐந்து காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. 1.காத்திருந்த குடும்பங்களின் நம்பிக்கை 2.சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்கள் காட்டிய பொறுமை 3.மீட்பிற்குப் பயன்பட்ட உயர்தொழில்நுட்பம் 4.பொறுப்பான அரசாங்கம் 5.உயிர்கள் முக்கியம் பணமல்ல என்ற மனோபாவம்

யோசித்துப் பார்த்தால் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மட்டுமல்ல எந்த நாட்டையும் மீட்டெடுக்க இந்த ஐந்தும் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. காந்தஹாருக்கு விமானம் கடத்தப்பட்டபோது நம்மிடம் இந்த ஐந்தும் இருந்திருந்தால் பின்னாளில் மும்பையில் குண்டுகள் வெடித்திருந்திருக்காது.

உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொருநாளும் நமக்கான பாடங்கள் விரிந்து கொண்டிருக்கின்றன. கற்பது எப்போது?

(புதிய தலைமுறை இதழுக்காக)

Friday, October 15, 2010

வெறும் நாள்களாகும் திருநாள்கள்

என் ஜன்னலுக்கு வெளியே விரியும் வீதி முனை ஒரு வியாபாரத் தலமாகி வெகு நாள்களாகி விட்டது.பழமும் பூவும் விற்கிற அந்த நடமாடும் கடைகள் பண்டிகை நாள்களில் புது வேடங்கள் புனையத் துவங்கும். பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வரும் காலத்தில், ஏரிகளிலிருந்து வாரி வரப்பட்ட களிமண், அச்சுக்களில் அழுத்தப்பட்டு, விநாயக்ராக வடிவம் பெறும். தென்னங்குருத்துத் தோரணங்களும், வண்ணக் குடைகளும் ஆனைமுகத்தாருக்கு அருகிலேயே கடை விரித்திருக்கும்.நவராத்திரி நாள்களில் ஜம்மென்று பொம்மைகள் நம்மை வரவேற்கும்.பொரியும், பூசணியும் கூவி விற்கப்பட்டால் ஆயுத பூஜை வந்துவிட்டது என அர்த்தம். தீபாவளிக்குப் பட்டாசுக் கடைகளும், பொங்க்லுக்கு கரும்பும் நாள்காட்டிகள் இல்லாமலேயே நமக்குக் காலத்தை அறிவிக்கும்.

பருவத்திற்கேற்ப பண்டங்களை மாற்றும் இந்த நடைபாதை வணிகர்களின் நம்பிக்கை என்னை நிறையவே யோசிக்க வைதததுண்டு. பண்டிகைக்கால தேவைகள் மீதும், பக்தியைப் பிரகடனப்படுத்த எண்ணும் வாடிக்கையாளரின் ஆவல் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமல்ல, தங்கள் மீதும் வாழ்வின் மீதும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அபாரமானது. கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் அடித்தளமாக உள்ள இந்த நம்பிக்கை விற்பனைக்கல்ல. ஆனால் நம்பிக்கை இல்லாது போனால் எந்த விற்பனையும் இல்லை.

நம் நம்பிக்கைகளின் கொண்டாட்டமே நம் பண்டிகைகள். ஒரு காலத்தில் அவை இயற்கைக்கும் மனிதனுக்கும் இருக்கும் உறவை எண்ணி மகிழும் நன்நாளாக இருந்தன. உழைப்பைப் போற்றவும், ஊரின் ஒற்றுமையைப் பேணவும், கலைகளை கெள்ரவிக்கவும் உகந்த தருணங்களாக அந்தத் திருநாள்கள் திக்ழந்தன.
நனைத்துப் போகும் நதியை நினைத்து மகிழ ஓர் ஆடிப்பெருக்கு..வானத்தில் ஊர்ந்தாலும் இத்தரையில் ஒளிபரப்பும் நிலவுக்கு ஒரு சித்திரைப் பெளர்ணமி.. கரகமும், காலற்ற ’பொய்’ குதிரைகளும் நடம் புரிய்ம் கோயில் கொடை. காவடி கட்டுதலின் வழியாக வாழ்வில் சமநிலையைக் கற்றுத் தரும் வைகாசிப் பால்குடங்கள். ஊர் கூடி இழுத்த தேரில் உட்கார்ந்து வந்த சமூக ஒற்றுமை.. கதிரவனுக்கும், கழனிகளுக்கும், காளைகளுக்கும் நன்றி சொல்லும் நாளாக அமைந்த பொங்கல்.. கருவிகளை வணங்குவதற்கு வந்த ஆயுத பூஜை.

எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் ஏதோ அர்த்தம் இருந்தது.. அறிவதற்கும் பகிர்வதற்கும் அந்தப் பண்டிகைகள் வாய்ப்பளித்தன.

இன்று அவை வீட்டில் படுத்துறங்கும் விடுமுறைத் தினங்களாக ஆகிவிட்டன. சாரமற்ற சம்பிரதாயமாக, சிந்தனை அற்ற சடங்குகளாக முடங்கிப் போயின. இல்லையென்றால் கூளங்களைக் களைவதற்காக, குப்பைகளை அப்புறப்படுத்த, அமைந்த போகித் திருநாளில் நாம் டயர்களைக் கொளுத்தி சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்க மாட்டோம்..திருவிழாக்களை மது விழாக்களாகத் திரித்திருக்க மாட்டோம். கம்பீரம் தொனிக்க வேண்டிய கலை அசைவுகளை சீழ் பிடித்த சினிமாப் பாட்டிற்கு ‘ஸ்டெப்’ போட் வைக்கும் சிறுமையாகக் குறுக்கியிருக்க மாட்டோம்..

ஊரோடு கலந்து உற்வாடக் கிடைத்த ஒரு வாய்ப்பை, தொலைக்காட்சிகளின் முன் அமர்ந்து, பார்த்துச் சலித்த, அல்லது பார்க்கத் தவிர்த்த படங்களைக் கண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க மாட்டோம்.

இன்று இயற்கையோடு நம்க்கு இருக்கும் உறவை நினைவு படுத்துவது இந்தத் திருநாள்கள் அல்ல. விளக்குகளை அணைத்து வைக்கும் 10 10 10 இருள் நாள்களே...

.இனி ஒரு விதி செய்வோம்

ஓவ்வொரு திருநாளையும், தின்று விளையாடி இன்புற்று இருக்கும் நாளாக மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உதவும் ஓர்நாளாக மாற்றுவோம். இனி நீர்வளத்தைப் பேண நினைவூட்டுகிற நாளே நமக்கு ஆடிப் பெருக்கு. சமூக நல்லிணக்கதைக் கொண்டாடவே கோயில் கொடை... இயற்கை வேளாண்மைக்கு எடுக்கிற திருவிழாவே பொங்கல். தேசததைத் தின்னும் தீமைகளை வீழ்த்துகிற நாளே தீபாவளி.. எழுத்தறிவற்ற ஒருவருக்கு, அல்லது கணினியைப் பழகியிராத கரங்களுக்கு, கற்றுத் தரும் நாளே சரஸ்வ்தி பூஜை.,. சூழலை மாசு படுத்தாத தொழில்நுட்பத்தை வாழ்த்துகிற நாளே ஆயுத பூஜை..

கடவுள்களை வணங்குவோம். மனிதர்களைப் போற்றுவோம். இயற்கைப் பேணுவோம். இதுவே நமக்குத் திருவிழா.

அமைதி அளித்த தீர்ப்பு

இரவு என் ஜன்னலுக்கு வெளியே இரு கரு மேகங்கள், மோதிக்கொள்ளும் முனைப்போடு நிற்கும் யானைகளைப் போலத் திரண்டிருந்தன. அவ்வப்போது எழுந்து அடங்கிய தூரத்து இடி முழக்கம் அச்ச அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது. என்னாகுமோ என்ற கவலை உள்ளம் முழுதும் விரவிக் கிடக்க உறங்கப் போனேன். விடிந்தது. வான் மேகங்கள் வந்த சுவடு இல்லாமல் காணாமல் போயிருந்தன. பூமியெங்கும் வெளிச்சம் பரவியிருந்தது - என் உள்ளத்தைப் போலே

ராமர்-பாபர் வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை விட தீர்ப்புக்குப் பின் தேசம் எப்படியிருக்கும் என்பதே என் கவலையாக இருந்தது. மத உணர்வுகள் மனித உணர்வுகளைத் தின்றபோது சிந்திய இரத்தத்தின் கறைகள் இந்திய வரலாற்றின் வழி நெடுகச் சிதறிக் கிடக்கின்றன. காஷ்மீர் கனன்று கொண்டிருக்கிறது, சின்னப் பூசலையும் பெரும் தீயாக ஊதிப் பெருக்க அன்னிய சக்திகள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றன, வாக்கு வங்கிகளைக் காத்துக் கொள்ள அரசியல் வல்லூறுகள் வாய்ப்புக்களைத் தேடி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன, இன்னொரு மதக்கலவரத்தை இந்தியா தாங்குமா? சரித்திரகால் மனிதர்களுக்காக சம்கால் மனிதர்களை வெட்டிச் சாய்க்கிற வெறி வீதிகளை நிறைக்குமோ? வறுமைக்கு நடுவேயும் திறமையால் உய்ர்ந்த் வாலிபனைப் போல இந்த தேசம் கண்டுவந்த் வளர்ச்சி வன்முறைக்கு பலியாகுமோ? கவலைகள் என் மன வானில் கருமேகங்களைப் போல படர்ந்தன்.

அடுத்த நாளே அந்தக் கவலைகள் அர்த்தமற்றுப் போயின. “இரு தரப்பு வக்கீல்களும் சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர் வெற்றி யாருக்கு என்பது விளங்கவில்லை” என்று பத்திரிகைகள் எழுதின. வெற்றி நிச்சயமாக இந்தியாவிற்குத்தான். எந்தவித உரசலுமின்றித் தேசம் இயங்கிக் கொண்டிருந்தது என்பதே அதற்கான சாட்சி. மஸ்ஜித்தா? கோவிலா என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை எங்கள் இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதுதான். மதங்களின் பெயரால் அரசியல் நடத்தவும் அதிகாரம் பெறவும் முயன்ற சில அடிப்படைவாத சக்திகளோ இந்தப் பிரசினையைப் பெரிதுபண்ணி வன்மங்களை வளர்த்தெடுத்தன என்பதை மக்கள் கடைப்பிடித்த அமைதி உரத்த குரலில் சொன்னது. தீர்ப்பு பதற்றத்தை தணித்தது. ஆனால் கேள்விகளை எழுப்பியிருக்கிறது

ஆலமரத்தடியில் அமர்ந்து தீர்ப்புச் சொல்லும் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பு போல் அமைந்துவிட்டது என்று விமர்சன்ங்கள் எழுந்திருக்கின்றன. ச்ட்டத்தைப் பார்க்கவில்லையென்றும், சரித்திரம் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் முணுமுணுப்புக்கள் முளைத்திருக்கின்றன.

இது ராமர் பிறந்த இட்ம்தான் எனக் குறிப்பிடுவதன் மூலம் இந்துக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் ஏற்றிருக்கிறது. எந்த வழிபாட்டுத் தலத்தையும் இடித்து மஸ்ஜித் கட்டப்படவில்லை எனச் சொல்லியிருப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் கருத்தையும் அது ஏற்றிருக்கிறது. சட்டவிதிகளும் சரித்திரமும் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கைகள் கெளரவப்படுத்தப்பட்டிருகின்றன..பட்டை கட்டிய குதிரையைப் போல சட்டததை மாத்திரம் பார்த்து உண்ர்வு ரீதியான இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வு சொல்ல முற்பட்டால் அது அமைதிக்கு எதிரான தீர்ப்பாக நல்லிணக்கத்தைக் கெடுக்கிற தீர்ப்பாக ஆகியிருந்திருக்கக் கூடும். நாட்டின் அமைதியைவிடச் ச்ட்டங்களோ சரித்திரமோ முக்கியமானவை அல்ல. இன்றைய இந்தியாவிற்குத் தேவை இதயம். வெறும் மூளைகள் அல்ல

சகோதரர்களுக்குள் சண்டை வேண்டாம் இருப்பதைப் பங்கிட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருப்பதன் அடிநாதம் சர்ச்சைகள் முடங்கட்டும், ச்மரசம் நிலவட்டும் என்பதுதான்.

அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய சமரசத்தை, மதவாதிக்ளால் ஏற்படுத்த இயலாத சமரசத்தை நீதிமன்றம் ஏற்படுத்த முனைந்திருக்கிறது. அதற்காக நாம் அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

அயோத்தி மட்டுமே இந்தியா அல்ல. அது அதைவிடப் பெரியது. கடந்த கால கசப்புகளை மறந்து நிகழ்கால நிஜங்களை ஏற்று எதிர்காலத்தை நோக்கி இந்தியாவை இட்டுச் செலல் வேண்டிய் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை நினைவூட்டமட்டுமல்ல, நிறைவேற்றியும் இருக்கிறது நீதி மன்றம். அமைதிக்குப் பங்களிக்க்ச் சொல்லி அழைக்கிறது காலம். அதற்குச் செவி கொடுப்போம்.

நேரம் இதுதானா?

என் ஜன்னலுக்கு வெளியே எழும் ஓசைகளேப் பல நேரங்களில் என்னை விழிப்படையச் செய்திருக்கின்றன. சற்றே கூவும் ஒற்றைக் குயிலின் ஓசைகளாகவே அவை எப்போதும் இருந்ததில்லை. சேவல்கள் சென்னையிலிருந்து விடைபெற்றுச் சென்று வெகு நாட்களாகிவிட்டன. சண்டையிடுவதைப் போல சர்ச்சிக்கும் காக்கைக் குரல்களைக் கேட்டுக் கண்விழிக்கும் காலைகளே வழக்கமாகிவிட்டன. இரைந்து கரையும் இந்தக் காக்கைகளை நாடாளுமன்றத்திலே அமர்த்திப் பார்த்தார் பாரதி. எனக்கென்னவோ இன்று இந்தக் காக்கைகள் ஊடக்ங்களுக்குள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டனவோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து ’தேசிய’ ஊடகங்களில் நடைபெறும் ’விவாதங்கள்’ ‘சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர், மிகச் சலிப்புத் தருகிறத்டி சகிப் பெண்களே’ என்ற மகாகவியின் வார்த்தைகளை நினைவிற்குக் கொண்டு வ்ருகின்றன.

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதில் மறுப்பேதுமில்லை. அதைச் சுட்டிக் காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயற்கைக் கூரையிலிருந்து நான்கைந்து தெர்மகோல் துண்டுகள் பிரிந்து விழுந்து விட்டதை அரங்கின் கூரையே இடிந்து விழுந்து விட்டதைப்போல மிகைப்படுத்திப் பரபரப்பு ஏற்படுத்துவது ஊடகங்களின் பொறுப்புணர்வைக் காட்டவில்லை. நடைபாதைப் பாலம் சரிந்து விழுந்ததை ஏதோ நாடே சரிந்துவிட்டததைப் போல விவரிப்பது அத்தனை ஆரோகியமானதில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில சில நீர் கசிவதாகவும், சுகாதாரமற்ற பராமரிப்போடும் இருந்திருக்கக் கூடும் மறுக்கவில்லை..ஆனால் எல்லா குடியிருப்புகளுமே அப்படி இருப்பதைப் போல சித்தரிப்பது முறையானதல்ல.

எதிர்மறையாகச் செய்திகள் வெளியிட்டுப் ஏதோ தீப்ப்பிடித்ததைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்துவது துரதிருஷட்வச்மாக நம் ஊடகங்களின் வழக்கமாகிவிட்டன.ஆனால் வியாபாரப் போட்டி விளைவிக்கும் வெற்று ஆரவாரங்கள், தேசத்தைத் தின்றுவிட அனுமதிக்கலாமா? காமன்வெல்த் போட்டிகள் குறித்த எதிர்மறையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் தேர்ந்தெடுத்த நேரம் சரியானதுதானா?

போட்டிகளில் பங்கேற்ற்க அயல்நாடுகளில் அணிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் அது. ஊடகங்களின் ஓலத்தைக் கேட்டுப் போட்டிக்கே போகவேண்டாம் என அவை ஒதுங்கிக் கொண்டுவிட்டால், அவமானம் யாருக்கு? இந்தியாவிற்கு, என்பது எந்தச் சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தேசத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது அதன் ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற்படும் அவமானம்

இன்னொருபுறம், இந்தமுறை சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் பதக்கங்களைக் குவிக்கத் இந்திய வீரர்கள் தங்களைப் பட்டைதீட்டிக் கொண்டிருந்த இறுதிக் கணங்களும் இவைதான். போட்டிகளையே கேலிக் கூத்தாகச் சித்தரிக்கும் செய்திகள் நிச்சியம் அவர்களின் செஞ்சுறுதியைக் குலைக்கும்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கங்கள் அமைப்பதில் அளவு கடந்த காலதாமதம் ஏற்பட்டது உணமை. ஆனால் அந்தத் தாம்தத்தைக் கடைசி நிமிடம்வரை கண்டு கொள்ளாமல் மெள்னம் சாதித்த ஊடகங்கள் இப்போது ஏன் உரத்து முழ்ங்குகின்றன? இத்தனைநாள் இதுகுறித்து ஊடகங்கள் சாதித்த கள்ள மெளனம் அவையும் கடமை தவறியதன் அடையாளம் அல்லவா? கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வ்ரும் வேலைகள் சுணங்கியபோதெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தால் அவை வேலைகளை விரைந்து முடிக்க உதவியிருக்கலாம். இன்னும் சில நாள்கள் என்னும் நிலையில் எழுப்பப்படும் குரல்களால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?



ஊடகங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகம் இந்தக் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் போட்டியாகத்தான் எண்ணுகின்றன. போட்டியில் நாம் பெறுகிற பதக்கங்களைவிட, போட்டியை நாம் எப்ப்டி நடத்துகிறோம் என்பதில்தான் நம் கெள்ரவம் இருக்கிறது.

இந்தியர்களைப் பற்றி எப்போதுமே ஒரு விமர்சனம் உண்டு. தனித் தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் அபார ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அவர்களிடையே ஒரு அணியாக இணைந்து செயல்படும் இணக்கம் கிடையாது. என்று உலகம் நம்மைப்பற்றி எடை போட்டு வைத்திருக்கிறது. அது உண்மைதானோ என்பதைப்போல காம்ன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் தொடர்புள்ள பல அமைச்ச்கங்களுங்கிடையே ஒற்றுமை உணர்வு இல்லை, அமைச்ச்கங்களும் அதிகாரிகளும ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதைப் போல பிரதமரே பேசியிருக்கிறார்.

இந்தியாவின் இன்னொரு பலவீனம் என உலகம் எண்ணுவது நாடு முழுக்கப் புரையோடிப் போயிருக்கும் ஊழல். இதுவும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியிருக்கக் கூடும். அப்படியிருந்தால் அவை அம்பலப்படுத்தப்பட வேண்டும், அரங்கிற்குக் கொண்டு வந்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதெல்லாம் அப்புறம். விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னால்.

ஊழல், ஒற்றுமையின்மை என்ற இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா நிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது. உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு திருவிழா நம் பொறுப்பில் நடக்கவிருக்கிறது, சின்ன சின்ன ப்லவீனங்களைப் ஊதிப் பெரிதுபடுத்தாமல் ஊடகங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.


.

.

Tuesday, October 05, 2010

நேரம் இதுதானா?


என் ஜன்னலுக்கு வெளியே எழும் ஓசைகளேப் பல நேரங்களில் என்னை விழிப்படையச் செய்திருக்கின்றன. சற்றே கூவும் ஒற்றைக் குயிலின் ஓசைகளாகவே அவை எப்போதும் இருந்ததில்லை. சேவல்கள் சென்னையிலிருந்து விடைபெற்றுச் சென்று வெகு நாட்களாகிவிட்டன. சண்டையிடுவதைப் போல சர்ச்சிக்கும் காக்கைக் குரல்களைக் கேட்டுக் கண்விழிக்கும் காலைகளே வழக்கமாகிவிட்டன. இரைந்து கரையும் இந்தக் காக்கைகளை நாடாளுமன்றத்திலே அமர்த்திப் பார்த்தார் பாரதி. எனக்கென்னவோ இன்று இந்தக் காக்கைகள் ஊடக்ங்களுக்குள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டனவோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து தேசியஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள்’  ‘சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர், மிகச் சலிப்புத் தருகிறத்டி சகிப் பெண்களேஎன்ற மகாகவியின் வார்த்தைகளை நினைவிற்குக் கொண்டு வ்ருகின்றன.

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் என்பதில் மறுப்பேதுமில்லை. அதைச் சுட்டிக் காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு செயற்கைக் கூரையிலிருந்து நான்கைந்து தெர்மகோல் துண்டுகள் பிரிந்து விழுந்து விட்டதை அரங்கின் கூரையே இடிந்து விழுந்து விட்டதைப்போல மிகைப்படுத்திப் பரபரப்பு ஏற்படுத்துவது ஊடகங்களின் பொறுப்புணர்வைக் காட்டவில்லை. நடைபாதைப் பாலம் சரிந்து விழுந்ததை ஏதோ நாடே சரிந்துவிட்டததைப் போல விவரிப்பது அத்தனை ஆரோகியமானதில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில சில நீர் கசிவதாகவும், சுகாதாரமற்ற பராமரிப்போடும் இருந்திருக்கக் கூடும் மறுக்கவில்லை..ஆனால் எல்லா குடியிருப்புகளுமே அப்படி இருப்பதைப் போல சித்தரிப்பது முறையானதல்ல.

எதிர்மறையாகச் செய்திகள் வெளியிட்டுப் ஏதோ தீப்ப்பிடித்ததைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்துவது  துரதிருஷட்வச்மாக நம் ஊடகங்களின் வழக்கமாகிவிட்டன.ஆனால் வியாபாரப் போட்டி விளைவிக்கும் வெற்று ஆரவாரங்கள், தேசத்தைத் தின்றுவிட அனுமதிக்கலாமா?  காமன்வெல்த் போட்டிகள் குறித்த எதிர்மறையான செய்திகளை வெளியிட ஊடகங்கள் தேர்ந்தெடுத்த நேரம் சரியானதுதானா?

போட்டிகளில் பங்கேற்ற்க அயல்நாடுகளில் அணிகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம் அது. ஊடகங்களின் ஓலத்தைக் கேட்டுப் போட்டிக்கே போகவேண்டாம் என அவை ஒதுங்கிக் கொண்டுவிட்டால், அவமானம் யாருக்கு? இந்தியாவிற்கு, என்பது எந்தச் சின்னக் குழந்தைக்கும் தெரியும்.
ஒரு தேசத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது அதன் ஒவ்வொரு பிரஜைக்கும் ஏற்படும் அவமானம்

இன்னொருபுறம், இந்தமுறை சொந்த மண்ணில்  நடக்கும் போட்டி என்பதால் பதக்கங்களைக் குவிக்கத் இந்திய வீரர்கள் தங்களைப் பட்டைதீட்டிக் கொண்டிருந்த இறுதிக் கணங்களும் இவைதான். போட்டிகளையே கேலிக் கூத்தாகச் சித்தரிக்கும் செய்திகள் நிச்சியம் அவர்களின் செஞ்சுறுதியைக் குலைக்கும்.

காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கங்கள் அமைப்பதில் அளவு கடந்த காலதாமதம் ஏற்பட்டது உணமை. ஆனால் அந்தத் தாம்தத்தைக் கடைசி நிமிடம்வரை கண்டு கொள்ளாமல் மெள்னம் சாதித்த ஊடகங்கள் இப்போது ஏன் உரத்து முழ்ங்குகின்றன? இத்தனைநாள் இதுகுறித்து ஊடகங்கள் சாதித்த கள்ள மெளனம் அவையும் கடமை தவறியதன் அடையாளம் அல்லவா? கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வ்ரும் வேலைகள் சுணங்கியபோதெல்லாம் செய்தி வெளியிட்டிருந்தால் அவை வேலைகளை விரைந்து முடிக்க உதவியிருக்கலாம். இன்னும் சில நாள்கள் என்னும் நிலையில் எழுப்பப்படும் குரல்களால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?



ஊடகங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகம் இந்தக் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் போட்டியாகத்தான் எண்ணுகின்றன. போட்டியில் நாம் பெறுகிற பதக்கங்களைவிட, போட்டியை நாம் எப்ப்டி நடத்துகிறோம் என்பதில்தான் நம் கெள்ரவம் இருக்கிறது.

இந்தியர்களைப் பற்றி எப்போதுமே ஒரு விமர்சனம் உண்டு. தனித் தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் அபார ஆற்றல் கொண்டவர்கள். ஆனால் அவர்களிடையே ஒரு அணியாக இணைந்து செயல்படும் இணக்கம் கிடையாது. என்று உலகம் நம்மைப்பற்றி எடை போட்டு வைத்திருக்கிறது. அது உண்மைதானோ என்பதைப்போல காம்ன்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் தொடர்புள்ள பல அமைச்ச்கங்களுங்கிடையே ஒற்றுமை உணர்வு இல்லை, அமைச்ச்கங்களும் அதிகாரிகளும ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்பதைப் போல பிரதமரே பேசியிருக்கிறார்.

இந்தியாவின் இன்னொரு பலவீனம் என உலகம் எண்ணுவது நாடு முழுக்கப் புரையோடிப் போயிருக்கும் ஊழல். இதுவும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியிருக்கக் கூடும். அப்படியிருந்தால் அவை அம்பலப்படுத்தப்பட வேண்டும், அரங்கிற்குக் கொண்டு வந்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அதெல்லாம் அப்புறம். விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னால்.

ஊழல், ஒற்றுமையின்மை என்ற இரண்டையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா நிமிர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது. உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு திருவிழா நம் பொறுப்பில் நடக்கவிருக்கிறது, சின்ன சின்ன ப்லவீனங்களைப் ஊதிப் பெரிதுபடுத்தாமல் ஊடகங்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசமும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்.


புதிய தலைமுறை இதழுக்காக 26.9.2010 அன்று எழுதிய்து