Monday, March 23, 2009

IPL, Please get out!

'இந்தியர்களின் இன்னொரு மதம் கிரிக்கெட்' என ஊடகங்கள் வர்ணிப்பதாலோ என்னவோ, இந்திய கிரிக்கெட் 'கட்டுப்பாட்டு' வாரியத்தின் நிர்வாகிகள் தங்களைக் கடவுள்கள், -குறைந்த பட்சம் மடாதிபதிகள்- எனக் கருதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.இந்தக் கடவுள்கள், இப்போது அவர்களின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு 'ஸாரி' சொல்லிவிட்டு இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்துவதென முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெறாத, இந்திய விளையாட்டு வீரர்களை மட்டும் கொண்டு நடைபெறாத ஒரு போட்டி, எப்படி, 'இந்திய' பீரிமியர் லீகாக இருக்க முடியும்? கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்றொரு தில்லிக்குச் செல்லும் ரயிலொன்று உண்டு.There is nothing Grand about it, nor it takes a trunk route என்று அது விமர்சிக்கப்பட்டதுண்டு. இந்திய பீரிமியர் லீக் இன்னொரு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஆகிவிட்டது.

கிரிக்கெட் இந்தியாவில் இன்னொரு மதமாக ஆனதற்கு அது, இந்தியா, எப்போதோ ஒரு யுகத்தில் ஒருநாள் போட்டிகளின் உலகக் கோப்பையைக் கைப்பற்றியதும், அப்போது புதிதாக மலர்ந்திருந்த தொலைக்காட்சி என்ற ஊடகமும், அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த விளையாட்டு இந்தியாவில் 'மார்க்கெட்' செய்யப்பட்ட விதமும்,தான் காரணம்.அந்த மார்க்கெட்டிங் சாமர்த்தியத்தின் உச்சம்தான் 20:20 போட்டிகள், ஐ.பி.எல்.

அண்மைக்காலமாக இந்திய அணி கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை ஈட்டி வருகிறது. இந்தியக் கிரிக்கெட் அணி, உலகின் வலிமையான அணி என்று சொல்லத்தக்க நிலையை அது அநேகமாக எட்டிவிட்டது (இதை ஏற்க மறுப்பவர்கள் கூட அது உலகின் வலிமையான அணிகளில் ஒன்று என்பதை ஒப்புக் கொள்ள மறுக்க மாட்டார்கள்)இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 'நாலு காசு' பார்க்க ஐ.பி.எல். விரும்புவது இயற்கைதான். ஆனால் இந்த மார்க்கெட்டிங் வெறியில் மக்களாட்சியின் அடித்தளமான தேர்தலைக் கூடப் பொருட்படுத்தமாட்டோம் என்று கிரிக்கெட் மடாதிபதிகள் நடந்து கொள்ள முற்படுவார்களேயானால், அந்த வெறிக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது அவசியம்தான்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் 71 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.41 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், 21 லட்சம் பாதுகாப்புப் படையினரும் பயன்படுத்தப்பட இருக்கின்றனர்.உலகிலேயே இத்தனை வாக்காளர்கள், வாக்குச் சாவடிகள், பாதுகாப்புப் படையினர் என்று ஒரு தேர்தலில் பங்கு பெறுவது இந்தியாவில் மட்டும்தான். இத்தனை பெரிய தேர்தலை, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னிட்டு, இந்த முறை ஐந்து கட்டமாக, ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி மே மாதம் 13-ம் தேதிவரை நடத்த வேண்டியிருக்கிறது. நவம்பரில் முப்பையில் நடந்த தீவிரவாத சம்பவங்கள், இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் என்பது கற்பனையல்ல, இந்தியா எதிர் கொண்டே ஆக வேண்டிய ஒரு யதார்த்தம் என்பதை உணர்த்துகின்றன. எனவே தேர்தலின் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அதை எதிர்கொள்ள எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்புப் படையும் அவசியமாகிறது. ஏற்கனவே ஒரு தேர்தலின் போது இலங்கை பயங்கரவாதிகளால், பிரதமர் வேட்பாளர் எனக் கருதப்பட்ட ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வரலாறும் இந்தியாவிற்கு உண்டு.

பயங்கரவாதிகள் கிரிக்கெட்டையும் விட்டு வைப்பதில்லை என பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. எனவே அதற்கும் கணிசமான பாதுகாப்புத் தேவை. இந்தச் சூழ்நிலையில் தேர்தல் முடிந்து உங்கள் ஆட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றால் ஐபிஎல் நிவாகிகள் 'முடியாது, வெளிநாட்டில் நடத்திக் கொள்கிறோம்' என்று மிரட்டுகிறார்கள்.

ஜூன் 2- ம்தேதி முதல் டுவென்டி - 20 உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்காக மே 25-ம் தேதியே அணிகள் இங்கிலாந்து வருமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சி ல் ( ஐ சி சி ) கேட்டுக்கொண்டுள்ளது. அதன் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுடன் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. தென் ஆப்பிரிக்காவும் அப் போட்டியில் பங்கேற்கிறது. செப்டம்பர் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது. தவிர, 2009 அக்டோபர் முதல் 2010 மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகியன 3 உள்நாட்டுத் தொடர்களில் விளையாட உள்ளன. அதனால் ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைக்க முடியாது என அதன் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடக்கும் என்பது ஐந்தாண்டுகளுக்கு முன்பே தெரிந்த விஷயம். கடந்த மக்களவை 2004 மே 23 அன்று அமைந்தது. அதனால் 2009 மே 23க்குள் அடுத்த மக்களை தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும் என இந்தியக் குடிமகன்கள் எல்லோருக்கும் தெரியும். நிச்சியம், கிரிக்கெட் 'கட்டுப்ப்பாடு' வாரியத்தின் தலைவர் சரத் பவாருக்கும், அதன் நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் அருண் ஜெட்லிக்கும் தெரிந்த்ருக்கும். அப்படியிருக்க ஏப்ரல் 10 முதல் மே 24வரை ஐபில் போட்டிகளை நடத்தத் தேதி குறித்தது ஐபிஎல்லின் தவறு. சர்வதேசப் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன அதனால் தள்ளி வைக்க முடியாது என்பது சப்பையான வாதம். அதுதான் இத்தனை போட்டிகள் நடக்க இருக்கின்றனவே, இந்தப் போட்டி நடக்காவிட்டால் என்ன குடி முழுகிவிடும் (உங்களுக்கு துட்டு வராது என்பதைத் தவிர?) எனக் கேட்க எவ்வளவு நேரமாகும்?

இந்தப் போட்டியை எப்படியும் தாங்கள் குறித்த தேதிகளில் நடத்தியே தீர்வது என்பதற்காக ஐபிஎல் நிர்வாகிகள்அளித்த நெருக்கடிகள் கண்டிக்கத் தக்கவை. பிரதம்ரை நேரில் சந்தித்து முறையிடுகிறார்கள். ஐபிஎல் போட்டிகளை நடத்தத் தவறினால் இந்தியா, பாகிஸ்தானைப் போல பயங்கரவாதத்திற்குப் பணிந்து போகிற மென்மையான் அரசு (soft state) என்று உலகம் எண்ணிவிடும் என ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்கிறது. இந்தச் சர்ச்சையில் அரசியலைக் கூட நுழைத்துப் பார்த்தது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்தான் பயப்படுகின்றன என்று அதன் நிர்வாகிகளில் சிலர் சொன்னார்கள்.

ஒன்றைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது அரசின் வேலையல்ல. அதை நடத்துவதும் அரசு அல்ல. அதை நடத்துவது ஒரு தனியார் அமைப்பு. இன்னும் சொல்லப்போனால் தனியார் வர்த்தக அமைப்பு. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு இந்த வியாபாரம் நடத்தப்பெறாத வரையில் அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால் அந்த வியாபாரிகள், பன்நாட்டு வியாபார நிறுவனங்களைப் போல, நாட்டின் நலனை விடத் தங்கள் நலனைப் பெரிதாக எண்ணிக் கொண்டு அரசை மிரட்ட எண்ணினால் நாம் தயங்காமல், உறுதியாகச் சொல்ல வேண்டியது, 'போ, வெளியே!' (get out)

Friday, March 06, 2009

கனவுகள் எரியும் தேசம்

அந்த தினம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில் அது ஒரு இளைஞன் தமிழுக்காகத் தன்னை எரித்துக் கொண்ட தினம்.
அன்றும் வழக்கம் போல் ‘பராக்கு’ பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன். போகிற வழியெல்லாம் புதிதாக ஒரு போஸ்டர் முளைத்திருந்தது. வெள்ளைப் பின்னணியில் புள்ளிச் சித்திரமாக செல்வம் வரைந்திருந்த அண்ணாவின் படம். கீழே ரத்தச் சிவப்பில் ‘உலத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன் அண்ணனது கரங்கள் வலுவற்றதாக இருக்கலாம். னால் உன்னை இரண்டாந்தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட அவை துவளப் போவதில்லை’
இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை இம்சித்தது. பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் பள்ளியில் குடிமைப் பயிற்சி (citizenship Training) என்று வாரத்திற்கு ஒரு வகுப்பு இருந்தது. னால் அதிலொன்றும் பெரிதாகக் கற்றுக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்த வகுப்பு நேரத்தில் அநேகமாக கிரிக்கெட் டுவோம். கிரிக்கெட் டுவது இந்தியக் குடிமகனின் கடமைகளில் ஒன்று என்றுதான் அந்த வகுப்புக்கள் எங்களுக்கு உணர்த்தியிருந்ததன. அதனால் அப்போது எனக்கேற்பட்ட மன இம்சை என் பிரஜா உரிமைகள் பறிபோய்விடப் போகிறது என்பதால் ஏற்பட்ட கலக்கம் அல்ல. னால் நாளையே யாருக்கோ அடிமையாக கி விடப்போகிறோம் என்றோர் இனம் புரியாத பயம் எழுந்தது. புத்தகத்தில் நான் சந்திருந்த அடிமைகள் கசையடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பள்ளி வாசலில் ராதாகிருஷ்ணன் நின்று கொண்டு மறித்துக் கொண்டிருந்தான். ராதாகிருஷ்ணன் என் வகுப்புத்தான். னால் என்னை விட இரண்டு வயது பெரியவன்.முகத்தில் மீசை வளர்த்திருந்தான். கல்லூரி மாணவன் போல முழுக்கால் சட்டை அணிந்து ஒரு குயர் நோட்டு ஒன்றை ள்காட்டி விரல் முனையில், மகாவிஷ்ணுவின் சக்கரம் போலச் சுற்றிக் கொண்டு பள்ளிக்கு வருவான்.’கிளாசிற்குப் போகாதே வேலை இருக்கு’ என்றான் ராதா.
பத்தரை மணிவாக்கில் எங்கள் பள்ளி மாணவர்கள் 100 பேர் ஊர்வலமாகப் புறப்பட்டு அருகில் இருந்த திலகர் திடலுக்குப் போனோம். அங்கு காத்திருந்த இன்னொரு பெரிய ஊர்வலத்தில் சங்கமித்து, வடக்கு மாசி வீதிக்கு வந்தோம். ஒன்று நூறாகி, நூறு யிரமாகும் போது எற்படுகிற தன்னம்பிக்கையும் மன எழுட்சியும் எங்களை க்கிரமித்திருந்தது.விசையேற்றப்பட்டவனாய் உடல் மன்ணுக்கு உயிர் தமிழுக்கு என நான் எழுப்பிய முழக்கங்கள் என் நண்பர்களுக்கு ச்சரியமளித்தது. எனக்கே கூட ச்சரியமாகத்தானிருந்தது. என் குடும்பச் சூழல், என் பள்ளிச் சூழல் எல்லாம் என்னை இப்படி சந்நதம் வந்தவனைப் போல நடுவீதியில் நாணமற்றுக் கூச்சலிட்டுச் செல்லப் பயிற்றுவித்திருக்கவில்லை. நாலு பேர் நம்மைக் கவனிக்கிறார்கள் என்றதும் உற்சாகம் ஓர் ஊற்றுப் போல் பீறிட்டது.
ஊர்வலத்தின் முன் வரிசையில் யூசி ஹைஸ்கூல் மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களை அடுத்து நாங்கள்.
கிருஷ்ணன் லோவிலைத் தாண்டி ராமாயணச் சாவடி வருகிற வரை ஒன்றும் பிரசினையில்லை.ராமாயணச் சாவடி அருகே வந்ததும் ஒரு சலசலப்பு அங்கே அன்றைய ளுங்கட்சியின் அலுவலகம் இருந்தது அதன் உள்ளிருந்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தார்கள் என்றொரு செய்தி பரவியது. நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலம் தேங்கி நின்றதும்,பின்னாலிருந்தவர்கள் என்ன விஷ்யம் என்றறிந்து கொள்ள முன்னால் முண்டிக் கொண்டு வந்தார்கள் தள்ளு முள்ளு ஓர் அலைமாதிரி என்ன முன்னெடுத்துச் சென்றது. என்ன நடக்கிறது எனத் தெரியாமல் நான் திகைப்பில் திணறிக் கொண்டிருந்த போது, சித்திரைத் திருவிழாவில் திண்டுக்கல் ரோடு பூக்கடைகள் அருகே மலர்ச் சொரிய அந்தரத்தில் திடுமெனத் தோன்றுகிற பொம்மைகள் மாதிரி, ஒரு காவல் அதிகாரி ராமாயணச் சாவடிக் கூரையின் மீது தோன்றினார். விளிம்பில் தொற்றிக் கொண்டு, ஒருகையால் தூணை அணைத்துக் கொண்டு மறு கையில் பெரிய தகரக் குழாயை வாயருகே பிடித்துக் கொண்டு பெரிய குரலில் ஏதோ இரைந்தார். முதலில் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை.உற்றுக் கேட்டபோது காவல்துறை அதிகாரி எங்களைக் கலைந்து போகச் சொல்கிறார் எனப் புரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் ராதாகிருஷணன் எங்கேயோ காணாமல் போய்விட்டான்..நான் ஒரு கணம் தயங்கி நின்றேன். அப்படி நின்ற வேலையில் போலீஸ் தடியைச் சுற்றிக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. மிரண்டு போய் கலைந்து ஓடினோம். னால் எனக்குப் பின்னால் ஒரு காவலர் ஓடி வருவதை என்னால் உணர முடிந்தது.
சுளீர்! என் இடது கெண்டைக்காலில் நெருப்புத் துண்டு விழுந்தது போல் ஒரு எரிச்சல் கலந்த வலி. காவலர் கையிலிருந்த தடி என் காலில் இறங்கியிருக்கிறது எனப் புரிந்து கொண்டு ஓட எத்தனித்தேன். அதற்குள் இன்னொரு அடி இறங்கிற்று. அடி விழுந்த காலைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக் கொண்டே ஓடினேன். சிறுவர்களிடம் அடிவாங்கி, ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல அந்தக் கணம் உணர்ந்தேன்.
குறுக்குச் சந்துகளில் ஓடி தானப்ப முதலி தெருவிலிருந்த என் வீட்டுக்கு வந்து காலைப் பார்த்தேன். அடிவிழுந்த இடத்தில் தோல் பிளந்து ரத்தக்காயம். அதைச் சுற்றிலும் ரத்தம் கட்டிக் கரு நீலம்.
வலி. காயத்தைக் கழுவி அம்மா அதன் மேல் டிஞ்சர் அயோடினைத் தடவினார். நெருப்புப் போல் எரிந்தது.
னால் அன்றூ மாலை மாலைமுரசில் படித்த ஒரு செய்தி என் காயம், என் வலி எல்லாம் எத்தனை அற்பமானவை என உணர்த்திற்று. இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி அருகே கீழப்பாவூரைச் சேர்ந்த சின்னசாமி தீக்குளித்து மாண்டார் என்றது செய்தி. ஒரு சிறுகாயம் நெருப்பாக எரிகிறது என்பதையே நம்மால் பொறுக்க முடியவில்லை.னால் தமிழுக்காக ஒருவர் தன் மீதே நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்! வலியால் எப்படித் துடித்திருப்பார்? உடலில் நெருப்புப் பற்றி எரிந்த போது அய்யோ அம்மா என்று அலறவில்லை. மாறாக தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என சின்னசாமி முழக்கமிட்டதாகச் சொல்லியது செய்தி.
சின்னசாமி தன்னை எரித்துக் கொண்டபோது அவருக்கு வயது 27. குடும்பத்தில் ஒரே மகன். திருமணமாகி இருந்தது. திராவிடச் செல்வி என்றொரு பெண் குழந்தை இருந்தது. தீக்குளிக்கும் முன் தன் மனைவியின் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில்,“தமிழைக் காக்க என் உயிரைத் துறக்கிறேன். என் லட்சியம் ஒரு நாள் வெல்லும்” என்று எழுதியிருந்தார்.
தமிழ்நாடெங்கும் சின்னச்சாமியின் மரணம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதுவரை தீக்குளிப்பு என்றொரு போராட்ட முறையைத் தமிழகம் கண்டதில்லை. எனவே அந்தச் செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அடுத்த நாள் ஜனவரி 26, 1965 அன்று சென்னையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் எதிரில் 21 வயது சிவலிங்கம் தன்னை எரித்துக் கொண்டு மாண்டார்.அதற்கு அடுத்தநாள் விருகம்பாக்கம் அரங்கநாதன். அப்புறம் அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி.
வரிசையாய் அடுத்தடுத்து மாண்ட இளைஞர்களது மரணங்கள் தமிழ்நாட்டை உலுக்கின. இனியும் மத்திய அரசும் மாநில அர்சும் சும்மாயிருந்துவிட முடியாது, பணிந்தே க வேண்டும், இந்தத் தியாகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்களில் தீக்குளித்தவர்களது உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.ங்காங்கு விர வணக்கக் கூட்டங்கள் நடந்தன. எல்லாக் கூட்டங்களும் ‘என் இலட்சியம் என்றாவது ஒரு நாள் நிறைவேறும்’ என எழுதி வைத்துவிட்டு இறந்த சின்னசாமியின் கனவை நனவாக்குவோம் என்ற முழக்கங்களோடு முடிந்தன.
*இன்று இன்னொரு தீக்குளிப்பு. இன்னொரு இளைஞன். இன்னொரு லட்சியம். அந்த லட்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் மனங்கள் கனல் போல் கொதிக்கின்றன. எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்கள்.ங்காங்கு வீரவணக்கக் கூட்டங்கள்.இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடைசிக் கடிதத்தை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.
இந்தத் தியாகம் வீண்போகாது என்றேனும் இந்த இளைஞனின் லட்சியம் நிறைவேறும் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன. அரசுகள் இந்தத் தியாகத்தை அலட்சியப்படுத்த முடியாது, அப்படி அல்ட்சியப் படுத்த முனைந்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற வேச சபதங்களைக் கேட்கின்றன.*நாங்கள் அந்த மாநில அரசை வீட்டுக்கு அனுப்பினோம். அன்று எங்களுக்கு வாக்குரிமை இல்லை. னாலும் வீடு விடாகப் போய் வாக்காளர்கள் காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, மன்றாடி அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினோம். இந்தியை ஒழிப்பார்கள், தமிழைத் தழைக்கச் செய்வார்கள் என்று நம்பியவர்களை நாற்காலிகளில் அமர்த்தினோம்.னால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் ங்கிலமும் இந்தியும் படித்தார்கள். தில்லிக்குப் போனார்கள் போராட அல்ல. இந்தியை அரசு மொழியாகக் கொண்ட அரசில் அமைச்சர்களாகப் பதவி ஏற்க.
சின்னசாமியின் மகள் திராவிடச் செல்வி இன்று எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. னால் கனிமொழி என்னவாக இருக்கிறார் என எல்லோருக்கும் தெரியும்.
தனது ஒரே மகன் முத்துக்குமாரை ஈழப் பிரசினைக்காக தீக்குத் தின்னக் கொடுத்த அவரது தந்தை அதற்காக அரசு கொடுத்த பணத்தைக்கூட மறுத்து விட்டார். இத்தனைக்கும் பழைய இரும்பு விற்றுப் பிழைக்கிற ஏழை அவர்.
னால் இலங்கைத் தமிழர் பிரசினையில் தினம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் மருத்துவரின் ஒரே மகன் தன் அமைச்சர் பதவியைக் கூடத் துறக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லை.
*தீக்குளித்து இறந்த 22 பேரின் உளவியலை ராய்ந்த சண்டிகரைச் சேர்ந்த மனோதத்துவ வல்லுநர்கள் தீக்குலிப்பவர்கலில் பெரும்பாலானோர் லட்சிய வேட்கை / பெரிய சைகள் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள், விரோத மனோபாவம் கொண்டவர்கள், அந்நியப்பட்டுப் போனவர்கள் (Most were ambitious, aggressive, hostile and felt alienated) என வர்ணிக்கிறார்கள்.
எனக்கென்னவோ இந்த வர்ணனை நம் அரசியல்தலைவர்களுக்கே பொருந்தும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நானறிந்தவரை தமிழ்நாட்டில் தீக்குளித்தவர்கள் தங்கள் கோபத்தைக்கூட தங்கள் மீதே காட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு இயலாமை கொண்டவர்கள்.

ஏனெனில் அவர்கள் ஏழைகள்.

அம்ருதா மார்ச் 2009 இதழுக்காக பிப்ரவரி 8ம் தேதி எழுதியது