Wednesday, December 11, 2013

பாரதியின் குரல்-1

முன் குறிப்பிற்கும் முன்:
இன்று பாரதியின் பிறந்த நாள் . பாரதியின் கவிதைகளைப் பற்றிப் பேசப்படுமளவிற்கு அவரது கட்டுரைகள் கவனிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை முகநூலில் வெளியிட்டு, அவரது கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை நாளை முதல் பகிர்ந்து கொள்ளலாமா எனக் கேட்டிருந்தேன். நாளை முதல் என்ன, இன்றே ஆரம்பியுங்கள் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். நாக.சொக்கன் வலைப்பதிவிலும் போடுங்கள் என்றார். இதோ போட்டுவிட்டேன்
பாரதியின் குரல்-1


பாரதியின் குரல்-1
சில தேவையான முன் குறிப்புகள்:
நாம் சுதந்திரம் பெற்ற போது நம் நாட்டில் வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது ஆனால் ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில் பெண்களுக்கு பல ஆண்டுகள் வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1872ல் துவங்கி 1918 வரை நடந்த ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின்னரே அவர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது. வாக்குரிமை கோரி பெண்களே வீதியில் இறங்கிப் போராடினார்கள்
அந்தப் போராட்டங்களை செய்தியை பாரதி விடாமல் பின் தொடர்ந்து வந்தார். “ இங்கிலாந்திலே இப்போது பெண்களுக்கு எலெக்‌ஷன் சுதந்திரம் கொடுக்கலாமா என்பதைப் பற்றிய விவகாரம் வெகு பலமாக நடந்து கொண்டு வருகிறது.மாதர்கள் செய்யும் தொந்தரை கொஞ்சமில்லை. பார்லிமெண்ட் சபைக்குள்ளே புகுந்து கூச்சலிடுவதும் கலவரம் செய்வதுமாயிருக்கிறார்கள்.போலீசார் வந்து வெளியேறச் சொல்லி பலவந்தம் செய்த போதிலும் வெளியேற மாட்டோமென்கிறார்கள். சிறைச்சாலைக்குள் அடைக்கப்படும் வரை இவர்கள் சாந்தம் கொண்டிருப்பதில்லை என்ற நிச்சியத்துடன் இருக்கிறார்கள்” என்று 24.11.1906 இந்தியாவில் எழுதுகிறார் பாரதி. அதற்கு அடுத்த இதழில் (1.12.1906) முதல் பக்கத்தில் இதையடுத்து வந்த செய்திகளை follow up ஆக வெளியிடுகிறார்,
முதல் உலக யுத்தம் முடிந்த பின்பு 1918ல் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படுகிறது அதையொட்டி 10.5.1918ல் அவர் எழுதிய கட்டுரை கீழே.
பெண்களும் தேசமும் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது எப்படி அறிவுஜீவி ஆண்கள் வேதாந்த ஆராய்ச்சியிலும் பெண்கள் வெற்று ஜம்பத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை எள்ளலோடு விவரிக்கும் கட்டுரை இது.
கட்டுரையைப் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷ்யங்கள்: பத்திரிகை மொழி என்பது காலந்தோறும் மாறக் கூடியது. மேலே உள்ள இந்தியா மேற்கோளில் போலீசார் பலவந்தம் செய்த போதிலும் பெண்கள் வெளியேற மறுக்கிறார்கள் என்ற ஒரு வரி இருக்கிறது. இன்று பெண்களை பலவந்தம் செய்வதென்றால் வேறு அர்த்தம். அதே போல அன்று இந்தியர் என்பதைக் குறிக்க இந்து என்ற சொல் பத்திரிகைகளில் பயன்படுத்தப்பட்டது. எனவே இந்து என வரும் இடங்களில் இந்திய என்று வைத்துக் கொண்டு வாசியுங்கள்
பத்திரிகையாளர்களாக விரும்பும் இளைஞர்களுக்கு : நீங்கள் கீழே வாசிக்கப்போவது பாரதியார் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்திருக்கிற ஒரு புதுவகையான வடிவம் (format) பத்திரிகையாளர்கள் முன் இருக்கிற சவால்களில் ஒன்று வாசகர்களுக்கு அதிகம் தெரியாத அல்லது அக்கறை இல்லாத ஆனால் வரலாற்றில், சமகால அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய செய்தி ஒன்றை வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும்வகையில் சொல்வது எப்படி என்பது. அதற்கு பாரதியார் கண்டுபிடித்து, இந்தா பிடி என்று நம் கையில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற வடிவம் இது. சற்றே நாடகத்தன்மையோடு, இரண்டு மூன்று பேர் உட்கார்ந்து அரட்டை அடிப்பது போல கட்டுரை எழுதுவது. அரட்டைக்கு நடுவில் விஷயம் வந்துவிட வேண்டும்.
பாரதியாரின் இந்த வடிவத்தை அவருக்குப் பின் வந்த பலர் தலைமுறை தலைமுறையாக கையாண்டிருக்கிறார்கள். துமிலன் (அப்பளக் கச்சேரி/ஆனந்த விகடன்) சாவி (அரசியல் நிருபரின் சரடு/ஆனந்த விகடன்) ரா.கி. ரங்கராஜன் (கேள்வி நேரம்/குமுதம்) மாலன் (டைனிங் டேபிள்/சாவி, A2Z/புதிய தலைமுறை) எழுதியவர் பெயர் தெரியவில்லை அனு அக்கா ஆன்டி (ஆனந்த விகடன்) இப்படி காலத்திற்கேற்ப பல அவதாரங்கள் எடுத்த வடிவம் இது
இனி பாரதியார்
இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குச் சீட்டுக் கொடுத்தாய் விட்டதென்று சில தினங்களின் முன்பு 'ராய்டர்' தந்தி வந்தது. அதைப் பற்றிய பத்திராதிபர் குறிப்பொன்று ''ஸ்திரீகளின்ஐயம்'' என்ற மகுடத்துடன் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. நேற்று மாலை நானும் என்னுடையசினேகிதர் சிரோமணி ராமராயரும் வேறு சிலருமாக இருக்கையில் மேற்படி தேதி (அதாவது ''ஸ்திரீகளின் ஜயம்''எழுதியிருந்த) சுதேசமித்திரன் பத்திரிகையைக் கையில்"எடுத்துக்கொண்டு மோட்டு வீதி கோபாலய்யர் பத்தினிவேதவல்லி அம்மை வந்தார்.
வேதவல்லி அம்மைக்கு நாற்பது வயது. தமிழிலும்இங்கிலீஷிலும் உயர்ந்த படிப்பு. ஸமஸ்கிருதம் கொஞ்சம்தெரியும். இவளுடைய புருஷன் கோபாலய்யர் பெரிய சர்க்கார்உத்தியோகத்திலிருந்து விலகி பணச்செருக்கு மிகுந்தவராய் தமதுபத்தினியாகிய வேதவல்லியுடனும் நான்கு குழந்தைகளுடனும் சௌக்கியமாக வேதபுரத்தில் வாழ்ந்துவருகிறார். வேதவல்லிக்கு அவர் விடுதலை கொடுத்து விட்டார். எங்கும் போகலாம்,யாருடனும் பேசலாம். வீட்டுச் சமையல் முதலிய காரியமெல்லாம் ஒரு கிழவி பார்த்துக் கொள்கிறாள். வேதவல்லி அம்மை புஸ்தகம்,பத்திரிகை, சாஸ்திர ஆராய்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவற்றிலே காலங்கழித்து வருகிறார்.
வேதவல்லி வரும்போது நான் ராமராயர் முதலியவர்களுடன் வேதவியாசர் செய்த பிரம்ம சூத்திரத்திற்குசங்கராச்சாரியர் எழுதின அத்வைத பாஷ்யத்தை வாசித்து அதன் சம்பந்தமாகத் தர்க்கித்துக் கொண்டிருந்தேன். அந்தச்சமயத்தில் வேதவல்லியார் வந்தனர். (ஒருமை பன்மை இரண்டும்பெண்களுக்கு உயர்வையே காட்டும்) வேதவல்லிக்கு நாற்காலி கொடுத்தோம். உட்கார்ந்தாள். தாகத்துக்கு ஜலம் கொண்டு வரச் சொன்னாள். பக்கத்திலிருந்த குழந்தையை மடைப்பள்ளியிலிருந்து "ஜலம் கொண்டு கொடுக்கும்படி ஏவினேன். அதனிடையே,வேதவல்லி அம்மை 'என்ன சாஸ்திரம் ஆராய்ச்சிசெய்கிறீர்கள்?' என்று கேட்டாள். சங்கரபாஷ்யம் என்றுசொன்னேன். வேதவல்லி சிரித்தாள். 'சங்கர பாஷ்யமா! வெகுஷோக். இந்துக்களுக்கு இராஜ்யாதிகாரம் வேண்டுமென்று சொல்லித்தான் மன்றாடப்போய் ''அன்னிபெஸண்ட்''  வலைக்குள் மாட்டிக் கொண்டாள். அவள் இங்கிலீஷ்கார ஸ்திரீ. நம்முடையதேசத்து வீராதி வீரராகிய ஆண்பிள்ளைச் சிங்கங்கள் சங்கரபாஷ்யம் வாசித்துப்பொருள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.க்ஷோக்! ஷேக்! இரட்டை ஷேக்!' என்றாள்.
ராமராயருக்குப் பளிச்சென்று கோபம் வந்துவிட்டது.'சரிதானம்மா, நிறுத்துங்கள். தங்களுக்குத் தெரிந்த ராஜயுக்த்திகள் பிறருக்குத் தெரியாதென்று நினைக்க வேண்டாம்' என்றார்.
''இங்கிலாந்தில் ஸ்திரீகளுக்குச் சீட்டுக் கொடுத்தாய்விட்டது'' என்று சொல்லி வேதவல்லி தன் கையில் இருந்த சுதேசமித்திரன் பத்திரிகையை ஏறக்குறைய ராமராயர் முகத்தில் வந்து விழும்படி வீசிப் போட்டாள். ராமராயர் கையில் தடுத்துக் கீழே விழுந்த பத்திரிகையை எடுத்து மெதுவாக மேஜையின் பேரிலே வைத்துவிட்டு தலைக்குமேலே உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசனையில் இறங்கிவிட்டார். குழந்தை இச்சமயத்தில் ஜலம் கொண்டு கொடுத்தது.வேதவல்லியம்மை இதை வாங்கி சற்றே விடாய் தீர்த்துக்கொண்டாள். ''என்ன  ராமராயரே,! மோட்டைப் பார்க்கிறீரே? மோட்டில் என்ன எழுதியிருக்கிறது. 'ப்ரம்மம் ஸத்யம் லோகம் மித்யை ஆதலால், வித்வான்கள் எப்பொழுதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பதே மேன்மை' என்றெழுதியிருக்கிறதா?''என்று கேட்டாள்.
ராமராயருக்கு முகம் சிவந்து போய்விட்டது.கொஞ்சம் மீசையைத் திருகி விட்டுக்கொண்டார். தாடியைஇரண்டு தரம் இழுத்தார். கடகடவென்று சிரிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீமதி ஆன்னி பெஸண்ட் ராஜ்ய விஷயத்திலே தலையிட்டு சுதேசியமே தாரகமென்றும், வந்தேமாதரம் ஒன்றே ஜீவமந்திரம் என்றும் பேசத் தலைப்பட்டது மேற்படி ராமராயருக்குச் சம்மதமில்லை. வேதாந்திகள் எப்போதும் பரப்ரஹ்மத்தையே கவனிக்க வேண்டும்; லௌகிக விஷயங்களைத் துளிகூடக் கவனிக்கக் கூடாதென்பது அவருடைய மதம்.
வேதவல்லி அம்மை ராமராயரை நோக்கிச்சொல்லுகிறார்:-  'எடுத்ததற்கெல்லாம் ஆன்னி பெஸண்ட்"சொன்னதே பிரமாணம் என்று தொண்டை வறண்டு போகக் கத்தி கொண்டிருந்தீர். இப்போது அந்த அம்மாள் சுயராஜ்யம் நல்லதென்று சொல்லும்போது அவளைப் புறக்கணிக்கிறீர்! ஐயோ!கஷ்டம்! புருஷ ஜன்மம்!  ஸ்திரீகளுக்குள்ள திறமையிலே நாலிலொரு பங்கு புருஷர்களுக்கில்லை. எல்லா தேசங்களிலும் புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகளுக்கு ஆயுள் அதிகம். அதனால் சரீர உறுதி அதிகம் என்று ருஜு வாக்கியாயிற்று; புத்தி அதிகமென்பதுந்தான். ராமாயணத்தில் சீதை பொய் மானை மெய் மான் என்று நினைத்து ஏமாற்றம் அடைந்தாள் என்றும் எங்கள் வீட்டில் ஒரு தாத்தா நேற்று வந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சீதை சொல்லுக்குக் கட்டுப்பட்டு அதை வேட்டையாடப் போன ராமனுடைய புத்தியைக் காட்டிலும் அவளுக்குப் புத்தி அதிகமா, குறைவா, என்று நான் கேட்டேன். தாத்தா தலையைக் குனிந்து கொண்டு வாயில் கொழுக்கட்டையைப் போட்டுக்கொண்டு சும்மாயிருந்தார். சகல அம்சங்களிலும் ஸ்திரீயே மேல். அதில் சந்தேகமில்லை' என்று வேதவல்லிசொன்னாள்.
'ஸ்திரீகளுக்குப் பேசும் திறமை அதிகம்? என்று ராமராயர் சொன்னார்.
வேதவல்லியம்மை சொன்னார்:'அன்னிபெஸண்டுக்கு ஸமானமாக நம்முடைய புருஷரில் ஒருவருமில்லை. அந்தஅம்மாள் கவர்னருடனே சம்பாஷணை செய்ததைப் பார்த்தீரா? அந்த மாதிரி கவர்னரிடத்தில் நீர் பேசுவீரா?'
இதைக் கேட்டவுடன் ராமராயர், ''நான் வீட்டுக்குப்போய்விட்டு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டோம். அப்பால் வேதவல்லிஅம்மையின் உபந்யாஸம் நடக்கிறது:-
''ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிற் சேர்ந்து "பாடுபடாதவரையில், இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலைஏற்பட நியாயமில்லை. இந்தத் தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில்வாசித்திருக்கிறோம். ஆனால் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப் பேசவே வழியில்லை. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் அன்னி  பெஸண்டுக்கு ஸமானமாக வேலைசெய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக்கும்தான் உபயோகப்படுவார்கள். ராஜ்ய க்ஷேமத்தைக் கருதி தைர்யத்துடன் கார்யம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமை இத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்கள், பார்த்தீர்களா? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும்,தைரியசாலிகள் என்றும் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானாலும், இங்கே பெண்ணுக்குள்ள தைர்யமும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் பெண்கள் ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள்.
ஹோ! ஹோ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ்காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப்போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சினால் போதாது.ஸ்திரீகளைக் கெஞ்சவேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனால் நடக்காது. இந்த தேசத்துப் புருஷர்களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்கமாட்டார்கள். ஆதலால்,காங்கிரஸ் ஸபையார் நமது ஸ்திரீகளை அனுப்புவதே நியாயம்.எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னை அனுப்பினால் நான் போய் அங்குள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்றாடி இந்தியாவுக்கும் சீட்டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண் பெருமை பெண்ணுக்குத் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லை' என்று சொன்னாள்.
ராமராயர்  'வேறு விஷயம் பேசுவோம்' என்றார்.தான் பாதி பேசும்போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்குக் கோபம் உண்டாகி, 'நான் இவரைக் குறிப்பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லையென்றும், இவர் சும்மாயிருக்கவேண்டும் என்றும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்துவிட்டார்' என்று சொல்லி வெறுப்புடன் எழுந்து போய்விட்டார்.
நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும்கேட்கவில்லை. ''ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்கலாகாது'' என்று சொன்னாள். அந்த அம்மை சென்றபிறகு ராமராயர் ஏதோ முணுமுணுத்துக்  கொண்டிருந்தார்.'என்ன சொல்லுகிறீர்?' என்று கேட்டேன். 
ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும்அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னார். பிறகுமறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம்