Thursday, September 28, 2006

ஒரு கோப்பின் கதை

ஒரு சிற்றூரில் ஒரு சிறு நிலக் கிழார். அவருக்கு இரண்டு மகன்கள். நிலக்கிழார் சாகும் தறுவாயில் இரண்டு மகன்களையும் அழைத்து, " என்னால் உங்களுக்கு ஏதும் சொத்து வைத்துவிட்டுப் போகமுடியவில்லை. ஆனால் கடன் ஏதும் வைக்கவில்லை. நம் பூர்வீக நிலத்தை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் பிழைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு மறைந்தார். சிறிது நாளில் அண்ணனும் தம்பியும் சொத்தைப் பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்தனர். பிரிக்கப்பட்ட பாகங்களை அளக்கும் போது அண்ணன் தன்னுடைய நிலத்தில் ஓரடி கூடுதலாக எடுத்துக் கொண்டுவிட்டார் என்று தம்பிக்கு சந்தேகம் வந்தது. அண்ணனிடம் விளக்கம் கேட்கப் போனார். பேச்சு வாக்குவாதமாக முற்றிப் பின கைகலப்பில் வந்து முடிந்தது. அன்றிலிருந்து இருவருக்கும் இடையே கொலைப்பழி. குத்துப்பழி.

தம்பி உள்ளூர் நீதி மன்றத்தில் அண்ணன் மீது வழக்குப் போட்டார். வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே ஐந்தாறு வருடங்களாகியது. சிவில் வழக்குத்தானே? பல முறை விசாரணை ஒத்திப் போடப்பட்டு, பத்து வருடங்களுக்குப்பிறகு அண்ணனுக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று.தம்பிக்கு மனது பொறுக்கவில்லை. உள்ளூரில தனக்கு நியாயம் கிடைக்காது, அண்ணன் ஆட்களை வைத்து ஏதாவது தில்லுமுல்லு செய்திருப்பார் என்று அவருக்கு சந்தேகம். மாவட்ட நீதி மன்றத்தை அணுகினார். அங்கும் பல ஆண்டுகள் வழக்கு நடந்து தம்பிக்கு சாதகமாக, அண்ணனுக்கு எதிராகத் தீர்ப்பாகியது. அண்ணனுக்கு இது கெளரவப் பிஅர்சினையாகிவிட்டது. உயர்நீதிமன்றத்திற்குப் போனது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் பூர்வீக நிலம் என்பதால் பழைய ஆவணங்கள் கிடைக்கவில்லை. இருக்கிற ஆவணங்களைக் கொண்டு பார்த்தால் இருவருக்கும் சமமான உரிமை இருக்கிறது. இரு தரப்பும் சமாதனமாகப் போகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. அதற்கு ஏதுவாக ஓர் அதிகாரியை சமாதானம் செய்து வைக்கும் நடுவராக நீதி மன்றம் நியமிக்கிறது.சகோதரர்கள் இருவரும் அவர் முன் ஆஜராகி சமரசம் செய்து கொள்ள வேண்டியது என்று ஒரு மழுப்பலான தீர்ப்பை வழங்கியது. ஆனால் அந்த அதிகாரியிம் முன் சகோதரர்கள் இருவரும் ஆஜராகவில்லை.

ஏன்?

முப்பது நாற்பது வருடங்களாக இழுத்துக் கொண்டு போன வழக்கு ஒரு முடிவுக்கு வருவதற்குள் இருவரும் காலமாகிவிட்டிருந்தார்கள். அவர்களுடைய வாரிசுகளை சந்தித்தார் அதிகாரி. அவர்கள் சமரசம் செய்து கொள்ள இசைந்தார்கள். ஆனால் பகிர்ந்து கொள்ள நிலம்தான் இல்லை!

என்னாயிற்று?

கீழ் நீதி மன்றத்திலும், மாவட்ட நீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் நிலத்திற்காக வழக்காடிய வழக்கறிஞர்களுக்கே, வழக்கிற்கான கட்டணமாக நிலத்தை அண்ணனும் தம்பியும் கிரயம் செய்து கொடுத்திருந்தார்கள்!

நிலத் தகராறுக்காக நீதி மன்றம் போனால், நிலமும் போய்விடும், உயிரும் போய்விடும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கிராமப்புறங்களில் இந்தக் கதையைச் சொல்வார்கள்.நீதி மன்றங்களில் ஆகும் தாமதம் அத்தனை பிரசித்தம்.

நீதிமன்றத் தாமதததைப் போலவே அரசாங்க அலுவலகத் தாமதங்களும் பிரசித்தமானவை. அரசாங்க இயந்திரத்தை இதயமற்றது, மூளையற்றது, ஆத்மாஅற்றது (heartless, mindless, soul less) என்று தீவிரமாக விமர்சிக்கும் நண்பர்கள் எனக்குண்டு. அதை நான் முழுவதுமாக ஏற்பதில்லை. ஏதோ கோபத்தில் சொல்கிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு. இந்தியாவின் சிறந்த மூளைகள் என்று கடுமையான சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் கண்டறியப்படும் மூளைகள் அரசாங்கத்தில்தான் IAS அதிகாரிகளாகக் கடமையாற்றுகிறார்கள். அப்படியிருக்க அது எப்படி மூளையற்றதாக இருக்கமுடியும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பும் ஆட்டம் கண்டுவிட்டது. அதற்குக் காரணம் தமிழக முதல்வர் கருணாநிதி.

இந்த மாதம் 6ம் தேதி ஒரு புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பைத் துவக்கி வைத்துப் பேசும் போது அவர் ஒரு தகவலைச் சொன்னார். அந்தத் தகவல்தான் என் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்த தகவல். அது:

1998ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்த போது, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.அப்படிக் கொள்முதல் செய்யும் நெல்லை சேமித்து வைக்கக் கோணிப்பைகள் வேண்டும் அல்லவா? அதற்காக அரசுச் செலவில் கோணிப்பைகள் வாங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு (டெண்டர்) அந்த ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்து, கோணிப்பைகளும் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட கோணிகளுக்குப் பணமும் கொடுக்கப்பட்டாகிவிட்டது. பணம் கொடுக்கப்பட்டாகிவிட்டது, பணி நிறைவடைந்தது, என்ற தகவலை முதலைமைச்சருக்குத் தெரிவித்து கோப்பை மூடிவிடலாமா எனக் கேட்டு கோப்பை முதல்வருக்கு அனுப்ப மூன்றாண்டுகள் ஆயிற்று. 2001ம் ஆண்டு கோப்பு முதல்வருக்கு வந்து சேர்ந்த சமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து முடிந்தது.தேர்தலில் ஆட்சி மாறியது. கருணாநிதி தோற்றுப் போய் ஜெயலலிதா முதல்வரானார். முதல்வரின் புதிய செயலாளர், இந்தக் கோப்பை உணவுத் துறை அமைச்சரின் கருத்தைக் கேட்டு அனுப்பி வைத்தார். அதுதான் நடைமுறை. உணவு அமைச்சர் அலுவலகத்தில் சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் முதல்வர் அலுவலகத்திற்குக் கோப்பு வந்தது. அந்த நேரம் பார்த்து, உணவு அமைச்சர் மாற்றப்பட்டார். மீண்டும் கோப்பு புதிய உணவு அமைச்சருக்கு அனுப்பப்பட்டது.அவரிடம் இருந்து ஒப்புதல் வந்தது. ஆனால் அந்தக் கோப்பு முதல்வருக்கு அனுப்பப்படும் முன் இரண்டாவது முறையாக உணவு அமைச்சர் மாற்றப்பட்டு மூன்றாவது உணவு அமைச்சர் பதவியேற்றார். கோப்பு மறுபடியும் அவரிடம் அனுப்பப்பட்டது. அவரிடமிருந்து வந்து முதலமைச்சர் அலுவலகத்தில் ஓய்வெடுத்து, அது முதல்வரின் மேசைக்குப் போவதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை இழந்து கருணாநிதி மறுபடி முதல்வரானார். எட்டாண்டுகளுக்கு முன்பு, அவரது ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஓர் ஆணைக்கான கோப்பு மறுபடியும் அவர் முதல்வரான பிறகு அவரிடமே போனது. 1998ம் ஆண்டு வாங்கப்பட்ட கோணிப்பைகள் குறித்த கோப்பு 2006 செப்டெம்பர் ஆறாம் தேதி முடித்து வைக்கப்பட்டது.

இந்தத் தகவலை முதல்வரே பகிரங்கமாக பொது மேடையில் வெளியிட்டார். அண்மைக்காலமாக ஜெயலலிதாவிற்கும் அவருக்குமிடையே ஓர் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. யாருடைய ஆட்சியில் கோப்புக்கள் அதிகமாகத் தங்கின என்பதைக் குறித்து அவர்கள் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இதைக் குறித்துப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று ஜெயலலிதா சவால் விடுகிறார். பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அறிஞர்களும், பொதுமக்களும் (பத்திரிகையாளர்கள் இந்த இரு பிரிவுக்குள்ளும் வரமாட்டார்கள் போலும்!) உள்ளடக்கிய ஒரு குழுவின் முன் விவாதிக்கலாம், நான் சொன்ன தகவல்கள் தவறு என்று அந்தக் குழு தீர்ப்பு வழங்கினால், அவர்கள் அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயார் என்று கருணாநிதி பதில் சவால் விடுகிறார். ஆனால் என்ன துரதிருஷ்டம் பாருங்கள்! தமிழ்ப் பெருங்குடி மக்கள் இந்த சவால்களைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல், சூர்யா-ஜோதிகா திருமணத்தைப் பற்றியும், 'ரிவர்சபிள்' புடவையைப் பற்றியும், சிக்கன்குனியாவைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் தெரிவித்த தகவல் எனக்குள் சில கேள்விகளையும் எழுப்பியது.இப்போதெல்லாம் எண்ணெய் வாங்கப்போகிறவர்களோ, பால் வாங்கப் போகிறவர்க்ளோ, பாத்திரம் எடுத்துக் கொண்டு போவதில்லை. விற்கிற பொருளை தகுந்த முறையில் 'பாக்' செய்து கொடுப்பது என்பது பொருளை விற்கிறவர்களது பொறுப்பு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எந்த விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதோ அந்த விவசாயியையே நல்ல தரமான சாக்கில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று அரசு சொல்லியிருக்க முடியாதா? அரசு அந்த சாக்கிற்கும் சேர்ந்து விலையை நிர்ணயம் செய்திருக்க முடியாதா? இதில் விவசாயிக்குக் கூடுதலாக எந்த சிரமும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் விவசாயி களத்திலிருந்து நெல்லைக் கை கையாக அல்லது கூடை கூடையாக அள்ளிக் கொண்டு போய் வீடு சேர்ப்பதில்லை. கோணிப்பை இல்லாத விவசாயியின் வீட்டை நான் பார்த்ததில்லை.பொது மார்க்கெட்டில் நெல்லை விற்கக் கொண்டுவருகிற விவசாயி அதை கோணிப்பைகளில் மூட்டையாகத்தான் கட்டிக் கொண்டு வருகிறார்.அரசாங்கத்திற்கு மட்டும் அவர் கோணிப்பையில் அடைத்து விற்காமல் தனியாகவா மரக்காலில் அளந்து விற்கப்போகிறார்? கோணிப்பையில் கட்டிய மூட்டைகளாக விற்பது விவசாயிகளுக்கு சிரமமானது என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கோணிப்பை வாங்குவது அரசாங்கத்தை விட விவசாயிக்கு எளிது. அவர் அதற்கு டெண்டர் விடத் தேவையில்லை. இந்தச் சாதாரண சிந்தனை (common sense) கோணிப்பைகள் வாங்க உத்தரவிட்டவர்களுக்குத் தோன்றவில்லை?

விவசாயி கோணிப்பைகளில்தான் கொண்டு வருகிறார், ஆனால் அரசாங்கம் தனது சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் போது அந்தக் கோணிப்பைகளிலிருந்து புதிய கோணிப்பைகளுக்கு மாற்றுவது வழக்கம் என்று சொல்லக்கூடும். அப்படியானல் அது வழக்கமான நடைமுறை. அதற்காக ஒரு கோப்புத் தயாரித்து அதை முதல்வர் வரை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

பணம் கொடுக்கப்பட்டாகிவிட்டது என்ற தகவல்தான் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றால், அதை ஒரு கடிதம் மூலம் அவருக்குத் தெரியப்படுத்த முடியாதா? அதற்கு ஒரு கோப்பு தேவையா? கடிதம்தான் அனுப்பப்பட்டது என்றால் அதில் முதல்வர் கையெழுத்திட வேண்டிய அவசியம் என்ன?

98ம் ஆண்டு வாங்கிய கோணிப்பைகளுக்கு பணம் எப்போது கொடுக்கப்பட்டது? அந்தக் கோப்பு ஏன் 2001ம் ஆண்டுவரை -மூன்றாண்டுகள்- முதல்வரை எட்டவில்லை. ஆட்சி முடிகிற நேரத்தில் அவருக்கு அனுப்பப்பட்டது? கடைசி நேரத்தில் கும்பலோடு கோவிந்தாவாக கையெழுத்தாகிவிடும் என்ற நம்பிக்கையிலா?

இதுபோன்ற சாதரணக் கோப்புகளைக் கூட முடித்து வைக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளுக்கு இல்லாமல் இருக்கலாம். மாநில உணவுத் துறை செயலருக்குக்கூடவா இருக்காது? சரி செயலருக்குக்கூட இல்லை என்றாலும் தலைமைச் செயலருக்குக்கூடவா இருக்காது? அவருக்கும் இல்லை என்றால் மாநில அமைச்சருக்குக்கூடவா இருக்காது? அப்படி அவருக்கும் இல்லை என்றால், அதிகாரங்கள் எப்படி ஒரு மையத்தில், ஒரு தனிநபர் வசம் குவிக்கப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். முதல்வர், சவால்களை ஒதுக்கி வைத்துவிட்டு அதிகாரப் பகிர்வைக் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டும்.

அதிகாரங்கள் இருந்தும் முதல்வரின் செயலர் மூன்றுமுறை கோப்பைத் திருப்பி அனுப்புகிறார் என்றால், அவர் பணம் வழங்கப்பட்டதில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கும் என்று சந்தேகப்படுகிறரா? அப்படி சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக பணம் வழங்கப்பட்டிருக்கிறதா?

அறிவார்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளால், சந்தேகத்திற்கும் காலதாமதத்திற்கும் இடமளிக்காதவகையில் இயக்கமுடியாத அரசு இயந்திரத்தை, இன்னொரு இயந்திரத்தைக் கொண்டு வெளிப்படையானதாக, விரைந்து செயல்படுவதாக மாற்ற முடியும். அந்த இயந்திரத்தின் பெயர் கணினி.

கணினி மூலம் ஒரு தகவல்- அது கோப்போ, குறிப்போ, கடிதமோ, பணப்பட்டுவாடாவோ-பகிர்ந்து கொள்ளப்படுமானால் அது என்று, எத்தனை மணிக்கு, எங்கிருந்து, யாரால், யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதைக் கணினியே பதிந்து கொள்ளும்படி செய்துவிடலாம். இந்த மின் ஆளுமை முறை ஏற்பட்டுவிட்டால், முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சவால்கள் விட்டுக் கொள்ள வேண்டிய அவசியமோ, பத்திரிகையாளர்களும், அறிஞர்களும், பொதுமக்களும் யார் சோம்பேறி என்று தீர்ப்பெழுத வேண்டிய அவசியமோ இராது.

இது அரசாங்கத்திற்குமே கூட உதவியாக இருக்கும். தமிழகத்தில் உள்ள நில அளவையும், நில உரிமையும் கணினிமயமாக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் உரிமை கொள்ளப்படாத நிலங்கள் எவ்வளவு, அவை எங்கெங்கு இருக்கின்றன, நிலமற்றவர்கள் எவ்வளவு பேர், அவர்களுக்குத் தலா இரண்டு ஏக்கர் அளிக்கமுடியுமா என்பதை மிக விரைவில் கண்டு கொள்ளலாம்.

நிர்வாகத்தைக் கணினிமயப்படுத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. அதுவும் கணினி ஆர்வலரும், பேரனுமான ஒர் இளைஞர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் போது கருணாநிதிக்கு இது மிக எளிது.
அவர் பதில் காண வேண்டியது எல்லாம், வெலிப்படையான, மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக் கொண்ட ஒரு அரசாங்கமாக அவரது அரசு இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதான்.

Friday, August 25, 2006

அடையாளங்களுக்கு அப்பால்..

எப்போதாவது ஒரு கவிதை உங்கள் முகத்தில் அறைந்ததுண்டா?

என் நண்பர் மகளுக்குத் திருமணம். கல்யாணப்பரிசாக வழங்கக் கவிதைப் புத்தகங்களைத் தேடிப் போயிருந்தபோது ஒரு கவிதை என்னை முகத்தில் அறைந்தது:

எப்போதோ ஒரு விடிகாலையில்
நம்மை எட்டவில்லை
அவனது அமைதியான அலறலும்
துடிதுடித்த முனகலும்.
அவன் தன்னந்தனியனாக இறந்து போனான்.
யார் அழுதார்கள்?
இறந்தது ஒரு மனிதனா? தேசமா?

அரசியல் கைதி என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதையை எழுதியவர் ஜீன் அரசநாயகம் என்றது குறிப்பு. நான் அந்தப் பெயரை அதற்கு முன் அறிந்திருந்ததில்லை. கவிதை என்னை வதைக்கத் தொடங்கியது. தேசத்தைக் காப்பதற்காக மனிதர்களைக் கொல்வது, மனிதர்களைக் காப்பதற்காக தேசத்தை சாகடிப்பது இதில் எது உயர்ந்தது? இரண்டுமே அல்ல என்பதை இலங்கையின் இரத்தம் தோய்ந்த வரலாறு நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இல்லாத தேசத்திற்கு எதிர்காலம் இல்லை. தேசங்கள் இல்லாத மனிதர்களுக்கு நிகழ்காலம் இல்லை.

தன்னந்தனியனாய் மரித்துப் போன அந்த அரசியல் கைதி என் சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான்.அவன் சாவிற்கு ஏதேனும் அர்த்தமுண்டா? அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியது வாழ்க்கையா? சாவா? தேடல்கள் கொண்ட மனிதனாக இருந்திருந்தால் அவன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தமிருந்திருக்கும்.தேடல்கள் கொண்ட மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் சாதாரணக் கைதி அல்ல, அரசியல் கைதி.

அந்தப் புத்தகக் கடையை விட்டு வெளியேறிய போது ஜீன் அரசநாயகத்தின் நூல்கள் பலவற்றை வாங்கியிருந்தேன். நான் புத்தகக் கடைகளில் செலவழிக்கும் சில மணிநேரங்களில் என்னை ஈர்க்கும் ஆசிரியர்களின் நூல்களை மொத்தமாக வாங்கி வந்துவிடுவேன்.நூல்களை, அது எத்தனை பெரிய கொம்பனுடையதாக இருந்தாலும், விமர்சனங்களைப் படித்து நான் வாங்கத் தீர்மானிப்பது இல்லை. என் உள்ளுணர்வை நம்பித்தான் வாங்கிப் படிக்கிறேன். கெட்ட வழக்கம்தான்.ஆனால் இதுவரை அநேகமாக என் உள்ளுணர்வு என்னைக் கை விட்டதில்லை.

அன்று நான் வாங்கிய நூல்களில் எதையும் பரிசாக அளிக்கவில்லை படிக்க ஆரம்பித்தேன். ஜீனின் கதைகளை வெறும் 'கதைகளாக'ப் படித்து விட முடியாது. அதில் இலங்கையின் சமகால வரலாறு அழுந்தப் பதிந்து கிடக்கிறது.வெறும் வரலாறு அல்ல,அவை சாதாரண மனிதர்களின் சரித்திரம். In the garden secretly என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளிலேயே நெடியது, The Crossing என்ற கதை. தென்னிலங்கை நோக்கிப் பயணம் செய்யும் தமிழ் மாணவன் ஒருவரும், கிறித்துவப் பெண்மணி ஒருவரும் மாறி மாறி விவரித்துச் செல்வதாக விரிகிறது கதை. இருவரும் எந்த அரசியல் சித்தாந்தத்திலும் பிடிப்பில்லாத சாதாரண ஜனங்கள். அந்தப் பெண்மணி தனது மகன்களைப் பார்ப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறார். மாணவனது லட்சியமெல்லாம், படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் படிப்பை எப்படியாவது முடித்துப் பட்டம் பெறுவது. " நான் மகத்தான தியாகங்கள் செய்யவோ, போர்களத்தில் என் வீரத்தை மெய்ப்பிக்கவோ, சயனைட் குப்பியைக் கடிக்கவோ நான் தயார் இல்லை. எனக்குக் கடமைகள் இருக்கின்றன. செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன.அப்பாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும். சகோதரிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்."

சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையே சிக்குண்டு கிடப்பது இந்த சாதாரண மனிதர்களது வாழ்க்கைதான். "இந்த இரண்டு கொடும் விலங்குகளுக்கும் இடையில் என்றென்றும் மோதல். இந்த மோதல் எங்களைக் காடுகளுக்குள் துரத்துகிறது.இங்கு அழியும் ஆபத்துக் கொண்ட விலங்கு மனிதன்தான்" என்கிறது ஒரு கதையின் வரி."சிதைவுற்ற இந்த வீட்டில் தனியாய் நிற்கும் இந்தத் தருணத்தில் எனக்கு என் வீடு ஞாபகம் வருகிறது.இங்கு வாழ்ந்தவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் நாடு கடந்து போயிருப்பார்கள். நாங்களும்தான் நாடு கடத்தப்பட்டவர்களைப் போல வாழ்கிறோம்.நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பழகிய வீட்டை, பழகிய கலாசாரத்தை,பழகிய வாழ்க்கையைத் துறந்து வாழ நிர்பந்திக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...." யாழ்ப்பாணத்தில் ஷெல்லடிக்குப் பலியான ஒர் வீட்டில் நுழையும் சிங்களப் படைவீரனின் எண்ணம் இப்படி அலைகிறது.

தமிழனோ சிங்களவனோ சாராம்சத்தில் வாழ்க்கையில் பெரிய வித்தியாசம் இல்லை. அச்சம் நிரம்பிய வாழ்க்கை. சந்தேகமும் கவலையும் நிரம்பிய வாழ்க்கை. மிக எளிய கனவுகள் கூட கைக்கெட்டாமல் போய்விட்ட வாழ்க்கை.வன்முறை என்பது எதார்த்தமாகிவிட்ட வாழ்க்கை. பிரசினகள் முற்றி நெருக்குகிறபோது கண்ணியத்தோடு வாழ்வதற்கு ஒரு மன உரம் வேண்டும். அர்த்தமற்ற வன்முறை எனபதும் முகமற்ற மரணம் என்பதும் விரவிக் கிடக்கிற தேசத்தில், மின்மினிப் பூச்சிகளைப் போல அங்கொன்ரும் இங்கொன்றுமாக ஒளிர்கிற மனிதாபிமானத்தை இனம் கண்டு கொள்ளவும், அங்கீகரிக்கவும் ஓரு தரிசனம் வேண்டும். இந்த இரண்டும் ஜீனின் கதைகளில் நிரம்பிக்கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகளின் மறை பிரதி (sub text) அவைதான்.

இலங்கைச் சூழலில் இது முக்கியமானது. இலங்கையிலிருந்து இன்று நமக்குக் கிடைக்கப்பெறும் பல படைப்புக்கள், தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி, ஏதோ ஒரு நிலைபாட்டை நியாயப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. அல்லது உலர்ந்த சித்தாந்த விசாரணைகளாக இருக்கின்றன. அல்லது அடையாளங்களை வலியுறுத்துகின்றவையாக இருக்கின்றன. ஆனால் வாழ்க்கை பற்றிய தரிசனங்கள் நியாயப்படுத்தல்களுக்கும், சித்தாந்தங்களுக்கும், அடையாளங்களுக்கும் அப்பாற்பட்டவை.

அடையாளங்கள் முக்கியமாகிவிட்ட இலங்கை வாழ்க்கையில், அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட தரிசனங்களுக்கு ஜீன் முயற்சிப்பது ஒருவகையில் இயல்பானது. ஜீன் சாலமன் அரசநாயகம் ஒரு பர்கர் இனப் பெண்மணி. (ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் பிறந்தவர்களை இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்கள் என்று சொல்வதைப் போல இலங்கையில் டச்சுக்காரர்களுக்கும் இலங்கையர்களுக்கும் பிறந்தவர்களை பர்கர் என்று அழைக்கிறார்கள்.)தியாகராஜா அரசநாயகம் என்ற தமிழரை மணந்தவர். தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய். ஆங்கில இலக்கிய மொழியியலில் எம்.லிட் பட்டம் பெற்ற ஜீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் போதிக்கும் பேராசிரியாகப் பணியாற்றியவர். ஒரு சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்து, இன்னொரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரை மணந்து வாழ்ந்து வரும் ஜீனுக்கு இன மொழி மத அடையாளங்கள் அர்த்தமற்றுப் போயிருக்கலாம். அந்த அடையாளங்களுக்கு அப்பால் மனிதர்கள் என்ற அடையாளத்தை அவர் கதைகள் வலியுறுத்துகின்றன. போரில் சிதைவுற்ற ஒரு தமிழரது வீட்டிலிருக்கும் ஏசுவின் சிலையைப் பெரும் பொக்கிஷமாகக் கருதித் தன்னுடன் எடுத்துச் செல்லும் பெளத்த படைவீரனை இவரது In the Garden Secretlyயில் சந்திக்கலாம். அம்மன் கோயிலில் தஞ்சம் புகும் கிறித்துவப் பெண்மணியை The crossing கதையில் சந்திக்கலாம்.

நூலின் தலைப்புக்கதையான In the Garden Secretly யாழ் பகுதியில் நடந்த போரின் சிதைவுகளைப் பின்புலமாகக் கொண்டது. இன்னொரு கதையான Search My Mind 1988-91 காலகட்டத்தில் தென்னிலங்கையில் நடந்த புரட்சியின் பின் புலத்தில் அமைந்தது.(கவிஞரும், பத்திரிகையாளரும், நடிகருமான ராய் டிசெளசா,கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவில் கொண்டுவருவது) Sanctuary என்ற இன்னொரு கதை 1970களில் நடந்த சே குவாரா இயக்கத்தைப் பற்றியது. Quail's nest என்ற கதையும் எண்பதுகளில் நடந்த இனக்கலவரத்தைப் பற்றியது.

ஜீனின் நடை பல எழுத்தாளர்களின் சிலாகிப்பைப் பெற்றது. 'கெண்டியை வைத்துக் கொண்டு மாக்கோலம் போடுவது' என்ற ஒரு பதப் பிரயோகத்தை தி.ஜானகிராமன் கதைகளில் படித்திருக்கலாம். அந்தச் சொற்றொடருக்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய நடை ஜீனுடையது. கெண்டி, மாக்கோலம் இவற்றை அறியாத இளம் தலைமுறையினருக்கு: ஏராளமான விவரங்கள் நுட்பமாகப் பதியப்பட்ட மொகலாய பாணி சிற்றோவியங்களை (miniatures) பார்த்திருப்பீர்களே அதைப் போன்றது அவரது கதைகள்.

ஆனால் முக்கியமானது நடை அல்ல. ஜீன் உசுப்பிவிடும் சிந்தனைகள்தான். ஓர் உதாரணம்:

"நீ தினம் உறங்கிய படுக்கை, நீ உட்கார்ந்திருந்த மேசை, விரித்துப் போட்ட பாய், உன் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்த அத்தனையும் ஒரு நொடியில் முக்கியமற்றதாகிவிடுகிறது. உயிர் வாழ்தல் அது ஒன்றே முக்கியம்.நீ எல்லாவற்றையும் விட்டுக் கிளம்பும் போது வீடு திரும்புவாயா என்று உனக்குத் தெரியாது. ஒருவேளை வீடு திரும்ப நேரிட்டாலும் அது மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. வீடு சிதிலமுற்றிருக்கும். நீ என் வீட்டுக்கு என் வீட்டுக்கு எனப் பார்த்துப் பார்த்து சேகரித்து நிரப்பியவை எல்லாம் முகந்தெரியாதவர்களால் களவாடப்பட்டிருக்கும்.அப்போது உனக்குப் உறைக்கும்: நீ ஒரு போதும் உன் பழைய வீட்டிற்குத் திரும்ப முடியாது."

வாழ்வின் பல சோகங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

சிங்கப்பூர் நாளிதழ் தமிழ் முரசுக்கு எழுதியது

Friday, July 14, 2006

மகேஷுக்கு ஒரு 'ஓ!' போடுங்கள்

இன்று காலை இணைய இந்துவில் படித்த ஒரு செய்தி பெருமிதத்தையும், மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

மகேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தந்தை ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மகேஷ்தான் குடும்பத்தில் முதன் முறையாக முதுநிலை வரை படித்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரிக்கு அருகில் உள்ள 'அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கலை அறிவியல் கல்லூரியில் ( இந்தக் கல்லூரியின் பெயரை இப்போதுதான் நான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன்) முதுநிலை மாணவர் மகேஷ்.

அவர் மைக்ரோசாஃப்ட் அடுத்துக் கொண்டுவரவிருக்கும் இயக்கு தளத்திற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார்.(next generation operating system) BETA2 iBRO.net என்ற இந்த நுட்பம் நான்குமாத காலத்திற்குள், கல்லூரிப்படிப்பின் ஒரு புரஜக்ட் ஆக வடிவமைக்கப்பட்ட ஒன்று.

திறமைகள் எந்தெந்த மூலைகளில் எல்லாம் ஒளிந்து கிடக்கிறது பார்த்தீர்களா?

'உள்குத்து''சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, மகேஷ்க்கு ஒரு 'ஓ!' போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?

மகேஷோடு, ஏழ்மை நிலையில் இருந்தாலும், மகனது திறமைகளை குடும்பத்திற்காக முடக்கிவிடாமல் உற்சாகப்படுத்திய அவரது தந்தைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.

மகேஷுடைய மின்னஞ்சல்: maheshbeta2@gmail.com

விவரங்களுக்கு: http://www.hindu.com/2006/07/14/stories/2006071416510100.htm

Wednesday, April 26, 2006

தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா, கருணாநிதி...

துணிச்சலும் புத்திசாலித்தனமும், கொண்ட ஜேம்ஸ்பாண்ட், ஆள்பலமும் டெக்னாலஜியின் துணையும் கொண்ட வில்லனோடு மோதும் ஹாலிவுட் படங்கள் போல ஆகி வருகிறது தமிழகத் தேர்தல் களம்.இந்தப் படங்களில் முதலில் ஜேம்ஸ்பாண்டும், அடுத்த சில நிமிடங்களிலேயே வில்லனும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டிருப்பார்கள்.படம் முடிவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன், ஒரு ஹெலிகாப்டரிலோ, சக்தி வாய்ந்த படகிலோ, பாண்ட் வந்து கையெறி குண்டுகளால் வில்லனின் கோட்டையைத் தகர்த்து விட்டு, கொழுந்துவிட்டு எரியும் பின்னணியில் ஓடி வரும் போதுதான் 'முடிவு' என்ற ஒன்று ஏற்பட்டுவிட்டதை உணரமுடியும்.

தமிழகக் தேர்தல் களத்திலும், கருத்துக்கணிப்புக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பார்த்தால், திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஜெயித்துக் கொண்டிருக்கின்றன.இறுதி முடிவு மே.11ம் தேதியன்றுதான் உறுதியாகும்.

எந்தப் பெரிய தேர்தலிலும், இந்த இரு பெரிய அணிகளுக்கிடையே, இவ்வளவு நெருக்கமான போட்டியிருந்ததில்லை. கடந்த வாரம் ( ஏப்ரல் 14 அன்று) இந்து நாளிதழ் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என்னுடன் சேர்ந்து நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருந்தது. அ.தி.மு.க அணிக்கு 46% வாக்குகளும், தி.மு.க அணிக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்றது அந்தக் கணிப்பு.

இந்த வாரம் (ஏப்ரல் 21ம் தேதி) சென்னை லயோலா கல்லூரி ஊடகவியல் துறை தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.இந்தக் கணிப்பு திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதமும், அதிமுகவிற்கு 40.1 சதவீதமும் ஆதரவிருப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்துப் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை நடத்தப்பட்டது. லயோலா கல்லூரியின் கணிப்பு ஏப்ரல் 5 முதல் 15 வரை நடத்தப்படது. இதைக் கொண்டு பார்த்தால் ஒரு வார காலத்தில் அதிமுகவை விட திமுக அணியின் கை ஓங்கியிருக்கிறது.

ஆனால் அதை அப்படி உறுதியாக அடித்துச் சொல்லிவிட முடியாது.ஏனெனில் லயோலா கல்லூரி நடத்த கள ஆய்வில் பங்கு கொண்டு பதிலளித்தவர்களில் 91.7 சதவீதம் பேர் ஆண்கள். பெண்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த ஒன்றே இந்தக் கருத்துக் கணிப்பை நிராகரிக்கப் போதுமானது. ஏனெனில் தமிழக வாக்காளர்களில் பெண்கள் ஏறத்தாழ 50 சதவீத அளவில் இருக்கிறார்கள். சில தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ள தொகுதிகளும் உண்டு. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பெண்கள் பெரும் அளவில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெருமளவில் வளர்ச்சி கண்டு வந்துள்ளது. அந்தக் குழுக்கள் பலவற்றின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது, 'பெண்ணுக்குப் பெண்தான் உதவவேண்டும் ' என்ற மனோபாவம் அந்தப் பெண்களிடம் நிலவுவதை நான் சில இடங்களில் அனுபவப் பூர்வமாக அறிந்திருக்கிறேன்.

இலயோலா கல்லூரியின் கணிப்பு இன்றுள்ள நிலையை முழுமையாகப் பிரதிபலிப்பதாக இன்னொரு காரணத்தினாலும் கருத முடியவில்லை.இந்தக் கணிப்பு அதிமுகவின் இலவச அரிசி அறிவிப்பு, சரத்குமார் அதிமுகவில் இணைந்தது ஆகியவற்றிற்கு முன்பாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது.எனவே இந்த இரு அம்சங்களின் தாக்கம் இந்தக் கணிப்பில் பிரதிபலிக்கவில்லை.

ஆனால் இந்துவின் கணிப்பும் சரி, லயோலா கல்லூரியின் கணிப்பும் சரி, ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகின்றன அது: இரண்டு பெரும் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகின்றன. இரு அணிகளும் பெறக் கூடிய இடங்களின் எண்ணிக்கையின் இடையே பெரிய வித்தியாசம் இராது.

இதைத்தவிர இன்னொரு அம்சமும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகள் பெற்றது. அதிமுக கூட்டணி 35 சதவீத வாக்குகள் பெற்றது. இப்போது திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறி விட்டது. அதிமுக கூட்டணியிலிருந்து பா.ஜ.க வெளியேறிவிட்டது. இந்த இரு கட்சிகளுமே கூட்டணிக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்று எண்ணிக் கொண்டு பார்த்தால், அதிமுக 2004ல் இழந்த 17 சதவீத வாக்குகளில் பெரும்பகுதியை மீட்டுக் கொண்டு விட்டது.

இந்தப் பின்னணியில் தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.

காட்சி அ: எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை. தனிப் பெரும் கட்சியாக அதிமுக விளங்குகிறது
இந்த சூழ்நிலையில் அதிமுக ஆட்சி அமைக்க உரிமை கோரும். தனிப் பெரும் கட்சி என்பதால் ஆளுநர் அதற்கு அரசமைக்கும் வாய்ப்பு அளித்து ஓரிரு வாரங்களில் தனது பெரும்பான்மையை சட்ட மன்றத்தில் நிரூபிக்குமாறு கெடு விதிக்கலாம். அப்படி நடந்தால் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சிலவற்றைத் தன் பக்கம் இழுக்கவோ, அல்லது அந்தக் கட்சிகளைப் பிளந்தோ, அல்லது திமுகவையே பிளந்தோ தனது சட்டமன்றப் பெரும்பான்மையை மெய்ப்பிக்கலாம். ஏற்கனவே காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அந்தக் கட்சியிலிருந்து விலகி வந்து தன்னை ஆதரிக்கச் செய்தவர் ஜெயலலிதா. அதே போன்றதொரு முயற்சியை அவரால் இந்த முறையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

மத்தியில் உள்ளதைப் போல, சில கட்சிகளை வெளியிலிருந்து ஆதரவு தரச் சொல்லி, ஓர் உடன்பாட்டிற்கு வரவும் அவர் முயற்சிக்கக் கூடும். திருமாவளவனைப் பயன்படுத்தி அவர் பாட்டாளி மக்கள் கட்சியைத் தன் பக்கம் கொண்டு வர முயற்சிக்கலாம். ஆனால் அது வெற்றி அடையுமா என ஊகிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் பா.ம.க. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு வகிக்கிறது. அதன் காரணமாக மத்தியில் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிறது. டாக்டர். ராமதாசின் மகன் அந்த அமைச்சர் பதவியில் வீற்றிருக்கிறார். எனவே அதை இழக்க அது விரும்பாது. மாநிலத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவு, மத்தியில் திமுக இடம் பெற்றிருக்கும் அரசுக்கு ஆதரவு என்ற விசித்திர நிலையை அது மேற்கொள்ள இயலாது. அது மேற்கொள்ள விரும்பினாலும், திமுக அதற்கு இடம் கொடுக்காது. மாநிலத்தில் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணியிலிருந்தும் வெளியேற வேண்டும் என அது வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

பா.ம.க.வைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியாது போனால், அதிமுக காங்கிரசின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம். உட்கட்சிப் பூசலுக்குப் பெயர் பெற்ற கட்சி என்பது மட்டுமல்ல, அந்தக் கட்சிக்குள் எல்லா மட்டங்களிலும் ஜெயலலிதாவின் அபிமானிகள் இருக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். அது மட்டுமல்ல, பாரம்பரியமாகவே காங்கிரசிற்குள் கருணாநிதியின் விமர்சகர்கள் உண்டு.அதுவும் தவிர மத்தியில் ஜூனியர் பார்ட்னராக இருந்தாலும், மாநிலத்தில் கூட்டணிக்குள் திமுக பெரியண்ணன் மனோபாவத்தோடு 'நாட்டாமை' செய்கிறது என்று பொருமிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் கோஷ்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்.வாசன் கோஷ்டி ஏறத்தாழ பாதிக்கு மேற்பட்ட இடங்களைப் பெற்றிருக்கிறது. எனவே ஏதேனும் ஓரு கோஷ்டி அளவுக்கு மேல் வளர்ந்து விடக் கூடாது என்பதைக் குறியாகக் கொண்டு கட்சிக்காரர்களே சில வேட்பாளர்களைத் தேர்தலில் தோற்கடிக்க முற்படலாம். திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கணிசமாக வெற்றி பெற்று, காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனால் அது திமுக தலையில் வந்து விடியும். 1989ம் ஆண்டு தேர்தல் முடிவு வெளியானதும் மூப்பனாரைத் தாக்கி வாழப்பாடி வெளியிட்ட அறிக்கை ஓர் முன்னுதாரணம். இன்னொரு புறம், காங்கிரஸ் தனது சட்டமன்றக் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும் இந்த கோஷ்டிகளை சமன் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகும்.அதுவும் மனவருத்தங்களை ஏற்படுத்தலாம். (த.மா.க காங்கிரசுடன் இணைந்த போது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நினைவிருக்கலாம்) இவற்றையெல்லாம் ஜெயலலிதா நிச்சயம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

என்றாலும் காங்கிரஸ் பகிரங்கமாக ஜெயலலிதாவை ஆதரிக்க முன்வராது. காரணம், ஜெயலலிதாவிற்கும், சோனியா காந்திக்குமிடையே உள்ள தனிப்பட்ட உறவு. என்னை பகிரங்கமாக ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் நாளன்று, எனக்கு எதிராக வாக்களிக்காமல், 'ஆப்சென்ட்' ஆகி விடுங்கள், பின்னால் பார்த்துக் கொள்கிறேன் என்ற ஓர் உத்தியைக் கூட ஜெ. காங்கிரஸ்காரர்களிடம் பின்பற்றலாம். முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சி 'விப்' எனப்படும் கொறடா ஆணை பிறப்பித்தால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் அதை மீற முடியாது. மீறினால் எம்.எல்.ஏ பதவி பறி போய்விடும். அப்படியும்கூட, வாஜ்பாய் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் சேடப்பட்டி முத்தையா வாக்களித்ததைப் போல, ரரஜமானிய ஒழிப்பு மசோதாவின் மீது மாநிலங்களவையில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாக்களித்தைப் போல, ஏதேனும் 'தவறு' நேர்ந்து, ஜெயலலிதா வெற்றி பெறலாம்.

மிகச் சில இடங்களே தேவைப்பட்டால், ஜெயலலிதா இடதுசாரிகளை அணுகலாம். அவர்கள் அமைச்சரவையில் இடம் கேட்கமாட்டார்கள் என்ற அளவில் அவருக்கு அது வசதியும் கூட. அது மட்டுமன்றி, இந்த விஷயத்தில் அவர் தில்லி தலைமையிடம் பேசி முடிவெடுத்தால் போதும். அவர் தேசிய அளவில் 'மூன்றாவது அணி' என்ற வியூகத்தைக் காட்டி அவர்களை சபலப்படுத்த முடியும். மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள், குறிப்பாக அரசு ஊழியர் சங்கங்கள், ஜெயலலிதாவிற்கு எதிராக இருப்பதுதான் இதற்கு இருக்கக் கூடிய முட்டுக் கட்டை.

இந்த முயற்சிகள் எதுவுமே வேண்டாம் என அவர் விஜயகாந்தைத் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் எத்தனை இடங்களைப் பெறுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அவர் 10 சதவீதத்திற்கு சற்று அதிகமான வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் மதிப்பிடுகின்றன. அவை எத்தனை இடங்களாக மாறும் என்பது எளிதில் ஊகிக்க முடியாத ஒன்று. தேர்தல் நேரத்தில் அவரது ஆதரவு வாக்குகள் அநேகமாக அதிமுகவிற்கு ஆதரவாக மாறும் என்பது என் கணிப்பு. அவரது கட்சிக்கான சின்னம் இன்னும் முடிவாகவில்லை.அநேகமாக எல்லாத் தொகுதிகளிலும் அந்தக் கட்சி ஒரே சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களும் கூட விஜயகாந்திற்கான தங்கள் ஆதரவை சின்னத்திற்கான ஆதரவாகத் தெரிவிப்பதில் குழப்பம் ஏற்படலாம். அந்த சூழ்நிலையில் அந்த வாக்குகள் அதிமுகவிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் விஜயகாந்த் கட்சியின் எதிர்காலம், அது அதிமுகவிற்கான மாற்றாகத் தன்னை முன்னிறுத்துவதில் இருக்கிறது. வீர வசனங்கள் பேசி விட்டு அது சட்டமன்றத்திற்குள் முதன் முதலில் நுழைந்த உடனேயே ஆளுங்கட்சி வரிசையில் சென்று அமர்ந்தால் அதன் மீதான நம்பிக்கை சரிந்து விடும்.

ஆட்களை இழுக்க வேண்டும் என்ற நிலை வந்தால், அதிமுக, திமுகவின் பக்கமும் பார்வையைச் செலுத்தும். திமுகவின் அசைக்க முடியாத விசுவாசிகளாக ஒரு காலத்தில் தோற்றம் தந்த, வைகோ, திருமாவளவன், சரத்குமார், ராதிகா ஆகியோரை அது தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கும் அண்மைக்கால நிகழ்ச்சிகள் அதன் maneuvering வலிமைக்கு ஓர் உதாரணம். அண்மையில் திமுகவின் பக்கம் போய்ச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் எதிரிகளாகத் தோற்றமளித்தவர்கள் (பாக்யராஜ், டி.ராஜேந்தர், சேடப்பட்டி முத்தையா, இந்திராகுமாரி ) என்பதும், ஜெயலலிதாவின் பக்கம் போனவர்கள் எல்லாம் கருணாநிதியின் விசுவாசிகளாகக் கருதப்பட்டவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த இடப் பெயர்ச்சிகளின் ஆழம் புரியும்.

காட்சி ஆ: முன்னிலையில் திமுக கூட்டணி. ஆனால் திமுகவிற்குப் பெரும்பான்மை இல்லை திமுக இந்தத் தேர்தலில் 130 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. தனிப் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. அதாவது தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் அது போட்டியிடும் இடங்களில் 90 சதவீத இடங்களைப் பெற வேண்டும். அதாவது அது 12 இடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூடத் தோற்கக் கூடாது. அலை இல்லாத தேர்தலில் இதற்கு சாத்தியம் இல்லை.

வேறு ஒரு கணக்கைப் பார்த்தாலும் இது விளங்கும். லயோலா கல்லூரிக் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்கள் 36 சதவீதம் பேர்கள்தான். அதாவது திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஆதரவில் கணிசமான அளவு, அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கிடைக்கிறது. அதாவது திமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் கூட, அதில் திமுகவின் இடம் அதிகமாக இராது.

இந்தச் சூழ்நிலையில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின் அடிப்படையிலே ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டியிருக்கும். இந்த ஆதரவு என்பது ஆட்சியில் பங்கேற்று அளிக்கும் ஆதரவாகவோ, ஆட்சிக்கு வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவாகவோ இருக்கலாம். இடதுசாரிகள் ஆட்சியில் பங்கேற்க மாட்டார்கள். பா.ம.க பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. ஆனால் என்ன நிலை எடுக்கும் என்பது குறித்துத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சிக்குள் விவாதம் நடக்கலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது திமுக நடந்து கொண்ட விதத்தை மனதில் கொண்டு காங்கிரஸ் இப்போது நடந்து கொள்ள நினைக்கலாம். அதாவது ஆட்சியில் சில முக்கிய இலாக்கக்களைத் தங்களுக்குத் தர வேண்டும் என அது கோரலாம். இதன் அதிக பட்சமாக அது துணை முதல்வர் பதவியைக் கோரலாம். அல்லது மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் நடந்த மாதிரி, முதல் இரண்டரை ஆண்டுக்கு திமுக- அடுத்த இரண்டரை ஆண்டிற்கு காங்கிரஸ் எனப் பேரம் நடக்கலாம்.

இதில் எது நடந்தாலும் அது கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளிக்காது.அவர் மத்திய அரசு நிலைக்கத் தன்னைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தன் கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இது இரண்டு கட்சிகளுக்கிடையே இருக்கும் உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தும்.

ஒருவேளை காங்கிரசின் தயவு இல்லாமல், திமுக தனது பலத்தில், பா.ம.க, இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க ஆட்சி அமைக்க முற்படலாம். அது ஆட்சியின் உறுதிப்பாட்டை மேலும் கேள்விக்குரியதாக்கும்.

ஒரு வேளை கருணாநிதியின் உடல் நலம் காரணமாக, அல்லது வேறு காரணங்களினால், இடைக்காலத்தில் வேறு ஒருவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகுமானால்,அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும்.

காட்சி இ:யார் ஆள்வது என்பதை விஜயகாந்த் தீர்மானிக்கும் நிலை இரண்டு பெரும் அணிகளும் சமபலம் பெற்று, திமுக அணியிலிருந்து இடப் பெயர்ச்சி ஏதும் ஏற்படாத நிலையும் உருவானால், விஜயகாந்த் கட்சிதான் தனது ஆதரவின் மூலம் யார் ஆள்வது என்பதைத் தீர்மானிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம். அதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றாலும் அதை 'ரூல் அவுட்' (ஒதுக்கித் தள்ள) முடியாது. அந்த நிலையில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பது இன்று ஊகிக்க முடியாத நிலை. அவர் தன்னைப் பற்றிய மிகையான மதிப்பீட்டில் இருக்கிறார் என்று ஒரு எண்ணம் அரசியல் நோக்கர்களிடம் இருக்கிறது.

இந்தச் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதன் முக்கியமான பக்க விளைவு தேசிய அரசியலில் நிகழும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2009ல் நடைபெற வேண்டும். அதனால் அடுத்த ஆண்டிலிருந்து அதாவது 2007க்குப் பிறகு அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கும். ஜெயலலிதா, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டுறவில், இடதுசாரிகள் ஒத்துழைப்போடு ஒரு மூன்றாவது அணிக்கான விதைகள் ஊன்றப்படலாம்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இந்த மூவருமே முயற்சிப்பார்கள் என்பதால் இவர்கள் ஒருங்கிணைய வாய்ப்புண்டு. அப்போது திமுக என்ன நிலையை மேற்கொள்ளும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஜெயலலிதா - சோனியா இடையே உள்ள தனிப்பட்ட மோதல் திமுகவை காங்கிரஸ் ஆதரவு என்ற நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டது. ஒருவேளை அது காங்கிரசின் உதவியோடு மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகுமானால், அந்த உறவு இறுக்கமானதாக ஆகிவிடும்.

மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான மனநிலையை (anti incumbency) காங்கிரஸ் அடுத்த தேர்தலில் சந்திக்க நேரும். அப்போது திமுக வேறு அணிகளுக்குத் திரும்ப இயலாத நிலையில் இருக்கும்.1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசில் இருந்துவிட்டு, 2004ல் அதற்கு எதிராக வாக்குக் கேட்ட காங்கிரசோடு இணைந்து கொண்ட விளையாட்டை மீண்டும் அணி மாறி ஆடமுடியாது. அப்படி ஆடினால் அது மாநிலத்தில் காங்கிரசும், இடதுசாரிகளும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். அந்தக் கட்சிகளின் ஆதரவோடு மாநிலத்தில் அரசமைத்துவிட்டு, அந்த நிலையை திமுகவால் எடுக்க முடியாது. எனவே அதன் விதி காங்கிரசின் எதிர்காலத்தோடு பிணைக்கப்பட்டுவிட்டது.

அதிமுகவிற்கு அது போன்ற சிக்கல்கள் இல்லை. இந்தத் தேர்தலில் ஏறத்தாழத் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால், அதுதான் மாநிலத்தில் வலுவான கட்சி என்ற எண்ணம் ஏற்பட்டு, அதன் மீதான தேசியக் கட்சிகளின் பார்வை மாறக் கூடும். ஒருவேளை அப்படி நடக்கவில்லையென்றாலும் அதற்கு மூன்றாவது அணிக்கட்சிகளோடோ , பாஜகவோடோ உறவு அமைத்துக் கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதாவது இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதன் நிலை, நாடளுமன்றத்தைப் பொறுத்தவரை open ended ஆக இருக்கிறது.

ஒரு வேளை இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதன் பக்கவிளைவாக, நாடாளுமன்றத் தேர்தலும் விரைவிலேயே வரலாம்.

எனவே தேர்தலை விட தேர்தலுக்குப் பிறகுதான் சுவாரஸ்யமான காட்சிகள் விரிய இருக்கின்றன.

23.4.2006 அன்று (சிங்கப்பூர் தமிழ் முரசுக்காக) எழுதியது

Wednesday, March 01, 2006

வருகிறார் பெரியண்ணன்

வந்துவிட்டார் புஷ். அவரின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

ஒருவகையில் அமெரிக்க அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.2000ல் கிளிண்டன் வருவதற்கு முன்னால் இரண்டே இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.ஐம்பதுகளில் ஐஸ்நோவர், அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப்பின் 1978ல் ஜிம்மிகார்ட்டர் இவர்களைத் தவிர யாரும் சுதந்திர இந்தியாவை எட்டிப் பார்த்ததில்லை. கார்ட்டருக்குப் பிறகு 22 கழித்து கிளிண்டன் வந்தார். அதற்குப் பின் ஆறே வருடங்களில் புஷ் வருகிறார். 1947லிருந்து கணக்கு வைத்துக் கொண்டு பார்த்தால் இந்த 59 வருடங்களில் 33 ஆண்டுகள் குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவை ஆண்டிருக்கிறார்கள். ஆனால் ஐஸ்நோவரைத் தவிர எந்தக் குடியரசுக் கட்சியின் அதிபருக்கும் இந்தியாவிற்கு வரத் தோன்றியதில்லை.

ஏன் இப்போது திடீரென்று அமெரிக்காவிற்கு இந்தியா மீது ஒரு கரிசனம்? இன்று அமெரிக்காவில் இருபது லட்சம் இந்திய வம்சாவளியினர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அமெரிக்க அரசியலில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்கள் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் அமெரிக்கவில் வாழும் இந்திய வம்சாவளியினரைக் கவர இரண்டு அரசியல்கட்சிகளுமே விருந்துகளையும் சில நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. இது ஒரு காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீனா ரைஸ், கடந்த ஆண்டு அதாவது 2005ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வாஷிங்டன் போஸ்ட் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இனி வரும் நாள்களில் உல்கின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியர்களைப் பொறுத்தவரை இது நெடுநாளையக் கனவு. பாரதிய ஜனதாக் கட்சி அதன் அரசியல் மேடைகளில் இதைப் பற்றி முழங்கியது உண்டு. ஆனால் அதற்கும் முன்னால் நேரு தனது டிஸ்கவரி ஆஃப் இந்தியாவிலேயே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் இது இந்தியர்களுக்குப் புதிதல்ல. ஆனால் அமெரிக்கர்களுக்குப் புதிது.காண்டலீனா ரைசின் கணிப்பை புஷ் நிர்வாகத்தின் - ஏன் வாஷிங்டன் அரசியல்வாதிகளின்- கணிப்பு என்றே கொள்ளலாம். எனவே வளர்ந்து வரும் ஒரு சக்தியுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் அக்கறை அமெரிக்காவிற்கு இருக்கலாம்.

புஷ் முதல்முறையாகப் பதவியேற்ற நாள்களிலிருந்தே தெற்காசிய விஷயங்களில் மூக்கை நுழைப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். தெற்காசியாவில் எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்க 'வழிகாட்டுதலின்' பேரில் எடுக்கப்பட வேண்டும் என்பது அவரது ஆசைகளில் ஒன்று என்பது வெளிப்படை.அதிகாரத் தராசில் சீனாவைச் சமன்செய்வதற்கு மட்டுமல்லால், தெற்காசியாவில் அமெரிக்காவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நண்பனாக இந்தியாவை உருவாக்க அது விரும்பலாம். பரப்பளவு, மக்கள் தொகை, பொருளாதார பலம், ராணுவபலம் என்ற எல்லாவிதத்திலும் தெற்காசியாவில் உள்ள பெரிய தேசம் இந்தியா. இந்தப் பகுதியின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றல் அதன் வசம் உள்ளது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு பூசலும் நேசமும் நிறைந்த, காதலும் மோதலும் நிறைந்த உறவாகவே இருந்து வந்திருக்கிறது. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிழல் யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த ஆரம்ப நாள்களில் இந்தியா இரு நாடுகளிடமிருந்தும் விலகித் தனித்து நின்றது. அணி சேரா நாடுகளின் அமைப்பைத் தோற்றுவிப்பதில் முனைப்புக்காட்டிய நாள்கள் அவை. அதன் பின் 1962ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்ட சமயத்தில் இந்தியா அமெரிக்காவுடன் ராணுவரீதியாக நெருக்கம் பாராட்ட முனைந்தது. இந்திராவின் காலத்தில் சோவியத்தின் நண்பனாக இந்தியா கருதப்பட்ட நாள்களில் அமெரிக்க இந்தியாவிடமிருந்து விலகி நின்றது. வன்மம் பாராட்டியது என்று கூடச் சொல்லலாம்.சோவியத் யூனியன் மறைவிற்குப் பின் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய- அமெரிக்க உறவில் ஒருவித இளக்கம் இருந்து வருகிறது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவில் நெருடலாக இருந்து வரும் ஒரு விஷயம் அணுசக்தி.1974ல் இந்தியா தனது அணு ஆற்றலை வெளிப்படுத்தியதை அடுத்து அமெரிக்கா இந்தியாவிற்குப் பலவிதமான முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்தது.இந்தியா அந்த முட்டுக்கட்டைகளையும் மீறி, தன்னுடைய விஞ்ஞானிகளின் ஆற்றல் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்தியா தொடர்ந்து தன் அணு ஆற்றலை வளர்த்துக் கொண்டிருந்தது. மின்சக்திக்காக உருவாக்கப்பட்ட உலைகளை கேடயமாகக் கொண்டு அணு ஆயுதங்களையும் அது தயாரித்துக் கொண்டிருந்தது. இன்று ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்பை ஒரு பொருட்டாகக் கருதாமல்,தங்களது அணுமின் நிலையங்களைப் பயன்படுத்தி அணுஆயுதங்கள் செய்வதற்கான துணிவைப் பெறுவதற்கு இந்தியா அன்று காட்டிய துணிவு ஒரு முக்கியக் காரணம். (அந்த நாட்டைத் தனிமைப்படுத்த முற்படும் அமெரிக்க முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்பது வரலாற்றின் விசித்திரம். ஒரு துரதிருஷ்டம்)முட்டுக்கட்டைகள் பலன் தராது போனதையடுத்து அமெரிக்கா இந்தியாவை அணுஆயுதப் பெருக்கத் தடை ஒப்பந்தத்தை (Nuclear Non-Proliferation Treaty (NPT) ஏற்குமாறு நிர்பந்தித்து வந்தது. அந்த ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமானது என்பதைச் சுட்டிக் காட்டி இந்தியா அதில் கையெழுத்திடப் பிடிவாதமாக மறுத்து வந்தது. இந்தியாவின் இந்த வாதம் நியாயமானது. இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதை ஏற்காத என் போன்ற இந்தியர்கள் கூட, இந்தியாவின் நிலைபாட்டை ஆதரிக்க மட்டுமல்ல, அதைக் குறித்துப் பெருமிதமும் கொள்வர்.

இந்த வரலாற்லிருந்து விலகி இன்று அமெரிக்கா வேறு ஒரு வித ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது.கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்ட அமெரிக்க அரசின் குறிப்பின்படி பார்த்தால் இது ஒரு தலைப் பட்சமானதல்ல. முற்றிலும் இந்தியாவிற்கு எதிரானது அல்ல.இந்தியா பொதுமக்கள் தேவைக்கான அணு மின்நிலையங்களையும், ராணுவத் தேவைக்கான அணு ஆயுத உற்பத்தி ஆலைகளையும் தனித் தனியே இனம் காணவேண்டும் என வற்புறுத்துகிறது அமெரிக்கா. எததகைய அணு ஆயுதம் வைத்துக் கொள்ளப்போகிறோம், எவ்வளவு வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற முடிவு செய்து கொள்ளாமல், இப்படி அணு உலைகளை இனம் பிரிப்பது இயலாது. ஆனால் எவ்வளவு ஆயுதம்,எத்தகைய ஆயுதம் என்பதற்கான விடைகள் நம் மனோபாவம் சார்ந்தவை.அதற்குத் திட்டவட்டமான விடைகள் இருக்க முடியாது. அதுவும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தியா முதலில் அணு ஆயுதங்களை பிரயோகிக்காது என்ற கொள்கை நிலைபாட்டை வெளிப்படையாக அறிவித்தபின்னர் இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண்பது எளிதல்ல.

எனவே புஷ் இந்தியா வரும் போது இந்த விவாகாரம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என நான் கருதவில்லை. ஆனால்
வேளாண்மையில் இந்திய அமெரிக்க ஒத்துழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகலாம். அவற்றிற்கும் அப்பால், காண்டலீனா ரைஸ் வாஷிங்டன் போஸ்டில் வெளிப்படுத்திய 'ஐந்து வல்லரசுகளில் ஒன்று' என்ற நம்பிக்கையை ஏற்பதுமட்டுமல்ல, உறுதி செய்வதாகவும் இந்தப் பயணம் அமையுமானால் அது அர்த்தமுள்ளது.இல்லையென்றால் இது வெறும் சுற்றுலாதான்.

புஷ் பாகிஸ்தானுக்கும் செல்கிறார். அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானை இந்தியாவைவிட நெருக்கமான நண்பனாகவே கருதி வந்திருக்கிறது. ஆனால் இன்று பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கு எதிராகக் கடுங் கோபம் நிலவி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் இருப்பது, ஈராக் மீது அது நடத்திய ஆக்கிரமிப்பு, அமெரிக்கா இஸ்லாமிற்கு எதிராக இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டிருப்பது போன்றவை இந்தக் கோபத்திற்குக் காரணம். எனவே புஷ் அங்கு வரும் போது அங்கு அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பேரணிகள் நடக்கலாம். இந்தியாவிலும் கூட இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனால் அது 'வழக்கமான' எதிர்ப்பாக இருக்கும். பாகிஸ்தான் அளவு கடுமையாக இராது. என்றாலும் கூட புஷ் முஷரபைப் புகழ்ந்து பேசுவார். முஷரபைப் புகழும் அதே சமயம் பாகிஸ்தானைக் கண்டிக்கவும் செய்யலாம். சில தினங்களுக்கு முன் (பிப்ரவரி 22) அமெரிக்காவில் உள்ள ஆசியா சொசைட்டியில் உரைநிகழ்த்தும்போது, பாகிஸ்தான் ஊடகங்கள் சுதந்திரமானவையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவை பாதுக்காப்புப் படையினரின் நெருக்குதலுக்கு உள்ளாவதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தானை கண்டிக்கும் விதமாகப் பேசினார். ஆனால் இதெல்லாம் 'சும்மா' (Tokenism) விமர்சனங்களுக்குப் பிறகும் பாகிஸ்தானுடனான உறவு தொடரும். ராணுவ ஆட்சியாளர் என்றாலும் அங்குள்ள மதவாதிகளைவிட முஷ்ராஃப் தேவலாம் என்பதால் அமெரிக்கா முஷரபை ஆதரிப்பதை இந்தியா பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

அறிவிக்கப்படவில்லை என்றாலும் புஷ் ஆப்கானிஸ்தானிலும் சில மணிநேரம் செலவிடலாம். அங்கு கணிசமான அளவு அமெரிக்கப்படைகளும், நேட்டோ படைகளும் இருக்கின்றன.அவற்றிற்கு மன ஊக்கம் தருவதற்காக அவர் அங்கு போகலாம். ஆனால் அதனால் அங்கு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது.

Friday, February 17, 2006

இரு சந்தேகங்கள்

இன்னும் 70, 80 நாள்கள் இருக்கின்றன.ஆனால் பணக்கார வீட்டுக் கல்யாணம் போல, இப்போதே களை கட்டத் துவங்கி விட்டது. தமிழகத்தில் நடக்கவிருக்கிற சட்ட மன்றத் தேர்தலைச் சொல்கிறேன்.

தேர்தலை ஆட்சியைத் தீர்மானிக்கிற ஓரு பரபரப்பான நிகழ்வாக, வெறும் வாக்குப் பதிவு செய்கிற ஓர் சடங்காக, இல்லாமல் அரசியலை இனம் கண்டு கொள்வதற்கான ஓர் வாய்ப்பாக அணுகிப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும்.'செய்தி'ப் பத்திரிகைகள் தின்னத் தருகிற அவலை மட்டும் மென்று கொண்டிராமல், உள்நீரோட்டங்களை உற்றுப் பார்க்கிற ஒரு பயிற்சியாக மாற்றிக் கொண்டால் ஜனநாயகத்திற்கு நல்லது.

ஒருவகையில் இது சென்ற தேர்தலின் மறு பிரதி. (Action replay).

அந்தத் தேர்தலில் திமுக எழுப்பிய கேள்விகளில் முக்கியமான ஒரு கேள்வி: அதிமுக அணி வென்றால் யார் முதல்வர்? காரணம், ஜெயலலிதா மீதிருந்த ஊழல் வழக்குகள் காரணமாக அவர் தேர்தலில் போட்டியிட இயலவில்லை. அவர் மூன்று தொகுதிகளில் மனுத் தாக்கல் செய்தார்.ஆனால் அவை, நிராகரிக்கப்பட்டன. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக விளங்கியது.

இந்தத் தேர்தலிலும் மீண்டும் அந்தக் கேள்வி எழுகிறது.ஆனால் அந்தக் கேள்வி இப்போது திமுகவை நோக்கி வீசப்படுகிறது.திமுக அணி வெற்றி பெற்றால் யார் முதல்வர்? திமுக அணி வெற்றி பெற்றால் அமையப் போவது கூட்டணி ஆட்சியா, அல்லது திமுகவின் தனித்த ஆட்சியா என்ற கேள்வி சிலகாலம் உலவி வந்தது. கூட்டணி ஆட்சி இல்லை, தனித்த ஆட்சிதான் என்று திமுக திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.அதை உறுதி செய்து பா.ம.கவும், மதிமுகவும் அறிக்கைகள் வெளியிட்டு இருக்கின்றன.

திமுகவின் தனித்த ஆட்சிதான் என்றால், அதற்குத் தலைமை ஏற்கப் போவது யார்? கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். ஆனால் அதிமுகவும், அதன் ஆதரவாளர்களும் பிரசார மேடைகளிலும், சில இதழ்கள் மூலமாகவும் சந்தேக விதைகளைத் தூவி வருகின்றனர். முதல்வர் பொறுப்பின் சுமையைத் தாங்க அவரது வயது இடம் கொடுக்குமா?, உடல்நலம் இடமளிக்குமா என்ற கேள்விகளை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தாலும் கருணாநிதி முதல் சில மாதங்கள்தான் முதல்வராக இருப்பார், பின் உடல்நிலையைக் காரணம் காட்டி, பொறுப்பை ஸ்டாலின் வசம் ஒப்படைத்து விடுவார் என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பி வருகிறார்கள். பொங்கலன்று நடந்த துக்ளக் இதழின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் சோ, இதை வெளிப்படையாகவே பேசினார். தங்களது இந்த வாதத்திற்குத் ஆதாரமாக, கடந்த சில ஆண்டுகளாகவே கருணாநிதி அஹிகம் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளாததையும், அவருக்குப் பதில் ஸ்டாலின் தமிழகம் முழுக்கப் பயணம் செய்து, கூட்டங்களில் பேசி வருவதையும் சுட்டிக் காட்டுகிறது. கடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது 'இதுதான் நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்' என்று கருணாநிதி சொல்லியதை அதிமுக அணி இப்போது நினைவுபடுத்துகிறது.

கட்சி சார்பு இல்லாத மக்களிடம் இந்த பிரசாரம் எடுபடும் என்று அதிமுக நம்புகிறது.அடுத்த முதல்வர் யார், ஜெயலலிதாவா? ஸ்டாலினா? என்பது தேர்தலில் விடைகாணப்பட வேண்டிய முக்கியமான கேள்வியாக அமையுமானால், அது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று அதிமுக எண்ணுகிறது.

இந்த கணிப்பு சரியாக இருக்கலாம். அண்மையில் லயோலாக் கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில், அடுத்த முதல்வராவதற்குத் தகுதி உள்ளவர் யார் என்ற கேள்விக்கு 87 சதவீதம் பேர் கருணாநிதிக்கும், 83 சதவீதம் பேர் ஜெயலலிதாவிற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே உள்ள வித்தியாசமே மிகக் குறைவாக உள்ள நிலையில், ஸ்டாலினா ஜெயலலிதாவா என்ற கேள்விக்கு விடை எப்படி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இது போன்ற ஒரு சந்தேகம் கூட்டணிக் கட்சிகளின் அடி மனதிலும் இருக்கக் கூடும் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. எல்லாக் கட்சிகளும் அதிக இடம் கேட்போம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. இது வழக்கமான கோரிக்கைதான் என்றாலும் இந்த முறை அவற்றின் தொனியில் மாற்றம் தெரிகிறது. 'எங்கள் துணையில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க இயலாது' என்று காங்கிரஸ், பா.ம.க போன்ற கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.ஆட்சியில் அவை நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும், கர்நாடகத்தைப் போல பாதியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது கடிவாளம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று அவை கருதலாம். கூட்டணி ஆட்சி என்பது ஓர் யதார்த்தமாக ஆகிவிட்ட சூழ்நிலையில், அவை இது போன்ற கனவுகளைக் கொண்டிருப்பது அசாதாரணமானது அல்ல.எல்லாக் கட்சிகளுக்குள்ளும், 'கருணாநிதிக்குப் பின்?' என்ற கிசுகிசுப்பு இருப்பதென்னவோ உண்மை.

கடந்த தேர்தலில் கிடைத்த அனுபவம், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் கிடைத்த அனுபவமும் கூட அவற்றின் சிந்தனைப் போக்கை மாற்றியிருக்கின்றன.கடந்த தேர்தலின் போது, காங்கிரஸ், பா.ம.க, இடதுசாரிகள் ஆகியவை அதிமுக அணியில் இருந்தன.மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவதில் அவை பெரும் பங்காற்றின. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களால் ஜெயலலிதாவை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டமன்றத்தில் பேசுவது கூட பெரிய காரியமாகிவிட்டது.அதைப் போன்ற ஒரு நிலை திமுகவை ஆட்சியில் அமர்த்திய பின்னும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவை கருதியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா தனது காய்களை மிக நுட்பமாகவே நகர்த்தி வருகிறார். ஆளுங்கட்சியைச் சாடிப் பேசுவது என்பது எதிர்கட்சிகளுக்கு உரிய ஓர் வாய்ப்பு. அதுவும் தேர்தல் நேரத்தில் இந்தத் தாக்குதல் வேகமானதாக இருக்கும். ஆனால் கடந்த இரு மாதங்களாக எதிர்கட்சிகளை, குறிப்பாக திமுகவை, தற்காத்துக் கொள்ளும் (defensive) நிலையில் வைத்து வருகிறார்.ஆளும் கட்சியைச் சாடுவதை விட அவை தங்கள் நிலை குறித்த விளக்கங்களைத் தரும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கூட்டணிக் கட்சியிலிருந்து இந்தக் கட்சி வெளியேறிவிடும், அந்தக் கட்சி வெளியேறிவிடும் என்று 'செய்திகள்' கசிந்து கொண்டே இருந்தன.'கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்', 'இவையெல்லாம் உளவுத் துறை பரப்பும் வதந்தி' 'அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாது' 'கூட்டணியைக் காப்பாற்ரும் பொறுப்புக் கூட்டணிக் கட்சிகளுக்கும் உண்டு' என்றெல்லாம் பல்வேறு சுருதிகளில் அறிக்கைகள் விட வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டது. என்றாலும் இப்போதும் அதைப் பதற்றத்தில் வைத்திருக்க, காளிமுத்துவை கட்சியின் அவைத் தலைவராக்கி, மதிமுகவை கூட்டணியிலிருந்து பிரித்துக் கொண்டு வரும் பணியை அவர் வசம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

வெள்ள நிவாரணம், கடல்நீரைக் குடி நீராக்க்கும் திட்டம், இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு விவாதப் பொருளாக்கப்பட்டது தன்னைப் பழிவாங்குவதற்காக தனக்கு வேண்டியவர்களின் வீடுகளில் வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக ஜெயலலிதா முழங்கினார். கேபிள் டி.வியை அரசுடமையாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் மீது ஒரு விவாதத்தைக் கிளப்பினார்.அதிமுக மட்டுமன்றி விஜயகாந்தும் திமுகவை சாடி வருவதால் அவ்ருக்குப் பதில் சொல்லும் கட்டாயமும் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

திமுக இந்தத் தற்காப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வந்த போது, இன்னொரு புறம், எல்லாத் தரப்பினருக்கும் ஏராளமாக சலுகைகளை வாரி வழங்கி அறிவிப்புக்கள் வெளிவந்தன.எதிர்கட்சிகள் எவற்றையெல்லாம் தங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து, எந்ததெந்தத் தரப்பினரை தங்கள் வசம் ஈர்க்க முயற்சிக்குமோ, அந்தத் தரப்பினரையெல்லாம் தன் வசம் கொண்டுவர அரசு முயன்றுவருகிறது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், சாலைப்பணியாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சிறுபான்மை மக்கள் இவர்களது கோபத்தை சம்பாதித்துக் கொண்டதால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி காண முடியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இன்று அந்த அதிருப்தியை நீக்கும் விதத்தில் அறிவிப்புகள் வருகின்றன. இதைக் குறித்து எதிர்கட்சியினரால் ஏதும் சொல்லமுடியவில்லை. 'தேர்தலுக்காக செய்யப்படும் அறிவிப்பு' என்றுதான் விமர்சிக்கப்படுகிறது. அது ஊரறிந்த உண்மை. 'சரி அப்படியே இருக்கட்டும், அதனால் என்ன?' என்பதுதான் பரவலான எதிர்வினையாக இருக்கிறது. இது ஒருவகையான லஞ்சம் என்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.அப்படி உணர்ந்தவர்களும், 'யார்தான் லஞ்சம் வாங்கல?. லஞ்சத்தை ஒழிக்க முடியாது' என்ற தத்துவம் பேசுகிறார்கள். 1996 தேர்தலில், ஜெயலலிதாவின் தோல்விக்கான காரணங்களில் லஞ்சத்திற்கு எதிரான மனோபாவம் ஒரு முக்கியக் காரண்மாக இருந்தது. இந்தப் பத்தாண்டுகளில் லஞ்சம் என்பது ஒரு விஷயமே அல்ல, என்ற நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்திருக்கிறது!

ஆனால் மக்களிடம் ஜெயலலிதாவின் அறிவிப்புகள் குறித்த ஒரு சந்தேகம் இருக்கிறது. அவரது அறிவிப்புக்கள் நடைமுறைக்கு வருமா, வந்தாலும் நீடித்து நிற்குமா, ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த சலுகைகளை மீண்டும் பறித்துக் கொண்டுவிடமாட்டார் என்பது என்ன நிச்சியம்? என்பதுதான் அந்த சந்தேகம்.

ஸ்டாலின் மீது ஆளும் கட்சி சந்தேகம் கிளப்பி வருவதைப் போல, இந்த சந்தேகம் பிரசாரத்தின் போது எதிர்கட்சிகளால் பெரிதுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த சந்தேகத்தைப் போலவே இதுவும் நியாயமானது. அந்த சந்தேகம் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தோடு சம்பந்தம் கொண்டது என்றால், இந்த சந்தேகம், பல லட்சக்கணக்கான வாழ்க்கையோடு தொடர்புடையது.

இந்த இரு சந்தேகங்களுக்கு விடை அளிக்க இரண்டு கட்சிகளுமே கடமைப்பட்டுள்ளன. வெறும் விளக்கமாக இல்லாமல் தெளிவான உறுதி மொழியாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அமைய வேண்டும். இரண்டு அணிகளின் வெற்றி தோல்விகள் அதைப் பொறுத்தே அமையும்.

இந்தத் தேர்தலின் முடிவை நம்பிக்கை வெளிப்படுத்தப்போவதில்லை. சந்தேகங்களே தீர்மானிக்க இருக்கின்றன.

Sunday, January 29, 2006

வரலாற்றின் வழித்தடங்கள்

நான் என்னுடைய வலைப்பதிவுகளை யாகூ குழுமத்தில் வெளியிட்டு வருகிறேன்.தமிழ்மணத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் பதிவைத் திரட்டியில் சேர்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, கருவிப்பட்டை பொருத்தப்பட்ட இந்த பதிவை நிழல் பதிவாக பிளாக்கரில் நிறுவி, அதில் என் வலைப் பூக்களை மீள் பதிவாக வெளியிடுகிறேன்.



பலர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவை ஒரு வில்லன் நடிகராகத்தான் அறிவார்கள்.எம்.ஜி.ஆரை அவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு நிஜ வில்லனாகக் கூட நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்.இன்றைய தலைமுறையைப் பொறுத்தவரை அவர் ராதிகாவின் அப்பா. ஆனால் அவரிடம் ஒரு கூர்மையான நகைச்சுவை உண்டு. பகுத்தறிவிற்குப் பொருந்தாத, உணர்ச்சிகளின் அடிப்படையில் அமைந்த அசட்டுத்தனங்களை நையாண்டி செய்யும் நகைச்சுவை.அவரது கிண்டலுக்கு காதலும் தப்பியதில்லை.

ஆனால் காதலுக்கு அவரும் தப்பியதில்லை என்பதுதான் வரலாறு. ஆதாரம்?

கோவையின் விளிம்பில், பாலக்காடு செல்லும் வழியில், ஒரு மயானத்திற்குள், வானை நோக்கி நீட்டிய விரல் போல, ஒரு தூண் நிற்கிறது.அது எம்.ஆர்.ராதா எழுப்பிய காதல் சின்னம். அவரது காதல் மனைவிக்கு எழுப்பிய நினைவுச் சின்னம்.

"பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் நாட்டு விடுதலைப் போருக்கு நாடகம் மூலம் தொண்டு செய்து கொண்டிருந்து மறைந்த திருமதி. பிரேமாவதி நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் துணைவி அவர்களுக்கும், மகன் தமிழரசனுக்கும், திராவிடத் தோழர்கள் உண்டாக்கிய நினைவுக்குறி 1951" என்று அந்தத் தூணின் கீழ் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கிற்குப் பின் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை இருக்கிறது.

நாடகங்களில் நடிப்பதற்குப் பெண்கள் பெருமளவில் முன்வராத காலம். அதிலும் ராதாவின் நாடகங்கள் சர்ச்சைக்குப் பெயர் போனவை. பல இடங்களில் நாடகம் கலவரத்தில் முடிந்ததுண்டு. அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் ராதாவின் நாடகங்களில் நடிக்க வந்த பிரேமாவதி ஒரு துணிச்சல் நிறைந்த பெண்மணியாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

பெண்மணி என்று சொல்வதால் வயது போனவர் அல்ல. நடிக்க வந்த போது அவருக்கு வயது பதினேழு.ராதாவின் ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் போன்ற நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். வயதோ, நடிப்புத் திறமையோ, அவரது துணிச்சலோ, அல்லது தன்னைப் போல பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் என்ற ஒத்த அலைவரிசையோ, ராதாவிற்கு அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. நாளடைவில் அது காதலாகவும் மாறியது. அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.

ராதா - பிரேமா தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு தமிழ் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழரசன் என்று பெயர் வைத்தார் ராதா. கோவையில் ராதாவின் நாடகங்கள் நடந்து கொண்டிருந்த போது பிரேமா நோய்வாய்ப்பட்டார்.உடம்பு அனல் பறந்தது. சாதாரணக் காய்ச்சல் இல்லை. அம்மை.

மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். அம்மை என்பதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்து விட்டார்கள்.உடம்பின் எதிர்ப்பு சக்தியால் அது தானேதான் குணமாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதெல்லாம் நாடகக் கம்பெனிகளின் நாடகங்கள் ஒரு ஊரில் தொடர்ந்து பல நாட்கள் நடக்கும்.சினிமா போல ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள், மூன்று காட்சிகள் நடக்கும். ஊரில் உல்ள ஒருவர் நாடகக் கம்பெனிகளை 'காண்டிராக்ட்' முறையில் அழைத்து ஒப்பந்தம் பேசிக் கொண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு செய்வார்கள். சினிமாப் பட விநியோகம் போல அது ஒரு பிசினெஸ்.எனவே நாடகங்களை ஒப்பந்தக் காலத்திற்கிடையில் பாதியில் ரத்துசெய்தால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரும்.தொழில் காரண்மாக மனைவியுடன் எப்போதும் அருகிலேயே இருக்க முடியாத சூழ்நிலை ராதாவிற்கு. குழந்தைக்கு அப்படியொரு நிலை இல்லையே. அதுவும் தவிர இரண்டு மூன்று வயதுக் குழந்தை அம்மாவின் அருகில் இல்லாமல் வேறு எங்கு இருக்கும்?

அம்மாவின் காய்ச்சல் குழந்தையையும் தொற்றிக் கொண்டது. பிஞ்சுக் குழந்தையானதால் அதன் நிலைமை விரைவிலேயே மிக மோசமானது.அம்மையின் தீவிரம் தாங்காமல் இரண்டு நாளில் இறந்து போனது.நாடக மேடையிலிருந்த ராதாவிற்குத் தகவல் போனது.பாதி நாடகத்தில் இருந்த ராதா நாடகத்தை முடித்துவிட்டு வந்து இரவில் குழந்தையை மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தார்.

அதன் பிறகு பிரேமா அதிக நாள்கள் இருக்கவில்லை. காய்ச்சலின் தீவிரத்தாலும், தன்னிடமிருந்துதானே குழந்தைக்கு அம்மை தொற்றிக் கொண்டது என்ற சுயபச்சாதாபம் தந்த மன அழுதத்தாலும் அடுத்த சில நாள்களில் அவரும் இறந்து போனார். குழந்தையைப் புதைத்த அதே இடத்தில் அவரையும் புதைத்துவிட்டு குமுறிக் குமுறி அழுதார் ராதா. அந்த இடத்தில் அவர் எழுப்பிய நினைவுச் சின்னம்தான் அந்தத் தூண். பின்னாளில் திரைப்படத்தில் நுழைந்து மிகப் பிரபலமானவராக அவர் ஆகி விட்ட போதும், கோவைக்கு வந்து, இரவில் தனியாக அந்த நினைவுச் சின்னத்தின் அருகில் சில மணி நேரம் அமர்ந்துவிட்டுப் போவதுண்டு.

ராதாவின் 'தாஜ்மகால்' இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது. தாஜ்மகாலின் பொலிவோடும் அழகோடும், பராமரிப்போடும் அது இல்லை என்றாலும் ராதாவின் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து போகும் இடமாகத்தான் அது இருக்கிறது.

இது போன்ற அறியப்படாத, ஆனால் தமிழக வரலாற்றோடும், வரலாறாக வாழ்ந்தவர்களோடும் பின்னிப் பிணைந்த இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது தமிழகத் தடங்கள் என்ற நூல்.அண்மையில் சென்னையில் கூடிய புத்தகச் சந்தையை ஒட்டி வெளியான இந்த நூலைப் பதிப்பித்திருப்பது உயிர்மை பதிப்பகம். நூலை எழுதியிருப்பவர் மணா. மணா நீண்ட அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர். அவரது இளம் வயதில், எண்பதுகளின் துவக்கத்தில், நான் ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய, திசைகள் இதழ் மூலம் இதழியலுக்குள் அடியெடுத்து வைத்தவர். அப்போது அவர் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த விழிகள் என்ற இலக்கியச் சிற்றேட்டுடன் தொடர்புடையவராக இருந்தார்.

நல்ல இலக்கிய ரசனை கொண்டவர் என்றாலும் அவர் புத்தகங்களோடுத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட சம்மதிக்கவில்லை.ஊர் ஊராகப் போய், மக்களைச் சந்தித்துப் பழகி, அனுபவங்களை வாழ்ந்து பெறும் விருப்பம் கொண்டவர். அதற்கு இதழியல்தான் அவருக்கு ஏற்புடையதாகத் தோன்றியது.அவர் விரும்பும் துறைகள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்கு இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பதற்காக, எந்தப் பத்திரிகைக்கும் 'தாலி கட்டிக் கொள்ளாமல்' சுயேச்சைப் பத்திரிகையாளராக ஆரம்ப நாள்களை செலவிட்டார்.சுயேச்சைப் பத்திரிகையாளராக இருப்பது மனதிற்கு நிறைவளிக்கும்.ஆனால் வயிற்றுக்குச் சோறு போடாது. அந்த நாள்களில், சென்னையிலிருந்து தனித்துவத்துடன் வெளி வந்து கொண்டிருந்த 'அசைட்' என்ற ஆங்கிலப் பத்திரிகையும், துக்ளக்கும் அவருக்குக் கை கொடுத்தன. ஏறத்தாழ இருபது ஆண்டுகள் சுயேச்சைப் பத்திரிகையாளராக இருந்தவர், குமுதம் இதழின் ஆசிரியராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அதில் இணைந்து கொண்டார். அதற்கு நிறையப் பங்களிப்பு செய்தார். தமிழ்நாட்டின், தமிழ்க் கலாசாரத்தின், அடையாளச் சின்னங்களாக (icon) திகழும் சிலரின் வாழ்க்கையை மறுகட்டமைத்துப் பார்க்கும் (reconstruct) ஒரு முயற்சியை அப்போது குமுதத்தில் செய்து பார்க்க நினைத்தோம். வாழ்க்கையை, வெறும் வரலாறாக எழுதாமல், இங்கு இன்னாருக்கு மகனாக/மகளாகப் பிறந்தார் என்பது போன்ற தகவல்களாகக் குவிக்காமல், அவர் குடும்பத்தினர், கூடப்படித்தவர்கள், பணியாற்றியவர்கள், ஆசிரியர்கள், ஊர்க்காரர்கள், இப்படிப் பலரிடம் பேசித் தகவல்கள் சேகரித்து, அவற்றை சரி பார்த்து, மிகை நீக்கி, தொகுத்துக் கட்டுரையாக்க எண்ணினோம். மணாதான் அந்த வேலைகளை செய்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, சாலமன் பாப்பையா, ஏன் சுப்ரமணியம் சுவாமியும் கூட அந்தத் தொடரில் இடம் பெற்றார்கள்.

அவரது இந்த நூலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக பெரியபுராணம் சொல்கிறதே, அந்த இடம் தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா? கழுவேற்றுதல் என்றால் என்ன? அதைக் காட்டும் ஓவியம் எங்காவது உண்டா? பாரதியார் கடைசியாகப் பேசிய வாசகசாலை எங்கே அமைந்திருக்கிறது? சென்னையில் 30 வருடம் வள்ளலார் வாழ்ந்த வீடு ஒன்றிருக்கிறது தெரியுமா? திருநெல்வேலி சுலோசனா முதலியார் பாலத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைத்து மேலாடை அணிவதற்காகத் தமிழகத்தில் ஒரு போராட்டமே நடந்தது, அதை அனுமதிக்கக் கூடாது என்று கலவரம் மூண்டது என்பதை அறிவீர்களா? பெண்களின் மார்புக்கு வரி போட்ட காலம் ஒன்றிருந்தது, அந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல், தன் மார்பை அறுத்து வீசிய நவீன காலக் கண்ணகியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.ஆனால் அவன் சிறை வைக்கப்பட்ட இடம் எங்கிருக்கிறது என்று தெரியுமா? ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுக் கிடங்கில் தீப்பந்தத்துடன் குதித்த கட்டபொம்மனின் தளபதியையும் அவன் காதலியையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அந்தக் கிடங்கு எங்கே இருக்கிறது? ஈரோட்டில் பெரியார் நடத்திய மஞ்சள் மண்டி எங்கிருக்கிறது?

இப்படி ஊர் ஊராகத் தேடி அலைந்து, தகவல் திரட்டி, படம் எடுத்து அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் சில குமுதம் வார இதழிலும், புதிய பார்வை இதழிலும் வெளிவந்தன.

நீங்கள் அடுத்த முறை தமிழகம் வந்தால், தஞ்சைப் பெரிய கோவிலையும், மதுரை திருமலை நாயக்கர் மகாலையும், திருச்சி மலைக் கோட்டையையும், சென்னைக் கடற்கரையையும் மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிடாதீர்கள்.கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த இடங்களையும் சென்று பாருங்கள். இந்த இடங்களில் தமிழனுடைய வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கல்வெட்டாக அல்ல. மண்ணில் படர்ந்த புழுதியாக. இந்த இடங்களைப் பார்க்க நீங்கள் அதிகம் மெனக்கிட வேண்டியிராது. ஏனெனில் மணாவின் புத்தகம் உங்களுக்கு வழி காட்டும்.

இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இடதுசாரித் தலைவர் திரு.நல்லக்கண்ணு (அவரும் ஊர் ஊராக அலைந்து திரிகிறவர். இந்த வயதிலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நடந்தே 800 கீ.மீ பயணம் செய்தவர்) ஒரு கேள்வியை எழுப்பினார். அது அடிப்படையான கேள்வி. இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வேறு வேறு வடிவில். அன்று மதங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அரசன் ஒத்துழைப்போடு அவர்கள் கழுவேற்றப்பட்டார்கள்; இன்று மசூதி இடிக்கப்படுகிறது. அன்று உடை விஷயத்தில் பெண்களுக்கு என்று ஒரு சமஸ்தானத்தில் தனிச் சட்டம் போட்டார்கள். இன்று ஒரு பல்கலைக் கழகம் ஆணைகள் பிறப்பிக்கிறது. இப்படி அன்று நடந்தவையே இன்றும் திரும்பட் திரும்ப, வேறு வேறு வடிவத்தில் நடக்கின்றன. அது ஏன்? என்பது அவர் எழுப்பிய கேள்வி.

ஆமாம் அது ஏன்?