Wednesday, December 26, 2007

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?


அண்மையில் தில்லியில் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மன் மோகன் சிங், நக்சலைட்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அதிக முனைப்போடு மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதே மாநாட்டில், அரசின் நலத் திட்டங்கள் அடித்தள மக்களைச் சென்றடையவில்லை என்றும் கூறியிருக்கிறார்., அரசின் நலத் திட்டங்கள் ஏழைகளை எட்டாது போனதற்கும், நக்சலைட்கள் உருவாவதற்கும், வளர்வதற்கும் உள்ள தொடர்பு விளங்கிக் கொல்ள முடியாத அள்விற்குச் சிக்கலானதல்ல. அதுவும் மன்மோஹன் சிங் போன்ற அறிவாற்றல் மிக்கவர்களுக்கு அது நிச்சியம் கடினமானதல்ல.

அவர் செய்ய வேண்டியதெல்லாம், தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் சொல்வதை மட்டுமே நம்பாமல், தில்லியிலிருந்து 90 நிமிட விமானப்பயணத்தின் மூலம் சென்றடைந்துவிடக் கூடிய சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ஒரு நடை போய் அந்த மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வனங்களுக்கூடே அமைந்துள்ள கிராமங்களைப் போய் பார்த்து வருவதுதான். அங்கு போனால் அந்த ஏழை மக்கள் ஒரு டாக்டரைப் பற்றி நிறைய மரியாதையோடு பேசுவார்கள். அவர் அந்த மக்களுக்குத் தெய்வம். அரசிற்கு ஒரு தீவீரவாதி.

டாக்டர் வினாயக் சென் ( வங்காளி அதானால் வினாயக் என்பதை பினாயக் என்று எழுதுவார்) வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவர். அவர் படித்து முடித்ததும் அவருக்கு தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஐஐடி, ஐஐஎம் களைப் போல அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரிதும் மதிக்கப்படுகிற ஒர் கல்வி நிறுவனம். அதில் அவர் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால் இந்த 25 ஆண்டுகளில் அவர் எங்கோ போயிருப்பார்.

ஆனால் வினாயக்கின் உள்ளம் ஏழைகளுக்காகத் துடிக்கிற உள்ளம்.அவர் இந்தியாவின் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மக்களுக்குத் தன் படிப்பைக் கொண்டு உதவ வேண்டும் என்று தீர்மானித்தார். மத்திய பிரதேசத்தில் (அப்போது சட்டீஸ்கர் உருவாகியிருக்கவில்லை) கனிமச் சுரங்கங்கள் நிறைந்த தல்லி ராஜஹரா என்ற கிராமத்தில் சுரங்கத் தொழிலாளிகளின் பங்களிப்போடு ஒரு மருத்துவமனையை ஆரம்பித்தார். சுரங்கத் தொழிலாளிகள் கொடுக்க வேண்டியதெல்ல்லாம் மாதம் 17 ரூபாய்தான். போராளிகளின் (தியாகிகளின்) மருத்துவமனை (ஷாகீத் ஹாஸ்பிடல்) என்று அழைக்கப்படும் அது இன்றும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 30 கீமி சுற்றளவில் உள்ள கிராமங்களிலிருந்து மக்கள் மருத்துவ உதவி நாடி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வருபவர்களில் பெரும்பாலானோர் ஊட்டச் சத்துக் குறைவினால், வயிறு ஊதிப் போன குழந்தைகள், அல்லது உயிர்க் கொல்லி நோயான மலேரியா அல்லது காச நோயால் துன்புறுபவர்கள்.

இந்த 25 ஆண்டுகளில், போராளிகளின் மருத்துவமனை, 100 பேருக்கு மருத்துவம் அளிக்கக் கூடிய மருத்துவமனையாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் எப்போதும் சர்வசாதாரணமாக 140 பேராவது அங்கிருக்கிறார்கள். இன்னமும் அந்த மக்களுக்கு மருத்துவ சேவைகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பதைத்தான் இந்த எண்ணிக்கை நமக்கு நினைவூட்டுகிறது.

சுரங்கத் தொழிலாளிகளை எளிதில் பீடிக்கிற நோய் டி.பி என்கிற காச நோய்.” அரசு மருத்துவ மனையில் ஒரு மாதம் இருந்தேன். அங்கு டாக்டருக்கு 3500 ரூபாய் கொடுத்தேன். ஒன்றும் பலனில்லை. இங்கு வந்துவிட்டேன்.இங்கு அதிகம் செல்வில்லை. பலனும் தெரிகிறது என்று சொல்கிற மனிதர்களை நீங்கள் இங்கு சந்திக்கலாம். இத்தனைக்கும் அவர்கள் தங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை விட்டுவிட்டு, இரண்டரை மணி நேரம் பயணம் செய்து இங்கு வரவேண்டும்.

இந்த மக்களிடையே பணியாற்றத் துவங்கிய போது அங்கு அதிகம் வசிக்கும் பழங்குடி இன மக்கள் ஊட்டச் சத்துக் குறைபாட்டினால் அவதியுறுவதை அறிய நேர்ந்த வினாயக், அதன் காரணங்கள் பற்றி அறிந்து கொள்ள அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தகவல்கள் திரட்ட ஆரம்பித்தார். அப்போது அவருக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது: ஊட்டச்சத்துக் குறைவு என்பது பிரசினையின் ஒரு சிறு முனைதான். அந்தப் பகுதியில் வறுமை காரணமாகப் பட்டினிக் சாவுகள் நிறையவே நடந்திருக்கின்றன. அந்தச் சாவுகள் அவரது சிந்தனையை உலுக்கின.

மக்களைக் கொண்டே, மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை அளிக்கும் ஒரு திட்டத்தைப் பற்றி சிந்திக்கலானார் வினாயக். அதன் விளைவாக அவர் உருவாக்கியதுதான் ‘மிதானின்’ என்ற திட்டம். மிதானின் என்றால் தன்னார்வப் பணியாளர் (volunteer) ஒவ்வொரு கிராமத்திலும் மக்களே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தப் பெண்ணுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். அந்த கிராமத்தில்லுள்ள மக்களின் உடல் நலத்திற்கு அவர் பொறுப்பேற்று அவர்களுக்கு உதவுவார்.

200 கிராமங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கியதும் அதன் அரசின் செவிகளை எட்டியது. 2004ம் ஆண்டு அரசே இந்தத் திட்டத்தை மாநிலங்களில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியது. ஆனால் திட்டத்திற்கு ‘இந்திரா மிதானின் ஸ்வஸ்த யோஜனா’ ( இந்திரா தன்னார்வ மருத்துவத் திட்டம்) என்று பெயர் சூட்டியது.

“சிதைவுற்ற, நியாயமற்ற ஒரு சமூகத்தில், ஒரு மருத்துவர் ஆற்றக்கூடிய பணியின் இலக்கணங்களை மார்றி அமைத்தவர்” எனப்பாரட்டிய வேலூர் கிறிஸ்துவ மருத்துக் கல்லூரி அவருக்கு 2004 அதன் பெருமைக்குரிய பால் ஹாரிசன் விருதை டாக்டர் வினாயக்கிற்கு அளித்தது. “ அவர் ஆற்றிவரும் பணி நன்றியை பெற்றுத் தராத, ஆபத்தான பணி.. ஆனால் அவர் அயர்ந்து விடவில்லை” என அது பாராட்டுகிறது.

அவரது பணி ஆபத்தான பணி என்ற அச்சம் இன்று நிஜமாகிவிட்டது. தனக்குக் கிடைத்த நல்ல வேலையை விட்டுவிட்டு, இப்படி அடித்தட்டு மக்களுக்குப் பணியாற்ற கனவுகளோடு வந்து, தன் சிந்தனையால் அதை நிறைவேற்றவும் செய்த அந்த மருத்துவர் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் ஒரு தீவிரவாதி அதாவது நக்சலைட்கள் என்று ஊடகங்களால் அழைக்கப்படும் மாவோஸ்ட் என்று அரசு குற்றம் சாட்டுகிறது.

அந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக அதனிடம் இருப்பதெல்லாம் 3 கடிதங்கள். அவை கல்கத்தாவைச் சேர்ந்த பியுஷ் குப்தா என்பவர், சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யாலுக்கு எழுதிய கடிதங்கள். அந்தக் கடிதங்களை சன்யாலிடம் கொண்டு சேர்க்க டாக்டர் வினாயக் உதவினார் என்பது அரசின் வாதம்.

“ அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய நக்சலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஓரு புரட்சிகர இயக்கத்திற்குப் போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற உதவிகளைச் செய்தார்” என்கிறது போலீஸ்.மாவோயிஸ்ட் இயக்கம் சட்டீஸ்கரில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் அதற்கு உதவும் எவரும் சிறையில் அடைக்கப்படலாம்..

டாக்டர் வினாயக் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினர் (PUCL), சிறையிலிருக்கும் சன்யாலை காவல் துறையின் அனுமதி பெற்றே சந்தித்திருக்கிறார். அதுவும் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்ட சமயத்தில் அதற்கு உதவும் பொருட்டு.

ஆனால் அவர் PUCL உறுப்பினர் என்ற முறையில், மாவோயிஸ்ட்கள், அரசு என இரு தரப்பிலும் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை விமர்சித்து வந்திருப்பவர். சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களின் பிரசினையை எதிர் கொள்ள அரசு அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினருக்கு ஆயுதங்கள் அளித்து, ‘சால்வா ஜுடாம்’ என்ற ஒரு இயக்கத்தை 2005ல் தோற்றுவித்தது. அங்குள்ள பழங்குடி மக்களின் மொழியில் சால்வா ஜுடாம் என்றால், “ தூய்மைப்படுத்துவதற்கான இயக்கம்” என்று பொருள். அவர்கள் தூய்மைப்படுத்த விரும்புவது மாவோயிஸ்ட்களை. 2005லிருந்து இதுவரை இரண்டு தரப்பிலும் 1200 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்களைக் கொண்டே மக்களை அழிக்கும் இந்த வன்முறையை வினாயக் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதுவும் அவர் செய்த இன்னொரு காரியமும் அரசிற்கு வெறுப்பேற்றியிருக்கக்கூடும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது: கனிமவளம் நிறைந்த பர்சார் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அரசு அவர்களது நிலங்களை எடுத்துக் கொண்டது. டாடா ஸ்டீஸ், எஸ்ஸார் ஸ்டீல் என்ற இரு பெரிய நிறுவனங்களுக்கு ஆலைகள் துவங்க அந்த நிலங்களை அது தாரை வார்க்க இருக்கிறது. வினாயக் இதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டார். கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். அது அரசிற்கு சினம் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

இப்போது சிறையிலிருக்கும் வினாயக், வழக்கு விசாரணைக்காகக் கூட வெளியில் கொண்டு வரப்படுவதில்லை. அவர் ‘தீவிரவாதி’ என்பதால் வீடியோ கான்பரென்சிங் மூலம் சிறையிலிருந்தபடியே விசாரணை நடத்தப்படுகிறது. வீடியோ கான்பிரன்சிங் முறையில் அவர் நீதிபதியிடம் பேசலாம், ஆனால் அவருக்குத் தேவைப்படும் வழக்கறிஞரின் உதவி கிடைக்காது. வினாயக்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.


வினாயக் கைது செய்யப்பட்டது முறையற்றது, எதேச்சதிகாரமானது எனக் கூறும் அறிக்கையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அமெனஸ்டி இண்டர்நாஷனல் அவரது கைதைக் கண்டித்திருக்கிறது.

ஆனால் நம் தமிழ் ஊடகங்கள் இதைப் பற்றி அதிகம் பேசவில்லை. அவை இன்னமும் நக்சலைட்களை அவன் இவன் என்றே ஏகவசனத்தில் அழைத்து வருகின்றன. இன்றைய அமைப்பை ஏற்காத மாற்றுக் கருத்துள்ள அரசியல்வாதிகள் என்ற அளவிலாவது குறைந்த பட்ச மரியாதையையாவது அவை தரக்கூடாதா?

புதிய பார்வை ஜனவரி 2008 இதழுக்கு எழுதியது

Thursday, November 08, 2007

அசட்டுப் பெருமைக்கு ஓர் அளவு கிடையாதா?

உங்களுக்கு பஞ்சாபியர்கள் குதித்துக் குதித்து ஆடும் பாங்ரா நடனம் தெரியுமா? கோலாட்டக் குச்சிகளை வைத்துக்கொண்டு ஆடும் தாண்டியா? அட, கும்மாங்குத்தாவது தெரியுமா? தெரியாது என்றால், ஏதாவது ஒரு களியாட்டத்தைக் கற்று வைத்துக்கொள்வது நல்ல்து. இல்லையென்றால் உங்கள் நாட்டுப் பற்றை மெய்ப்பிக்க வாய்ப்பில்லாமல் போய்விடக் கூடிய ஆபத்து இருக்கிறது.

மூன்று வாரங்களுக்கு முன், இந்தி ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் செய்திக்கு நடுவே சில நிமிடங்களுக்கு பாங்ரா வந்து போயிற்று. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் என்பதை ஒப்புக்கொள்வதில் ஆட்சேபமில்லை. ஆனால் அதற்காக அந்தக் காட்சி செய்திகளுக்கு நடுவே இடம் பெறவில்லை. சினிமா, 'சோப்' எனச் சொல்லப்படும் தொலைக்காட்சித் தொடர்கள் போல தொ.கா. செய்திகளும் 'பொழுதுபோக்காக' மாறிவிட்டன என்று சில உம்மணா மூஞ்சிகள் முனகிக்கொண்டிருக்கிறார்களே அதை மெய்ப்பிப்பதற்காகவா அவை செய்திக்கு நடுவில் வந்து போயின என்றால் அதுவும் இல்லை. பின்னே?

அமெரிக்காவில், ஒரு 'இந்தியர்' லூசியானா மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்டிருக்கிறார் என்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் பொங்கிய மகிழ்ச்சியைத்தான் தொ.கா. காட்டிக்கொண்டிருக்கிறது. மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அந்த 'இந்தியர்' பெற்ற வெற்றிதான் முதல் பக்கச் செய்தி. 'இந்தியர்' ஒருவர் வரலாறு படைத்துவிட்டதாக அவை முழங்கின.

##Pg## இந்தியர் ஒருவர் எப்படி அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட முடியும்? அமெரிக்கக் குடிமகனாக இல்லாதவர் ஒருவர் அங்கு வாக்களிக்க முடியுமா? தேர்தலில் வாக்களிக்கவே முடியாதென்றால் போட்டியிட முடியுமா? இப்படியெல்லாம் அபத்தமாகக் கேள்வி கேட்கக் கூடாது. செய்திகளைக் கூர்ந்து படித்தால் அவர் 'இந்தியர்' அல்லர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தியாவில் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்று அமெரிக்காவிற்கு வேலைக்குப் போய், பச்சை அட்டை பெற்று, பின் அங்கே குடிமகனாகி, அதன் பின் அரசியலில் இறங்கி, தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியைப் பிடித்திருப்பாரோ? அதுவும் இல்லை. அவரின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து, அதையே தங்கள் நாடாக ஏற்றுக்கொண்ட பின் அங்கு அவர்களுக்குப் பிறந்து, அங்கேயே வளர்ந்து, கல்வி கற்று, அரசியலுக்கு வந்தவர் இந்த ஜிண்டால். அவரது வளர்ச்சிக்கோ, கல்விக்கோ, இந்தியா ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை. அப்படியிருக்க இதில் இந்தியா அல்லது இந்தியர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

ஒருவேளை அவர் இந்தியப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் என்பதால் இந்தியா மீது 'பாசத்தோடு' இருக்கிறாரா? என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் ஏதோ ஒருவகையில் உதவக் கூடிய 'அவுட் சோர்சிங்' பிரச்சினையிலாகட்டும், தொழில்முறை விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலாகட்டும், அவரது நிலை அவரது கட்சியான குடியரசுக் கட்சியின் நிலையிலிருந்து எள்ளளவும் மாறுபட்டதில்லை. கட்சித் தலைமை என்ன கோடு கிழிக்கிறதோ அதை விட்டு ஒரு எட்டுக் கூட முன் வைக்காதவர். இதைவிடச் சிக்கலான இந்திய பாகிஸ்தான் உறவு, அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியாவின் நலன்களை முன்னிறுத்தி ஊடகங்களிலும், நாடாளுமன்றங்களிலும் வாதிடக் கூடிய 'இந்தியா காகஸ்' என்ற ஒரு குழு இருக்கிறது. அதில் கூட அவர் சம்பந்தப்பட்டுக்கொள்ளவில்லை.

##Pg## இதே ஜிண்டால், இதே மாநிலத்தில், இதே பதவிக்குக் கடந்த முறை போட்டியிட்டுத் தோற்றுப் போனார். அப்போது இந்தியா 'இந்தியர்' ஒருவர் தோற்றுப் போனதற்காக ஒப்பாரி வைத்து அழவில்லை. இன்று அவர் வெற்றி பெற்றதும் அது 'இந்தியர்' பெற்ற வெற்றி ஆகிவிட்டது.

இதே போல் சுனிதா வில்லியம்சின் சாதனைகளின் போதும் இந்திய ஊடகங்கள் மார்தட்டிக்கொண்டன. விண்வெளியில் 195 நாள்கள் வசித்ததும், 29 மணி நேரத்திற்கு மேல் நடந்ததும் நிச்சயம் பெருமைக்குரிய சாதனைகள் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. இதுநாள் வரை வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தகர்த்த அந்தச் சாதனைகள் மனித குலத்திற்கே பெருமை தருபவை. ஆனால் அந்தச் சாதனைகளை நிகழ்த்த சுனிதாவிற்கு இந்தியா எந்த விதத்திலும் துணை நின்றதில்லை. உதவியதில்லை. பயிற்சி அளித்ததில்லை. அவர் கல்பனா சாவ்லா அல்ல.

கல்பனா, இந்தியாவில் பிறந்தவர். சுனிதா, அமெரிக்காவில் பிறந்தவர். கல்பனாவின் பெற்றோர்கள் இருவரும் இந்தியர்கள். சுனிதாவின் தாய் ஸ்லோவினியாவைச் சேர்ந்தவ்ர். கல்பனா பள்ளிக் கல்வி, பட்டப் படிப்பு இரண்டையும் இந்தியாவில் படித்தவர். சுனிதா பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டத்திற்கான படிப்பு அனைத்தையுமே அமெரிக்காவில் படித்தவர். கல்பனா ஜே.ஆர்.டி. டாடா விமானம் ஓட்டியதைப் பள்ளிப் பருவத்தில் படிததது வானம் இந்தியர்களுக்கும் வசப்படும் எனற மன எழுச்சியையும், கனவையும் தந்தது என்று சொல்லியிருந்தார். இந்தியப் பள்ளிக் குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களை வாழ்த்திக் கையெழுத்திட்ட ஒரு பட்டுத் துணியை கல்பனா விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். சுனிதாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள சம்பந்தம் அவர் விண்வெளிக்கு, சில சமோசாக்களையும் ஒரு பிள்ளையார் பொம்மையையும் எடுத்துப் போனதுதான்.

##Pg## ஃபிஜியில் மகேந்திர செள்த்ரி ஆட்சியைப் பிடித்த போதும், சிங்கப்பூரில் நாதன் அதிபராக ஆனபோதும் இதே போல இந்திய ஊடகங்கள் பெருமைப்பட்டுக் கொண்டன. மகேந்திர செளத்ரி, நாதன் இருவருமே தத்தம் நாட்டில் பிறந்தவர்கள். நாதனின் பெற்றோர்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் மலேயாவில் குடியேறியவர்கள். நாதனின் பிறப்பும், கல்வியும் முழுக்க சிங்கப்பூரிலேயே நிகழ்ந்தது. நாதனுக்குச் சிங்கப்பூர் அரசியலில் நிறைகுடம் என்ற நன்மதிப்பு உண்டு.

மகேந்திர செளத்ரியும் ஃபிஜித் தீவில் பிறந்தவர்தான். நாதனுக்கு சிங்கப்பூர் அரசியலில் கிடைத்த நற்பெயரும் நன்மதிப்பும் செள்த்ரிக்குக் கிடைக்கவில்லை. அடிதடி, ஊழல் வழக்குகளுகளை நீதி மன்றத்தில் சந்திக்க நேர்ந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகத்தான் அவர் கருதப்பட்டார். ஆனாலும் நமக்குப் பெருமை பிடிபடவில்லை.

இந்திய வம்சாவளியில் பிறந்ததனாலேயே ஒருவருக்குப் பெருமை வந்துவிடும் என்பது குலப் பெருமை பேசுகிற மேட்டிமைத்தனம். பிறப்பினாலே ஒருவருக்குப் பெருமைகளும் தகுதிகளும் வந்துவிடும் என்கிற வர்ணாசிரம தர்மத்திற்கும் இதற்கும் சாராம்சத்தில் அதிக வேறுபாடு இல்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்) என்று சொன்னதும் நம் பாரம்பரியம்தான்.

இது போன்ற அசட்டுப் பெருமைக்கு ஒரு காரணம் ஒருவர் பிரபலமானவராகிவிட்டால், 'தெரியுமா, அவர் நம்ம ஆளு' என்ற மனோபாவம். அவர் வாழ்வில் உயர்வதற்கு நாம் நெல் முனை அளவு கூட உதவியிராவிட்டாலும் கூட அவரது வெற்றிக்கு உரிமை கொண்டாடும் ஆர்வம். இரண்டுமே ஒருவித தாழ்வு மனப்பான்மையிலிருந்து பிறப்பவை. அது ஆரோக்கியமானதல்ல.

##Pg## அண்மைக் காலமாக இந்திய ஊடகங்கள், இந்தியாவைப் பற்றிய மிகைப்படுததப்பட்ட பிம்பங்களை இந்தியர்களிடம் விற்று வருகின்றன. இந்தியா வல்லரசாக வேண்டும், வல்லரசாகிவிடும் என்ற கனவுகளின் அடிப்படையில் விற்கப்படும் பிம்ம்பங்கள் இவை. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் நாட்டிவரும் வெற்றிக் கொடிகள், பங்குச் சந்தையில் காட்டி வரும் பாய்ச்சல், உலகமயமாதலின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில் பொருட்களை விற்பதற்கு ஒரு பெரும் சந்தையாகவும், பயிற்சி அளிக்கப்பட்ட மனித உழைப்பைப் பெற மலிவான சந்தையாகவும் அளிக்கும் தோற்றம், இவையெல்லாம் இந்தியாவிற்கு உலக அரங்கில் கவனத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் உலக நிறுவனங்கள், அரசியல், வணிகம், போன்ற துறைகளில் எடுக்கும் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு வல்லமையை இந்தியா பெற்றுவிடவில்லை என்பதும், நம் அடித்தள மக்களின் குறைந்தபட்சத் தேவைகளை (கல்வி, குடிநீர், சுகாதாரமான வாழ்விடம்) நிறைவு செய்வதில் நாம் பாதியளவுகூட வெற்றி காணவில்லை என்பதும் அதே அளவிற்கு உண்மை.

இந்த யதார்த்தங்களை மறக்குமளவு வல்லரசுக் கனவுகளை விற்பது போதை மருந்து விற்பதற்கு நிகரானது.

இறுதியாக ஒரு கேள்வி: இந்திய வம்சாவளியினர் ஒருவர், ஒரு மாநில முதல்வரானதற்கு ஆனந்தக் கூத்தாடும் சக இந்தியர்களே, வேறு ஏதோ ஒரு நாட்டில், அல்லது வம்சாவளியில் பிறந்த ஒருவர் இந்த நாட்டின் பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ ஆவது உங்களுக்குச் சம்மதம்தானா?

சிஃபி.காம் (தமிழ்) தீபாவளி மலரில் வெளியானது

Wednesday, September 26, 2007

சேது: 'பந்த்'தும் பாலமும்

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காக திமுக பந்த் அறிவித்திருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறையிடம் உள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.பாலு. தனது கட்சி அமைச்சர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவில்லை என திமுகவே போராட்டம் நடத்துகிறதா? திட்டம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதில் வேறு மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஜனவரிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக திமுக கருதுமானால், அதற்கு மத்திய அரசு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் இந்தப் போராட்டம் மத்திய அரசை எதிர்த்தா? மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகிக்கிறதே? ஒருவேளை உச்சநீதி மன்றத்தின்
இடைக்காலத் தடையை எதிர்த்தா? இடைக்காலத்தடை ராமர் பாலம் பகுதிக்குத்தான், மற்றப் பகுதிகளில் பணியைத் தொடர தடை இல்லை எனத்தடை வழங்கப்பட்ட அன்று பாலு சொன்னாரே, அப்படியானால் மற்றப் பகுதிகளில் வேலையைத் தொடர்ந்து நடத்தித் தாமதத்தை தவிர்க்கலாமே? அல்லது இந்தப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தை நிர்பந்த்திப்பதற்கா? அல்லது அதை அச்சுறுத்துவதற்காகவா? வழக்கு நிலுவையில் இருக்கையில் இது போல் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பந்த் சிரிப்பை வரவழைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கான அல்லது திசை திருப்புவதற்கான முயற்சி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி, என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுண்டு.ராமன் போன்ற 'கற்பனைப் பாத்திரங்களுக்கு' அது போன்ற சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஆளும், வரலாற்று நாயகர்களான தலைவர்களிடம் அத்தகைய குணங்களை எதிர்பார்ப்பதற்கில்லை.

மத்திய அரசு, ராமன் என்றொரு நபர் வாழ்ந்ததாக வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்ன இரு நாள்களுக்குள், அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதே தினம், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ராமன் இந்திய வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் எனச் சொன்னார்.

'ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என வற்புறுத்தவில்லை, எந்தப் பாதை என்பது முக்கியமில்லை, வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை' என முதல்வர் கருணாநிதி சொல்லி 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேட்டியளிக்கிறார். முதல்வர் மாற்றுப் பாதை குறித்து ஆட்சேபம் இல்லை எனச் சொல்லியிருக்கிறாரே எனச் செய்தியாளர்கள் கேட்ட போது, ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகிறீர்களா எனத் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டதால் கடுப்படைந்து அப்படிச் சொல்லியிருக்கிறார் (Asked about DMK president and Tamil Nadu Chief Minister M
Karunanidhi's remark that he was not averse to an alternative RPT alternative alignment, the Minister said his leader had made that remark "out
of anguish" when he was repeatedly asked whether he was bent upon "destroying" the Ram Sethu.-PTI sept 22)

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதே பாதையில் திட்டம் அமைய அனுமதி அளித்த பாஜக இப்போது பாதை மாற்றத்தை வற்புறுத்துகிறது

அரசியல் பாலம்

நம்முடைய தலைவர்கள் ஒரே நிலையை எடுத்துக் கொள்ள இயலாமல் போனதற்கு சேது சமுத்திரத் திட்டம் 'அரசியலாகி' விட்டதுதான் முக்கியக் காரணம்.பாக் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு, நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக் கொணர்ந்து விட்டது.

எந்த நேரத்திலும் நாடளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்ற சூழ்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலும் இன்னும் சில மாதங்களில் வர இருக்கிற நிலையில், ராமனிடம் தோற்றுப் போகக் காங்கிரஸ் தயாராக இல்லை. எதுக்கு ரிஸ்க் என்ற அச்சம் அதனை இயக்குகிறது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கும் கட்சியை ஒருங்கிணைக்கவும், ஆர்.எஸ்.எஸ்.சுடன், நேர்து விட்ட விரிசலைச் சீர் செய்யவும் ராமர்பாலம் உதவாதா என பாஜக எண்ணுகிறது. மூன்றாவது அணி என்ற ஒன்று முளையிலேயே கருகிவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி அமைக்க இந்த ராமர் பாலம் உனர்வு ரீதியாகக் கை கொடுக்கலாம் என ஜெயலலிதா கருதுகிறார்.

திராவிட இயக்க பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற போது ராமன் மீது ஏற்பட்ட கசப்புணர்வை இத்தனை நாளைக்குப் பின் வெளியே கொட்டுகிறார் கலைஞர். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர், என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்குத் தயாரா என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை.

மன்னராட்சியா?

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது சொந்த நம்பிக்கைகளை அரசு இயந்திரத்தின் மூலம் திணிப்பது என்பது மன்னராட்சிக்கால நடைமுறை. அதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.மக்கள் ஆதாரமற்ற மூடத்தனமான நம்பிக்கைகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்கள் அதை உதறிவிட்டு வரவேண்டும் எனக் கருதக் கருணாநிதிக்கு உரிமை உண்டு. அவர் அப்படிக் கருதும் பட்சத்தில் அது குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அதை அரசுப் பணத்தில் செய்ய இயலாது. தனது கட்சியின் மூலம் எந்தத் தடையுமில்லை. இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்பது போல் கட்சியில் ஒரு பகுத்தறிவாளர் அணியை அமைத்து அவர் பிரசாரம் செய்யலாம். பெரியார் போல் இன்று அவர் ஊர் ஊராகப் பயணம் செய்யக்கூட வேண்டியதில்லை. தனது கலைஞர் தொநலக்காட்சியில் தினம் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி நடத்தலாம். தனது வாக்கு வங்கி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை மக்கள் மூட நம்பிக்கையி
லிருந்து விடுபடுவதுதான் முக்கியம் என அவர் கருதுவாரேயானால் அவர் இதைச் செய்ய முன்வருவார். ஆனால் செய்ய முன் வருவாரா?

நம்பிக்கைகள்- நிரூபணங்கள்

ஒரு சமூகத்தில் நிலவுகிற நம்பிக்கைகள் முற்றிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைவதில்லை. வரலாறு, தொன்மம், இலக்கியம்,அரசியல் நிலைப்பாடுகள், அறிவியல் காரணமாக அமையும் மனோபாவம் இவை எல்லாம் சேர்ந்துதான் ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அதிலும் எல்லா சமூகங்களிலும் கடவுள் நம்பிக்கை என்பது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலோ, அறிவியல் நிரூபணங்களின் அடிப்படையிலோ உருவாவதில்லை. அடுத்து என்னாகும் எனத் தெரியாத அநிச்சியமான நிலையில் வாழ்க்கை ஏற்படுத்தும் அச்சத்தை, எதிர்கொள்ளும் தைரியத்தை இறை நம்பிக்கை தருகிறது. Faith Heals Fear என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவம் உண்டு. அதனால்தான் இறைவன் மீது நம்பிக்கை கொள்பவர், வேறு எந்தச் சான்றுகளையும் தேடிச் செல்வதில்லை. மதம் ஒரு அபின் என்று கருத்துக்கு நம்மை இட்டும் செல்லும் முன் அதை விளக்கும் முகமாக, 'மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துகளின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் (Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.) என்று சொல்கிறார் மார்க்ஸ் (ஹெகலின் உரிமையின் தத்துவம் Philosophy of right என்ற நூல் பற்றிய முன்னுரை) வலியில் இருப்பவர் அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து கிடைத்தால் போதும் என எண்ணுவதைப் போல, அல்லது பழக்கத்தின் காரணமாக அதை நாடிப் போவது போலத்தான் பெரும்பாலானவர்களின் இறை நம்பிக்கைகள் துவங்குகின்றன.

எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக் கொண்ட வழக்கம். கீழ்த் திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றை விட இலக்கியத்தில் பதிவு செய்வது என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. வரலாறு என்பது ஆள்வோரைப் பற்றியும், அரசு நடவடிக்கைகளைப் பற்றியதுமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

கருணாநிதி கண்ணகி மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு அடிப்படை வரலாறு அல்ல, இலக்கியம்தான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கண்ணகிக் கோட்டத்திற்குக் கல் கொண்டு வநத கனக விசயன், அதியமான், ஓளவை, பாரி, குமரிக் கண்டம், போன்ற பலநம்பிக்கைகளுக்கு ஆதாரம் இலக்கியம்தான், வரலாறு அல்ல.

இன்று சிறு தெய்வங்களாக வழிபடப்படும் பல கடவுளார்களை, சுடலைமாடன், மதுரை வீரன் போன்றவர்களை, வரலாற்றில் காணமுடியாது. ஆனால் அவர்களை நாட்டார் கதைப்பாடல்களில் காணலாம். இன்னும் சொல்லப்போனால், அண்மைக்காலமாக உலகெங்கும் வரலாறுகள், இந்த நாட்டார் இலக்கியங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. உதாரணம்:மருதநாயகம்.'ஆராய்ச்சி' வானமாமலை மக்களிடையே வழங்கி வந்த பாடல்
களைத் திரட்டி, தொகுத்து மதுரைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட கான்சாகிப் பாடல்கள்தான் மருதநாயக வரலாற்றின் ஆதாரம்.

ராமாயணம் வரலாறா?

ராமனின் கதையும் நாட்டார் வழக்கிலிருந்து பெறப்பட்டதுதான். இதைக் குறித்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் போன்றோர் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். (கம்பன் ஒரு புதிய பார்வை, வானதிப்பதிப்பக வெளியீடு) இந்திய மொழிகள் பலவற்றில் இராமாயணம் சிற்சில மாற்றங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்னொரு ஆதாரம். பல்வேறு வகையான ராமாயணங்களைப் பற்றி ரிச்மேன் என்பவர் ஒரு நூலே எழுதியிருக்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பக வெளியீடாக அது வந்துள்ளது((Many Ramayanas, Richman, Oxford University Publications)

இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினரிடமும் இராமாயணம் காணப்படுகிறது. பெளத்தர்களின் ஜாதகக் கதையாக விவரிக்கப்படும் ராமாயணத்தில் தசரதர் அயோத்தியின் அரசர் அல்ல. வாரணசியின் அரசர். அதில் சீதை ராமனின் மனைவி மட்டுமல்ல, சகோதரியும் கூட. சத்திரியர்கள் தங்கள் இனத் தூய்மையைக் காக்க சகோதரிளை மணம் செய்து கொள்ளும் வழக்கம் சில சத்திரிய இனக்க்குழுக்களிடம் இருந்ததாக இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. இந்தக் கதையில் ராமர் ஒரு பெளத்தர். சமணர்களிடமும் ஒரு ராமாயணம் இருக்கிறது. அதில் ராமர் பிராமணீயத்திற்கு எதிரான சமணக்கருத்துக்களைப் பேசுகிறார். தெலுங்கு பிராமணப் பெண்களிடம் வழங்கும் ஒரு சீதாயணத்தை ரங்கநாயகியம்மா என்பவர் திரட்டித் தொகுத்திருக்கிறார். அது பெண்கள் பார்வையில் ராமாயணத்தை விவரிக்கிறது. அதில் இறுதி வெற்றி சீதைக்குத்தான்.

இப்படிப் பல வகையான ராமாயணங்கள் இருப்பதே, அவை நாட்டார் வழக்கிலிருந்து கிளைத்தவை என்பதைத்தான் சுட்டுகிறது. எங்கோ, எப்போதோ இருந்த ஒரு 'ஹீரோ'வின் கதைதான் பல மாற்றங்களுடன், பல கை மாறி இராமாயணமாக உருவாகியிருக்க வேண்டும். இனக்குழு சமூகங்கள் அரசுடமைச் சமூகங்களாக ஆன தருணத்தில், வாரிசுரிமையின் அடிப்படையில் அரசுரிமை தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கருத்தாக்கத்தையும், அதை ஒட்டிப் பெண் ஆண் ஒருவனது உடமை என்ற கருத்தையும், பரப்பவும், வற்புறுத்தவும் தோன்றிய கதையாக இராமாயணம் தோன்றி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். தசரதனுக்குப் பல்லாயிரம் மனைவிகள் எனத் துவங்கும் கதை இராமனுக்கு ஒரு மனைவி எனத் தொடர்கிறது. இராமாயணத்தில் தண்டிக்கப்படுபவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன். மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள். ராவணன் மற்றப்படி உயர்வாகவே பேசப்படுகிறான். 'வாரணம் புகுந்த மார்பன், வரையினை எடுத்த தோளன், நாரத முனிக்கு நயம்பட உரைத்த நாவன், வீரமும் சங்கரன் கொடுத்த வாளும்' களத்திலே போட்டுவிட்டுத் தோற்றுத் திரும்பியதாக கம்பன் வர்ணிக்கிறான். அநேகமாக எல்லா ராமாயணங்களும் ராவணனை அறிவுத் தாகமும் தேடலும் கொண்டவனாகவே சித்தரிக்கின்றன. நாட்டார் வழக்கில் இருந்த ராமாயணங்கள் பின் அவரவர் தேவைக்கேற்ப, காலத்திற்கு ஏற்ப ஆங்காங்கு மாற்றம் கண்டிருக்கின்றன.

ராமன் பாலம் கட்டினானா?

ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினான் என்ற கலைஞரின் கேள்வி, இந்தியப் பாரம்பரிய அறிவாற்றல் மீது வீசப்பட்ட எள்ளல், ஏளனம். கல்லூரிகள் என்ற அமைப்பு ரீதியாகக் கல்வி பயிற்றுவிக்கிற முறை ஐரோப்பியர் வருகையை அடுத்து இந்தியாவில் அறிமுகமானது. அப்படி ஒரு முறை அறிமுகமாகும் முன் இந்தியர்கள் 'காட்டுமிராண்டி'களாக வாழ்ந்தார்கள் என்பது ஆங்கிலேயர்களின் எண்ணம். (உதாரணம் மெக்காலே). ஆனால் தமிழகம் எங்கும் நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரங்கள், வட இந்தியாவில் காணப்படும் மொகலாயர்களின் அரண்மனைகள், மராட்டியர்களின் கோட்டைகள், நாயக்கர்களின் மாளிகைகள், காவிரியின் குறுக்கே கல்லணை, யமுனையின் அருகே தாஜ்மகால், எல்லாம் ஆங்கிலேயர்கள்
வரும்முன்னரே கட்டப்பட்டுவிட்டன. பூம்புகாரின் நகரமைப்பை சிலப்பதிகாரம் விவரிக்கிறது (சிலப்பதிகாரம் கதைதான், வரலாறு அல்ல எனக் கலைஞர் வாதிட முற்படமாட்டார் என நம்புகிறேன்) கப்பல் கட்டுவது பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையில் காணப்படுகின்றன. இதைக் கட்டியவர்கள் எல்லாம் எந்தப் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, சிவில் என்ஜினியரிங், டவுன் பிளானிங், ஷிப் பில்டிங் போன்ற படிப்புக்களைப் படித்தார்கள்? ஐரோப்பியர் வருகைக்கு முன் சிறிதும் பெரிதுமாக ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் வாள் போன்ற ஆயுதங்கள் உருக்கில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் மெட்டலர்ஜி படித்தவர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. ஐரோப்பியர் வருகைக்கு முன்னால் இந்தியாவில்
நடைமுறையில் இருந்து வந்த தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபால் என்பவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

ராமன் பாலம் கட்டினான் என்று சொற்றொடருக்கு அவனே ஒவ்வொரு கல்லாக எடுத்துப் போட்டுக் கட்டினான் என்பதா பொருள்? ஸ்டாலின் மாநகாரட்சி மேயராக இருந்த போது மேம்பாலங்கள் கட்டினார் என்றால் அவர் பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டா கட்டினார்? ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினான் என்றால், ஷாஜஹானா கல்லை அடுக்கிச் சாந்து பூசினான்? திருமலை நாயக்கர் மதுரையில் மகால் கட்டினார் என்றால் அவரா ஒவ்வொரு தூணையும் அமைத்து அதைப் பளிங்கு போல் பூசினார்? நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். அடுத்த வாரம் புதுமனை புகு விழா என்று நாம் ஒருவரை அழைத்தால் அதற்கு நாமே செங்கல் அடுக்கிக் கட்டினோம் என்றா பொருள்? இங்கெல்லாம் கட்டுவித்தார்கள், கட்டுவித்தோம் எ
ன்பதுதான் கட்டினார்களாக கட்டினோமாக வழங்கப்படுகிறது.

ராமனும் பாலம் கட்டுவித்தான் என்றுதான் கம்பன் எழுதுகிறான். கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில், சேதுபந்தனப் படலம் என்று ஒரு பகுதியே இருக்கிறது. அதில் 'குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதீர்' என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துவிடுகிறான் ('சென்றனன் இருக்கை நோக்கி') என்கிறார் கம்பன். (கம்ப ராமாயணம் -கம்பன் கழக வெளியீடு பக்கம் 1044)ராமனின் ஆணையை நிறைவேற்றி வைத்த பொறியாளர் ('வானரத் தச்சன்') நளன் என்பவர். பாலம் கட்டி முடித்தபின், சுக்ரீவனும் மற்றவர்களும் ராமனிடம் சென்று பாலம் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறார்கள்.பாலத்தின் அளவும் அப்போது ராமனிடம் சொல்லப்படுகிறது (யோசனை ஈண்டு ஒரு நூறு இவை ஐ இரண்டின் அகலம் அமைந்திடச் செய்
ததால் அணை' - கம்ப ராமாயணம் கம்பன் கழக வெளியீடு பக்கம் 1045) இப்படித்தான் ராமன் பாலம் கட்டினான், ஸ்டாலின் பாலம் கட்டியதைப் போல, கருணாநிதி சமத்துவபுரங்கள் கட்டியது போல.

ராமர் பாலம் எனப்படும் ஆடம் பாலம் ஏழு மணல்திட்டுக்களால் அமைந்த முப்பது கிலோமீட்டர் நீளமுள்ள பகுதி.இந்தத் திட்டுக்களின் கீழ் சுண்ணாம்புக் கற்களின் படுகை இருக்கிறது என நிலவியல் சர்வே (geologigal survey) ஆய்வுகள் சொல்கின்றன. அவை மியோசின் யுகத்தை (miocene era) சேர்ந்தவை என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தெரியகலா என்பவர் எழுதியுள்ள வரலாற்றுக்கு முந்திய இலங்கை ( The pre-history of Sri
Lanka by S.U.Deraniyagala) என்ற நூலிலும் இந்தத் தகவல் காணப்படுகிறது. மியோசின் யுகம் என்பது 1லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது..மியோ சின் என்ற கிரேக்கச் சொற்களுக்கு அருகில் அல்லாதது எனப் பொருள்.ராமர் திரேதா யுகத்தில், அதாவது லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே காலகட்டத்தில்தான், (மியோசின்) இலங்கையில் மனிதர்கள் குடியேறியதன்
அடையாளங்கள் காணப்படுவதாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல்லையோ, அது புராதனமானது என்பதை நிராகரிக்க இயலாது.

சுற்றுச் சூழல் ?

சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு மதவாதிகளிடமிருந்து மட்டுமல்ல சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. அப்போது இந்தத் திட்டத்தினால் சுற்றுச் சூழலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி நாக்பூரில் உள்ள நீரி (National Environmental
Engineering Research Institute - NEERI) ஆய்ந்து ஓர் அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்படி, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் போது, ஆடம் பாலம் எனப்படும் ராமர் பாலத்தில் ஆறு சதுர கி.மீ பரப்பு நிரந்திரமாகச் சேதமுறும் என்கிறது. அந்த அறிக்கையில் நடைமுறை சாத்தியமில்லாத பல யோசனைகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: சேதுக்கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் அங்கு வாழும் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு சேதம் விளைத்திடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சூழலியலில் பயிற்சி பெற்ற ஒரு நபர் கப்பலில் செல்ல வேண்டும், அவர் கடலைக்
கண்காணித்து வரவேண்டும் என்கிறது நீரி அறிக்கை. இது நடைமுறையில் சாத்தியமா? சரி இரவில் அல்லது மேகமூட்டம் மிகுந்த அவர் எப்படிக் கடலைக் கண்காணிப்பார்? எண்ணைக் கப்பல்கள் செல்லும் போது கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. சரி தற்செயலாகவோ,ஒரு விபத்துப் போலோ எண்ணைக் கசிவு ஏற்பட்டால் என்ன தீர்வு என்பதை நீரி சொல்லவில்லை. ஓரிடத்தில், (பத்தி 6.1) கடலில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் 84.5 மில்லியன் கனமீட்டர் மண்ணில் ஒரு 'சிறு பகுதி' பாம்பன் தீவிலும் மற்றவை வங்கக் கடலிலுமாகக் கொட்டப்படும் என்று சொல்கிறது (கடலில் எவ்வளவு, தீவில் எவ்வளவு என்று சொல்லப்படவில்லை) ஆனால் இன்னொரு பகுதி ( பத்தி 6.2) அந்த மண் களிமண், மற்றும்
தூர் ஆக இருக்கும் என்பதால் கடலில் கொட்டப்படாது என்றும் சொல்கிறது. என்ன முரண்பாடு!

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

பாக் நிரிணைப் பகுதியை அகழ்ந்து கால்வாய் அமைப்பதனால் ஏற்படும் அரசியல், சூழலியல் பிரசினைகளைப் பார்க்கும் போது அந்தத் திட்டம் குறித்த மாற்றுச் சிந்தனைகள் அவசியமாகிறது. சேதுக்கால்வாய் திட்டம் அமைந்தாலும் அதன் வழியே பெரிய கப்பல்கள் செல்ல இயலாது. சிறிய கப்பல்களும் மெதுவாகச் செல்ல வேண்டியிருக்குமாதலால், ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் செல்ல இயலாது. எனவே அதனால் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்கள் பெரிதாக இராது.

எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிற யோசனையைப் பரிசீலிக்கலாம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதி மீது ஓர் பாலம் அமைத்து இலங்கையை ஓர் சாலை மூலம் இணைக்கலாம். அந்த முயற்சிக்கு இத்தனை செலவும் ஆகாது. தக்க உயரத்தில் அமைத்தால் கீழே படகுகள் செல்லத் தடையிராது. மீன் பிடித் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது. ராமர் பாலத்தைக் காப்பாற்ற முடியும். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக் குறைவாகவே இருக்கும். கடல் மீது ஒரு பாலம் அமைப்பது சவாலான காரியமாக இருக்கலாம். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்பங்களைப் பார்க்கும் போது இது சாத்தியமற்ற காரியம் அல்ல.

இலங்கையும் இந்தியாவும் சாலை வழி இணைக்கப்படும் போது, தென்மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரிக்கும். ஏற்கனவே அவர்கள் அண்மைக்காலம் வரை வள்ளம் எனப்படும் தோணிகள் மூலம் சரக்குகள் அனுப்பி இலங்கையோடு வாணிகம் செய்து கொண்டிருந்தவர்கள்தான்.இலங்கை வணிகர்களுக்கும் வாய்ப்புக்கள் பெருகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அதற்குப் பின்னும் 15 -20 ஆண்டுகள் வரை, இலங்கைக்கு ரயில் மூலம் செல்லும் வசதியிருந்தது. அதாவது ராமேஸ்வரம் வரை ரயில். அங்கிருந்து தோணி. இரண்டுக்கும் சேர்த்து எழும்பூரிலேயே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். சென்னையிலிருந்து செல்லும் அந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்க்கு 'போட் மெயில்' என்று கூட ஒரு பெயர் உண்டு.

ஆனால், அப்படி ஒரு பாலம் அமைந்தால், இன்றுள்ள சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி எழலாம்.ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?

புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் தேவை.

Friday, September 21, 2007

இன்னும் ஒரு நூறாண்டு இரும்


சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சில உள்ளடங்கிய கிராமங்களுக்குப் போயிருந்தேன். முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்திய஡வின் தொகுதியான குணாவிலிருந்து இரண்டு மணி நேரம் போனால் தொட்டுவிடக்கூடிய கிராமங்கள். வறுமை கவ்விய கிராமங்கள். நான் போன ஒரு கிராமத்தில், ஊரிலிருந்த பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள், வயோதிகர்களைத் தவிர அத்தனை பேரும் கிராமத்தை விட்டு வெளியேறி, பக்கத்தூர்களில் வேலை தேடிப் போயிருந்தார்கள். வறுமை காரணமாக இடம் பெயர்வதைக் குறித்துத் தகவல் சேகரித்து அரசின் கவனத்திற்குக் ஦காண்டு போகும் நோக்கத்தோடுதான் அங்கு போயிருந்தோம்.


எங்கள் குழுவைப் பார்த்ததும் ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து போட்டார்கள். மேலே ஒரு கம்பளியை விரித்தார்கள். கை குவித்து வணக்கம் சொன்னார்கள். அவர்களுக்குக் கால்சட்டை, முழுக்கைச் சட்டை அணிந்தவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகள், அல்லது போலீஸ்காரர்கள். ஒரு சிறுவன் என்னருகில் பச்சையாக ஒரு தாவரத்தை ஒரு கட்டு கொண்டு வந்து வைத்தான். என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அதைக் கட்டிலின் ஓரமாக வைத்து விட்டு நான் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். ஓர் ஆட்டுக் குட்டி அந்தக் கட்டை முகர்ந்து பார்த்துக் ஦காண்டிருந்தது. சிறுவன் வந்து அதைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டி விட்டு மறுபடியும் என் முன் அந்தத் தாவரக் கட்டை எடுத்து வைத்தான். " எதற்கு? என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அந்தச் சிறுவனுக்கு நான் கேட்டது புரியவில்லையோ அல்லது 'சர்க்கார்' ஆசாமிகளிடம் பேசக் கூடாது என்று வாயைக் கட்டி வைத்திருந்தார்களோ என்னவோ, அவன் பேசாமல் நகர்ந்து விட்டான்.


நான் திரு திருவென்று விழிப்பதைக் கண்ட, ஒரு இளம் பெண் வந்து அந்தச் செடிகளில் இருந்த துவரைக் காய்களைப் பிரித்து, அந்த மணிகளை வாயில் போட்டு மென்று காட்டினாள். ஏதோ சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. ஆனால் ஒருவித பச்சை மணத்தோடு இருந்த அந்த மணிகளை என்னால் ரசித்துச் சாப்பிடமுடியவில்லை. அதை என் முகத்தைப் பார்த்துப் புரிந்து கொண்ட இன்னொரு பெண்மணி அந்தத் தாவரக் கட்டை எடுத்துக் கொண்டு போனார். சற்று நேரம் கழித்துப் பார்க்கிறேன். சிறிது தொலைவில் அவர் உலர்ந்த சருகுகளையும் 'செத்தை'களையும் குவித்துக் கொண்டு அவற்றில் நெருப்பு மூட்டி அந்த மணிகளை வறுத்துக் கொண்டிருந்தார். நான் கிளம்பும் முன் பச்சை வாசனை நீக்கப்பட்டிருந்த மணிகளை ஒரு 'சொளகி'ல் வைத்து என்னிடம் நீட்டினார். செம்மண்ணோ, சாணியோ கொண்டு மெழுகப்பட்டிருந்த அந்த சிறிய முறம் கோலங்கள் வரையப்பட்டு அழகு செய்யப்பட்டிருந்தது.தாவரங்களிலிருந்து கிடைத்த வண்ணங்களைக் கொண்டு ஒரு கிளியும் அந்த முறத்தில் அமர்ந்திருந்தது.


அந்தக் கிராமத்திலிருந்து விடைபெறும் போது மனம் கரைந்து விட்டிருந்தது. என்ன மாதிரியான மனிதர்கள்! சோற்றுக்கு வழியில்லாமல் ஊரை விட்டுத் துரத்தும் வாழ்க்கை. அந்த வறுமையிலும் வந்தவனுக்கு ஏதோ தின்னக் கொடுத்து, அதை அவன் ரசித்து உண்கிறானா என ஓசைப்படாமல் கணித்து, அதை அவனது விருப்பத்திற்கு ஏற்பப் பதப்படுத்தி.... என்ன மாதிரியான மனிதர்கள்! முறத்தில் வந்தமர்ந்திருந்த அந்தப் பச்சைக் கிளி! அந்தக் கோலம்! வாழ்க்கை ஈரலைப் பிய்த்துத் தின்னும் தருணத்தில் கூட கைகள் கலை பேசுமா?


கி.ரா.வின் கதவு ஞாபகம் வந்தது. அப்பா வேலை தேடி மணிமுத்தாறு பக்கம் போயிருக்கிறார். வறுமைக்குப் பிறந்த குழந்தைகள் லட்சுமியும் சீனுவாசனும் எந்தக் கவலையுமின்றி கதவை பஸ்ஸாக பாவித்து விளையாடுகிறார்கள். அதைத் தீப்பெட்டிப் படம் கொண்டு அழகு படுத்துகிறார்கள். தீர்வை பாக்கிக்க்காக அந்தக் கதவு ஓர் நாள் 'ஜப்தி' செய்யப்படுகிறது, திறந்து கிடக்கும் வீட்டில் இருந்த கைக் குழந்தை குளிர்காற்றைத் தாங்கமுடியாமல் ஜுரம் கண்டு இறந்து போகிறது. ஒருநாள் லட்சுமியும் சீனிவாசனும் கதவை ஒருநாள் சாவடி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் கதவைக் 'கண்டெடுக்கிறார்கள்'. லட்சுமி தன் பாவடையால் அதில் படர்ந்திருந்த கரையான்களைத் துடைக்கிறாள். அவர்களின் கரங்கள் கதவை இறுகப் பற்றிக் கெ஡ண்டிருந்தன எனக் கதை முடிகிறது.


வாழ்க்கையிலிருந்து கிள்ளி எடுத்த கதை. இந்தக் கதையைப் படித்து நெகிழ்ந்த தருணத்தில் வாய்விட்டு விசும்பி அழுதிருக்கிறேன். மறுபடியும் மனதில் அந்தக் கதவு மத்தியப்பிரதேசத்தில் திறந்து மூடியது.


கி.ரா 1958ல் தனது 'மாயமானுடன்'தமிழ்ச் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்த போது, அதை ஒர் பொற்காலம் கடந்து போயிருந்தது. எனினும் அந்தப் பொற்காலத்தின் நிழல்கள் அங்கு படிந்து கிடந்தன. அவர் முன் ஏராளாமான முன்னுதாரணங்கள் இறைந்து கிடந்தன. புதுமைப்பித்தன், கல்கி என்ற இரண்டு பிரம்மராக்ஷசன்கள் அழுத்தமாகத் தங்கள் தடங்களைப் பதித்துக் கடந்து போயிருந்தார்கள்.


மணிக்கொடிக்காரர்கள் தாங்கிப் பிடித்த ஐரோப்பியப் பாணியில் அமைந்த நவீன வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளையே 'இலக்கியத் தரம்' வாய்ந்ததாக அப்போதும் விமர்சகர்கள் மெச்சிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இந்தியச் சுதந்திர அரசின் முதல் பத்தாண்டுகளில், விடுதலை நாள்களில் பீறிட்டுப் பெருகிய லட்சியங்கள் வற்றிப் போக, இடதுசாரிகளின் சோஷலிச யதார்த்தம் கவனமும் வரவேற்பும் பெறத்துவங்கியிருந்தன.
ஆனால், பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்புப் பெற்ற, நகர்மயமான, நடுத்தர வர்க்க, பிராமண, இளைஞர்களினால் உந்தப்பட்ட மணிக்கொடியினருக்கு, கிராமங்களின் ஆன்மாவை, அதிலும் ஏழைமக்களின் மன உணர்வுகள், பரிச்யசமாகியிருக்கவில்லை. அதை, அவர்கள் தங்கள் கற்பனைக் குதிரைகளில் அமர்ந்து, தங்களது பொருளாதாரக் கோணத்தில் மட்டுமே பார்த்து, தங்கள் இஷ்டம் போல் புரிந்து கொண்டு, கதை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பிரசவத்திற்கு மனைவி அவளது தாய் வீடு சென்றிருக்கும் வேளையில், விரக உணர்வில் தவிக்கும் ஒருவன் கீரை விற்க வந்த இளம் பெண்ணை இரவில் உறவுக்கு வருமாறு அழைப்பதைக் கருவாகக் கொண்ட பிச்சமூர்த்தியின் கதை ஒன்றை அவரது பதினெட்டாம் பெருக்குக் கதைத் தொகுதியில் பார்க்கலாம். காய்கறி விற்பவளாக இருந்தால், அவள் காசு கொடுத்தால் வந்துவிடுவாளா? ஏழைகளாக இருந்தால் என்ன, அவர்களுக்கு ஒழுக்க நெறிகள், அற உணர்வுகள் இருக்காதா? கணவனையும் குழந்தைகளையும், குடும்பத்தாரையும் காப்பாற்ற நாலைந்து வீடுகளில் உடல் நோக உழைக்கிற பெண்கள் இப்போதும் சென்னை நகரச் சேரிகளில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னகரம் படைக்கப் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்த பெண் வேறு மாதிரி.


இன்னொரு புறம், மார்க்க்சீயர்களின் முற்போக்கு இலக்கியம், கட்சியின் manifestoவிற்கு எழுதப்பட்ட உரைகளாகவும் உதாரணங்களாகவும் அமைந்திருந்ததன. அவற்றில் நாம் சந்திக்க நேர்ந்த ஏழைகள் வர்க்கச் சுரண்டலுக்கு உள்ளான மனிதர்களாக மட்டும், ஓர் ஒற்றைப் பரிணாமத்தில் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் அத்தனை எளிமையானதாக இருந்ததில்லை. காலம் காலமாக அந்த எளிய மக்கள் சுரண்டல்களையும், வறுமையையும் மீறி, தங்கள் படைப்பூக்கத்தால், நாட்டார் இலக்கியத்தையும், கலையையும், செழுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் தங்கள் பேச்சினிடையே வழங்கி வரும் சொலவடைகளே அவர்களது கற்பனைத் திறனுக்கும், சொல்லாட்சிக்கும் ஓர் சான்று.


இந்த இரண்டு தரப்பின் சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டவராக எழுத வருகிறார் கி.ரா. வடிவ அமைதியை வற்புறுத்தும் கட்சி முன் நவக்கும் ஐரோப்பிய வடிவத்தை முற்றிலும் நிராகரித்துவிடாமல், அதை வாய்மொழி வழக்கில் உள்ள, கதை 'சொல்லும்' மரபோடு இணக்கமாகப் பிநணைத்துத் தனக்கென ஒரு வடிவத்தைத் தேர்தெடுத்துக் கொள்கிறார். அந்த வடிவத்திற்குள், அவர் அறிந்த வாழ்க்கையை, அதைச் சுமக்கும் மனிதர்களை முன்நிறுத்தி அவர்கள் வழியே நமக்கு அளிக்கிறார். அதனால் அவை வெறும் கலைப்படைப்பாகவோ அல்லது பிரச்சாரமாகவோ இல்லாமல், ஒரு வாழ்க்கைச் சித்திரமாக மலர்கிறது.


கி.ராவின் கதை மாந்தர்கள் கடுமையான சுரண்டலுக்கும், வறுமைக்கும் உள்ளானவர்கள். ஆனாலும் அவர் கதைகளில் புலம்பலைப் பார்க்க முடியாது. கதவு ஓர் உதாரணம். அவரது அப்புராணி நாயக்கர் ஓர் உதாரணம். 'கனிவு' கெண்டையா ஒரு உதாரணம். மாயமானின் நாயக்கர் ஒரு உதாரணம்.
உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல், தில்லியில் மழைக்கு முந்திய புழுக்கம் நிறைந்த இரவில், நினைவிலிருந்து எழுதுகிறேன். புத்தகங்களைப் புரட்டினால் இன்னும் நூறு சொல்வேன்.


அவரது மொழியைப் பற்றி, அவரது உவமைகளைப் பற்றியும் நூறு சொல்லலாம்(பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரையின் மீது பீச்சியது போன்ற குறட்டை ஒலி, வெண்டைப் பிஞ்சின் மேற்புறம் போல மினுமினுக்கும் விடலைப்பருவத்து இளைஞனின் மீசை) ஆனால் அவரது மனிதர்கள் எனக்கு முக்கியமானவர்கள். அவர்கள் சொல்லும் வாழ்க்கை முக்கியமானது. இன்று எழுதவருகிறவன் இந்த மனிதர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது,


85 வயதா?


இன்னும் ஒரு நூறாண்டு இரும்.
கி.ராவின் 85ம் பிறந்தநாளை ஒட்டி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள காலத்தை வென்ற கதை சொல்லி என்ற நூலுக்காக எழுதியது

Thursday, September 20, 2007

வாழ்க வசவாளர்கள்!

வசவாளர்களுக்கு நன்றி.

கடந்த பதிவில் நான் என் கருத்தாக எஅதையும் எழுதியிருக்கவில்லை.(பின்னூட்ட templateஆக எழுதப்பட்டிருந்த 'மொக்கை'யைத் தவிர.) நான் செய்திருந்ததெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருந்த செய்தியை மொழி பெயர்த்திருந்தது மட்டுமே. அதை சரிபார்த்துக்கொள்ள உதவியாக செய்தியின் மூலத்தின் URLஐயும் வெளியிட்டிருந்தேன்.செய்தியின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தேன்.

அப்படியிருந்தும் அநேகமாக அத்தனை கணைகளும் என்னை நோக்கி எய்யப்பட்டிருக்கின்றன. செய்தி பொய்யானது என்றோ, மிகையானது என்றோ, கருதுகிறவர்கள் அதை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியாவை நோக்கி அல்லவா தங்களது சினத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மொழிபெயர்த்தவனைத் தாக்க முற்படுவதேன்?

ஒருவேளை இந்தச் செய்தியே கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கக் கூடாது எனக் கருதுகிறார்களோ? . டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில், விற்பனையில், ஆங்கில தினசரிகளில் முதலிடத்தில் இருக்கும் நாளிதழ்,(7.9 மில்லியன் பிரதிகள்) உலகில் உள்ள பெரிய தினசரிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய இதழ் (24 வது இடம்) கருத்துலகில், கொள்கை வகுப்பவர்களிடத்தில், படித்த நகர்ப்புற மத்திய தர வர்க்கத்திடையே (குறிப்பாக வட இந்தியாவில்) தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட இதழ். என்றாலும் இந்தப் பத்திரிகை தமிழ்நாட்டில் அதிகம் படிக்கப்படுவதில்லை. இந்தச் செய்தி தமிழ்ப் பதிவர்களில் பலருக்குக் கவலையும், சிலருக்கு சிந்தனையையும் தரக்கூடும், எனவே அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என நான் கருதி மொழி பெயர்த்து வெளியிட்டேன். அதற்கு இத்தனை மொத்தா?

யாரும் பத்திரிகைகளில் படிக்கும் எந்த செய்தியையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.(ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்பது என் கருத்து) அதை அவரவர்களிடம் இருக்கும் முன் கூட்டிய தீர்மானங்களோடுதான் அணுகுகிறார்கள். இந்தச் செய்தியையே எத்தனை விதமான கோணத்தில் அணுகலாம் எனச் சூசகமாகக் கோடி காட்ட இடப்பட்டதுதான் அந்த 'மொக்கை'ப் பின்னூட்ட டெம்பிளேட்.

இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-

ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!

வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!

Wednesday, September 19, 2007

விடுதலைப் புலிகளிடையே பிளவு?


இவை என்னுடைய கற்பனை அல்ல. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கும் செய்தியின் தமிழ் வடிவம் இது.


தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அழியாத தாக்கம் ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. அதனால் விடுதலைப் புலிகளிடமும் வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை.தனது மகனும், ஏரோநாட்டிகல் பொறியாளருமான சார்ல்ஸ் அந்தோனி சீலன் வசம் தனது பயங்கரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க பிரபாகரன் ஆர்வமாயிருக்கிறார்.
ஆனால் தனது வாரிசாக தன்னுடைய 22 வயது மகனுக்கு முடிசூட்டும் பிரபகரனது திட்டம் குறித்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களிடம் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஏரோநாடிகல் பொறியியலில் பட்டம் பெற்று, அயர்லாந்திலிருந்து 2006ம் ஆண்டு திரும்பிய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, வான் படை, கணினித்துறை இரண்டிற்கும் தலைமை வகிக்கிறார்.மூன்று மாதங்களுக்கு முன் கொழும்பின் மீது இரவில் சென்று தாக்கி, இலங்கை இராணுவத்திற்குத் திகைப்பை ஏற்படுத்திய வான்படையை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
சார்லஸ் அந்தோனி தவிர, 21 வயது மகள் துவாரகா, 11 வயது மகன் பாலச்சந்திரன் என பிரபாகரனுக்கு இன்னும் இரு குழந்தைகள் உண்டு. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
விடுதலைப் புலி இயக்கம் கண்டுவரும் மோசமான அதிகாரப் போட்டி, இதுநாள் வரை சர்ச்சைக்கு இடமில்லாது இருந்த பிரபாகரனின் தலைமையை, பலவீனப்படுத்தத் துவங்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கபூரில் உள்ள பயங்கரவாதத்திற்கெதிரான சிந்தனை அரங்கான, அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் குறித்த ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச மையம், அண்மையில் வெளியிட்டுள்ள அதன் ஆய்வறிக்கையில், விடுதலைப்புலிகள் பெரிய அளிவில் பிளவுபடுவதற்குத் தெளிவான சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
"பிரபாகரன் அடுத்த தலைமுறைப் புலிகளை வளர்த்தெடுப்பதில் முனைந்துள்ளார் என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. அவரது இந்தச் செயல், மூத்த படைவீரர்களிடம் மனத்தாங்கலை ஏற்படுத்தக் கூடும்" என்கிறது அந்த அறிக்கை. இதுநாள் வரை பெரும் பிளவுகளையும் மீறித் தாக்குப் பிடித்த ஒரே தமிழ் பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகள்தான்.ஆனால் இப்போது பிரபாகரனின் வசீகரம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் குன்றி வருவதாகத் தெரிகிறது.
கிளிநொச்சியில் உள்ள வட்டக்காச்சியில், விடுதலைப்புலிகளின் எட்டு வரி வசூலிப்பாளர்கள், அதன் தலைமையால் தூக்கிலிடப்பட்டதாக கடந்த மாதம், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது.புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் தலைவரும், அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் அதிகாரம் மிக்கவருமான பொட்டு அம்மன் அவர்கள் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இயக்கத்தின் பணத்தை விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தங்கள் சொந்தக் கரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக சிவிலியன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமைச்சகம் எழுதியிருந்தது. பொட்டு அம்மனுக்கும், எஸ்.பி.தமிழ்ச் செல்வனுக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும், விடுதலைப் புலிகளின் கடற்படைத் தலைவர் கர்னல். சூசை, " அகற்றப்பட்டதை"யும் அமைச்சகம் வெளிப்படுத்தியிருந்தது.
பிரபாகரன் தன் மகனை வான்படைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தது குறித்து சில படைத்தலைவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பது விடுதலைப்புளிகளிடம் காணப்படும் அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் என சிங்கப்பூர் சிந்தனை அரங்கு கருதுகிறது. 52 வயதாகும் பிரபாகரன், தனது மகனை மேலே கொண்டுவருவதில் ஆர்வம் காட்ட, இரத்த அழுத்தம், சக்கரை வியாதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள், அவரது உடலின் ஆரொக்கியம் மிகச் சிறப்பாக இல்லாத காரணமாக இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.செய்தி மூலம்: http://timesofindia.indiatimes.com/World/Struggle_in_LTTE_over_successor/articleshow/2381716.cms

பின்னூட்டம் போடுபவர்களுக்கு வசதியாக கீழே சில templateகள் தரப்பட்டிருக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்:


, இதெல்லாம் 'ரா' விடும் சரடு

ஆங்! இது சிங்களப் பேரின வாத அரசு பரப்பிவரும் பொய்


து அண்மைக்காலமாக அடி வாங்கி வரும் விடுதலைப் புலிகள் கவனத்தைத் திசைதிருப்ப மேற்கொண்டிருக்கும் உத்தி


ஈஈ ஜோக்கு நல்லா இருந்திச்சு


னக்கு எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா? அடங்குய்யா!


கூம், நம்பறமாதிரி இல்லை


ங்கட தலைவர் ஒரு நுளம்பைக் காட்டி இதுதான் இனி உங்கட தல எண்டு சொன்னாலும் கேட்டுக்குவம்தானே.நாங்க என்ன செய்ய வேண்டுமெண்டு யாரும் இங்கனெ கதைக்க வேண்டா


ய்! பொத்திக்கிட்டுப் போடா!


யமில்லை, இது பாப்பானுங்க சதி


ன்றும் சொல்வதற்கு இல்லை, உண்மையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்


கோ! அப்படியா சேதி


ஓளவியம் பேசேல்

Tuesday, September 11, 2007

சந்தை தின்னும் ஊடகங்கள்

திடீரென்று அந்த அரசுப் பள்ளியின் முன் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. யாரோ ஒருவன் பள்ளியின் மீது கல் ஒன்றை வீசினான். அவ்வளவுதான் கட்டவிழத்துக் கொண்ட வன்முறை, தீப்பிடித்தாற்போல் மளமளவென்று அந்தப் பகுதி முழுதும் பரவியது. ஒரு மாருதி ஜிப்சி எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தத் திடீர் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?
அன்று மதியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தி. அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்து அவர்களை நிர்வாணமாகப் படமெடுக்கிறார். பின் அந்தப் படத்தை அவர்களிடம் காண்பித்து, அவர்களை பிளாக்மெயில் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார் என்றது செய்தி. சாபரி சூட் அணிந்து ஒரு வர்த்தகர் போல் தோற்றம் தரும் ஒரு நடுவயதுக்காரருடன் ஒரு இளம் பெண்ணை அந்த ஆசிரியை அனுப்பிவைப்பது போலவும், அந்தப் பெண்ணிடம் அவர் 4000 ரூபாய் பணம் கொடுப்பது போலவும் காட்சிகள் திரையில் ஓடின. இந்தக் காட்சிகள் சம்பந்தப்பட்டவர்கள் அறியாமல் மறைவாகப் பதிவு செய்யப்பட்டவை (Sting operation) என்று பெருமையுடன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது அந்த தொலைக்காட்சி. ஆனால்-
அத்தனையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம்!
பொது அமைதிக்குக் குந்தகமும், பொதுச் சொத்துக்களுக்கு இத்தனை நாசமும் விளைவித்த, இரண்டு பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராத அவமானத்தையும் ஏற்படுத்தித் தந்த இந்தக் காட்சிகள் 'செட்-அப்' செய்யப்பட்டவை. அதில் விலை பேசப்பட்டவராகத் தோன்றிய இளம் பெண் மாணவி அல்ல. அந்த ஆசிரியையும் இது போன்ற செயல்களைச் செய்பவர் அல்ல. இப்படி போலியாக ஒரு செய்தியை உருவாக்கி, ஒளிபரப்பக் காரணம், அந்த இரு பெண்களில் ஒருவரோடு இருந்த தனிப்பட்ட விரோதம்தான்.
உமா குரானா,அரசுப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியை. பள்ளி வேலை போக, செயற்கைக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். அவருக்கும் வீரேந்திர அரோரா என்பவருக்கும் இடையே, கொடுக்கல் வாங்கலில் ஏதோ தகராறு. வீரேந்திர அரோரா நடத்தி வந்த சிட்பண்ட் நிறுவனத்தில் சீட்டு எடுத்த வகையில் உமா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.(இதை உமா மறுக்கிறார். அரோரா வேறு ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்) இதன் காரணமாக இருவருக்குமிடையே விரோதம் இருந்து வந்தது. ஆகஸ்ட் இறுதி நாள்களில் வீரேந்தர் தன்னுடைய நண்பரான பிரகாஷ் சிங்கைத் தொடர்பு கொண்டார்
பிரகாஷ் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர். இருவரும் சேர்ந்து உமா குரானவை 'மாட்டி விட' ஒரு திட்டம் தீட்டினர். சிங் உமாவிடம் கை பேசியில், வேறு ஒரு பெயரில், ஒரு வர்த்தகர் பேசுவது போல பேசினார். அவரது நகைக்கடைக்குத் தன்னால் நிறைய ஆர்டர்கள் வாங்கித் தரமுடியும் என்றும் அது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் சொன்னார். பெரிய அளவில் ஆர்டர் கொடுக்கிற பிசினஸ்மேன்கள், பெண்களை அனுப்பி வைக்குமாறு கேட்பார்கள் என்றும், அதற்கு அவர் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சொன்னார். ஆனால் உமா அது தன்னால் முடியாது எனத் தெரிவித்து விட்டார். "நீங்கள் ஒரு பெண்கள் பள்ளியில்தானே பணியாற்றுகிறீர்கள், அங்கு யாரையாவது 'கன்வின்ஸ்' செய்து பாருங்கள் என்றும் சிங் யோசனை கொடுத்திருக்கிறார். ஆனால் உமா அநதப் பேச்சே வேண்டாம் என மறுத்து விட்டார்.ஏமாற்றமடைந்த சிங் தன்னுடைய நாடகத்திற்கு ஆள் தேட ஆரம்பித்தார். பத்திரிகையாளராக வேண்டும் என்ற தாகத்தோடு, ஆனால் சரியான வேலை கிடைக்காமல், ஒரு சிறு பத்திரிகை ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ராஷ்மியின் ஞாபகம் வந்தது. சக பத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்கு ராஷ்மியோடு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. ராஷ்மியை சந்தித்துப் பேசினார். ராஷ்மியிடம் தனது sting operationக்கு உதவ வேண்டும் என்றும், அது முடிந்தவுடன், தான் வேலை பார்க்கும் தொலைக்காட்சியிலேயே உதவிக் குற்றவியல் செய்தியாளராக வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார். ஆனால் ராஷ்மியிடம், உமாவிற்கும், வீரேந்தருக்கும் இருந்து வரும் பகை பற்றி ஏதும் சொல்லவில்லை. ஒரு ஆசிரியையே மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் அக்ரமம் நடந்து வருவதாகவும், அதை அம்பலப்படுத்த தான் மேற்கொள்ளும் நல்ல காரியத்திற்கு உதவ வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
பின் உமாவைத் தொடர்பு கொண்டார். ஆர்டர்கள் பிடித்துத் தருவதில் 'திறமையுள்ள' ஒரு பெண்ணைத் தான் தேடிக் கண்டிருப்பதாகவும் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என்று உமா சொன்னபோது நீங்கள் எதற்கும் ஒரு முறை அவரை சந்தித்துப் பேசுங்களேன் என்று யோச்னை கொடுத்திருக்கிறார். ஜூலை 19ம் தேதி, தன்னை ஒரு வணிக வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் அந்தப் பெண்ணை தன்னை சந்திக்க அழைத்து வருமாறு சொன்னார் உமா. ராஷ்மியையும் அழைத்துக் கொண்டு அந்த வணிக வளாகத்திற்குச் சென்றார் சிங். முதலி ராஷ்மி மட்டும் தனியாகச் சென்று உமாவை சந்த்தித்தார், அவர்கள் இருவரும் உரையாடுவது போன்ற காட்சி உமாவிற்குத் தெரியாமல் பதிவு செய்யபட்டது. பின் சிங் அங்கு வந்து சேர்ந்து கொண்டார். தனக்கு வேலைக்கு ஆள் வேண்டாம் என சிங்கிடம் சொன்னார் உமா.பின் ராஷ்மி சிங்குடன் காரில் ஏறிக் கொண்டார். அந்தக் காட்சியும் பதிவு செய்யப்பட்டது. பின் சிங் ராஷ்மியிடம் 4000 ரூபாய் கொடுக்கப்படுவது போல் ஒரு காட்சி பதிவு செய்யப்பட்டது. அவ்வளவுதான், இந்தக் காட்சிகளையும், ' பிசினசிற்கு ஏற்பாடு செய்யுங்கள்' 'நீங்கள் இந்த இடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்' என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் கொண்ட தொலைபேசி உரையாடல்களையும் வைத்துக் கொண்டு ஒரு பரபரப்பான 'செய்தி' தயாரிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் சிங் வேலை பார்த்து வந்த தொலைக்காட்சி இதனை ஒளிபரப்ப மறுத்துவிட்டது. செய்தியில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக அது கருதியது. அந்த நிறுவனத்தில் ஒரு பயிற்சி செய்தியாளராகத்தான் (intern) இருந்தார் சிங். சில நாட்களில் வேறு ஒரு தொலைக்காட்சியில் வேலை தேடிக் கொண்டு நகர்ந்த சிங், இந்த ஒளிநாடாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். (இது தொலைக்காட்சி உலகில் பெரும் குற்றம்.) அந்த புதிய தொலைக்காட்சியில் தன்னுடைய 'நாடகத்தை' ஒளிபர்ப்பினார். அவ்வளவுதான் ஊர் தீப்பிடித்துக் கொண்டது.
சட்டம் ஒழுங்குப் பிரசினை ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை உமாவைக் கைது செய்தது. அவர்மீது விபசாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அரசு அவரை வேலையிலிருந்து நீக்கியது. உமா காவலில் இருந்த போது அவரது வீட்டுக் கதவை உடைத்து காவல் துறை சோதனையிட்டது. டிவிடிகளும், ஆவணங்களும் கிடைத்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த டிவிடிகளைப் போட்டுப் பார்த்த போது அவை சினிமாப்படங்களும், கார்ட்டூன் படங்கலும் எனத் தெரிந்தது. விலைமாதுவாகத் தோன்றியவர் மாணவிதானா என உறுதி செய்து கொள்ள பள்ளிக்குச் சென்றது காவல்துறை. அவர் மாணவி அல்ல எனத் தெரியவந்ததும் அதன் புருவங்கள் உயர்ந்தன. சிங்கை அந்தப் பெண், ராஷ்மியை விசாரணைக்கு அழைத்து வருமாறு கோரியது. அவள் விலைமாது. இப்போது எங்கிருக்கிறாள் எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார் சிங். காவல்துறை தேட ஆரம்பித்தது. தான் தேடப்படுவது தெரிந்ததும் ராஷ்மி நீதிமன்றத்தி சரணடைந்தார். அவர் தனக்கும் சிங்கிற்குமிடையே நடந்த உரையாடலைத் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். காவல்துறை சிங்கை 'எடிட்' செய்யப்படாத ஒரிஜினல் ஒளிநாடாக்களைத் தரும்படி கோரியது. அவர் தயங்கினார். காவல்துறை அவற்றைக் கைப்ப்பற்றிப் போட்டுப் பார்த்த போது உண்மைகள் தெரிய வந்தன. சிங் கைது செய்ய்ப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரனையின் போது கண்ணீர் விட்டுக் கலங்கிய சிங், தான் செய்வது தவறு என்று தெரிந்தும், இதன் மூலம் தனது செய்தியாளர் தொழிலில் ஒரு உயர்ந்த இடத்தை அடையலாம் என எண்ணி அதைச் செய்ய முனைந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் போலி நாடகம், தில்லி ஊடக உலகில் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஒரு ஊடகத்தைத் தனது சொந்தப் பகைகளைக் கணக்குத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்வது சரிதானா என்பது ஒரு கேள்வி. தொலைக்காட்சி உலகில் ஏற்பட்டுள்ள போட்டி தொலைக்காட்சிகளை எங்கு இட்டுச் செல்கின்றன? என்ற கவலை தோய்ந்த கேள்வி மற்றொன்று. ஊடகத் துறையில் உள்ள இளம் பத்திரிகையாளர்களது நிலையை, ஊடகத் துறையில் வேலை கிடைப்பதற்கும், அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதில் முன்னேறுவதற்கும் இளைஞர்களுக்குள்ள நெருக்கடிகளை, சிங், ராஷ்மி இருவரது நிலையும் உதாரணிக்கின்றன. 'சாதனை' புரியவில்லையெனில் இங்கு காணாமல் போய்விடுவோம் என்ற பதற்றம் அவர்களைப் பற்றியிருப்பதையும், அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நெருக்கடிக்கு அவர்கள் உள்ளாகியிருப்பதைப் பற்றியும் சிலர் பேசுகிறார்கள்.
காயங்களும் நியாயங்களும் எப்படி இருந்தாலும் சந்தை ஊடகங்களைத் மெல்ல மெல்லத் தின்னத் துவங்கியிருக்கிறது என்பதென்னவோ உண்மைதான்,
* எதையும் தாங்கும் இதயம் இருந்தால் சந்தையின் நிர்பந்தத்திற்குத் தன்னை விற்க வேண்டிய அவசியமில்லை என்பதை மக்கள் தொலைக்காட்சி நிரூபித்து வருகிறது. அண்மையில் அது தனது முதலாண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டும், திரைப்பட நறுக்குகளையும் திரை நட்சத்திரங்களையும் கொண்டு நிகழ்ச்சிகளை நிரப்பாமல், சுருக்கமாகச் சொன்னால், TRP ratingஐப் பொருட்படுத்தாமல், TAM அறிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அது நடைபோட்டிருக்கிறது. திரை நட்சத்திரங்களுக்குப் பதில், தமிழறிஞர் நன்னன், எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர்.சுப.வீரபாண்டியன், சமூகப் போராளி தியாகு போன்ற நட்சத்திரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தனித்தமிழார்வம், சமூக சிந்தனைகள், நாட்டார் கலைமரபு, ஆகியவைகள் கவனம் பெறுகின்றன. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மருத்துவர்கள் (quakery), அதிர்ஷ்டக்கல், நியூமராலாஜி, போன்ற தாயத்து விற்பவர்களைப் புறக்கணித்து வந்திருக்கிறது. அதன் முதலாண்டு விழாவில் பேசும் போது மருத்துவர். ராமதாஸ், விளம்பரங்களைக் கூட சில நெறிமுறைகளுக்குட்பட்டு ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார். பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை ஏற்கப் போவதில்லை என்று சொன்னார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சுருக்கமாகச் சொன்னால் இலக்கியச் சிற்றேடுகளுக்குரிய தனித் தன்மையோடும், அந்தத் தனித்தன்மையின் காரணமாக ஏற்படும் பெருமித்த்தோடும், பிடிவாதத்துடனும், மக்கள் தொலைக்காட்சி இயங்கி வருகிறது. தமிழின் முதல் niche channel! DTH போன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியமாகிவிட்ட இன்று, போதுமான சந்தாதாரர்கள் கிடைத்துவிட்டால் அது தொடர்ந்து இந்த சிறுபத்திரிகை குணங்களோடு நீடிக்க முடியும். ஆனால் சிறுபத்திரிகைகள் அரசியல் இலக்குகளை எட்ட உதவாது. அவை அரசியல் கருவிகள் இல்லை (It is not a political instrument) பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்த முரண்பாட்டில் உடன்பாடு உண்டா என்பது பொறுத்திருந்துதான் காண வேண்டிய ஒன்று.
உண்ணாநிலை (உண்ணா விரதம்) பரப்புரை (பிரசாரம்), தொடர்வண்டி (ரயில்) தானி (ஆட்டோ ) எனப் பல தமிழ்ச் சொற்களை அதன் செய்திகளில் கேட்டேன்.நல்ல முயற்சி. ஆனால் மக்கள் தமிழ்ச் சொற்களாகவே ஏற்றுக் கொண்டுவிட்ட, மக்கள் மொழியில் உள்ளவற்றை மாற்றும் முன் இருமுறை சிந்திக்கலாம் என்பது கருத்து. சிமிண்ட் என்பதை சிமிட்டி என்று மக்கள் செய்திகளில் சொல்கிறார்கள். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஏனெனில், கட்டடத் தொழிலாளர்கள் மத்தியில் வழக்கில் இருந்த சொல்தான் அது. ஆனால், தானி? உண்ணாவிரதம் உண்ணாநிலை ஆவதில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும். 'விரதம்' என்ற சொல்லுக்குப் பின்னுள்ள உணர்வுகள் 'நிலை'யில் வெளிப்படவில்லை. ஒர் இலக்கினை அடைய வேண்டித் தன் சுகங்களைப் புற்ந்தள்ளித் தன்னை வருத்திக் கொள்வது என்பது விரதம் என்ற சொல் பொதிந்து வைத்திருக்கும் பொருள். நிலை என்பது ஒரு நிலைமையை (Status)ஐக் குறிப்பது. ஒருவர் சாப்பிடாமல் இருப்பதற்கு, அதாவது உண்ணாத நிலையில் இருப்பதற்கு, நிறையக் காரணங்கள் இருக்கலாம். வறுமை காரணமாக இருக்கலாம். வயிற்று வலி காரணமாக இருக்கலாம். உணவு கிடைக்காதது காரணமாக இருக்கலாம். கிடைத்த உணவு தரமற்றதாக, ருசியற்றதாக, தனக்குப் பிடித்தமானதாக இல்லாது இருக்கலாம். இவையெல்லாம் 'விரதங்களாக' அதாவத் தற்காலிகத் தவங்களாகிவிடாது. நமது பெண்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஏதோ வேண்டுதல்களுக்காக விரதம் இருக்கிறார்கள். அவை உண்ணாநிலைகளாக ஆகி விடாது. ஏனெனில் அதில் 'போராட்டம்' ஏதுமில்லை.
ஆனால் இவையெல்லாம் சின்ன சின்ன குறைகள். சரிப்படுத்திக் கொள்ளக் கூடிய குறைகள். நோக்கம் பெரிது. அது பாராட்டிற்குரியது.. மக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

புதிய்பார்வை இதழில் நான் எழுதிவரும் பத்தி- நனைக்க மறந்த நதி-க்காக எழுதியது

Wednesday, August 15, 2007

அறுபதாண்டு சுதந்திரம்: அடிப்படையான ஓர் கேள்வி

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டுவந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற கோணத்தில் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் ஆட்சியில் மக்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு என்ற கோணத்தில் பார்த்தால், 1992க்கு முன்வரை, இந்தியா தனது ஜனநாயகத்தைக் குறித்துப் பெருமை கொள்ள முடியாது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை என்பது 80 கோடிக்கு அருகில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்களில் இருந்த இடங்கள் இவை எல்லாமுமாகச் சேர்ந்து மக்களால் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாது. அதாவது 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெறும் 5000 பேர். அதாவது 0.000625 சதவீதம்!

இந்திம மக்கள் ஆட்சிகளின் மீதும் அரசியலிம் மீதும் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதற்கு, இந்திய ஜனநாயகம் இப்படி கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்ததும் ஒரு காரணம்.

கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.அது மட்டுமல்ல, அந்த அமைப்புகளில் முன்றிலொரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவும், தலித்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படவும் அது வகை செய்தது.இவை ஏதோ கருணையின் பேரில அளிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமையாக அளிக்கப்பட்டன. அதாவது இவற்றை இன்னொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்தான் மாற்றவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பானமை வேண்டும்.

இந்தத் திருத்தத்தின் காரணமாக, சுமார் 30லட்சத்திற்கும் அதிகமாக பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவற்றில் 10 லட்சம் பேருக்கு மேல் பெண்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் தலித்துகள்.
நெடுங்காலமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, ஓரம் கட்டப்படிருந்த மனிதர்களை ஆளும் பொறுப்புக்களுக்கு (governance) சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு அரை நூற்றாண்டு காலமாகியது. கிராம சுயராஜ்யமே பூரண சுயராஜ்யம் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி பலமுறை பேசிவந்திருந்த போதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வரையபட்டபோது கிராம அளவிலான பஞ்சாயத்துக்கள் பற்றி, அந்த வரைவில் ஏதும் குறிப்பிடபடவில்லை. அதைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பிரசாத் டாக்டர்.அம்பேத்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஓர் விவாதம் எழுந்தது.காந்தியவாதியான கே. சந்தானம் ஒரு வரைவுத் திருத்தத்தை முன் மொழிந்தார். அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து பற்றிய கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றது. வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்குக் கிடையாது. உதாரணம்:மதுவிலக்குஇந்த நிலையை 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாற்றியது. ஆனால் அதை நிறைவேற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவரே பிரதமராக இருந்த போது 1984ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். ஆனால் 64வது சட்டத்திருத்தம் என்றழைக்கப்பட்ட அது, மாநிலங்களவையில் அந்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. அப்போது ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
ராஜீவ் மறைவுக்குப் பின் நரசிம்மராவ் அரசு மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. அயோத்தி பிரசினை காரணமாக ஏற்பட்டிருந்த சந்தடியில் அதிக விவாதமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுடையது. ஒவ்வொரு மாநிலமும் அதை நடைமுறைப்படுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை - உறுதி செய்யும் சட்டமாக, Conformatory legislation- இயற்ற வேண்டும். இந்தியாவில் கடைசியாக அந்தச் சட்டத்தை இயற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், அதிகாரப் பரவல் ஏற்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த திராவிட இயக்க அரசுகள், தங்களிடமிருந்த அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டின.

ஆனால் இது திராவிடக் கட்சிகளின் போக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பீகாரில் லாலு பிரசாத் அரசு இருந்த போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமலேயே ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் ஆளும் அசாமில், ஊராட்சிகளின் பதவிக்காலமான ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, மாநில அரசு, ஓர் அரசாணையின் மூலம் ஊராட்சியின் அதிகாரங்களை அதிகாரிகள் வசம் மாற்றிவிட்டு, தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, குவாஹாத்தியில், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்புக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். பின் கூட்டாக ஊராட்சித் தேர்தல்களை நடத்தக் கோரி ஒரு மனு தயாரித்தோம். அதை முதல்வரை சந்தித்து அளிப்பதற்காக நேரம் கேட்டோம். முதல்வர் அலுவலகம் அவரை சந்திப்பது கடினம், மனுவை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவரிடம் சேர்த்துவிடுவதாகத் தெரிவித்தது. எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் மறுநாள்,
எங்கள கருத்துக்களை முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட பின், ( http://www.assamtribune.com/scripts/details.asp?id=apr1207/at01)
முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்கிடையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். நீதிமன்றத் தலையீட்டின் பேரில் அக்டோ பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவாகியிருக்கிறது. அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

காஷ்மீரில் நிலமை அசாமின் நிலைமைக்கு சற்றும் குறைந்ததல்ல. அங்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.நான் மே மாதம் ஸ்ரீநகர் சென்று முதல்வரைத் தவிர எல்லா அரசியல்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், ஆட்சியில் பங்கு வகிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) நிறுவனரும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான, முப்தி முகமது சயீத்தையும் சந்தித்து, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வாதிட்டேன். பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. மீண்டும் ஜூலை மாதம் 24ம் தேதி ஸ்ரீநகர் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தேன்.கிரேட்டர் காஷ்மீர் போன்ற செல்வாக்குள்ள ஆங்கில நாளேடுகளும் உருது ஏடுகளும் என் பேட்டியை பெரிய அளவில் பிரசுரித்திருக்கின்றன. (http://www.greaterkashmir.com/full_story.asp?Date=25_7_2007&ItemID=40&cat=21)
ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரும்படி கேட்கவில்லை, அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளைப் பெறத்தான் இத்தனை போராட்டம்.

அன்று மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியது. இன்று ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது கட்சியின் அரசுகளே தயங்குகின்றன.

மக்கள் ஜனநாயகம் பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில், சிங்கூர் நந்திகிராம் ஆகிய இரண்டு இடங்களிலுமே, அங்கு அமைக்கப்படும் டாடா தொழிற்சாலைகள் பற்றி அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு ஒப்புதல் ஏதும் பெறப்படவில்லை.இது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உருதி மொழிகளுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் 243G பிரிவு, மூன்று நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், தங்கள் பகுதியின் 'பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்குமான' திட்டங்களை வகுக்க வேண்டும் என அதிகாரமளிக்கிறது. தங்கள் பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதில் ப்ஞ்சாயத்துக்களுக்கான உரிமையை அங்கீரிக்கும் பிரிவு இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிராமசபைக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்துத் திட்டமிடும் உரிமை உண்டு. மேற்கு வங்கத்தில் இயற்றப்பட்டுள்ள பஞ்சாயத்துக்கள் சட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், வார்டுகள் தோறும் அங்குள்ள வாக்காளர்களைக் கொண்டு கிராம சன்சாத் என்ற சபைகளை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை உருவாக்கக் கணிசமான அதிகாரங்களை அளித்துள்ளது. இத்த்னைக்குப் பிறகும், மாநில அரசு, பஞ்சாயத்துக்களிடமோ, மக்கள் அங்கம் வகிக்கும் கிராமசபைகளிடமோ கலந்து விவாதிக்காமல், தன்னிச்சையாக அங்கு தொழிற்சாலைகளைத் திணிக்க முற்பட்டது.

கர்நாடகத்தில் ஆளும் ஜனதா-பாஜக கூட்டணி அரசு, அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பஞ்சாயத்து அமைப்பில் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டப் பிரிவுகளைத் தூக்கி எறியும் விதமாக அண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் நல்லகாலமாக, ஆளுநர் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய அடித்தள ஜனநாயகம், அறுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?

ஜனநாயகத்தின் ஒர் அம்சமான தேர்தலில் (ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல) முக்கியப்பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவை ஜனநாயகத்தை தங்கள் வசதிப்படி பயன்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே இதற்கு சாட்சி. நேற்று எதிர்கட்சியாக இருந்த போது நாள்தோறும் வெளி நடப்புச் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சி. நேற்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்ட்சியாக மாறியதும், அவர்களும் அவ்வப்போது வெளிநடப்புச் செய்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்: சட்டசபையில் பேச அனுமது மறுக்கப்படுகிறது.நேற்று எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் சட்டமன்றத்திற்குள் முக்கிய விவாதங்களின் போது கூட வந்ததில்லை.இன்றும் அதே நிலைதான். ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆட்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் மாறவில்லை.

சட்டமன்றத்திற்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் முழுக்க முழுக்க அங்கு பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தது. அந்தக் கடமையை அரசியல் கட்சிகள் எவ்விதம் நிறைவேற்றுகின்றன? சட்டமன்றத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் கடமை தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. அதை உற்சாகத்தோடும், கடமை தவறாமலும் அவர்கள் செய்துவருகிறார்கள்.

அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியும் டை ஆக்சைட் ஆலை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு அதை ஓர் உயர் நிலைக் குழு விசாரிக்கும், விசாரணை செய்தியாளர்கள் முன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. வரவேற்க வேண்டிய, ஜனநாயக ரீதியில் ஆன நடைமுறை. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது சென்னை நகரம் வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. அதை விவாதிப்ப்பதற்கான உள்ளரங்கக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருவாரங்களுக்குப் பின் நடந்த கூட்டம், "வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா நாளிதழ்களும் படத்துடன், சம்பவ இடத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன.அதையே முதல் நிலை ஆதாரமாகக் கொண்டு, அரசு ஓர் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை மக்கள் பங்கேற்கும் வகையில், ஊடகங்கள் முன் நடைபெற வேண்டும்" என்ற என் கருத்தை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டது. மறுநாள் முரசொலியில் முதல்வர் என்னைத் தனிப்பட விமர்சித்து எழுதினார். அந்தத் தீர்மானத்தை அரசு உதாசீனம் செய்தது.

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியது. அதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டியது.கூட்டுறவுத் தேர்தலில் வன்முறைகள் நடந்தன. அவற்றை கூட்டணிக் கட்சிகள் கண்டித்தன. ஆனால் அப்போதெல்லாம் அதைக் குறித்து விசாரிக்க முன்வராத திமுக அரசு, டாடா ஆலை குறித்து கருத்தாய்வு நடத்த முன் வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றன.

"கலைஞர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால், ஒரு தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ, அதிகபட்சம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ முடிந்து போயிருப்பார். அதைத் தாண்டி அவரால் வளர்ந்திருக்க முடியாது" என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் ஒருமுறை சொன்னேன். அவர் அதிர்ந்து போய் "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?" என்றார். " உங்கள் கட்சியில் உயர்பத்விகளில் இருப்பவர்கள் யார்? யோசித்துப் பாருங்கள். ஒன்று அவர் மெத்தப் படித்தவராக, அயல்நாடுகளில் சென்று படித்தவராக இருக்க வேண்டும். அல்லது நிறைய நிலபுலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும். அல்லது பஸ் டிரான்ஸ்போர்ட், நூற்பாலை, ஏற்றுமதித் தொழில், செய்பவர்களாகவோ, ஊரில் நான்கைந்து கடைகள் வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்/ கலைஞரிடம் இவை ஏதும் கிடையாது. அதுவும் தவிர செயல்திறனும் மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள ஒருவரை உங்கள் கட்சியில் வளரவிடமாட்டீர்கள். உங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை அவ்வப்போது சமன் செய்கிற முயற்சியில் ஆர்வமும் கமிட்மெண்டும் உள்ள ஒருதொண்டரை முடக்கி வைக்கத் தயங்க மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சித் தேர்தல்களை நடத்துவது அல்ல. கோஷ்டிகளை சமனப்படுத்துவது."

அண்ணா தலைமையில் திமுக இருந்த காலத்தில், காங்கிரசிற்கும் திமுகவிர்கும் இடையே இருந்த பெரும் வித்தியாசம் இந்த உள்கட்சி ஜனநாயகம்தான். திமுகவின் கிளைக்கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை உள்கட்சித் தேர்தல்கள், கட்சி மேலிடத்தின் தலையீடு இல்லாமல் நடந்த காலம் ஒன்றுண்டு. திமுக இளைஞர்களை ஈர்த்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்று திமுக உள்கட்சி ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.இப்போது அங்கு ஜனநாயகம் நிர்வகிக்கப்படுகிறது.யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற முன்தீர்மானித்த முடிவின்படி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது குலத்தில் பிறப்பதனாலேயே ஒருவருக்கு சில உரிமைகளும் சலுகைகளும் உண்டு, தகுதிகள் உள்ள ஒருவர் வேறு குலத்தில் பிறந்திருந்தால், அவருக்குத் தகுதி இருந்தாலும் அந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது, என்ற கருத்தாக்கம்தான் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் அந்தக் கருத்து அநீதியானது என்ற நோக்கில் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுட்சியுடன் போராடி வளர்ந்தது திமுக. ஆனால் இன்று, ஒருவர் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதி ஒன்றே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய அமைச்சாரகவோ போதுமானது என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது. அதாவது, பகுத்தறிவு இயக்கமாக அரும்பிய திமுக இன்று வர்ணாசிரம தர்மத்தை வேறு ஒரு வடிவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

உட்கட்சி ஜனநாயக விஷயத்தில், திமுகவை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை. அநேகமாக இன்று எல்லா அரசியல்கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. இன்று காங்கிரசிலோ, திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ ஒருவர் உயர் பதவிக்கு வர வேண்டுமானால், கட்சித் தலைமைக்கு மட்டுமல்ல, கட்சித் தலைமயின் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருக்கிறது. அதன் தலைமையை அதுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கலந்து பேசி, கருத்தொருமித்த முடிவுன் அடிப்படையில் கட்சிப்பதவிகளைத் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கும் போது சீனியாரிட்டிக்கு அதிக மதிப்பு.

இப்படிப்பட்ட கட்சிகளிடமும், தலைவர்களிடமும்தான் நாம் ஜனநாயகத்தை விட்டு வைத்திருக்கிறோம்!

ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே, மக்கள் ஆள்கையில் பங்கேற்பது. (participation in governance).பாரதியின் வார்த்தைகளில் கூறினால். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. ஆனால் அதை நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டோ ம். அதை மீட்டெடுக்காத வரையில் இந்திய ஜனநாயகம் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, தயங்கித் தயங்கியே நகர்ந்து செல்லும்.

(2007ம் ஆண்டு சுதந்திர நாளன்று வெளியாகும் புதிய பார்வை இதழுக்காக எழுதியது. இதன் குறுகிய ஆங்கில வடிவத்தை (இந்தியன் எகஸ்பிரசிற்காக எழுதப்பட்டது) எனது yahoo 360 Blogல் காணலாம் http://360.yahoo.com/maalan_narayanan )

Saturday, August 11, 2007

சொன்னது என்ன?

இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டு
போன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப் பற்றி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நான் எழுதிய
பதிவுகளின் பட்டியல் அருகில் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: பதிவர் பட்டறையில் நான் என்ன பேசினேன் என்பதைச் செவி வழிச் செய்தியாக அறிந்தவர்கள், அதைப் பற்றிய ஒலிப்பதிவு வெளியிடப்படும்வரை காத்திருந்து நான் பேசியவையாகக் கேள்விப்பட்டவை சரிதானா, அவை எந்த வார்த்தைகளில் எந்தச் சூழலில் (context) என்பவற்றை எல்லாம் உறுதி செய்து கொள்ளாமல், கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் நோக்கம் உண்மையை அறிந்து கொள்வதல்ல, என்னை வசைபாடுவதுதான், நான் என்ன பதில் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியதால், நேரத்தை இதில் செலவிட வேண்டுமா என எண்ணினேன்.
மூன்றாவதாக சில தமிழ், ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு நான் சுதந்திர தின மலருக்காக் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கான கெடு
நெருங்கியிருந்தது.
நான்காவதாக, நான் 23ம் தேதி தில்லியை விட்டுக் கிளம்பியவன், ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின் 6ம் தேதிதான் தில்லி
திரும்பியிருந்ததால் இங்கு அலுவலகப் பணிகள் குவிந்து கிடந்தன. (தமிழில் எழுதும் பல பதிவர்கள் அவர்களது பல் வேலைகளுக்கு நடுவே
கிடைக்கும் சிறிய அவகாசத்தில்தான் பதிவுகள் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது)
ஆனால் பட்டறையை ஏற்பாடு செய்தவர்களே நான் ஏதோ என்னுடைய 'நுண் அரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக்
கொண்டுவிட்டதாக' வலை நன்நடத்தையைப் பற்றிப் பேசாமல் ' ஈழத்தமிழரின் நன்நடத்தையைப் பற்றிப்' பேசிவிட்டதாக ஒருதோற்றத்தை ஏற்படுதத
முற்படும் போது இனியும் மெளனமாக இருப்பது சரியல்ல என்று கருதினேன். மெளன்ம் எப்போதும் சம்மதத்தைக் குறிப்பதில்லை, மெளனம்
கோபத்தின் வெளிப்பாடாக, வருத்தத்தின் வெளிப்பாடகக் கூட இருக்கலாம் என்றாலும் மெளன்ம் சம்மதம் என்றே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது
என்பதையும் நானறிவேன். எனவேதான் இந்தப் பதிவு.
இங்கே நான் பதிவர் பட்டறையில் என்ன பேசினேன் என்பதை verbatium எழுதப்போவதில்லை. பத்ரியின் பதிவில் என் முழுப் பேச்சும்
(விவாதங்களுக்கான பதில்களோடு) ஒலி வடிவில் இருக்கிறது.(http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html) ஒலிப்பதிவு சுமார்
நாற்பது நிமிடங்கள் உள்ளது. தம்ழகத்தின் பல இடங்களில் இப்போதும் தொலைத் தொடர்பு பிரசினை இருக்கிறது; அங்கு இதைத் தரவிறக்கம் செய்து
படிப்பதற்கு இணைப்பின் வேகம் காரணமாக, நிறையப் பொறுமை வேண்டும்.பலர் அலுவலக் கணினியைப் பயன்படுத்துபவர்கலாகவோ, இணையவிடுதிகளளப் பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்களுக்கும், ஒலி தெளிவாக இல்லை எனக் கருதக்கூடியவர்களுக்கும், விவாதிப்பவர்களின் தெளிவிற்காகவும், எதிர்காலத்தில் திரிப்புகளுக்கு இடமளிக்காதிருக்கவும், ஏற்பாட்டாளர்களின் பதிவைப் படிப்பவர்களுக்கு நான் நாற்பது நிமிடமும் நான் அரசியல் பேசினேன் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும், எனவே என்ன் பேசினேன் என்பதை தெரியப்படுத்தவும் பேச்சின் முக்கிய அமசங்களை இங்கே தர முயல்கிறேன்.
அதற்கு முன்பு சில எண்ணங்கள், விளக்கங்கள்:
1. பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை.முழுநேரமும் என்னால் இருக்க முடியுமா என்ற
சந்தேகத்தைக் கூடப் பதிந்து கொள்ளும் போதே தெரிவித்திருந்தேன்.பட்டறைக்கு முந்திய இரவு விக்கி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
அழைத்தை அடுத்தே நான் அங்கு பேசினேன். எனவே ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை, நுண்ணரசியல்
விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த
வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்.
2.பட்டறை இரண்டு பிரிவுகளாக நடக்கிறது , ஒன்று பதிவர்களுக்காக், மற்றொன்று பதிவு துவக்க விரும்புபவர்களுக்காக் என்ற எண்ணம் பட்டறையைப்
பற்றி அது நடக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த இணையப்பகத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அரங்கிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பது
போல் தோன்றியது.ஒரு கட்டத்தில் இராமகி அய்யா, அங்கு வந்திருந்த, பதிவு துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த ஆனால் பதிவைப்பற்றி ஏதும்
தெரியாத, ஒருவரிடம் 'அய்யா நீங்கள் மேலே (பதிவு துவக்க விரும்பியவர்களுக்கான அரங்கு) போவது நல்லது என்று சொன்னது என் எண்ணத்தை
உறுதி செய்வதாக அமைந்த்து. நான் அமர்ந்திருந்த அரங்கில், விக்கி, பத்ரி, சிவகுமார், செல்லா, தேசிகன், இராமகி, காசி, வெங்கடேஷ், ஆசீப் மீரான்,
தருமி, டெல்பின் விக்டோரியா, திருஞானம், லிவிங் ஸ்மைல் வித்யா, அண்ணா கண்ணன், வளர்மதி, அருணா ஸ்ரீநிவாசன், டோண்டு,சட்டம் குறித்து
எழுதும் சுந்தரராஜன் -வெற்றிச் செல்வன், எஸ்.கே, மீனாக்ஸ்,ரஜனி ராம்கி, க்ருபாஷங்கர்,லக்கிலுக் எனப் பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது. அறியாத
முகங்ளும் இருந்தன. சரி அவர்கள் எனக்குத் தெரியாத பதிவர்களாக இருக்கும் என்ரு நினைத்துக் கொண்டேன். எனவே நான் பதிவர்களிடம்தான்
பேசப்போகிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், என்ற எண்ணத்திலேயே பேசினேன்.
3. ஆரம்பத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன மாலன், பின் அரசியல் பேசிவிட்டார் என்பதைப் போல ஒரு கருத்து அமைப்பாளர்
சிவக்குமாரின் பதிவில் தொனிக்கிறது. அமைப்பளர்களின் ஒட்டுமொத்த உணர்வைத் தெரிவிப்பதாகக் ரவிசங்கர் கூறும் பதிவு “அரசியல் கொள்கை
விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என நான் சொன்னதாகத் தெரிவிக்கிறது. அரசியல் என்பது அரசியல் கொள்கையாக மாற்றம்
கண்டிருக்கிறது. உண்மையில் நான் அரசியல் பேச வேண்டாம் எனச் சொல்லவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை, மென் பொருட்களை அரசே
இலவசமாக வழங்க வேண்டும், கணினியில் தமிழை உள்ளிடும் வசதியை default ஆக அமைக்க உத்திரவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை
சிலர் எழுப்பி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய போது, நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதை விட, பதிவுகள்
பற்றிப் பேசலாம், Policy விஷயங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாமே என்று ராமகி அய்யா தெரிவித்த கருத்தை வழி மொழிந்து பேசினேன்.Policy
என்பது public policy .ஆனால் அரசின் கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுவது அரசியல் என அமைப்பாளர்களாலேயே திரிக்கப்படுவது
வருத்தத்திற்குரியது.
4.இது போன்ற ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன் கில்லியின் விருந்தினர் பக்கத்தில் கூட அந்த
விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தேன். " ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப்
பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007
டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக
(institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு
இல்லை" (http://gilli.in/tamil-blogs-gilli-guest-column-by-maalan/) இதை எழுதும் போது 'நான் சொல்லித்தான் இந்த பட்டறை நடந்தது' என்று நான்
சொன்னதாக நாளை யாரேனும் திரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன். அல்லது நான் பங்களிக்காத மாநாட்டிற்கு உரிமை கொண்டாடினேன் என்றும் சிலர்
புறணி பேசக்கூடும். எனவே ஒரு disclaimer: நான் இந்த பட்டறையின் அமைப்புப்பணியிலோ, நிரல்கள் தயாரிப்பிலோ எந்த வகையிலும்
பங்கேற்கவில்லை. ஒரு சிறிய் நன்கொடையைத் தவிர என் பங்களிப்பு ஏதுமில்லை. அதுவும் கூட பட்டறையின் இணையப்பக்கத்தில்
அமைப்பாளர்களால் பதிவு செய்ய்ப்படவில்லை. அதைக் குறித்து எனக்கு கவலையும் இல்லை)
எனவே எனக்கு பட்டறை குறித்து ஓர் இயல்பான ஆர்வம் இருந்தது. அதற்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தது. ஆனால்
பணிநிமித்தம் தில்லி திரும்ப வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அந்தப் பணியை என் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சற்று ஒத்தி
வைக்கச் சொல்லிவிட்டு (அதனால் பலருக்கு அசெள்கர்யம் ஏற்பட்டிருக்கும்) பட்டறையில் கலந்து கொண்டேன் (இதை ஏதோ என்னைப் பற்றிய ஒர்
உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இப்போது சொல்லவில்லை. பட்டறைக்கு வந்திருந்த சிலரிடம் அங்கேயே பகிர்ந்து கொண்டிருந்தேன்)
ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த முடிவிற்காக வருத்தமே மேலோங்குகிறது.கடைசி நிமிடத்தில் என்னைப் பேச் அழைத்தும்
அமைப்பாளர்கள்,மீதிருந்த மரியாதையின் காரண்மாக, தட்டிக் கழிக்காமல் ஒப்புக் கொண்ட எனக்கு அவர்கள் நன்றி சொல்லவிட்டாலும் போகிறது, என்
பேச்சைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்களே அந்த மனங்களுக்கு நன்றி.
இனி என் பேச்சின் சாரம்: 1. நன்னடத்தை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. அது ஏதோ பள்ளிப்படிப்பு முடிந்து போகும் போது தலைமையாசிரியர் கொடுக்கும் contact
certificate போல தொனிக்கிறது. சில நெறிகள், சுய ஒழுங்குகள் என்று வைத்துக் கொள்ளலாம்
2. மற்றெந்த ஊடகங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வலைப்பதிவுகளுக்கு உண்டு.வலைப்பதிவுகளின் மிகப் பெரிய கொடை, தனித் தன்மை, ஒரு
விஷயத்தை வெளியிட்ட உடனே பலர் எதிர்வினையாற்றுவது. டைடானியம் டை ஆக்ஸ்டை தொழிற்சாலை குறித்து தினமணி ஒரு கட்டுரை
வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து மாற்றிக் கருத்துடைய ஒருவர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதமும்
பிரசுரம் ஆகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஒருவர் மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பி கடிதம் எழுதினால் அதற்குள்
நாட்கள் கடந்திருக்குமாதலால் அது வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பலர் ஒரே நேரத்தில் பலருடன் எதிர்வினையாற்ற வாய்ப்பளிக்கும் ஒரே
ஊடகம் வலைபதிவுகள்தான். இந்த வாய்ப்பு சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ, இணைய இதழ்களிலோ கிடையாது. ((Many to Many
communication)
3.வலைப்பதிவுகள் ஏன் வேண்டும் என்று சமூகக் கோணத்தில் பார்த்தால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கருத்தை,
அபிப்பிராயத்தை வெளியிட அது உதவுகிறது. ஒரு கருத்து என்பதே ஒன்றின் மீதான Critical Judgemenதான் என்பதால், ஒரு சமூகத்தில் Critical
Judgement அதிகமாகும் போது, ஆளுகை (Governance) கலாசாரம் தொடர்பான விஷயங்களை விவாதத்திற்குள் கொண்டு வர முடியும். அது
நிலையை மாற்ற உதவும். அதனால் வலைப்பதிவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு ஊடகம்.
4.நாம் வாழ்கிற காலத்தில் ஒரு கருத்துதான் சரி,லொரு நிலைதான் சரி என்று முடிவளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது.This is Black, This is
white என்று முடிவுக்கு வரமுடியாமல் எங்கும் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. பல்வேறு பரிமாணங்களப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த
ஊடகத்தில் கிடைக்கிறது.
5 ஆனால் வலைப்பதிவுகள் குறித்து நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன
6.வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் யார் என்று பார்த்தால், இப்படி ஒரு தொழில் நுட்பம் வந்திருக்கிறது, அதில் என் மொழி இடம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொண்டவர்கள், மற்ற் ஊடகளில் ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நான் எழுதியதைச் சிதைக்கிறார், சுருக்குகிறார், தணிக்கை
செய்கிறார் அதை ஏற்க முடியாது என்று கருதுபவர்கள்,ஒரு குறிப்பிட்ட விஷயம், நிலை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள், உலகம்
முழுதும் தேடல் வாய்ப்புக் கொண்ட ஒருசாதனம் அதனால் இது பதிந்து வைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் வலைபதிவுகளை
எழுதுகிறார்கள்.தமிழ் வலைப்பதிவர்களின் சராசரி வயது என்று பார்த்தால்,- சிவஞானம்ஜி, ராமகி அய்யா, என்னையும் சேர்த்து, சில வயதில் மூத்த
பதிவர்கள் இருந்தாலும் கூட- 25-30 இருக்கலாம். சமூகத்தில் பெரும்பாலும் அந்தத் தலைமுறையின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை.
ஆனால் அதற்கு வலைப்பதிவுகள் இடமளிகிறது என்பதால் அது வரவேற்று வலுப்படுத்தப்பட வேண்டிய ஊடகம்.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரசினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
9.வலைப்பதிவுகள் திரட்டப்படுவதின் காரணமாக சில பின்விளைவுகள், சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நாட்களில் எந்தப்பதிவிற்கு அதிகம்
பின்னூட்டங்கள் வருகிறதோ அது அதிகம் கவனிக்கப்படும் பதிவு என்று கருதப்பட்டது. உலகமே என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது, நான்
எழுதுவதற்கு உலகமே எதிர்வினையாற்றுகிறது என்று ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மனோபாவம் நிலவியது. அந்த பிரமை காரணமாக,
பின்னூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் வந்தது.
அன்று 50 பதிவுகள் இருந்தன, அநேகமாக ஒருவர் எல்லாப்பதிவுகளையும் படித்துவிடக்க்கூடிய நிலை இருந்தது, இன்று 2000 பதிவுகள். அதில் 1000
பேராவது எழுதுகிறார்கள்.இதில் தன்பதிவு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக அச்சுப் பத்திரிகைகளின் மலிவான உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால் வலைப்பதிவுகளின் இயல்புகளில், சாத்தியங்களில் திரிபுகள் ஏற்படுகின்றன.அதைக் குறித்து வலைப்பதிவர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.
11. யாருக்கு சுதந்திரம் அதிகமோ அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். எனவே யார் அதிகம் சுந்த்திரம் வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள்
அதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
12. மற்றவர் கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும் மனநிலையைப் பலர் அடையவில்லை. அது நம்மிடம் இல்லை. வலைப்பதிவுகள் அதை
உடைக்க முடியும் திறந்த மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். அப்படி இல்லை என்பதில் வருத்தம்.நாம் சில அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என் பதிவில் எழுதப்பட்டுள்ளவற்றிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க
மாட்டேன்.ஒரு தனிப்பட்ட நபரைத் தாக்கியோ, விமர்சித்தோஎழுதும் கருத்துக்களைநான் வெளியிட மாட்டேன் என்பது போன்ற ஒரு நெறி, சில சுய
ஒழுங்குகளை, ஏற்றுக் கொள்ளலாம். இது நன்னடத்தை அல்ல, விதி அல்ல, கட்டுப்பாடு அல்ல. ஒரு சமூகமாக நாம் இயங்கும் போது நாம்
மேற்கொள்ள வேண்டிய சில சுயக் கட்டுப்பாடுகள்.
இதுதான் நான் பேசியதின் சாரம். இதில் நான் எங்கும் எந்த ஒருவரையும் தனிப்பட விமர்சித்துப் பேசவில்லை. இதில் எதை நுண் அரசியல்
விளையாட்டு என அமைப்பாளர்கள் கருதுகிறார்கள்?
இதன் பின் விவாதங்கள் துவங்கின.
அரவிந்தன் முதல் கேள்வியைக் கேட்டார்:" Moderated Blogலேயே ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது.இந்த மனநிலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?" என்பது அவர் கேள்வி.
நான்:பின்னூட்டம் என்பது alcohol மாதிரி.சோர்வாக இருக்கும் போது உற்சாகம் தர உதவலாம். ஆனால் அதுவே அள்விற்கு மேல் போனால்
போதையாகி, ஒருவித halucination ஏற்பட்டு, எல்லாம் நல்லா இருக்கு என்ற செயற்கையான மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும். சுய ஒழுங்கு
இருந்தால் இதை மட்டுப்படுத்திவிடலாம்.
இந்த ஊடகத்தைப் பற்றி அல்ல, இன்னொரு ஊடகத்தைப் பற்றி என்று செல்வா அடுத்த கேள்வியை எழுப்பினார்: "ஐரோப்பிய சினிமா போல்
தமிழிலிருந்து தணிக்கையைத் தூக்கினா என்ன ஆகும்? இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால், நெல்லை எடுத்துக் கொண்டு
அதிலகொண்ஜம் உமியைக் கலந்து, அரிசியையும் கலக்கிறோம்.சென்சார்ல எந்த அளவிற்கு இருந்தால் கட் பண்ணக் கூடாதோ அந்த அளவிர்குக்
காண்பித்துக் கொண்டிருக்கோம். ஐரோப்பா மாதிரி சென்சாரையே தூக்கிட்டா என்ன ஆகும்? ஒரு பக்கம் frivolus movie போய்க்கிட்டிருக்கும். இன்னொரு
பக்கம் முன்னுதாரணப் படங்கள் வருமா, வராதா? இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது ஒரு ரிஸ்க்தான். ஒரு சமூகத்தில
கோவிலும் சாராயமும் இருக்கிற மாதிரி.அவங்க அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கலாம். Pluralistic Society ங்கிறதை இணையத்தில்தான்
பார்க்க முடிகிறது.அதை regularise பண்றதுங்கிறது ஒரு ரிஸ்க்"
நான்: நான் (கருத்தை) ரெகுலரைஸ் பண்ணுவதைப் பற்றிச் சொல்லவில்லை.உலகம் பூராவும் இன்று ஊடக்த்தொழில் எதை நோக்கிப் போகிறது
என்றால்.....முன்பெல்லாம் ஆனந்த விகடனில் ஒரு கிரைம் கதை, ஒரு சிறுகதை, ஒரு ஆன்மீகக் கட்டுரை, ஒரு அரசியல் கார்ட்டூன், இப்படி எல்லாம்
ஒரே இதழ்ல வரும்.இப்போது, த்னிமனிதனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நாணய விகடன், விவசாயத்திற்கு பசுமை விகடன், என்று ஒவ்வொரு
துறைக்கும் தனித் தனி இதழ்கள் வருகின்றன. இதை niche journalsனு சொல்வோம். வாச்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தொழில்நுட்பம் காரனமாக
cost of production குறைந்திருப்பதால் இது சாத்தியமாகிறது. ஈனையத்தின் மிகப் பெரிய வசதி எல்லாவற்றிற்கும் தனித் தனி தளம் உருவாக்கிட
முடியும். தமிழ் உலகம் என்று ஒரு மடலாடற்குழு இருந்தது. அதில் ஒருவர் ஆன்மீகம் பற்றித்தான், அதிலும் சைவ சித்தாந்தம் பற்றி மட்டுமே
எழுதுவார்.கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.அந்த contentஐக் கொடுக்கக் கூடியவர்கள் தங்களுக்கென்று சில
ஒழுங்குகளையும் வைத்துக் கொள்ள் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.
இந்தக் கூட்டத்தை 9:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் எல்லோரும் 8:30க்கு வந்து விட வேண்டும் என்று
சொல்கிறீர்கள். அப்போது அந்த இடட்தில் ஒரு norm விதிக்கிறீர்கள். இது கட்டற்ற கூட்டம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும்
வரலாம் என்றால் ஒருவர் பனிரெண்டு மணிக்கு வந்து முதலில் இருந்து ஆரம்பித்து தமிழிணைய வரலாறு சொல்லுங்கனு கேட்கிறார். ஒரு குழுவாக
செயலபடும் போது சில norms, better performance of the groupக்காக தேவைப்படுகிறது.
மாலனின் கருத்தை வழி மொழிந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார் வளர்மதி.Internet Explosionனு சொல்வாங்க. ஆனால் அது Explosion அல்ல,
implosion. Implosionக்கு உதாரணம் சூரியன். அது உள்ளுக்குள்ளேயே வெடிக்கும். அதன் side effect ஆகத்தான் energy radiate ஆகிறது. அதே மாதிரி
இணையம். கட்டற்ற மீடியமாக அது இருந்தாலும், அது அதனுடைய effect தானே தவிர essence அல்ல.
அதில் direct interaction கிடையாது. Physical interaction இல்ல்ங்கிற்துனால, emotional ஆ interacட் பண்றது இல்லை. நேரில் ஒருவர் நீங்க வாங்க
என்ரு சொன்னால் நானும் பதிலுக்கு வாங்க என்று சொல்வேன்.நீங்க ஏய்னு சொன்னா நானும் ஏய்னு சொல்வேன். எழுத்து மூலமா interact செய்யும்
போது ஏய்னு சொன்னா கேள்வி வருது. என்ன தப்பா சொல்லிட்டோம் ஏன் இவர் ஏய்னு சொல்றார்னு கேள்வி தோணுது.அதனால ஒரு time lag
ஏற்படுது.இந்த time lag ஏ beat பண்ணனும், அதுinteractionக்கு இருக்கக் கூடிய Basic need. அந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளணும். அது
கட்டுப்பாடு இல்லை.தோட்டத்தில புல்லு வளர்க்க்றீங்க,. அதோட் களையும் வளருது.புல்லு வளரும்னா களையை எடுக்கணுமா வேண்டாமா?
நான்: தனிப்பதிவாக இருக்கும் வரைக்கும் பிரசினை இல்லை. பதிவுகள் ஒரு திரட்டியின் மூலம் திரட்டி வாச்கர்கள் முன் வைக்கப்படும் போது, திரட்டி
நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்பு வேண்டுமா, வேண்டாமா? Many to many communicationlல் வெவ்வேறு levelல் இருப்பவர்கள் interact செய்கிறார்கள்.
WTOவை அடுத்து 60 சட்டங்கள் நிறைவேறின. விவசாயிகளை பாதிக்கக் கூடிய சட்டங்கள். Science based acts ஆனால் விவசாயிகளைப் பாதிக்கக்
கூடியவை. Seeds act என்று ஒன்று. அதைப்போல ஒரு draconian act கிடையாது.இந்தச் சட்டங்கள் பற்றி சில வக்கீல்கள் பதிவு எழுதுகிறார்கள்.
அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது. 'ஏன்யா இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்க, ரஜனி, ஸ்ரேயா பற்றி எழுதினாலும் நாலு பேர் படிப்பாங்க"
என்று. இரண்டு levelல் இருப்பவர்களிடையே communication, even ஆக இருக்க முடியாது. நீங்களே பின் நவீனத்துவம் பற்றி பதிவு எழுதுகிறீர்கள்.
பின் நவீனத்துவம் தெரிந்தவர்களுக்கு அது குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுகிறார்கள், பின் நவீனத்துவம்னா என்னவென்றே தெரியாத
ஒருவர் வந்து ஏன்யா இதெல்லாம் எழுதறனு பின்னூட்டம் போட்டால் அங்கே கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது? வலைப்பதிவுல எழுத வந்தவங்க
வலைப்பதிவை விட்டுப் போனதற்கு என்ன காரணம்? நம் கருத்துக்களை இங்கே வைக்க முடியாது, அதைப் புரிந்து கொள்ள் மாட்டார்கள், நாம ஏதோ
சுவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம், அதற்கு பேசாமல் இருக்கலாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு கருத்தை வைப்பதற்கு அச்சமோ, தயக்கமோ தோன்றுமானால் அந்த இடத்தில் சுதந்திரம் இல்லை. அச்சம் உள்ள இடத்தில் சுதந்திரம் இருக்க
முடியாது.என்ன நடக்கிறது? Sanctity என்பது எதற்கும் கிடையாது.எதுவுமே புனிதமானது அல்ல என்பது வலைப்பதிவுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
கோண்த்தில் அது நல்லது. ஆனால் இன்னொரு கோணத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கக் கூடிய் institutionsஐ - உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள்
அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?
யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார்
அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு
குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை
எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள்
போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில்
கொள்கிற உறவு.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை
முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு,
சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?
இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....
(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)
.

Monday, August 06, 2007

செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்


இன்றைய The New Indian Expressல் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி விரிவாக (முதல் பக்கத்திலேயே ) செய்திகள் சகபதிவர்களது புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கின்றன. 'மொக்கைப் பதிவு' 'கும்மிப் பதிவு' பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம், உள்குத்து எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

பட்டறையின் நிகழவுகள் குறித்தும், 71 வயதில் பட்டறையில் வந்து கலந்து கொண்டு பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நல்லபெருமாள் பற்றிய் செய்தியும் மூன்றாம் பக்கத்திற்குப் போய்விட்டது. (நல்ல பெருமாள் பற்றி அதிகம் பேர் எழுதவில்லை. அவர் பேசியது என் மனதைத் தொட்டது)

இணைப்புக்கள் இங்கே.

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

இதன் ஆங்கில வடிவததை என் யாஹூ பதிவில் வெளியிட்டிருக்கிறேன். அதன் முகவரி:
http://360.yahoo.com/maalan_narayanan)

அயலகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும், சென்னையிலேயே இருந்து எகஸ்பிரசை தவறவிட்டவர்களுக்கும், இந்த நிகழ்வின் பதிவுகளை எதிர்காலத்தை முன்னிட்டு சேமிக்கவிரும்புவர்களுக்கும், தங்கள் ஊரில் இது போன்ற பயிலரங்கு (பட்டறை என்பதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாமே?) நடத்த விரும்புவர்களுக்கு ஓர் உந்துதலாகவும் இந்த இணைப்புக்கள் உதவகூடும்.

Wednesday, August 01, 2007

ஒரு கோடிக் கருத்தம்மாக்கள்

"அடுத்து நீங்கள் காண இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது" என்ற முன்னெச்சரிக்கையுடன் தொலைக்காட்சி அந்தச் செய்தியை அளித்தது. காட்சிகள் அதிர வைப்பதாகத்தான் இருந்தன.

ஒரிசா மாநிலத்த்ல் உள்ள, நயாகர் என்ற கிராமத்தில் உள்ள, ஒரு பாழும் கிணற்றிலிருந்து அடுத்தடுத்து பாலித்தீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்தப் பாலீதீன் பைகளுக்குள் பிறந்த இளம் பெண் சிசுக்களின் அழுகிய உடலகள் பொதியப்பட்டிருந்தன. அப்படி 30 பாலீதீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்த சிசுக்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது.

ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!

பெண்சிசுக்கள் கொல்லப்படுகிற அவலம் ஏதோ ஒரிசாவில் மட்டும் நடைபெறுகிற சம்பவம் அல்ல. இது நடைபெறாத இந்திய மாநிலம் எதுவுமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், இந்தக் கருத்தம்மாக்கள் பிறந்த உடனேயோ, பிறக்கும் முன்பாகவே கூட, அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், நம் சினிமாக்கள் சொல்வது போல, வறுமை அல்ல! வளமான மாநிலங்களான பஞ்சாபிலும் ?ரியானாவிலும்தான், செலக்டிவ் அபார்ஷன் எனச் சொல்லப்படும், பிறக்கப்போவது பெண்குழந்தை எனத் தெரிந்துகொண்டு அதைக் கருச்சிதைவு செய்யும் வழக்கம் அதிகம். ஹரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண்களுக்கு, 541 பெண்கள் என்ற விகிதத்தில்தான் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால் ஏழைக்குடும்பங்களில் 1000 ஆண்களூக்கு 1567 என்ற அளவில் ஆண் பெண் விகிதம் இருக்கிறது.

இன்னொரு வளமான மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் என்பதாக ஆண்: பெண் விகிதம் அபாய அளவைத் தொட்டிருக்கிறது. அதிலும் அந்த மாநிலத்தின் செழிப்பான பகுதிகளான கிருஷ்ணா, சித்தூர், ரெங்காரெட்டி மாவட்டங்களில் இந்த வழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலேயே கம்மம் மாவட்டத்தில்தான் மிக அதிக அளவில் 93 ஸ்கேனிங் மையங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் பகுதிகள், வளமான, பெத்தபள்ளி, ஜகதியால், கோதாவரிகாணி ஆகியவைதான்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவில் ஆண்-பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்பதாக இருந்தது. ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் போது அது 927ஆக சரிந்திருக்கிறது. மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குக் காரணம் பெண்கள்பெண்சிசுக் கொலைகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெண் சிசுக் கொலைக்குக் காரணம் வெறும் வரதட்சிணைக் கொடுமை மட்டும் அல்ல.

ஆண் பெண் விகிதத்தில் ஏற்பட்டிருக்கிற கவலைதரும் சரிவு, இருபது ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது Ultra Sonography என்கிற பிறக்கும் முன்பே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை, நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடையே பிரபலமாகத் தொடங்கியதிலிருந்து, இந்த சரிவு விரைவுகாணத் தொடங்கியிருக்கிறது என ஊகிக்கமூடியும்.அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்திருக்கிறது. Pre-Natal Diagnostic Technique (Regulation and Prevention of Misuse) Act, 1994, Medical Termination of Pregnancy Act, 1971 என இரு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் நிலைமை சீரடைந்து விடவில்லை.

என்ன காரணம்? பல இருக்கலாம். ஆனால் படித்த நடுத்தர வர்க்கம் அறிவியலை, தனது சுயநலனை முன்னிட்டு. தார்மீக நெறிகளுக்கு முரணாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இந்த ஒரு கோடிப் பெண்சிசுக் கொலைகள் ஓர் உதாரணம். அறிவியலின் கொடைகளை இது போல படித்த வர்க்கம் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்கிறவர்கள், நாற்சந்திகளில் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, ஆளே இல்லாவிட்டால் கூட வண்டியை நிறுத்தி சிகனல் மாறுவதற்குக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்கனல்களையும் அமைத்து, அதன் கீழே போக்குவரத்தைக் கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நிறுத்துகிற வேடிக்கையைப் பார்க்கலாம்.அங்கே ஒரு முதியவர் அல்லது பள்ளிக்குழந்தை சாலையைக் கடக்கிறது என்றால் கூட வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்தி வழிவிடுவார்கள். இங்கே, " யோவ் பெரிசு, என்ன வீட்டிலெ சொல்லிட்டு வந்திட்டியா?"

தில்லியில், பலமாடி அடுக்குக் குடியிருப்புகள் இருக்கிற இடங்களில், குடீதன்ணீர் வரும் மெயின் குழாயில், பக்கத்து வீட்டுக்காரனிடம் இருப்பதைவிட சக்தி வாய்ந்த பம்பை நிறுவித் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் பலர். நாளடைவில் எல்லோரும் சக்தி வாய்ந்த பம்புகளை நிறுவ, யாருக்கும் தண்ணீர் வருவதில்லை.தண்ணீர் கொடுக்க வேண்டியது நகர நிர்வாகத்தின் ஆதாரமான கடமைகளில் ஒன்று என்பதை அவர்களிடம் மல்லுக் கட்டி எடுத்துச் சொல்வதற்கோ, குடிதண்ணீர் நம் ஆதார உரிமைகளில் ஒன்று எனக் கோரிப் போராடும் திண்மையையோ கல்வி நம் மக்களுக்கு அளிக்கவில்லை.மாறாக அறிவியலை தார்மீக விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தும் குறுக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறது.

செல்போன்களை ஆபாச செய்தி அனுப்புவதற்கோ, இணையத்தை, மின்னஞ்சலை, வலைப்பதிவுகளை எப்படி அதர்மமான வழிகளில் பயன்படுத்துவது பற்றியோ, வலைப்பதிவுகளில் போலிப்பின்னூட்டம், ஆபாசப் பின்னூட்டம் இடுவது பற்றியோ அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக, வல்லரசாக உருவாகிவருவதாகப் பேசிப் பெருமிதம் கொள்ளும் படித்த மத்தியதர வர்க்க நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான்: " அதெல்லாம் சரி நண்பரே, நாம் ஒரு குடிமை ஒழுங்குகொண்ட சமூகமாக - Civic society-யாக உருவாவது எப்போது?"