Wednesday, August 15, 2007

அறுபதாண்டு சுதந்திரம்: அடிப்படையான ஓர் கேள்வி

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டுவந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற கோணத்தில் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் ஆட்சியில் மக்களுக்கு உள்ள பிரதிநிதித்துவத்தின் அளவு என்ற கோணத்தில் பார்த்தால், 1992க்கு முன்வரை, இந்தியா தனது ஜனநாயகத்தைக் குறித்துப் பெருமை கொள்ள முடியாது. அன்று இந்தியாவின் மக்கள் தொகை என்பது 80 கோடிக்கு அருகில் இருந்தது. அப்போது, நாடாளுமன்றம், மாநிலச் சட்ட மன்றங்களில் இருந்த இடங்கள் இவை எல்லாமுமாகச் சேர்ந்து மக்களால் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டாது. அதாவது 80 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வெறும் 5000 பேர். அதாவது 0.000625 சதவீதம்!

இந்திம மக்கள் ஆட்சிகளின் மீதும் அரசியலிம் மீதும் தொடர்ந்து நம்பிக்கை இழந்து வருவதற்கு, இந்திய ஜனநாயகம் இப்படி கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்ததும் ஒரு காரணம்.

கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் இருந்த நம் நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகத்தை 1992ல் நிறைவேற்றப்பட்ட ஓர் அரசியல் சட்டத் திருத்தம் மாற்றி அமைத்தது. 73வது அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்பட்ட அந்தச் சட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புக்களை கிராம அளவில் அமைவதை உறுதி செய்தது.அது மட்டுமல்ல, அந்த அமைப்புகளில் முன்றிலொரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவும், தலித்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் மூலம் பஞ்சாயத்து உறுப்பினர்களும் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்படவும் அது வகை செய்தது.இவை ஏதோ கருணையின் பேரில அளிக்கப்படும் சலுகையாக அல்லாமல், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட உரிமையாக அளிக்கப்பட்டன. அதாவது இவற்றை இன்னொரு அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம்தான் மாற்றவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ முடியும். அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பானமை வேண்டும்.

இந்தத் திருத்தத்தின் காரணமாக, சுமார் 30லட்சத்திற்கும் அதிகமாக பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவற்றில் 10 லட்சம் பேருக்கு மேல் பெண்கள். கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் தலித்துகள்.
நெடுங்காலமாக வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு, ஓரம் கட்டப்படிருந்த மனிதர்களை ஆளும் பொறுப்புக்களுக்கு (governance) சுதந்திரத்திற்குப் பிறகு நமக்கு அரை நூற்றாண்டு காலமாகியது. கிராம சுயராஜ்யமே பூரண சுயராஜ்யம் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி பலமுறை பேசிவந்திருந்த போதிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வரையபட்டபோது கிராம அளவிலான பஞ்சாயத்துக்கள் பற்றி, அந்த வரைவில் ஏதும் குறிப்பிடபடவில்லை. அதைச் சுட்டிக்காட்டி, ராஜேந்திர பிரசாத் டாக்டர்.அம்பேத்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் காரணமாக, அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் ஓர் விவாதம் எழுந்தது.காந்தியவாதியான கே. சந்தானம் ஒரு வரைவுத் திருத்தத்தை முன் மொழிந்தார். அந்தத் திருத்தத்தின் அடிப்படையில் பஞ்சாயத்து பற்றிய கருத்துக்கள் அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றது. வழிகாட்டு நெறிமுறைகளில் இடம் பெற்றுள்ளவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்குக் கிடையாது. உதாரணம்:மதுவிலக்குஇந்த நிலையை 73வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மாற்றியது. ஆனால் அதை நிறைவேற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவான பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அவரே பிரதமராக இருந்த போது 1984ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார். ஆனால் 64வது சட்டத்திருத்தம் என்றழைக்கப்பட்ட அது, மாநிலங்களவையில் அந்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. அப்போது ஆளும் கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
ராஜீவ் மறைவுக்குப் பின் நரசிம்மராவ் அரசு மீண்டும் அதை அறிமுகப்படுத்தியது. அயோத்தி பிரசினை காரணமாக ஏற்பட்டிருந்த சந்தடியில் அதிக விவாதமின்றி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுடையது. ஒவ்வொரு மாநிலமும் அதை நடைமுறைப்படுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை - உறுதி செய்யும் சட்டமாக, Conformatory legislation- இயற்ற வேண்டும். இந்தியாவில் கடைசியாக அந்தச் சட்டத்தை இயற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும், அதிகாரப் பரவல் ஏற்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த திராவிட இயக்க அரசுகள், தங்களிடமிருந்த அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டின.

ஆனால் இது திராவிடக் கட்சிகளின் போக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள பல கட்சிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. பீகாரில் லாலு பிரசாத் அரசு இருந்த போது பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாமலேயே ஊராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் ஆளும் அசாமில், ஊராட்சிகளின் பதவிக்காலமான ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பிறகு, மாநில அரசு, ஓர் அரசாணையின் மூலம் ஊராட்சியின் அதிகாரங்களை அதிகாரிகள் வசம் மாற்றிவிட்டு, தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தியது. இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, குவாஹாத்தியில், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தன்னார்வ அமைப்புக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். பின் கூட்டாக ஊராட்சித் தேர்தல்களை நடத்தக் கோரி ஒரு மனு தயாரித்தோம். அதை முதல்வரை சந்தித்து அளிப்பதற்காக நேரம் கேட்டோம். முதல்வர் அலுவலகம் அவரை சந்திப்பது கடினம், மனுவை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவரிடம் சேர்த்துவிடுவதாகத் தெரிவித்தது. எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அசாம் டிரிப்யூன் என்ற ஆங்கில நாளிதழ் மறுநாள்,
எங்கள கருத்துக்களை முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட பின், ( http://www.assamtribune.com/scripts/details.asp?id=apr1207/at01)
முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்கிடையில் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். நீதிமன்றத் தலையீட்டின் பேரில் அக்டோ பர் இறுதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவாகியிருக்கிறது. அடித்தள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

காஷ்மீரில் நிலமை அசாமின் நிலைமைக்கு சற்றும் குறைந்ததல்ல. அங்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.நான் மே மாதம் ஸ்ரீநகர் சென்று முதல்வரைத் தவிர எல்லா அரசியல்கட்சித் தலைவர்களையும் சந்தித்தேன். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், ஆட்சியில் பங்கு வகிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) நிறுவனரும், முன்னாள் இந்திய உள்துறை அமைச்சருமான, முப்தி முகமது சயீத்தையும் சந்தித்து, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து வாதிட்டேன். பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. மீண்டும் ஜூலை மாதம் 24ம் தேதி ஸ்ரீநகர் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தேன்.கிரேட்டர் காஷ்மீர் போன்ற செல்வாக்குள்ள ஆங்கில நாளேடுகளும் உருது ஏடுகளும் என் பேட்டியை பெரிய அளவில் பிரசுரித்திருக்கின்றன. (http://www.greaterkashmir.com/full_story.asp?Date=25_7_2007&ItemID=40&cat=21)
ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். வானத்து நட்சத்திரங்களைப் பறித்துத் தரும்படி கேட்கவில்லை, அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமைகளைப் பெறத்தான் இத்தனை போராட்டம்.

அன்று மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யக் கனவை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி தயக்கம் காட்டியது. இன்று ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது கட்சியின் அரசுகளே தயங்குகின்றன.

மக்கள் ஜனநாயகம் பற்றிப் பேசும் மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில், சிங்கூர் நந்திகிராம் ஆகிய இரண்டு இடங்களிலுமே, அங்கு அமைக்கப்படும் டாடா தொழிற்சாலைகள் பற்றி அங்குள்ள பஞ்சாயத்து அமைப்புகளோடு விவாதிக்கப்பட்டு ஒப்புதல் ஏதும் பெறப்படவில்லை.இது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உருதி மொழிகளுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் 243G பிரிவு, மூன்று நிலைகளிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், தங்கள் பகுதியின் 'பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக நீதிக்குமான' திட்டங்களை வகுக்க வேண்டும் என அதிகாரமளிக்கிறது. தங்கள் பகுதிக்கான வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதில் ப்ஞ்சாயத்துக்களுக்கான உரிமையை அங்கீரிக்கும் பிரிவு இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய கிராமசபைக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்துத் திட்டமிடும் உரிமை உண்டு. மேற்கு வங்கத்தில் இயற்றப்பட்டுள்ள பஞ்சாயத்துக்கள் சட்டம் இன்னும் ஒரு படி மேலே போய், வார்டுகள் தோறும் அங்குள்ள வாக்காளர்களைக் கொண்டு கிராம சன்சாத் என்ற சபைகளை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்களை உருவாக்கக் கணிசமான அதிகாரங்களை அளித்துள்ளது. இத்த்னைக்குப் பிறகும், மாநில அரசு, பஞ்சாயத்துக்களிடமோ, மக்கள் அங்கம் வகிக்கும் கிராமசபைகளிடமோ கலந்து விவாதிக்காமல், தன்னிச்சையாக அங்கு தொழிற்சாலைகளைத் திணிக்க முற்பட்டது.

கர்நாடகத்தில் ஆளும் ஜனதா-பாஜக கூட்டணி அரசு, அங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பஞ்சாயத்து அமைப்பில் மக்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டப் பிரிவுகளைத் தூக்கி எறியும் விதமாக அண்மையில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் நல்லகாலமாக, ஆளுநர் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மக்கள் பங்கேற்புடன் கூடிய அடித்தள ஜனநாயகம், அறுபதாண்டு சுதந்திரத்திற்குப் பின்னும் ஒரு கனவாகவே இருப்பதற்கு என்ன காரணம்?

ஜனநாயகத்தின் ஒர் அம்சமான தேர்தலில் (ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல) முக்கியப்பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லை என்பது மட்டுமல்ல, அவை ஜனநாயகத்தை தங்கள் வசதிப்படி பயன்படுத்திக் கொள்ளவும் முற்படுகின்றன. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இந்தக் கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதே இதற்கு சாட்சி. நேற்று எதிர்கட்சியாக இருந்த போது நாள்தோறும் வெளி நடப்புச் செய்தவர்கள் இன்று ஆளும் கட்சி. நேற்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்க்கட்ட்சியாக மாறியதும், அவர்களும் அவ்வப்போது வெளிநடப்புச் செய்கிறார்கள். காரணம் இரண்டு பேருக்கும் ஒன்றுதான்: சட்டசபையில் பேச அனுமது மறுக்கப்படுகிறது.நேற்று எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் சட்டமன்றத்திற்குள் முக்கிய விவாதங்களின் போது கூட வந்ததில்லை.இன்றும் அதே நிலைதான். ஆட்சிகள் மாறியிருக்கின்றன. ஆட்கள் மாறியிருக்கிறார்கள் ஆனால் காட்சிகள் மாறவில்லை.

சட்டமன்றத்திற்குள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் முழுக்க முழுக்க அங்கு பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தது. அந்தக் கடமையை அரசியல் கட்சிகள் எவ்விதம் நிறைவேற்றுகின்றன? சட்டமன்றத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் கடமை தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்புவதோடு முடிந்துவிடுகிறது. அதை உற்சாகத்தோடும், கடமை தவறாமலும் அவர்கள் செய்துவருகிறார்கள்.

அண்மையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டாடாவின் டைட்டானியும் டை ஆக்சைட் ஆலை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்பைக் கண்டு அதை ஓர் உயர் நிலைக் குழு விசாரிக்கும், விசாரணை செய்தியாளர்கள் முன் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. வரவேற்க வேண்டிய, ஜனநாயக ரீதியில் ஆன நடைமுறை. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் போது சென்னை நகரம் வரலாறு காணாத வன்முறையை சந்தித்தது. அதை விவாதிப்ப்பதற்கான உள்ளரங்கக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருவாரங்களுக்குப் பின் நடந்த கூட்டம், "வன்முறைச் சம்பவங்கள் குறித்து எல்லா நாளிதழ்களும் படத்துடன், சம்பவ இடத்தைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன.அதையே முதல் நிலை ஆதாரமாகக் கொண்டு, அரசு ஓர் பகிரங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை மக்கள் பங்கேற்கும் வகையில், ஊடகங்கள் முன் நடைபெற வேண்டும்" என்ற என் கருத்தை ஒரு தீர்மானமாக ஏற்றுக் கொண்டது. மறுநாள் முரசொலியில் முதல்வர் என்னைத் தனிப்பட விமர்சித்து எழுதினார். அந்தத் தீர்மானத்தை அரசு உதாசீனம் செய்தது.

உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை தலைவிரித்தாடியது. அதை உயர் நீதிமன்றமே சுட்டிக் காட்டியது.கூட்டுறவுத் தேர்தலில் வன்முறைகள் நடந்தன. அவற்றை கூட்டணிக் கட்சிகள் கண்டித்தன. ஆனால் அப்போதெல்லாம் அதைக் குறித்து விசாரிக்க முன்வராத திமுக அரசு, டாடா ஆலை குறித்து கருத்தாய்வு நடத்த முன் வந்திருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றன.

"கலைஞர் மட்டும் காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியிருந்தால், ஒரு தாலுகா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ, அதிகபட்சம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவோ முடிந்து போயிருப்பார். அதைத் தாண்டி அவரால் வளர்ந்திருக்க முடியாது" என்று ஒரு மூத்த காங்கிரஸ் தலைவரிடம் ஒருமுறை சொன்னேன். அவர் அதிர்ந்து போய் "என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?" என்றார். " உங்கள் கட்சியில் உயர்பத்விகளில் இருப்பவர்கள் யார்? யோசித்துப் பாருங்கள். ஒன்று அவர் மெத்தப் படித்தவராக, அயல்நாடுகளில் சென்று படித்தவராக இருக்க வேண்டும். அல்லது நிறைய நிலபுலன்கள் கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது பெரிய வீட்டுப் பிள்ளையாக இருக்க வேண்டும். அல்லது பஸ் டிரான்ஸ்போர்ட், நூற்பாலை, ஏற்றுமதித் தொழில், செய்பவர்களாகவோ, ஊரில் நான்கைந்து கடைகள் வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்/ கலைஞரிடம் இவை ஏதும் கிடையாது. அதுவும் தவிர செயல்திறனும் மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் உள்ள ஒருவரை உங்கள் கட்சியில் வளரவிடமாட்டீர்கள். உங்கள் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை அவ்வப்போது சமன் செய்கிற முயற்சியில் ஆர்வமும் கமிட்மெண்டும் உள்ள ஒருதொண்டரை முடக்கி வைக்கத் தயங்க மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சித் தேர்தல்களை நடத்துவது அல்ல. கோஷ்டிகளை சமனப்படுத்துவது."

அண்ணா தலைமையில் திமுக இருந்த காலத்தில், காங்கிரசிற்கும் திமுகவிர்கும் இடையே இருந்த பெரும் வித்தியாசம் இந்த உள்கட்சி ஜனநாயகம்தான். திமுகவின் கிளைக்கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை உள்கட்சித் தேர்தல்கள், கட்சி மேலிடத்தின் தலையீடு இல்லாமல் நடந்த காலம் ஒன்றுண்டு. திமுக இளைஞர்களை ஈர்த்ததற்கு அது ஒரு முக்கிய காரணம். ஆனால் இன்று திமுக உள்கட்சி ஜனநாயகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.இப்போது அங்கு ஜனநாயகம் நிர்வகிக்கப்படுகிறது.யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற முன்தீர்மானித்த முடிவின்படி வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட ஜாதியில் அல்லது குலத்தில் பிறப்பதனாலேயே ஒருவருக்கு சில உரிமைகளும் சலுகைகளும் உண்டு, தகுதிகள் உள்ள ஒருவர் வேறு குலத்தில் பிறந்திருந்தால், அவருக்குத் தகுதி இருந்தாலும் அந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது, என்ற கருத்தாக்கம்தான் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் அந்தக் கருத்து அநீதியானது என்ற நோக்கில் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து எழுட்சியுடன் போராடி வளர்ந்தது திமுக. ஆனால் இன்று, ஒருவர் கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர் என்ற தகுதி ஒன்றே ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவோ, மத்திய அமைச்சாரகவோ போதுமானது என்று அந்தக் கட்சியின் மேலிடம் கருதுகிறது. அதாவது, பகுத்தறிவு இயக்கமாக அரும்பிய திமுக இன்று வர்ணாசிரம தர்மத்தை வேறு ஒரு வடிவில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

உட்கட்சி ஜனநாயக விஷயத்தில், திமுகவை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை. அநேகமாக இன்று எல்லா அரசியல்கட்சிகளும் இப்படித்தான் இருக்கின்றன. இன்று காங்கிரசிலோ, திமுகவிலோ, அதிமுகவிலோ, பா.ம.க.விலோ ஒருவர் உயர் பதவிக்கு வர வேண்டுமானால், கட்சித் தலைமைக்கு மட்டுமல்ல, கட்சித் தலைமயின் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியோ, ஆர்.எஸ்.எஸ். பிடியில் இருக்கிறது. அதன் தலைமையை அதுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று கலந்து பேசி, கருத்தொருமித்த முடிவுன் அடிப்படையில் கட்சிப்பதவிகளைத் தீர்மானிக்கிறது. அப்படித் தீர்மானிக்கும் போது சீனியாரிட்டிக்கு அதிக மதிப்பு.

இப்படிப்பட்ட கட்சிகளிடமும், தலைவர்களிடமும்தான் நாம் ஜனநாயகத்தை விட்டு வைத்திருக்கிறோம்!

ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையே, மக்கள் ஆள்கையில் பங்கேற்பது. (participation in governance).பாரதியின் வார்த்தைகளில் கூறினால். குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. ஆனால் அதை நாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டோ ம். அதை மீட்டெடுக்காத வரையில் இந்திய ஜனநாயகம் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, தயங்கித் தயங்கியே நகர்ந்து செல்லும்.

(2007ம் ஆண்டு சுதந்திர நாளன்று வெளியாகும் புதிய பார்வை இதழுக்காக எழுதியது. இதன் குறுகிய ஆங்கில வடிவத்தை (இந்தியன் எகஸ்பிரசிற்காக எழுதப்பட்டது) எனது yahoo 360 Blogல் காணலாம் http://360.yahoo.com/maalan_narayanan )

Saturday, August 11, 2007

சொன்னது என்ன?

இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டு
போன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப் பற்றி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நான் எழுதிய
பதிவுகளின் பட்டியல் அருகில் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: பதிவர் பட்டறையில் நான் என்ன பேசினேன் என்பதைச் செவி வழிச் செய்தியாக அறிந்தவர்கள், அதைப் பற்றிய ஒலிப்பதிவு வெளியிடப்படும்வரை காத்திருந்து நான் பேசியவையாகக் கேள்விப்பட்டவை சரிதானா, அவை எந்த வார்த்தைகளில் எந்தச் சூழலில் (context) என்பவற்றை எல்லாம் உறுதி செய்து கொள்ளாமல், கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் நோக்கம் உண்மையை அறிந்து கொள்வதல்ல, என்னை வசைபாடுவதுதான், நான் என்ன பதில் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியதால், நேரத்தை இதில் செலவிட வேண்டுமா என எண்ணினேன்.
மூன்றாவதாக சில தமிழ், ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு நான் சுதந்திர தின மலருக்காக் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கான கெடு
நெருங்கியிருந்தது.
நான்காவதாக, நான் 23ம் தேதி தில்லியை விட்டுக் கிளம்பியவன், ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின் 6ம் தேதிதான் தில்லி
திரும்பியிருந்ததால் இங்கு அலுவலகப் பணிகள் குவிந்து கிடந்தன. (தமிழில் எழுதும் பல பதிவர்கள் அவர்களது பல் வேலைகளுக்கு நடுவே
கிடைக்கும் சிறிய அவகாசத்தில்தான் பதிவுகள் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது)
ஆனால் பட்டறையை ஏற்பாடு செய்தவர்களே நான் ஏதோ என்னுடைய 'நுண் அரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக்
கொண்டுவிட்டதாக' வலை நன்நடத்தையைப் பற்றிப் பேசாமல் ' ஈழத்தமிழரின் நன்நடத்தையைப் பற்றிப்' பேசிவிட்டதாக ஒருதோற்றத்தை ஏற்படுதத
முற்படும் போது இனியும் மெளனமாக இருப்பது சரியல்ல என்று கருதினேன். மெளன்ம் எப்போதும் சம்மதத்தைக் குறிப்பதில்லை, மெளனம்
கோபத்தின் வெளிப்பாடாக, வருத்தத்தின் வெளிப்பாடகக் கூட இருக்கலாம் என்றாலும் மெளன்ம் சம்மதம் என்றே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது
என்பதையும் நானறிவேன். எனவேதான் இந்தப் பதிவு.
இங்கே நான் பதிவர் பட்டறையில் என்ன பேசினேன் என்பதை verbatium எழுதப்போவதில்லை. பத்ரியின் பதிவில் என் முழுப் பேச்சும்
(விவாதங்களுக்கான பதில்களோடு) ஒலி வடிவில் இருக்கிறது.(http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html) ஒலிப்பதிவு சுமார்
நாற்பது நிமிடங்கள் உள்ளது. தம்ழகத்தின் பல இடங்களில் இப்போதும் தொலைத் தொடர்பு பிரசினை இருக்கிறது; அங்கு இதைத் தரவிறக்கம் செய்து
படிப்பதற்கு இணைப்பின் வேகம் காரணமாக, நிறையப் பொறுமை வேண்டும்.பலர் அலுவலக் கணினியைப் பயன்படுத்துபவர்கலாகவோ, இணையவிடுதிகளளப் பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்களுக்கும், ஒலி தெளிவாக இல்லை எனக் கருதக்கூடியவர்களுக்கும், விவாதிப்பவர்களின் தெளிவிற்காகவும், எதிர்காலத்தில் திரிப்புகளுக்கு இடமளிக்காதிருக்கவும், ஏற்பாட்டாளர்களின் பதிவைப் படிப்பவர்களுக்கு நான் நாற்பது நிமிடமும் நான் அரசியல் பேசினேன் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும், எனவே என்ன் பேசினேன் என்பதை தெரியப்படுத்தவும் பேச்சின் முக்கிய அமசங்களை இங்கே தர முயல்கிறேன்.
அதற்கு முன்பு சில எண்ணங்கள், விளக்கங்கள்:
1. பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை.முழுநேரமும் என்னால் இருக்க முடியுமா என்ற
சந்தேகத்தைக் கூடப் பதிந்து கொள்ளும் போதே தெரிவித்திருந்தேன்.பட்டறைக்கு முந்திய இரவு விக்கி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
அழைத்தை அடுத்தே நான் அங்கு பேசினேன். எனவே ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை, நுண்ணரசியல்
விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த
வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்.
2.பட்டறை இரண்டு பிரிவுகளாக நடக்கிறது , ஒன்று பதிவர்களுக்காக், மற்றொன்று பதிவு துவக்க விரும்புபவர்களுக்காக் என்ற எண்ணம் பட்டறையைப்
பற்றி அது நடக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த இணையப்பகத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அரங்கிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பது
போல் தோன்றியது.ஒரு கட்டத்தில் இராமகி அய்யா, அங்கு வந்திருந்த, பதிவு துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த ஆனால் பதிவைப்பற்றி ஏதும்
தெரியாத, ஒருவரிடம் 'அய்யா நீங்கள் மேலே (பதிவு துவக்க விரும்பியவர்களுக்கான அரங்கு) போவது நல்லது என்று சொன்னது என் எண்ணத்தை
உறுதி செய்வதாக அமைந்த்து. நான் அமர்ந்திருந்த அரங்கில், விக்கி, பத்ரி, சிவகுமார், செல்லா, தேசிகன், இராமகி, காசி, வெங்கடேஷ், ஆசீப் மீரான்,
தருமி, டெல்பின் விக்டோரியா, திருஞானம், லிவிங் ஸ்மைல் வித்யா, அண்ணா கண்ணன், வளர்மதி, அருணா ஸ்ரீநிவாசன், டோண்டு,சட்டம் குறித்து
எழுதும் சுந்தரராஜன் -வெற்றிச் செல்வன், எஸ்.கே, மீனாக்ஸ்,ரஜனி ராம்கி, க்ருபாஷங்கர்,லக்கிலுக் எனப் பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது. அறியாத
முகங்ளும் இருந்தன. சரி அவர்கள் எனக்குத் தெரியாத பதிவர்களாக இருக்கும் என்ரு நினைத்துக் கொண்டேன். எனவே நான் பதிவர்களிடம்தான்
பேசப்போகிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், என்ற எண்ணத்திலேயே பேசினேன்.
3. ஆரம்பத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன மாலன், பின் அரசியல் பேசிவிட்டார் என்பதைப் போல ஒரு கருத்து அமைப்பாளர்
சிவக்குமாரின் பதிவில் தொனிக்கிறது. அமைப்பளர்களின் ஒட்டுமொத்த உணர்வைத் தெரிவிப்பதாகக் ரவிசங்கர் கூறும் பதிவு “அரசியல் கொள்கை
விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என நான் சொன்னதாகத் தெரிவிக்கிறது. அரசியல் என்பது அரசியல் கொள்கையாக மாற்றம்
கண்டிருக்கிறது. உண்மையில் நான் அரசியல் பேச வேண்டாம் எனச் சொல்லவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை, மென் பொருட்களை அரசே
இலவசமாக வழங்க வேண்டும், கணினியில் தமிழை உள்ளிடும் வசதியை default ஆக அமைக்க உத்திரவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை
சிலர் எழுப்பி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய போது, நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதை விட, பதிவுகள்
பற்றிப் பேசலாம், Policy விஷயங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாமே என்று ராமகி அய்யா தெரிவித்த கருத்தை வழி மொழிந்து பேசினேன்.Policy
என்பது public policy .ஆனால் அரசின் கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுவது அரசியல் என அமைப்பாளர்களாலேயே திரிக்கப்படுவது
வருத்தத்திற்குரியது.
4.இது போன்ற ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன் கில்லியின் விருந்தினர் பக்கத்தில் கூட அந்த
விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தேன். " ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப்
பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007
டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக
(institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு
இல்லை" (http://gilli.in/tamil-blogs-gilli-guest-column-by-maalan/) இதை எழுதும் போது 'நான் சொல்லித்தான் இந்த பட்டறை நடந்தது' என்று நான்
சொன்னதாக நாளை யாரேனும் திரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன். அல்லது நான் பங்களிக்காத மாநாட்டிற்கு உரிமை கொண்டாடினேன் என்றும் சிலர்
புறணி பேசக்கூடும். எனவே ஒரு disclaimer: நான் இந்த பட்டறையின் அமைப்புப்பணியிலோ, நிரல்கள் தயாரிப்பிலோ எந்த வகையிலும்
பங்கேற்கவில்லை. ஒரு சிறிய் நன்கொடையைத் தவிர என் பங்களிப்பு ஏதுமில்லை. அதுவும் கூட பட்டறையின் இணையப்பக்கத்தில்
அமைப்பாளர்களால் பதிவு செய்ய்ப்படவில்லை. அதைக் குறித்து எனக்கு கவலையும் இல்லை)
எனவே எனக்கு பட்டறை குறித்து ஓர் இயல்பான ஆர்வம் இருந்தது. அதற்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தது. ஆனால்
பணிநிமித்தம் தில்லி திரும்ப வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அந்தப் பணியை என் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சற்று ஒத்தி
வைக்கச் சொல்லிவிட்டு (அதனால் பலருக்கு அசெள்கர்யம் ஏற்பட்டிருக்கும்) பட்டறையில் கலந்து கொண்டேன் (இதை ஏதோ என்னைப் பற்றிய ஒர்
உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இப்போது சொல்லவில்லை. பட்டறைக்கு வந்திருந்த சிலரிடம் அங்கேயே பகிர்ந்து கொண்டிருந்தேன்)
ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த முடிவிற்காக வருத்தமே மேலோங்குகிறது.கடைசி நிமிடத்தில் என்னைப் பேச் அழைத்தும்
அமைப்பாளர்கள்,மீதிருந்த மரியாதையின் காரண்மாக, தட்டிக் கழிக்காமல் ஒப்புக் கொண்ட எனக்கு அவர்கள் நன்றி சொல்லவிட்டாலும் போகிறது, என்
பேச்சைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்களே அந்த மனங்களுக்கு நன்றி.
இனி என் பேச்சின் சாரம்: 1. நன்னடத்தை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. அது ஏதோ பள்ளிப்படிப்பு முடிந்து போகும் போது தலைமையாசிரியர் கொடுக்கும் contact
certificate போல தொனிக்கிறது. சில நெறிகள், சுய ஒழுங்குகள் என்று வைத்துக் கொள்ளலாம்
2. மற்றெந்த ஊடகங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வலைப்பதிவுகளுக்கு உண்டு.வலைப்பதிவுகளின் மிகப் பெரிய கொடை, தனித் தன்மை, ஒரு
விஷயத்தை வெளியிட்ட உடனே பலர் எதிர்வினையாற்றுவது. டைடானியம் டை ஆக்ஸ்டை தொழிற்சாலை குறித்து தினமணி ஒரு கட்டுரை
வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து மாற்றிக் கருத்துடைய ஒருவர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதமும்
பிரசுரம் ஆகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஒருவர் மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பி கடிதம் எழுதினால் அதற்குள்
நாட்கள் கடந்திருக்குமாதலால் அது வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பலர் ஒரே நேரத்தில் பலருடன் எதிர்வினையாற்ற வாய்ப்பளிக்கும் ஒரே
ஊடகம் வலைபதிவுகள்தான். இந்த வாய்ப்பு சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ, இணைய இதழ்களிலோ கிடையாது. ((Many to Many
communication)
3.வலைப்பதிவுகள் ஏன் வேண்டும் என்று சமூகக் கோணத்தில் பார்த்தால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கருத்தை,
அபிப்பிராயத்தை வெளியிட அது உதவுகிறது. ஒரு கருத்து என்பதே ஒன்றின் மீதான Critical Judgemenதான் என்பதால், ஒரு சமூகத்தில் Critical
Judgement அதிகமாகும் போது, ஆளுகை (Governance) கலாசாரம் தொடர்பான விஷயங்களை விவாதத்திற்குள் கொண்டு வர முடியும். அது
நிலையை மாற்ற உதவும். அதனால் வலைப்பதிவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு ஊடகம்.
4.நாம் வாழ்கிற காலத்தில் ஒரு கருத்துதான் சரி,லொரு நிலைதான் சரி என்று முடிவளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது.This is Black, This is
white என்று முடிவுக்கு வரமுடியாமல் எங்கும் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. பல்வேறு பரிமாணங்களப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த
ஊடகத்தில் கிடைக்கிறது.
5 ஆனால் வலைப்பதிவுகள் குறித்து நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன
6.வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் யார் என்று பார்த்தால், இப்படி ஒரு தொழில் நுட்பம் வந்திருக்கிறது, அதில் என் மொழி இடம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொண்டவர்கள், மற்ற் ஊடகளில் ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நான் எழுதியதைச் சிதைக்கிறார், சுருக்குகிறார், தணிக்கை
செய்கிறார் அதை ஏற்க முடியாது என்று கருதுபவர்கள்,ஒரு குறிப்பிட்ட விஷயம், நிலை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள், உலகம்
முழுதும் தேடல் வாய்ப்புக் கொண்ட ஒருசாதனம் அதனால் இது பதிந்து வைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் வலைபதிவுகளை
எழுதுகிறார்கள்.தமிழ் வலைப்பதிவர்களின் சராசரி வயது என்று பார்த்தால்,- சிவஞானம்ஜி, ராமகி அய்யா, என்னையும் சேர்த்து, சில வயதில் மூத்த
பதிவர்கள் இருந்தாலும் கூட- 25-30 இருக்கலாம். சமூகத்தில் பெரும்பாலும் அந்தத் தலைமுறையின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை.
ஆனால் அதற்கு வலைப்பதிவுகள் இடமளிகிறது என்பதால் அது வரவேற்று வலுப்படுத்தப்பட வேண்டிய ஊடகம்.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரசினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
9.வலைப்பதிவுகள் திரட்டப்படுவதின் காரணமாக சில பின்விளைவுகள், சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நாட்களில் எந்தப்பதிவிற்கு அதிகம்
பின்னூட்டங்கள் வருகிறதோ அது அதிகம் கவனிக்கப்படும் பதிவு என்று கருதப்பட்டது. உலகமே என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது, நான்
எழுதுவதற்கு உலகமே எதிர்வினையாற்றுகிறது என்று ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மனோபாவம் நிலவியது. அந்த பிரமை காரணமாக,
பின்னூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் வந்தது.
அன்று 50 பதிவுகள் இருந்தன, அநேகமாக ஒருவர் எல்லாப்பதிவுகளையும் படித்துவிடக்க்கூடிய நிலை இருந்தது, இன்று 2000 பதிவுகள். அதில் 1000
பேராவது எழுதுகிறார்கள்.இதில் தன்பதிவு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக அச்சுப் பத்திரிகைகளின் மலிவான உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால் வலைப்பதிவுகளின் இயல்புகளில், சாத்தியங்களில் திரிபுகள் ஏற்படுகின்றன.அதைக் குறித்து வலைப்பதிவர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.
11. யாருக்கு சுதந்திரம் அதிகமோ அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். எனவே யார் அதிகம் சுந்த்திரம் வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள்
அதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
12. மற்றவர் கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும் மனநிலையைப் பலர் அடையவில்லை. அது நம்மிடம் இல்லை. வலைப்பதிவுகள் அதை
உடைக்க முடியும் திறந்த மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். அப்படி இல்லை என்பதில் வருத்தம்.நாம் சில அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என் பதிவில் எழுதப்பட்டுள்ளவற்றிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க
மாட்டேன்.ஒரு தனிப்பட்ட நபரைத் தாக்கியோ, விமர்சித்தோஎழுதும் கருத்துக்களைநான் வெளியிட மாட்டேன் என்பது போன்ற ஒரு நெறி, சில சுய
ஒழுங்குகளை, ஏற்றுக் கொள்ளலாம். இது நன்னடத்தை அல்ல, விதி அல்ல, கட்டுப்பாடு அல்ல. ஒரு சமூகமாக நாம் இயங்கும் போது நாம்
மேற்கொள்ள வேண்டிய சில சுயக் கட்டுப்பாடுகள்.
இதுதான் நான் பேசியதின் சாரம். இதில் நான் எங்கும் எந்த ஒருவரையும் தனிப்பட விமர்சித்துப் பேசவில்லை. இதில் எதை நுண் அரசியல்
விளையாட்டு என அமைப்பாளர்கள் கருதுகிறார்கள்?
இதன் பின் விவாதங்கள் துவங்கின.
அரவிந்தன் முதல் கேள்வியைக் கேட்டார்:" Moderated Blogலேயே ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது.இந்த மனநிலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?" என்பது அவர் கேள்வி.
நான்:பின்னூட்டம் என்பது alcohol மாதிரி.சோர்வாக இருக்கும் போது உற்சாகம் தர உதவலாம். ஆனால் அதுவே அள்விற்கு மேல் போனால்
போதையாகி, ஒருவித halucination ஏற்பட்டு, எல்லாம் நல்லா இருக்கு என்ற செயற்கையான மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும். சுய ஒழுங்கு
இருந்தால் இதை மட்டுப்படுத்திவிடலாம்.
இந்த ஊடகத்தைப் பற்றி அல்ல, இன்னொரு ஊடகத்தைப் பற்றி என்று செல்வா அடுத்த கேள்வியை எழுப்பினார்: "ஐரோப்பிய சினிமா போல்
தமிழிலிருந்து தணிக்கையைத் தூக்கினா என்ன ஆகும்? இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால், நெல்லை எடுத்துக் கொண்டு
அதிலகொண்ஜம் உமியைக் கலந்து, அரிசியையும் கலக்கிறோம்.சென்சார்ல எந்த அளவிற்கு இருந்தால் கட் பண்ணக் கூடாதோ அந்த அளவிர்குக்
காண்பித்துக் கொண்டிருக்கோம். ஐரோப்பா மாதிரி சென்சாரையே தூக்கிட்டா என்ன ஆகும்? ஒரு பக்கம் frivolus movie போய்க்கிட்டிருக்கும். இன்னொரு
பக்கம் முன்னுதாரணப் படங்கள் வருமா, வராதா? இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது ஒரு ரிஸ்க்தான். ஒரு சமூகத்தில
கோவிலும் சாராயமும் இருக்கிற மாதிரி.அவங்க அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கலாம். Pluralistic Society ங்கிறதை இணையத்தில்தான்
பார்க்க முடிகிறது.அதை regularise பண்றதுங்கிறது ஒரு ரிஸ்க்"
நான்: நான் (கருத்தை) ரெகுலரைஸ் பண்ணுவதைப் பற்றிச் சொல்லவில்லை.உலகம் பூராவும் இன்று ஊடக்த்தொழில் எதை நோக்கிப் போகிறது
என்றால்.....முன்பெல்லாம் ஆனந்த விகடனில் ஒரு கிரைம் கதை, ஒரு சிறுகதை, ஒரு ஆன்மீகக் கட்டுரை, ஒரு அரசியல் கார்ட்டூன், இப்படி எல்லாம்
ஒரே இதழ்ல வரும்.இப்போது, த்னிமனிதனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நாணய விகடன், விவசாயத்திற்கு பசுமை விகடன், என்று ஒவ்வொரு
துறைக்கும் தனித் தனி இதழ்கள் வருகின்றன. இதை niche journalsனு சொல்வோம். வாச்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தொழில்நுட்பம் காரனமாக
cost of production குறைந்திருப்பதால் இது சாத்தியமாகிறது. ஈனையத்தின் மிகப் பெரிய வசதி எல்லாவற்றிற்கும் தனித் தனி தளம் உருவாக்கிட
முடியும். தமிழ் உலகம் என்று ஒரு மடலாடற்குழு இருந்தது. அதில் ஒருவர் ஆன்மீகம் பற்றித்தான், அதிலும் சைவ சித்தாந்தம் பற்றி மட்டுமே
எழுதுவார்.கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.அந்த contentஐக் கொடுக்கக் கூடியவர்கள் தங்களுக்கென்று சில
ஒழுங்குகளையும் வைத்துக் கொள்ள் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.
இந்தக் கூட்டத்தை 9:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் எல்லோரும் 8:30க்கு வந்து விட வேண்டும் என்று
சொல்கிறீர்கள். அப்போது அந்த இடட்தில் ஒரு norm விதிக்கிறீர்கள். இது கட்டற்ற கூட்டம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும்
வரலாம் என்றால் ஒருவர் பனிரெண்டு மணிக்கு வந்து முதலில் இருந்து ஆரம்பித்து தமிழிணைய வரலாறு சொல்லுங்கனு கேட்கிறார். ஒரு குழுவாக
செயலபடும் போது சில norms, better performance of the groupக்காக தேவைப்படுகிறது.
மாலனின் கருத்தை வழி மொழிந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார் வளர்மதி.Internet Explosionனு சொல்வாங்க. ஆனால் அது Explosion அல்ல,
implosion. Implosionக்கு உதாரணம் சூரியன். அது உள்ளுக்குள்ளேயே வெடிக்கும். அதன் side effect ஆகத்தான் energy radiate ஆகிறது. அதே மாதிரி
இணையம். கட்டற்ற மீடியமாக அது இருந்தாலும், அது அதனுடைய effect தானே தவிர essence அல்ல.
அதில் direct interaction கிடையாது. Physical interaction இல்ல்ங்கிற்துனால, emotional ஆ interacட் பண்றது இல்லை. நேரில் ஒருவர் நீங்க வாங்க
என்ரு சொன்னால் நானும் பதிலுக்கு வாங்க என்று சொல்வேன்.நீங்க ஏய்னு சொன்னா நானும் ஏய்னு சொல்வேன். எழுத்து மூலமா interact செய்யும்
போது ஏய்னு சொன்னா கேள்வி வருது. என்ன தப்பா சொல்லிட்டோம் ஏன் இவர் ஏய்னு சொல்றார்னு கேள்வி தோணுது.அதனால ஒரு time lag
ஏற்படுது.இந்த time lag ஏ beat பண்ணனும், அதுinteractionக்கு இருக்கக் கூடிய Basic need. அந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளணும். அது
கட்டுப்பாடு இல்லை.தோட்டத்தில புல்லு வளர்க்க்றீங்க,. அதோட் களையும் வளருது.புல்லு வளரும்னா களையை எடுக்கணுமா வேண்டாமா?
நான்: தனிப்பதிவாக இருக்கும் வரைக்கும் பிரசினை இல்லை. பதிவுகள் ஒரு திரட்டியின் மூலம் திரட்டி வாச்கர்கள் முன் வைக்கப்படும் போது, திரட்டி
நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்பு வேண்டுமா, வேண்டாமா? Many to many communicationlல் வெவ்வேறு levelல் இருப்பவர்கள் interact செய்கிறார்கள்.
WTOவை அடுத்து 60 சட்டங்கள் நிறைவேறின. விவசாயிகளை பாதிக்கக் கூடிய சட்டங்கள். Science based acts ஆனால் விவசாயிகளைப் பாதிக்கக்
கூடியவை. Seeds act என்று ஒன்று. அதைப்போல ஒரு draconian act கிடையாது.இந்தச் சட்டங்கள் பற்றி சில வக்கீல்கள் பதிவு எழுதுகிறார்கள்.
அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது. 'ஏன்யா இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்க, ரஜனி, ஸ்ரேயா பற்றி எழுதினாலும் நாலு பேர் படிப்பாங்க"
என்று. இரண்டு levelல் இருப்பவர்களிடையே communication, even ஆக இருக்க முடியாது. நீங்களே பின் நவீனத்துவம் பற்றி பதிவு எழுதுகிறீர்கள்.
பின் நவீனத்துவம் தெரிந்தவர்களுக்கு அது குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுகிறார்கள், பின் நவீனத்துவம்னா என்னவென்றே தெரியாத
ஒருவர் வந்து ஏன்யா இதெல்லாம் எழுதறனு பின்னூட்டம் போட்டால் அங்கே கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது? வலைப்பதிவுல எழுத வந்தவங்க
வலைப்பதிவை விட்டுப் போனதற்கு என்ன காரணம்? நம் கருத்துக்களை இங்கே வைக்க முடியாது, அதைப் புரிந்து கொள்ள் மாட்டார்கள், நாம ஏதோ
சுவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம், அதற்கு பேசாமல் இருக்கலாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு கருத்தை வைப்பதற்கு அச்சமோ, தயக்கமோ தோன்றுமானால் அந்த இடத்தில் சுதந்திரம் இல்லை. அச்சம் உள்ள இடத்தில் சுதந்திரம் இருக்க
முடியாது.என்ன நடக்கிறது? Sanctity என்பது எதற்கும் கிடையாது.எதுவுமே புனிதமானது அல்ல என்பது வலைப்பதிவுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
கோண்த்தில் அது நல்லது. ஆனால் இன்னொரு கோணத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கக் கூடிய் institutionsஐ - உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள்
அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?
யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார்
அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு
குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை
எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள்
போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில்
கொள்கிற உறவு.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை
முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு,
சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?
இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....
(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)
.

Monday, August 06, 2007

செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்


இன்றைய The New Indian Expressல் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி விரிவாக (முதல் பக்கத்திலேயே ) செய்திகள் சகபதிவர்களது புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கின்றன. 'மொக்கைப் பதிவு' 'கும்மிப் பதிவு' பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம், உள்குத்து எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

பட்டறையின் நிகழவுகள் குறித்தும், 71 வயதில் பட்டறையில் வந்து கலந்து கொண்டு பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நல்லபெருமாள் பற்றிய் செய்தியும் மூன்றாம் பக்கத்திற்குப் போய்விட்டது. (நல்ல பெருமாள் பற்றி அதிகம் பேர் எழுதவில்லை. அவர் பேசியது என் மனதைத் தொட்டது)

இணைப்புக்கள் இங்கே.

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3

இதன் ஆங்கில வடிவததை என் யாஹூ பதிவில் வெளியிட்டிருக்கிறேன். அதன் முகவரி:
http://360.yahoo.com/maalan_narayanan)

அயலகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும், சென்னையிலேயே இருந்து எகஸ்பிரசை தவறவிட்டவர்களுக்கும், இந்த நிகழ்வின் பதிவுகளை எதிர்காலத்தை முன்னிட்டு சேமிக்கவிரும்புவர்களுக்கும், தங்கள் ஊரில் இது போன்ற பயிலரங்கு (பட்டறை என்பதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாமே?) நடத்த விரும்புவர்களுக்கு ஓர் உந்துதலாகவும் இந்த இணைப்புக்கள் உதவகூடும்.

Wednesday, August 01, 2007

ஒரு கோடிக் கருத்தம்மாக்கள்

"அடுத்து நீங்கள் காண இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது" என்ற முன்னெச்சரிக்கையுடன் தொலைக்காட்சி அந்தச் செய்தியை அளித்தது. காட்சிகள் அதிர வைப்பதாகத்தான் இருந்தன.

ஒரிசா மாநிலத்த்ல் உள்ள, நயாகர் என்ற கிராமத்தில் உள்ள, ஒரு பாழும் கிணற்றிலிருந்து அடுத்தடுத்து பாலித்தீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்தப் பாலீதீன் பைகளுக்குள் பிறந்த இளம் பெண் சிசுக்களின் அழுகிய உடலகள் பொதியப்பட்டிருந்தன. அப்படி 30 பாலீதீன் பைகள் எடுக்கப்பட்டன. அந்த சிசுக்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது.

ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!

பெண்சிசுக்கள் கொல்லப்படுகிற அவலம் ஏதோ ஒரிசாவில் மட்டும் நடைபெறுகிற சம்பவம் அல்ல. இது நடைபெறாத இந்திய மாநிலம் எதுவுமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், இந்தக் கருத்தம்மாக்கள் பிறந்த உடனேயோ, பிறக்கும் முன்பாகவே கூட, அழிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், நம் சினிமாக்கள் சொல்வது போல, வறுமை அல்ல! வளமான மாநிலங்களான பஞ்சாபிலும் ?ரியானாவிலும்தான், செலக்டிவ் அபார்ஷன் எனச் சொல்லப்படும், பிறக்கப்போவது பெண்குழந்தை எனத் தெரிந்துகொண்டு அதைக் கருச்சிதைவு செய்யும் வழக்கம் அதிகம். ஹரியானாவில் பணக்காரக் குடும்பங்களில் 1000 ஆண்களுக்கு, 541 பெண்கள் என்ற விகிதத்தில்தான் பெண்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால் ஏழைக்குடும்பங்களில் 1000 ஆண்களூக்கு 1567 என்ற அளவில் ஆண் பெண் விகிதம் இருக்கிறது.

இன்னொரு வளமான மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் என்பதாக ஆண்: பெண் விகிதம் அபாய அளவைத் தொட்டிருக்கிறது. அதிலும் அந்த மாநிலத்தின் செழிப்பான பகுதிகளான கிருஷ்ணா, சித்தூர், ரெங்காரெட்டி மாவட்டங்களில் இந்த வழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆந்திர மாநிலத்திலேயே கம்மம் மாவட்டத்தில்தான் மிக அதிக அளவில் 93 ஸ்கேனிங் மையங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கும் பகுதிகள், வளமான, பெத்தபள்ளி, ஜகதியால், கோதாவரிகாணி ஆகியவைதான்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவில் ஆண்-பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்பதாக இருந்தது. ஆனால் 2001ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் போது அது 927ஆக சரிந்திருக்கிறது. மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்குக் காரணம் பெண்கள்பெண்சிசுக் கொலைகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெண் சிசுக் கொலைக்குக் காரணம் வெறும் வரதட்சிணைக் கொடுமை மட்டும் அல்ல.

ஆண் பெண் விகிதத்தில் ஏற்பட்டிருக்கிற கவலைதரும் சரிவு, இருபது ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டு வருகிறது. அதாவது Ultra Sonography என்கிற பிறக்கும் முன்பே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என ஸ்கேன் செய்து பார்க்கும் முறை, நகர்ப்புற மத்தியதர வர்க்கத்திடையே பிரபலமாகத் தொடங்கியதிலிருந்து, இந்த சரிவு விரைவுகாணத் தொடங்கியிருக்கிறது என ஊகிக்கமூடியும்.அரசு கருவிலிருக்கும் சிசுவை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கத்தைத் தடை செய்திருக்கிறது. Pre-Natal Diagnostic Technique (Regulation and Prevention of Misuse) Act, 1994, Medical Termination of Pregnancy Act, 1971 என இரு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் நிலைமை சீரடைந்து விடவில்லை.

என்ன காரணம்? பல இருக்கலாம். ஆனால் படித்த நடுத்தர வர்க்கம் அறிவியலை, தனது சுயநலனை முன்னிட்டு. தார்மீக நெறிகளுக்கு முரணாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பயன்படுத்தத் தயங்குவதில்லை என்பதற்கு இந்த ஒரு கோடிப் பெண்சிசுக் கொலைகள் ஓர் உதாரணம். அறிவியலின் கொடைகளை இது போல படித்த வர்க்கம் தவறாகப் பயன்படுத்துவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்கிறவர்கள், நாற்சந்திகளில் போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, ஆளே இல்லாவிட்டால் கூட வண்டியை நிறுத்தி சிகனல் மாறுவதற்குக் காத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் நகரங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்கனல்களையும் அமைத்து, அதன் கீழே போக்குவரத்தைக் கண்காணிப்பதற்குக் காவலர்களையும் நிறுத்துகிற வேடிக்கையைப் பார்க்கலாம்.அங்கே ஒரு முதியவர் அல்லது பள்ளிக்குழந்தை சாலையைக் கடக்கிறது என்றால் கூட வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்தி வழிவிடுவார்கள். இங்கே, " யோவ் பெரிசு, என்ன வீட்டிலெ சொல்லிட்டு வந்திட்டியா?"

தில்லியில், பலமாடி அடுக்குக் குடியிருப்புகள் இருக்கிற இடங்களில், குடீதன்ணீர் வரும் மெயின் குழாயில், பக்கத்து வீட்டுக்காரனிடம் இருப்பதைவிட சக்தி வாய்ந்த பம்பை நிறுவித் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் பலர். நாளடைவில் எல்லோரும் சக்தி வாய்ந்த பம்புகளை நிறுவ, யாருக்கும் தண்ணீர் வருவதில்லை.தண்ணீர் கொடுக்க வேண்டியது நகர நிர்வாகத்தின் ஆதாரமான கடமைகளில் ஒன்று என்பதை அவர்களிடம் மல்லுக் கட்டி எடுத்துச் சொல்வதற்கோ, குடிதண்ணீர் நம் ஆதார உரிமைகளில் ஒன்று எனக் கோரிப் போராடும் திண்மையையோ கல்வி நம் மக்களுக்கு அளிக்கவில்லை.மாறாக அறிவியலை தார்மீக விதிகளுக்கு முரணாகப் பயன்படுத்தும் குறுக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறது.

செல்போன்களை ஆபாச செய்தி அனுப்புவதற்கோ, இணையத்தை, மின்னஞ்சலை, வலைப்பதிவுகளை எப்படி அதர்மமான வழிகளில் பயன்படுத்துவது பற்றியோ, வலைப்பதிவுகளில் போலிப்பின்னூட்டம், ஆபாசப் பின்னூட்டம் இடுவது பற்றியோ அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக, வல்லரசாக உருவாகிவருவதாகப் பேசிப் பெருமிதம் கொள்ளும் படித்த மத்தியதர வர்க்க நண்பர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான்: " அதெல்லாம் சரி நண்பரே, நாம் ஒரு குடிமை ஒழுங்குகொண்ட சமூகமாக - Civic society-யாக உருவாவது எப்போது?"