முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது.
ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது .
எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் ஒன்றுதான்.அது: அன்பு இல்லம்
பலர் நினைப்பது போல பறவைகள் கூடுகளில் தங்குவது இல்லை. மனிதர்களைப் போல கூடுகளில் உறங்கி மறுநாள் விடிந்ததும் வேலைக்குக் கிளம்புவதில்லை. அவை கட்டுவது வீடுகள் அல்ல. விடுதிகள். பிரசவ விடுதிகள். முட்டையிடவும். முட்டைகளுக்குள்ளிருந்து முகிழத்தெழும் குஞ்சுகளுக்கு உணவளிக்கவும், சிறகு முளைக்கும் வரை அவற்றைச் சீராட்டவும் உருவாக்கப்படும் இடம்தான் இந்தக் கூடுகள்.
காக்கையின் கூடுகள் சற்றுப் பெரிதுதான். விட்டம் ஒரடியாவது இருக்கும். முன்பக்கம் முரட்டுச் சுள்ளிகளால் அமைந்திருந்தாலும் உள்ளே இருக்கும் ’கிண்ண’த்தில், மூன்றங்குல ஆழத்திற்கு மெத்து மெத்தென்று வைக்கோல், தென்னை நார், சணல் கயிறு உலர்ந்த இலைகள் இவற்றைக் கொண்ட ஒரு ’மெத்தை’ இருக்கும்.
ஒரு குச்சியைப் பொறுக்கிக் கொண்டு உயரே பறந்த அந்தக் காக்கையைக் கண்ட போது எனக்குள் ஒரு கேள்வி வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கை ஆணா? பெண்ணா? தாயா? தந்தையா?
முட்டையிலிருந்து வெளிவந்து மூன்று வாரங்கள் வரை காகங்களுக்குப் பறக்கத் தெரியாது. (முதல் நாள் அதற்குக் கண்ணே தெரியாது) அந்தக் காலங்களில் அங்கும் இங்கும் நகராமல் அம்மா காக்கா அருகிலேயே இருக்கும். அப்பாக் காக்கா உணவு தேடிக் கொண்டுவரும். ஆனால் வீட்டைக் கட்டுவது இருவரும் சேர்ந்துதான் என்கின்றன புத்தகங்கள்.
இயற்கை இந்தப் பறவைகளுக்கு இயல்பாகக் கற்றுக் கொடுத்திருக்கிற செய்திகளை ஆற்றலும் அறிவும் மிக்க மனித குலம் போராடிப் புரிந்து கொண்டிருக்கிறது என்பது விளக்கமுடியாத வேடிக்கைகளில் ஒன்று.
காக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த என்னைத் தொலைக்காட்சி அழைத்தது. இயற்கையின் அதிசயங்களிலிருந்து மனிதர்களின் விசித்திரங்களுத் திரும்பினேன். இந்திரா நோயியின் உரையாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இந்திரா இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி. இந்தியர். சென்னையில் வளர்ந்தவர். ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனத்திற்குப் பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார் என்ற பிரமிப்பிலேயே ஊடகங்கள் அவரைப் பேட்டி கண்டு வந்திருக்கின்றன. இந்தப் பேட்டியும் அந்தக் கோணத்திலேயே அமைந்திருந்தது.
“நீங்கள் மேற்கொள்ளூம் நிர்வாகச் செயல்பாடுகளை ஒரு பெண்ணின் அணுகுமுறை என்பதாகவே உலகம் பார்க்கிறது. அது உங்களை எவ்வளவு எரிச்சலடையச் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் பெண்களாகிய நாம் தொழில் முறையில் இதை நிறையவே எதிர்கொண்டு வருகிறோம்.” என்று உரையாடலுக்குக் களம் அமைக்கிறார் பேட்டி காணும் பெண். அவர் நாடறிந்த பத்திரிகையாளர் பர்க்காதத்.
”இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை”. என்கிற இந்திரா, தொடர்ந்து “எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிற்து. பெண்ணின் அணுகுமுறை என்பது ஒரு வணிக முயற்சியின் மனிதப் பக்கம்.( the human side of the enterprise,) என்கிறார். ” ஒரு உதாராணம் சொல்கிறேன்” என்று ஆரம்பித்து அவர் சொன்ன செய்தி சுவையானது.
“எங்கள் நிறுவனத்தில் இருக்கும் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ஊழியர்களுக்கும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நான் கடிதம் எழுதுகிறேன். வேறு வேலைகளின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதற்காக என் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒரு பதினைந்து நிமிடம் இதற்காகச் செலவிடுகிறேன்.. இந்தக் கடிதங்கள் ஒரு பக்க அளவில்தான் இருக்கும் ஒரே ஒரு பக்கம்தான். பிசினஸ் விஷயம், சொந்த விஷயம் எல்லாம் அதில் எழுதுவேன். இரண்டு வாரத்திற்கு முன் எழுதிய கடிதம் என் மகளைப் பற்றியது. அவள் இப்போது மேல்நிலைப் பள்ளியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கும் முதல் நாளன்று நானும் என் கணவரும், கையில் காமிராவை எடுத்துக் கொண்டு எங்கள் தெருமுனயில் உள்ள ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்குச் சென்று ஸ்கூல் யூனிஃபார்மில் இருக்கும் அவளோடு படம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆண்டும் அவள் புறப்படும் போது நாங்களும் காமிராவும் கையுமாகக் கிளம்பினோம். அவள் “ அம்மா! நான் இன்றிலிருந்து காரில் போகப் போகிறேன். நானே காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொள்கிறேன்” என்றாள். அவள் இப்போது சிறுமியல்ல, வளர்ந்த ஒரு இளம் பெண் என்பது அப்போதுதான் எங்கள் புத்தியில் உறைத்தது. ஒரு கணம் நிலை குலைந்து போனோம். அவள் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு ந்டந்தது, நாங்கள் அவளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றி உட்கார வைத்தது, அவள் மூஞ்சியை ’உம்’ என்று வைத்துக் கொண்டு டாடா காட்டியது, பஸ் மெல்ல நகர்ந்து சென்றது எனப் பழைய காட்சிகள் நினைவில் வந்து போயின. ஸ்கூல் யூனிபார்மில் இருந்த அந்தச் சிறுமி என்ன ஆனாள்? இன்று ஒரு இளம் பெண்ணாக ஆகிவிட்டாள். காலம் பறந்து கொண்டிருக்கிறது. நான் இதை என் சக ஊழியர்களுக்கு எழுதினேன். காலம் பறந்து கொண்டிருக்கிறது நண்பர்களே உங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். ஏனென்றால் ஒரு சிறுமி இளம் பெண்ணாகி உங்களிடமிருந்து பிரிந்து செல்லும் நாள் வரும் போது உங்கள் உள்ளம் உடைந்து போகும். அதன் பின் இந்த நாட்கள் திரும்பக் கிடைக்காது என்று எழுதினேன். ஒரு ஆண் தலைமை அதிகாரி இதை எழுதியிருப்பாரா?” என்று முடித்தார் இந்திரா. .
சொல்லுங்கள், ஆண் அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பார்களா? இந்திரா சொன்னதைப் பற்றி ஆண் காகங்கள், -மன்னிக்கவும் - ஆண் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்?
10 hours ago
15 comments:
அழகான கூடு. வித்தியாசமான செய்தி. இரண்டையும் தொடர்பு படுத்திய விதம் அழகு.
நீங்கள் ஆண் வாசகர்களை மட்டுமே கேட்டிருந்தாலும்... :)
பெண்கள் குடும்பத் தலைவிகளாக மட்டுமே இருந்த காலங்களில் இப்படி ஒரு செய்தியை ஒரு பெண் சொல்லும்படி நேர்ந்திருக்காது என்று தோன்றுகிறது. காலம் ஓடுகிறது என்பதை உணர்ந்து, குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் ஆண்கள் இந்தக் காலத்தில் அதிகம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கண்டிப்பாக ஆண்கள் இப்படி எழுதி இருக்க மாட்டார்கள்
சில விதி விளக்கு இருக்கலாம்
சத்தியமா ஒரு ஆண் அதிகாரி இப்படி எழுத மாட்டார்... ஏன்ன, அவுங்களுக்கு பணம் தான் முக்கியம்..
பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு அந்த வலி இருப்பதில்லை என்பது பொதுவில் வெள்ளிடைமலை. அப்படி ஏன் என்பதும் சிந்தனைக்குரியது.
இந்த காலத்து பெண்கள் புதுமை பெண்களாக ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக எல்லா நிலைகளிலும் இருப்பினும், நடைமுறை சார்ந்த குடும்பப் பொறுப்புகளும், அவை ஏற்படுத்தும் உணர்வுரீதியான நினைவுகளும் மரபாகவே அவர்களுக்குதான் அதிகம். பெண்மை என்பது பொதுவில் உணர்வுகளின் சங்கமம். அதற்கு குழந்தைகளிடம் அவர்களுக்குள்ள தொப்புள்கொடி உறவும் ஒரு மேலதிகமான காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம். ஆண்களின் உலகம் இதிலிருந்து சற்று வேறுபட்டது என்பற்கு விளக்கம் அவசியமில்லை என்று நம்புகிறேன்.
அருமையாக ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.
உங்கள் கட்டுரையை படித்து முடிக்கும் போது என் உடல் சிலிர்த்தது. அற்புதமான எழுத்து!!! வாழ்த்துகள்!!! ஆனால் உங்கள் கருத்தின் மீது எனக்கு உடன்பாடு கிடையாது. உணர்வுகளுக்கும் அன்புக்கும் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது!!! வேலைகளின் நடுவிலும் பிள்ளை முகம் நினைப்பவள் அன்னை. பிள்ளைகளின் முகங்களுக்காகவே தன் உடல் பிழிந்து உழைப்பவர் தந்தை. இருவரும் சமம் தான். இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இந்திரா அவர்கள் குடுபங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வியக்க வைக்கிறது. இதுதான் இந்திய இந்தியர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனக்கு உங்களை போல அழகாக எழுத தெரியாது. ஆனால் இது தான் என் கருத்து.
பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து மறுவீடு செல்லும் போது குலுங்கிக் குலுங்கி அழும் பெரிய அதிகாரி ஆண்களைப் பார்த்திருக்கிறேன்.ஆண்களுக்குத் தன்னை வெளிப்படுத்தத் தெரியாதோ என நான் நினைக்கிறேன்.
பொதுவாக இந்த மாதிரியான உணர்ச்சிகரமான விசயங்களை ஆண்கள் பொதுவில் காட்டமாட்டர்கள்..
உங்கள் பதிவிற்கு கமெண்டஸ் எழுதிய நான் அதை உங்கள் கமெண்ட்ஸ இடத்தில் போட இயலாத பபெரிய அளவாக போனதால் அதை என் ப்ளாக்கில் ஒரு பதிவாக போட்டு உள்ளேன். முடிந்தால் வந்து படிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். வலிகள் ஆண்களுக்கு வருமா? http://avargal-unmaigal.blogspot.com/2010/11/blog-post_24.html
மிக அற்புதமான பதிவு!
ஆண்களின் இந்த வலி பெரும்பாலும் வலியாக வெளியே தெரிவது இல்லை. அவர்களின் செயல்கள் வாயிலாக ஒருவேளை வெளிப்படலாம்.
நல்ல பதிவு.
மாலன் சார்,
சுவாரசியமான தகவல்கள், நன்றி. உங்களூக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கை,கால்,அலகு என்று எதுவும் இல்லாத ராஜநாகம் முட்டையிடும் முன் கூடு கட்டுகிறது. எத்தனை முயற்சி தேவை!! நேஷனல் ஜியாகிரபியில் பார்த்திருக்கிறேன்.
அந்தம்மா கூறுவது சும்மா :-) இது போன்ற உணர்வுகள் இருபாலருக்கும் பொருந்தும். பெரும்பாலான ஆண்கள் அவை குறித்து எழுத மாட்டார்கள். அவர் அப்படி எழுதியது பெரிய விஷயமும் அல்ல, என்னளவில்!
அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com
நமது நாட்டைப் பொறுத்தவரை ஆண்களுக்கு அந்த வலி இருக்காது என்றேத் தோன்றுகிறது
மிக நல்ல பதிவு. மிகச் சிறந்த உவமை தொடர்பு. இருந்தாலும் என்னால் ஏற்றுகொள்ள இயல்வில்லை ஆண்கள் அன்பில்லாதவர்கள் என்ற் போக்கில் உள்ள விமர்சனத்தை. அவர்கள் அத்துனை எளிதில் தங்கள் உள்ளகிடக்கையை வெளிப்படுதத மாட்டார்கள் தங்கள் மிக நெருங்கிய நன்பர்களிடதில் கூட.
நல்ல பதிவு :-) ..உங்கள் கருத்தில் மட்டும் உடன்பாடில்லை ..ஆண் பெண் என்ற பேதமெல்லாம் அன்பில் கிடையாது ..கடித வெளிப்பாடு மாறி இருக்கலாம் ..வலி ஒன்றே ...
எனக்கு அந்த வலி உண்டு. தினம் தினம் என் மகளின் குறும்புகளை ரசிக்கும் போது, 10 வருடம் கழித்து எப்படி என்று தோன்றும். நான் சிறந்த மகனா , கணவனா என்று தெரியாது. ஆனால், நான் சிறந்த தந்தை !
Post a Comment