Tuesday, February 16, 2016

திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையானதா?

தேர்தல் 2016

இது எங்களுக்குக் கிடைத்த பொங்கல் பரிசு என்று, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலிருந்து 2013-இல் தி.மு.க. வெளியேறியபோது குதூகலித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இப்போது காதலர் தினத்திற்கு முன்னதாக காங்கிரஸிற்கு இன்னொரு பரிசு கிடைத்துள்ளது. அது தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி.

 இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த தில்லியிலிருந்து வந்த குலாம் நபி ஆசாத்தை கருணாநிதியின் வீட்டு வாசலில் நின்று வரவேற்றவர், காங்கிரஸ் தலைமையிலான அரசால் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்று பிணையில் மீண்ட கனிமொழி. வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 2ஜி அலை ஒதுக்கீட்டில், காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிந்தே எல்லாம் நடந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் தனது கருத்தை வெளியிட்டு இரண்டு நாள்கள் கூட ஆகவில்லை; கூட்டணி ஏற்பட்டுவிட்டது.

 காங்கிரஸ், தி.மு.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி, கருத்தொற்றுமையினாலோ, கொள்கைப் பிடிப்பினாலோ, பரஸ்பர அபிமானத்தினலோ ஏற்பட்டுவிடவில்லை. (ராகுல் காந்தி சென்னைக்குப் பலமுறை வந்தபோதும் ஒருமுறை கூட கருணாநிதியைச் சந்தித்ததில்லை). என்றபோதிலும், இந்தக் கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் அவசியம் தேவைப்படும் ஒன்றாகிவிட்டது. காரணம் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல, survival-ஐயும் தீர்மானிக்கும் தேர்தல்.

 இதைவிடக் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்த காலங்களில் கூட இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொண்டிருந்திருக்கின்றன. எந்த இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டு, நெருக்கடிநிலையால் "மிசா' கொடுமைகளுக்கு உள்ளானதோ, அதே இந்திராவின் தலைமையில் அமைந்த காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டு 1980 தேர்தலைச் சந்தித்தது. இலங்கையில் நடைபெற்ற போர் குறித்த முரணான கருத்துகளைக் கொண்டிருந்த போதும் இரண்டு கட்சிகளும் கூட்டணி கண்டே 2009 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன.

 கடந்த காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட்ட தருணங்களில் அது அவற்றிற்கு ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. 1971 மக்களவைத் தேர்தலில் அது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரúஸாடு கூட்டணி வைத்துக் கொண்டபோது, எதிரணியில் காமராஜரைத் தவிர எவரும் வெற்றி பெறவில்லை. 1980 மக்களவைத் தேர்தலிலும் அது 37 இடங்களைப் பெற்றது. 

 ஆனால் அன்றிருந்த காங்கிரúஸா, அன்று காங்கிரஸிற்கு இருந்த தலைமையோ, இன்றில்லை. இன்னும் சொல்லப்போனால் அன்றிருந்த தி.மு.க.வும் இன்றில்லை. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட போது சுமார் 20 சதவீத வாக்குகளைப் பெற்றது (19.8).
 அதே காங்கிரஸ், (மூப்பனார் தலைமையில் பிளவுபட்டு அவர் மறைவுக்குப் பின் மீண்டும் ஒருங்கிணைந்த காங்கிரஸ்) 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது பெற்ற வாக்குகள் வெறும் 4.3% அதன் பின், 2014 நவம்பரில் கட்சி உடைந்து ஜி.கே.வாசன் தலைமையில் ஓர் அணியினர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநிலக் காங்கிரஸைத் தொடங்கியிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இந்தச் சூழ்நிலையில் எழும் கேள்வி திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அளவு வலிமை கொண்டதா?

 பழைய கணக்குகளுக்குள் போகாமல், 2001-லிருந்து பார்த்தால், தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், மும்முனைப் போட்டி என்றால் குறைந்தபட்சம், பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் பெற வேண்டும். நான்கு முனைப் போட்டி என்றால் 45% வாக்குகளைப் பெற வேண்டும். அதற்குமேல் போட்டி அதிகரித்தால் இந்த அளவு குறையலாம். ஆனால், 2001-க்குப் பின் அதிகபட்சமாக நான்கு முனைப் போட்டிதான் நடைபெற்றிருக்கிறது (சுயேச்சைகள் நீங்கலாக).
 இந்த 45-இலிருந்து 50% என்பதை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உள்பட எந்தக் கட்சியாலும், தனித்து அடைய முடியாது. அதனால்தான் பெரிய கட்சிகளுக்கும்கூட கூட்டணிகள் தேவைப்படுகின்றன.
 கூட்டணிகள் செய்யக் கூடிய "மாஜிக்' அலாதியானது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வாக்குகள், தி.மு.க. பெற்ற வாக்குகளை விட அதிகம். அ.தி.மு.க. ஒரு கோடியே ஏழு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றது. தி.மு.க.வுக்கு 87 லட்சத்து 28 ஆயிரம். அதாவது, 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தும் அ.தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 

 காரணம், திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 15 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தது. அதாவது, திமுக தனது பலத்தினால் அல்ல, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியால் ஆட்சியைப் பிடித்தது. (இதனால்தான் ஜெயலலிதா அதை "மைனாரிட்டி' திமுக ஆட்சி என்று சொல்லி வந்தார்.) அதைப் போன்ற மாஜிக்கை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் நிகழ்த்துமா?

 கடந்த இரு தேர்தல்களை (2011 சட்டப் பேரவை, 2014 மக்களவை) வைத்துப் பார்க்கும் போது திமுகவின் பலம் 22 அல்லது 23 சதவீதம் இருக்கலாம். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 22.4%. இது காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவற்றோடு கூட்டணி வைத்துப் பெற்ற வாக்குகள். 2014 மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 23.6%. அப்போது, காங்கிரஸும் பா.ம.க.வும் அதனுடன் இல்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவை அதனுடன் இருந்தன என்ற போதும் அதனுடைய வாக்கு 1 சதவீதம் அளவிற்கே உதவியது.

 இந்தப் புள்ளி விவரம் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. 1. பா.ம.க. வெளியேறியதால் தி.மு.க. பெரிதாக எதையும் இழந்து விடவில்லை. 2. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போதும் இல்லாத போதும் அதன் வாக்கு சதவீதம் பெரிதாக மாற்றமடைந்து விடவில்லை. 

 பா.ம.க.வும் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணியில் இருந்தபோது, 2011-இல் தி.மு.க. பெற்ற வாக்குகளையே, இன்று அவை அதனுடன் இல்லாத போதும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் கூட தி.மு.க.வின் பலம் 23 சதவீதம். 2011-இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 9%. தனித்து நின்ற மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதம் பெற்றது. இவை த.மா.கா. பிரிந்து செல்லும் முன் பெற்றவை. 

 இன்றைய நிலையில், அதிகபட்சமாக காங்கிரஸின் வாக்கை 6 சதவீதம் என எடுத்துக் கொண்டால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் பலம் 23+6=29%. இது ஆட்சியமைப்பதற்குத் தேவைப்படும் 45 சதவீதத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டிக்கும் மேலாக போட்டியிருக்கும் என வைத்துக் கொண்டாலும் எப்படியும் 40 சதவீதமாவது வேண்டியிருக்கும்.

 ஒருவேளை, தே.மு.தி.க.வும் இந்தக் கூட்டணிக்கு வருமானால் நிலைமை எப்படி மாறும்? தி.மு.க. கூட்டணியில் இதுவரை தே.மு.தி.க. போட்டியிட்டதில்லை. அதனால், தி.மு.க.வின் உறவு அதற்கு எத்தனை தூரம் வாக்குகளாக மாறும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 

 அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்ட 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் சுமார் 8% (7.9). இந்தக் கட்சிகள் எதுவுமில்லாமல், பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு இணைந்து 2014 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது அது பெற்ற வாக்குகள் 5%. கடந்த தேர்தலுக்குப் பின் கட்சி பிளவு கண்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் அதற்கு அதே 8% வாக்குகள் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட திமுக கூட்டணி 37 சதவீத வாக்குகள் பெறலாம்.

 சரி, அ.தி.மு.க. நிலை எப்படி?
 எந்தக் கட்சியோடும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் 2014 தேர்தலில் அது தனித்துப் போட்டியிட்ட மக்களவைத் தேர்தலில் அது பெற்ற வாக்குகள் 44.3%. ஆட்சியிலிருந்துகொண்டு தேர்தலைச் சந்திப்பதால் அதன் வாக்கு வீதத்தில் சரிவு (anti incumbency) ஏற்பட்டிருக்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூட, அந்த சரிவு 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. 

 2006-இல் அது ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த போது கூட தி.மு.க.வை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. முன்னரே சொன்னது போல் அப்போது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதனோடு கூட்டணியில் இருந்த பா.ம.க., மற்றும் இடதுசாரிகள் இப்போது தி.மு.க. கூட்டணியில் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் சுமார் 10 சதவீதம். அதை தே.மு.தி.க. ஈடுகட்டுமா என்பதைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். 

 கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். களப்பணி, பரப்புரை, பணபலம், ஜாதி ஆதரவு, வேட்பாளரின் செல்வாக்கு, கோஷ்டிப் பூசல் இவற்றோடு உள்ளூர் நிலவரங்களும் இந்தத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
களப்பணி, பரப்புரை, பணபலம், ஜாதி ஆதரவு, வேட்பாளரின் செல்வாக்கு, கோஷ்டிப் பூசல் இவற்றோடு உள்ளூர் நிலவரங்களும் இந்தத் தேர்தலின் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
தினமணி 16.2.2016

1 comment:

மானுடன் said...

எந்தா சாரே!அதிமுக 44 சதவிகித வாக்குகளை இன்னமும் கையில் வைத்துக் கொண்டிருப்பதாக கணக்கு போடுகின்ற கலையை குமாரசாமியிடம் ஏகலைவனாக நின்று கற்றீர்களோ? இந்த ”வாக்கு வங்கி”, ”வாக்கு வங்கி” என்று சொல்வது மக்களை அவமதிப்பதில்லையா சாரே? என்னவோ நிரந்தர வைப்பு தொகை போல மக்கள் ஒரு கட்சியின் அடிமைகளாக இருப்போம் என்று எழுதி தந்திருக்கிறார்களா என்ன? மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத மந்தைகள் என்று எல்லோருமே சொல்லி வைத்தாற் போல பேசுகிறீர்களே?