Friday, January 30, 2009

முத்துக்குமார்

தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அக்டோபர் மாத மத்தியில் தமிழக அரசியல்கட்சிகள் இலங்கைப் பிரசினையில் மேற்கொண்ட மிகை உணர்வு நிலையின் உச்சம் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞனின்
தீக்குளிப்பு. அவரைத் தற்கொலைக்கு உந்தியதில், இலங்கைப் பிரசினை நெருப்பில் குளிர்காய முயன்ற தமிழக ஊடகங்களுக்கும் பங்குண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 2006) செஞ்சோலையில் குழந்தைகள்
இலங்கை விமானங்களின் தாக்குதலுக்கு பலியான போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதையும் இப்போது பிரபாகரன் பற்றிய தொடர், இலங்கை அரசியல் வரலாறு, குட்டிமணி ஜகன்
பற்றிய பழைய தொடரின் மீள்பிரசுரம் எனக் கடை விரித்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் அக்கறை எதன் மீது எனப் புரியும். தங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளால் (மின்வெட்டு, பணவீக்கம்,
விலைவாசி, எரிபொருள் தட்டுப்பாடு) மக்களிடையே ஏற்பட்டிருந்த சினத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஆளும் கூட்டணி இலங்கைத் தமிழர் பிரசினையைக் கையிலிடுத்துக் கொண்டதும்,
ஊடகங்கள் இந்த மிகை உணர்வுச் சூழலில் ஒரு 'மார்க்கெட்' இருப்பதை உணர்ந்து கொண்டு களமிறங்கின. தங்கள் பத்திரிகையின் வாசகர்களை (நுகர்வோர் என வாசிக்கவும்) மிகை உணர்வு நிலையிலேயே வைத்திருக்கும் வகையில் செய்திகள்/பேட்டிகள் வெளியிட்டன. அதன் விளைவு நேற்று சாஸ்திரி பவனில் கொழுந்துவிட்டு எரிந்தது.

இன்று என் கவலை எல்லாம், இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான
அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி ) ஒரு சம்பவம் ஒரு Syndrom ஆக மாறுவதில் ஊடகங்களுக்குக் கணிசமான பங்குண்டு.
இலங்கைப் பிரசினை விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான மோதல் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எளிமைப்படுத்தியே பெரும்பாலும் ஊடகங்களில் (வலைப் பதிவுகள் உள்பட) பார்க்கப்படுகிறது. ஆனால்
உண்மையில் அது பல தளங்கள் கொண்டது.

அரசுப்படைகளுக்கும், புலிகளுக்குமிடையே மோதல் நடக்கிறது என்பது கண்ணிற்குத் தெரியும் உண்மை. ஆனால் மோதல் எதன் பொருட்டு? தமிழ் மக்கள் சிங்களர்களுக்குச் சமமான சிவில் உரிமைகளைப் பெறும் பொருட்டு என எளிதாக ஊடகங்கள் எழுதவும் பேசவும் செய்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்த்க் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக
நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்றால் தமிழர்கள் அதிகாரம் பெறுவார்கள் என்பது முற்றிலும் சரியல்ல என்பதைக் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது. தங்கள் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்
கொண்டவர்களை -அவர்கள் தமிழர்களே ஆன போதிலும்- அவர்கள் பலமுறை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக்
கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ்-ஜெயவர்த்தன திட்டத்தில்
(scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு 'தேனிலவு' கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப்
புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல, தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.

எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.

இந்த மூர்க்கத்தனத்திற்கும், முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே இலங்கையை விட்டும் வன்னியை விட்டும் வெளியேறச் சக்தியோ, விருப்பமோ இல்லாத பொதுமக்கள் மாட்டிக் கொண்டு பலியாகி வருகிறார்கள்.எந்த ஒரு
போரிலும் இது போலப் பொதுமக்கள் crossfireல் மாட்டிக் கொள்வது நடக்க்கிற ஒன்றுதான் என்பதை அண்மையில் இராக்கில் உலகம் கண்டிருக்கிறது.

என்றபோதிலும் இலங்கைப் படைகள் கண் மண் தெரியாமல் சிவிலியன்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படும் அதிகமான இழப்பிற்கு புலிகளின் போர் அணுகுமுறையும் ஒரு காரணம் என அங்கிருந்து வரும்
செய்திகள் உணர்த்துகின்றன.
"We are urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery - shells and rockets at the army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people," states the Bishop of Jaffna Rt. Rev. Dr. Thomas Savundaranayagam in a letter to President Mahinda Rajapaksa"

இது ஜனவரி 26ம் தேதி வெளியான PTI செய்தி. (இது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் எழுதிய தலையங்கத்தைக் காண: http://www.dailynews.lk/2009/01/28/main_Editorial.asp)

"The ICRC urgently appeals to both sides to allow and facilitate the safe and voluntary movement of civilians out of the combat zone."

இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் (ICRC News Release No. 09/02) காணப்படும் வரிகள். (அழுத்தம் என்னுடையது) வேண்டுகோள் இரண்டு தரப்பிற்கும் விடப்பட்டிருப்பது விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் வெளியேற்றத்தை மறித்து வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இதை உறுதி செய்வது போல், இன்று (ஜனவரி 30) தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர்
அன்பழகன் "இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் ஏன் அதை மதிக்கவில்லை. இலங்கை அரசின் தற்காலிக போர் நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது ஆச்சரியமளிக்கிறது." என்று பேசியிருக்கிறார் (தினமணிச் செய்தி)
அப்பாவிப் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் இறப்பதற்கும் துயருக்குள்ளாவதற்கும் காரணம் என்ன என்பதை ஊடகங்கள் எடுத்துரைத்திருந்தால் ஒரு வேளை முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும். பொதுமக்களின் துயர் குறித்து அக்கறை கொள்ளாத பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாகத் திகழ்ந்த நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.

மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுக் கோபத்திற்குமிடையே இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்க முடியும்? போரை நிறுத்திவிட்டு இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுதலைப் புலிகளிடம் ஒரு பகுதியைக்
கொடுத்துவிடுங்கள் என இலங்கை அரசை வற்புறுத்துகிற நிலைப்பாடா? அது தமிழர்களை ஒரு சர்வாதிகர அமைப்பின் கீழ் தள்ளுவதாகாதா? அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் நாங்கள் உங்கள் சார்பாக இலங்கை அரசிடம் பேசுகிறோம் என்ற நிலைப்பாடா? அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது
என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரசார பிரங்கிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன? " ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக இந்தியா தலையிட வேண்டுமென்று
நாங்கள் கேட்கவில்லை. ஈழத்தை யாருடைய உதவியும் இன்றி புலிகளே வென்றெடுப்பார்கள். இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்யாமல் இருந்தால் போதும் என்றுதான் கேட்கிறோம் ( திருமாவளவனின் நடிகர் சங்க பேச்சு)

அதாவது இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதுதான் பிரசினை. ஆனால் இன்று (ஜனவரி 30) திருமாவளவன் சொல்வது என்ன? "ஒரு விடுதலைப் போராட்டக் குழுவை எதிர்க்க அல்லது அடக்க ஒன்றல்ல... இரண்டல்ல...
ஏழுநாட்டுப் படைகளும், ஏராளமாய் ஆயுதங்களும், போதாததற்கு இனத் துரோகிகளும் வேலை பார்த்துவரும் கொடுமையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே... அது இலங்கையில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது."
(http://thatstamil.oneindia.in/news/2009/01/30/tn-thiruma-hails-prabhakaran.html)

அதாவது இலங்கைக்கு ஏழு நாடுகள் ராணுவ உதவி அளித்துக் கொண்டிருக்கின்றன. எந்த மாதிரியான நாடுகள்?

அதையும் அவரே சொல்கிறார். "பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களவர்களுக்கு துணைபோகின்றன."

இந்தப் பின்னணியில் 29ம் தேதி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தரும் இந்த செய்தியையும்
(http://in.reuters.com/article/topNews/idINIndia-37728120090129)
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

"While domestic political sensitivities over the fate of Sri Lanka's Tamils forced India to ease its leverage, rivals China and Pakistan stepped into the breach, offering Colombo military assistance in its war against the Tamil Tiger rebels.
China has sold Jian-7 fighters, anti-aircraft guns and JY-11 3D air surveillance radars to the resurgent Sri Lankan army as it seeks to finish one of Asia's longest-running wars by squeezing the Liberation Tigers of Tamil Eelam fighters in a shrinking patch of jungle in the north.
Pakistan also supplied the army small arms, multi-barrel rocket launchers and trained Sri Lankan air force in precision guided attacks against the rebels, strategic analysts said.
"There have been several shipments of weapons from Pakistan. What has made a real difference to the outcome of the war is the Sri Lankan air force which has been rigorously trained by Pakistan in precision-guided attacks.," retired Indian army major general Ashok Mehta said.
India, by contrast, has limited its military assistance to the Sri Lankan army to "defensive weapons".

இந்தச் செய்திகள் சொல்வதென்ன?
1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)

2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது

3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.

இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

இலங்கையின் கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதில் சீனா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் செய்தி சுட்டிக் காட்டுகிறது:
"The strategic battle in Sri Lanka is seen as part of a wider power struggle in South Asia, involving not only India and Pakistan but also China, which seeks to gain influence in the important economic region.

China has made strides developing strategic assets, like the Gwadar port in Pakistan, the Sri Lankan port of Hambantota and assets in Yangon, part of a strategy to protect shipping lanes.

Sri Lanka sits next to shipping lanes that feed 80 percent of China's and 65 percent of India's oil needs. "

இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம். ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் நம் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் முத்துக்குமார் எரிந்து போகாமல் காப்பாற்றியிருக்கலாம்.

இன்னொன்றையும் ஊடகங்கள் நினைவுபடுத்தியிருக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தமிழ் பேசும் இரு வேறு நாடுகள். ஒரு மொழி பேசும் பல நாடுகள் உலகில் இருக்கின்றன, உதாரணம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆங்கிலம் பேசுகின்றன. காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உருது பேசப்படுகிறது. வங்காளத்திலும் வங்கதேசத்திலும் வங்காளம் பேசப்படுகிறது. சீனத்திலும் சிங்கப்பூரிலும் சீனம் பேசப்படுகிறது.அதே மொழியைப் பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு
விஷயங்களில் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.

ஆனால் ஒரு பக்கம் தொப்புள் கொடி உறவென்றும் மற்றொரு பக்கம் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்றும் நம் அரசியல் வாதிகள் செளகரியம் போல் பேசி வருகிறார்கள். அதைத் தவிர்த்திருந்தால் முத்துக்
குமர்கள் கருகியிருக்க மாட்டார்கள்.

35 comments:

பிச்சைப்பாத்திரம் said...

அறிந்தோ அறியாமலோ எந்தவொரு பிரச்சினையையும் மிகை உணர்ச்சியோடு அணுகவே தமிழர்கள் கற்றுத்தரப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் இப்பதிவு போன்று தெளிவாக ஒரு பிரச்சினையை அணுகும் சிந்தனையை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களின் முன் வைத்திருந்தால் முத்துக்குமார் போன்ற அப்பாவிகளின் உயிர் பலியாகாமலிருந்திருக்கும்.

enRenRum-anbudan.BALA said...

மாலன் சார்,

நல்லதொரு அலசல்.. ராஜீவ் காலத்தில் இந்தியா தலையிட்டபோது என்ன ஆனது என்ற கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள் (சரி தான்), இப்போது ஏன் தலையிடக் கூடாது என்பதை வலியுறுத்த (சரி இல்லை)!

ஏனெனில், பல காலமாக புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் சூழலில், இந்தியா (விரும்பினாலும்) effective ஆக தலையிட முடியாது என்பது தானே யதார்த்தம், அது போலவே இந்தியா மீடியேட்டராக இருக்கவே முடியாது என்பதும். முக்கியமாக, தற்போதைய சூழலில், இலங்கை அரசு புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமுமில்லை என்பதை தாங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com

Suresh ET said...

{{ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.}} - இந்தியா இதை முழு மனதோடு, தன்னால் உண்மையாகவே இயன்றவரை செய்கிறதா என்பதே கேள்வி. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்/பட்டுளார்கள் என்பதை நினைவு கூர்வது இங்கே அவசியம். இலங்கை அரசை இந்தியா சட்டப்புர்வமாகக் கூட நிர்பந்திக்க முயன்றிதில்லை. இதற்கும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் புகுவதற்கும் என்ன சம்மந்தம்? இவ்வாறு முதுகெலும்பில்லாமல் "நட்புரவாடினால்" மட்டும் இலங்கை அரசு பிற நாடுகளை நன்றி உணர்வோடு புறந்தள்ளிவிடும் என்று இந்திய கனவு காண்கிறதா?

அதேபோல் இலங்கையிலிருந்து அகதியாக வந்துள்ள தமிழர்களின் நிலைமையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு சில மாதங்களுக்கு முன் BBC ஒலிபரப்பிய ஒரு நிகழ்சியில் திருப்பூர் அருகே உள்ள அகதிகள் முகாம் (சிறைச்சேரி என்பதே பொருத்தம்) ஒன்றில் நடக்கும் அடக்குமுறைகளைக் கண்டு திடுக்கிட்டேன். ஐநா உட்பட எந்த அமைப்புகளுக்கும் அங்கே செல்ல அனுமதி இல்லை -- காட்சிகள் அனைத்தும் மறைமுகமாகப் படம் பிடிகப்பட்டவை. அங்குள்ளவர்கள் காலணாக் கூலிக்கு வேலைப்பாடுகளை செய்து தர அத்துணிகள் மூட்டை மூடையாக லண்டனின் பெருங்கடைகளில் மலிவு விலைக்கு விற்கப்படுகிறது (அதே நிகழ்ச்சியில் காட்டப்பட்ட இந்தியர்கள் நிலை சற்றே உத்தமம் என்பது வேறு விஷயம்).

இது போலப் பல முகாம்கள், பலவிதமான அடக்குமுறைகள். இந்தியாவைக் காட்டிலும் பல ஆயிரம் மயில்களுக்கப்பால் இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்திருப்பது வியப்பளிக்கவில்லை.

உங்கள் வாதங்களை தர்கா ரீதியாக ஏற்கும் அதே வேளையில் உங்கள் பதிவில் விடுபட்டுப்போன/மறைமுகமாக முன்னிறுத்தும் முக்கியமான புள்ளி இது: இலங்கைக் தமிழர்களை பொருத்தமட்டும் இந்தியாவின் நிலைப்பாடு ஏதோ ஒரு தவிர்க்க முடியாத கட்டாயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற கூற்று. இதை இந்தியக் குடியின் நோக்கங்களின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மட்டுமே ஏற்கக் கூடும்.

Boston Bala said...

பதிவிற்கு நன்றி

மாயன் said...

நடுநிலையான கட்டுரை..

//விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்றால் தமிழர்கள் அதிகாரம் பெறுவார்கள் என்பது முற்றிலும் சரியல்ல என்பதைக் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது. தங்கள் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்
கொண்டவர்களை -அவர்கள் தமிழர்களே ஆன போதிலும்- அவர்கள் பலமுறை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.
//

//ஆனால் விடுதலைப்
புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல, தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
//

//
அதே மொழியைப் பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு
விஷயங்களில் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.
//

//
சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல.
//

உண்மை...

நாம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காக இலங்கையிடம் பகைத்து கொண்டால் இலங்கை அமெரிக்க, சீனா அல்லது பாகிஸ்தானின் தளமாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.. அப்படி ஏதும் ஆகி விட்டால் வடக்கில் எல்லைப் பகுதியில் இருக்கும் பதட்டம் தெற்கேயும் ஆரம்பித்து விடும்... ஈழ தமிழர்கள் தாய் தமிழகத்திலும் புகலிடம் தேட முடியாமல் போய் விடும்...

இலங்கையோ அல்லது விடுதலை புலிகளோ நமது நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை... இலங்கைக்கு உதவும் போர்வையில் நம் பலமான பகை நாடுகள் அங்கே தளம் அமைத்து விட்டால் அது நமக்கு நல்லது அல்ல.

இந்த பிரச்சினையை உணர்ச்சிப் பூர்வமாக அணுகக்கூடாது என்பது நமது தமிழின தலைவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது

மாயன் said...

சுரேஷ்

அகதிகளின் நிலைக்கு காரணம் இந்திய அரசு மட்டும் அல்ல.. தமிழக தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்... போர் நடக்கும் போது ஈழத்தமிழர்களுக்காக கொடி பிடிக்கும் அனைவரும் இங்கே அகதிகளாக துன்பப்பட்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லையாம்...? தமிழக அரசு அவர்களுக்கு எதுவும் செய்யக்கூடாது என இந்திய அரசாங்கம் தடுக்கிறதா என்ன?

சாதரண பொது மக்களாகிய நாம் தான் கொதிக்கிறோம், பதறுகிறோம்... அரசியல் தலைவர்களுக்கு இந்த பிரச்சினை அரசியல் செய்ய இன்னொரு வாய்ப்பு... தமிழக சட்டசபை, அரசு, உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மத்திய அரசு செவி மடுக்கும்... எடுக்கிறார்களா?

-/சுடலை மாடன்/- said...

ஒரு பத்திரிகையாளரான உங்களுக்குப் பத்திரிகைகள் ஏன் இலங்கை அரசால் அனுமதிக்கப் படுவதில்லை என்று தோன்றவில்லை. பத்திரிகையாளரான உங்களுக்கு எத்தனை ஊடகத்துறையினர் இதுவரை அரசாங்கத்தால் கொலை செய்யப் பட்டுள்ளார்கள் என்றெல்லாம் தெரியாதா? தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வேண்டாம், நீங்களெல்லாம் அவர்களுக்காகக் கரிசனப்பட்டால் உங்கள் நடுனிலை-லிபரல் புனித பிம்பம் கலைந்துவிடும். அரசு நடத்திய சிங்களப் பத்திரிகையாளரான லசாந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைப் பற்றி உலக நாடுகளின் அனைத்துப் பத்திரிகையாளர்களின் மத்தியிலும் கண்டனம் எழுந்ததே.

http://www.thesundayleader.lk/20090104/editorial-.htm

http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm

பத்திரிகையாளனான உங்களிடமிருந்து இதுவரை ஏதாவது வந்துள்ளதா? ஏன் இந்த இடுகையில் கூட உங்கள் லிபரல் வேசத்துக்காகக் கூட அதைப் பற்றி முணுமுணுக்கவில்லை?

ஏனெனின் பத்திரிகையாளன் வேலை, லிபரல் வேசம், தமிழர்களின் மேலான பாசாங்கு கரிசனம், இலங்கை அரசைப் பற்றிய இலேசான விமர்சனம் என எத்தனை நயவஞ்சக நாடகங்களைப் போட்டாலும் உங்களைப் போன்றவர்களுக்குள்ளே ஒளிந்து கிடக்கும் பார்ப்பனிய அரசியல் தமிழர்களின் மத்தியில் என்றாவது தெளிவு ஏற்படும் காலம் வரத்தான் செய்யும். அதுவரை தமிழனை இந்தியனாக்குவதற்கு செங்கல்லைப் போட்டுத் தேய்த்துக் கொண்டேயிருங்கள்!

//எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.//

எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை, எங்களுடைய பார்ப்பனிய நலன் கோலோச்சும் இந்தியா வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் பிடிவாதத்துக்கும் கூட வேறுபாடு இல்லைதான்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

இராவணன் said...

//நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.//

மிக உண்மை.
ஆனால் ஊடகங்கள் ஒரு சாரார் மிகப்பிடிவாதமாக கேவலமான செய்திகளை வெளியிடுவதையும் (Hindu.Times of Inda, தினமலர்..) அதை எதிர்த்தோ (வியாபார நோக்குடனும்) பிற பத்திரிக்கைகள் உணர்ச்சிவசப்பட்டு அதை அனுகுவதும் தான் கார்ணம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

//அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.//

அதே வரலா்ற்றை சற்றே தெளிவாக
ராஜீவ் கா்ந்தி என்ன செய்தார்.IPKF ப்ற்றியும் திலீபன் பற்றியும் இந்திய இராணுவம் EPRLF க்கு ஆயுதங்கள் கொடுத்ததையும் பிராபக்ர்னை அமைதிப்பேச்சுக்கு வரும் பொழுது சுட்டுக்கொல்ல சொன்னதை்யும் இன்ன பிற

//1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)//

இதென்ன வாதம்.
இங்குஇருக்கும் 7 கோடித்தமிழர்கள் இந்தியா தன் நாட்டுமக்களாக நினைத்திருந்தால் அவர்கள் உணர்வுகளை மதி்த்து அவர்களின் இனத்தை காப்பதற்கு துனை போய் இருக்கவேண்டுமே தவிர பிற நாடுகளுடன் ்போட்டி போட்டி தமிழர்களை கொல்வதல்ல.

//கோபம் திரு்ம்பினால?!!!//

இந்திய தென் கிழக்கு ஆசியாவின் வல்லரசு.
இலங்கை சுண்டகாய் நாடு.எ்ம் நாடு எம் உணர்வுகளுக்கு எதி்ராக செயல்படுவதை ஏற்க முடியாது.
இவ்ளவும் பயம் இருப்பவர்களாக இருந்தால் காஷ்மீரை பிடிவாதமாக விட்மாட்டோம் என்று இவ்்ளோ பணத்தை செலவிட வேண்டிய அவசியமென்ன..

//2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது//

இப்பொழு்தும் அவை உதவிக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்பொழுதும் இலங்கை பாகிஸ்தானிடமும் சீனாவிடம் ஆயுதம் வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தி்யா உதவுவதால் இலங்கை பிற நாடுகளின் (நம் பகை நாடுகளின்) உதவிக்ள் பெருவதை நிறுத்தியிருக்கவேண்டும்.


//3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.//

comedy panna vendam.

ஏற்கனவே மாதம் 3 முறை கப்பல் கப்பலாக ஆயுதம் ்போய்க்கொண்டுதான் இருக்கின்றன


//இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.//

இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். so at any cast , pakisthan helping srilanka. srilanka accepting its help.

///இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம்.///

யாருடைய தற்கொலைக்கு அன்பரே...


//ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.//

பைத்தியகாரத்தணம்.
ஆயுதம் கொடுப்போம் யுத்தம் நி்ற்காது. ம்க்கள் மட்டும் உயிருடன் safe zone வருவார்கள். அவர்களை கற்்பழித்து கொல்வோம்..



இப்படி நடுநிலை என்ற பெ்யரில் உ்ண்மைக்கு புறம்பாக செ்ய்திகளை பரப்புவதும் சில முத்துக்குமார்்களை உருவாக்கும் நண்பரே.

Anonymous said...

சுரேஷ் கண்ணன்
//அறிந்தோ அறியாமலோ எந்தவொரு பிரச்சினையையும் மிகை உணர்ச்சியோடு அணுகவே தமிழர்கள் கற்றுத்தரப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.//

ஆக, என்ன நடந்தாலும் உணர்ச்சியற்ற ஜடங்களாக இருக்க தமிழர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்கிறீர்களா? கற்பனைப் புனைவுலகத்தில் மிதப்பவர்கள் நிஜ உலகத்தில் நடப்பவற்றைக் குறித்து அக்கறையில்லாதிருப்பது ஆச்சரியேதுமில்லை.

//ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் இப்பதிவு போன்று தெளிவாக ஒரு பிரச்சினையை அணுகும் சிந்தனையை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களின் முன் வைத்திருந்தால் முத்துக்குமார் போன்ற அப்பாவிகளின் உயிர் பலியாகாமலிருந்திருக்கும்.//

ஆமாம், மாலன் இந்த முப்பரிமாணக் கட்டுரையை முன்னாடியே வரைந்து முத்துக்குமாரிடம் கொடுத்திருந்தால் அவர் தீக்குளித்திருக்கமாட்டார். ஆகவே, இந்த உயிர்காக்கும் கட்டுரையை நகலெடுத்து ஒவ்வொரு தமிழ் இளைஞரிடமும் கொடுக்கும் சேவையை நீங்கள் ஏற்றுச் செய்யலாம்.

முகமூடி said...

செவ்வாய், ஜூன் 14, 2005 அன்று நான் எழுதிய பதிவு இலங்கையின் கேந்திர முக்கியத்துவம். அதற்கப்புறம் பொதுவாக இலங்கை ப்ரச்னை பற்றி நான் பேசுவதில்லை (என்றே நினைக்கிறேன்). அன்றிலிருந்தும் அதற்கு முன்பும் பின்பும் மாறாத விஷயம் ஒன்றென்றால் அது, மாற்றாக வரும் எந்த ஒரு கருத்தையும் லொடுக்கு பாண்டிகள் பார்ப்பனீய ஜாடியில் போட்டு மூடுவது.. பதில் எதிர்பார்க்கவில்லை எனினும் இரு கேள்விகள் ::

அ) இலங்கை அரசாங்கத்திடம் போர்நிறுத்தம் குறித்து வலியிருத்த எல்லாதிக்கிலிருந்தும் நிர்ப்பந்தங்கள் வருகின்றன. ஆனால் அதற்கு பரஸ்பரமாக இலங்கை அரசாங்கம் ஏதாவது வலியிருத்த விரும்பினால் அல்லது உத்தரவாதம் கேட்டால் எதிர் தரப்பு சார்பாக அதற்கு பொறுப்பு எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள் யார்?

ஆ) இந்தியாவில் இருக்கும் ஏழு கோடி தமிழர்களை பற்றி இந்தியா கவலைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் மீதி இருக்கும் தொன்னூற்றி மூன்று சொச்சத்து தமிழரல்லாத இந்தியர்களுக்காக இந்தியா என்ன படவேண்டும் என்று கருதுகிறார்கள்.

narsim said...

மிஸ்டர் மாலன்..

மிக ஆழ்ந்த பதிவு.. மிக நல்ல அலசல்..

எந்த காரணங்கள் சொன்னாலும் இந்த மரணம் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று..

ஒரே ஒரு கருத்திற்கு விளக்கம் தேவை.. ஏனெனில் என் சிற்றவிற்கு விளங்கவில்லை..அல்லது எனக்கு உடன்பாடில்லை

//இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம். ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.//

இந்தியா போன்ற ஒரு சக்திவாய்ந்த(அட்லீஸ்ட் இலங்கையை விட) நாடு.. ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்பொழுது தர்க,தார்மீக என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திக்கொண்டிருக்காமல்... இலங்கையிடம் மிக அறுதியிட்டு "அப்பாவி மக்கள் வெளியேறும் வரை போரை நிறுத்த வேண்டும்" என்ற எச்சரிக்கை விட வேண்டும்.. இன்றைய நாளிதழில்(31)கூட 48மணிநேரம் மட்டுமே நிறுத்த முடியும் என்று சிங்கள அரசு சொல்லிவிட்டது..

இந்தியா என்ற ஜனநாயக நாடு நினைத்தால் தமிழ் மக்களை(அப்பாவி மக்களை) காக்க இயலும்..

ஆனால் அரசியல் என்ற ஒற்றைச்சொல்லில் சிக்குண்டு சின்னா பின்னமாகிப் போவதென்னவோ அப்பாவிமக்களும் முத்துக்குமரன் போன்ற உணர்ச்சிப்பிழம்புகளும் தான்..

Suresh ET said...

மாயன்,

நான் பிரச்சனைகுள்ளாக்க விரும்பியது "இந்தியக் குடிக்கு வேறு வழி இல்லை" என்பது போன்ற சித்தரிப்பு மட்டுமே. அதுமட்டுமன்றி, மத்திய மாநில அரசுகள் அனைத்தும் "இந்தியக் குடி" என்ற கட்டமைப்பின் அங்கங்களாகப் பாவித்தே எழுதி இருந்தேன்.

தமிழக அரசியல் தலைவர்களின் கயமைத்தனம் சொல்லித் தெரியத்தேவையில்லை. மாலன் தமிழக அரசின் மீதும் ஊடகங்களின் மீதும் வைக்கும் விமர்சனங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நாகராஜன் said...

மிகவும் நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை.ஆனால் உணர்வுகளை தூண்டி இலாபம் அடையும் சிலரால் விரைவில் நீங்கள் தமிழ் துரோகி பட்டியலில் இணைக்கப்படப் போகிறீர்கள்.ஆனால் மாலன் அவர்களே பெரும்பாலான தமிழ் மக்கள் உங்களது கருத்தினைத்தான் ஒத்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை.

மாலன் said...

>>இந்தியா மீடியேட்டராக இருக்கவே முடியாது என்பதும். முக்கியமாக, தற்போதைய சூழலில், இலங்கை அரசு புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமுமில்லை என்பதை தாங்கள் ஒப்புக் கொள்வீர்களா (எ.அ.பாலா)<<

இந்தியா மீடியேட்டராக இருக்கவே முடியாது என்று சொல்ல முடியாது. இன்று இருக்கமுடியாது. போர் முடிவுக்கு வந்து, ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்ட சூழ்நிலையில், அரசியல் ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டிய கட்டத்தில் இல்லாத சூழ்நிலையில் இந்தியா நிச்சியம் மீடியேட் செய்ய வேண்டும். செய்யும்
தற்போதைய சூழலில், அதுவும் விடுதலைப் புலிகளோடு பேச்சு நடத்த இந்தியா உதவுவது என்பது அங்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற ஆயுதமேந்திய ஒரு குழு அதிகாரம் பெற உதவுவதாக ஆகிவிடும்.இதில் ஆர்வம் என்ற கேள்விக்கே இடமில்லை

>>இந்தியா போன்ற ஒரு சக்திவாய்ந்த(அட்லீஸ்ட் இலங்கையை விட) நாடு.. ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்பொழுது தர்க,தார்மீக என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திக்கொண்டிருக்காமல்... இலங்கையிடம் மிக அறுதியிட்டு "அப்பாவி மக்கள் வெளியேறும் வரை போரை நிறுத்த வேண்டும்" என்ற எச்சரிக்கை விட வேண்டும்.. இன்றைய நாளிதழில்(31)கூட 48மணிநேரம் மட்டுமே நிறுத்த முடியும் என்று சிங்கள அரசு சொல்லிவிட்டது.(Narsim)<<

இப்போதுள்ள போர் ஓய்வே இந்திய அரசின் தலையீட்டால்தான் ஏற்பட்டது என்று பிரணாப் முகர்ஜி சொல்கிறார் (முதல்வருக்கு அவர் எழுதிய கடிதம்) காலவரையற்ற போர் நிறுத்தம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.அது புலிகள் தங்களை Re group செய்து கொள்ள இடமளித்து விடும். இந்த 48 மணி நேர அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் வெளியேறலாமே?

சந்தேகமே வேண்டாம், இந்தியா சக்தி வாய்ந்த ஜனநாயக நாடுதான்.


.>>இலங்கை அரசை இந்தியா சட்டப்புர்வமாகக் கூட நிர்பந்திக்க முயன்றிதில்லை முதுகெலும்பில்லாமல் "நட்புரவாடினால்" மட்டும் இலங்கை அரசு பிற நாடுகளை நன்றி உணர்வோடு புறந்தள்ளிவிடும் என்று இந்திய கனவு காண்கிறதா (சுரேஷ்) <<

'சட்டபூர்வமாக' என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை. மீனவர் பிரசினையில் இந்தியா டிப்ளமேட்டிக் சானல் என்று சொல்லப்படும் தூதரக வழியில் பல முறை அணுகி இருக்கிறது.

எல்லா உற்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படுமானால் அதை இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என நம்புவோம்

>>பத்திரிகையாளனான உங்களிடமிருந்து இதுவரை ஏதாவது வந்துள்ளதா? ஏன் இந்த இடுகையில் கூட உங்கள் லிபரல் வேசத்துக்காகக் கூட அதைப் பற்றி முணுமுணுக்கவில்லை? (சுடலை மாடன்)<<

தினமும் ஊடகங்களை வசிக்கும் போது பல செய்திகள் குறித்து என்கருத்துக்களை எழுத வேண்டும் என எண்ணுவதுண்டு. ஆனால் அவகாசம் கிடைத்து எழுத உட்காருவதற்குள் அந்தச் செய்தி நம்மைக் கடந்து போகும். அப்படி எழுதத் தவறியவை பல.

நீங்கள் என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கிறவரானால் ஒன்றைக் கவனித்திருக்கலாம். பத்திரிகைகள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை காயப்படுத்தப்படும் போது அது குறித்து பதிவு எழுதுவதில்லை.(அதற்கான வேறு களங்களில் செயல்படுவதுண்டு.லாசந்தவின் மரணம் குறித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் 27.1.2009 அன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாக்களித்திருந்தேன். ஆனால் அன்று உடல்நலம் குன்றியிருந்ததால் பங்கேற்க இயலவில்லை) பத்திரிகைகளுக்கான கருத்துரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பதை உலகறியும். பத்திரிகைக்களுக்கான கருத்துரிமையை விட பத்திரிகைகளின் நடத்தை (Media Behaviour) வாசகர்களிடம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது என் கருத்து. பத்திரிகைச் சுதந்திரம் என்பது அதிகார அமைப்புகளோடு பத்திரிகையாளர்கள் போராட வேண்டிய விஷயம்.

ஒருவர் ஒரு செயலைச் செய்யாதது அவரது நிலையை விளக்குவதாக ஆகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? தமிழ்ச்செல்வன் மறைவிற்குக் கவிதை எழுதிய கருணாநிதி முத்துக்குமரர் மறைவுக்குக் கவிதை எழுதவில்லை. அதனால் அவரை இலங்கைத் தமிழர்கள் மீது வைத்துள்ள பற்றை இந்தியத் தமிழர்கள் மீது வைக்கவில்லை எனச் சொல்வீர்களா? பப் கலாசாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட டாக்டர் அன்புமணி முத்துக்குமார் குறித்து அறிக்கை விடவில்லை. அதனால் அவர் இலங்கைப் பிரசினையில் ஆர்வம் காட்டதவர் எனச் சொல்வீர்களா? நாகேஷ் மறைவிற்கு இன்று அனுதாபம் தெரிவிப்பவர்கள் 1988ல் விஜய குமாரதுங்கே படு கொலை செய்யப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்பீர்களா?

என்ன எழுதியிருக்கிறேனோ அதைப் பற்றிப் பேசுவோம்.ஆனால் அதைப்பற்றி நீங்கள் கருத்துரைக்கவில்லை; கேள்விகள் எழுப்பவில்லை. உள்நோக்கம் கற்பிக்க மட்டுமே எண்ணுகிறீர்கள்.

"You are not superior just because you see the world in an odious light."
-Vicomte de Chateaubriand
French author & politician (1768 - 1848)

Please give up hate.

>>//3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.//

comedy panna vendam.(இலக்குவண்)<<

இது ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பேசப்படும் விஷயம். அதை என் பதிவில் அப்படியே கொடுத்திருக்கிறேன். செய்தியின் இணைப்பும் என் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வசதிக்காக இங்கே:
While domestic political sensitivities over the fate of Sri Lanka's Tamils forced India to ease its leverage, rivals China and Pakistan stepped into the breach, offering Colombo military assistance in its war against the Tamil Tiger rebels.

....."The shine has somewhat gone off from the leverage India has over Sri Lanka, partly because India has allowed it to happen," said Pakiasothy Saravanamuttu of the Colombo-based Centre for Policy Alternative......
....."Strategic relationship is also governed by trade, and India has a lot of room to manoeuvre in Sri Lanka," Saravanamuttu said.

இப்போது சொல்லுங்கள் காமெடிசெய்வது யார்?

Unknown said...

நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் பங்களாதேஷை மட்டும் எப்படி பிரிக்க‌
இந்தியா ஒப்புக்கொண்டு போர் தொடுத்தது.

நாடு என்றால் எல்லாமே நாடுதான்.

தமிழனுக்கு எதற்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே பிரதான குறிக்கோள்.

மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கையை
கண்டிக்கக்கூட வக்கிலாத இந்தியாவா இலங்கையில் தமிழனுக்கு நீதி கிடைக்கச்
செய்யப்போகிறார்கள்.

ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம். நாளை
தமிழனும் தனித்தமிழ்நாடு கேட்ப்பானோ என்ற அச்சம்!

Anonymous said...

Hi Malan

Please dont allow filthy Sudali madan comments. where ever he goes tells the same story.

Mr Sudalai madan never speak about atrocities of LTTE and genocide against tamil muslims but he always expects to others to support LTTE like him (madly )

Anonymous said...

it appears to be neutral but very much biased article. The starting itself is wrong. In what way theso called parties have a gain by raking up Tamil EElam issue. In fact Vaiko and Thiruma have been alienated because of this. The author again spreads his venom in the guise of a netrual stand. May be Badri's article appears to be better than this.

butterfly Surya said...

"ஈழத்தமிழனுக்கு ஈழம் கிடைத்தால் முன்னேறிவிடுவான் என்ற அச்சம்."
மிகச்சரி..

உலகில் தமிழ்ன் இல்லாத நாடே இல்லை. ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. அது உருவாகிவிட கூடாது என்ற நல்லெண்ணம் நிறைய இந்தியர்களுக்கும் உண்டு..

Anonymous said...

விடுதலைப் புலிகளை தனது செல்லக் குழந்தையாக இந்தியா-இந்திரா-ரா வளர்த்து ஏன்? உண்மையில் இந்தியா தனது வலிமையை ராஜபக்ஷேவின் பாகிஸ்தான் புச்சாண்டிக்கு பயந்து சுருங்கி அடகு வைத்துள்ளதுதான் உண்மை. அதனால்தான் கூப்பிட்டவுடன் ஓடிப்போகிறது இந்திய அரசு.

சரி இந்த போர் செய்துதான் இலங்கை அரசு இந்தியாவின் “எதிரி“நாடுகள் படைத்தளம் அமைக்க அனுமதிக்க வேண்டுமா? உண்மையில் விடுதலைப் புலிகளோ அல்லது ஈழப்பிரச்சனையோதான் இத்தனைநாள் அங்கு படைத்தளம் அமைப்பதை தடுத்து நிறுத்தி உள்ளது என்பதுதான் உண்மை. இந்தியா பற்றிய இப்பதிவு உருவாக்கும் சித்திரம் உலகிலேயே அப்பிராணியான ஜனநாய காவல்நாடு என்பதான தோற்றமே. விடுதலைப்புலிகள் இந்தியா உருவாக்கிய எல்லைத்தாண்டிய பயங்கரவாதம்தானே? இதை யாராவது மறுக்க முடியுமா? இப்படி புலிகளை வளர்க்க ஆலொசனை தந்த அதே அறிஞர்கள்தான் இன்று புலிகளை ஒழிக்க ஆலோசனை தருகிறார்கள் என்பதுதான் உண்மை. நாராயணன் மற்றும் சிவசங்கரமேனனின் வழிகாட்டுதலில் உண்மையில் இந்திய நலன் இல்லை. சாதிய-இன் துவேஷமே உள்ளது. அதன் ஒரு விளைவுதான் ஈழத்தின் இந்த போர்.

தனது பிராந்திய நலனுக்காக புலிகளை வளர்த்துவிட்டு, இன்று தேவை இல்லை என்றவுடன் அமேரிக்காவின் தற்போதைய முஜாகிதின் மற்றும் பின்லாடன் உறவு போன்ற ஒரு எதிர்நிலையை எடுத்துள்ளது இந்தியா. இந்தியாவின் இந்த இலங்கை ஆதரவு ராஜதந்திரம் அல்ல. சரி நாளை விடுதலைப்புலிகள் ஒழிந்து அங்கு ஒரு “ஜனநாயகக் குடியரசு“ வந்தால் உடனே இந்தியாவின் எடுபிடி நாடாக இலங்கை மாறிவிடும் என்பதற்கும் அல்லது “நட்பு“ நாடாக மாறிவிடும் என்பதற்கும் அல்லது மற்ற “எதிரி“ நாடகளினது படைத்தளம் அமைக்காது என்பதற்கும் என்ன உத்திரவாதம்? உண்மையில் இந்தியாவின் ஒரு முதிர்ச்சியற்ற “ராசதந்திரமே“ இது. நண்பர்களைவிட்டு எதிரிகளை வளர்ப்பது. இந்தியாவின் நிலை அதனை வழிநடத்தும் நபர்களின் தமிழ்பேசும் மக்கள் மீது உள்ள தேசிய இன சாதிய துவேஷத்தின் வெளிப்பாடே. மற்றபடி இந்திய அரசு நல்லக் குழந்தைதான்.??? புலிகள் போன்ற கள்ளக் குழுந்தைகளை பெற்றெடுக்கும் நல்ல அரசுதான்?

Cogito Ergo Sum said...

Hello Malan Sir,

Super katturai. It shows how you guys are trying pose and justify the act of india and srilanka.

I am dead against terrorism but why and how these terrorist keep emerging?. you being eminent media person, must be knowing it already.

I had high regards on you until I read this post of yours. Highly ridiculous...No justification at all in this matter.

If India wants to protect its interest, why should it do in subtle manner? why should they play a double game?.

Until kili fell, the tone of india was totally different, seeing the resistance in capturing kili. but once it was abondaned, the tone changed. Even the visits of menon and pranab actually not necessary at all, if india wants to continue the way its doing in srilanka.

If India say, its an internal matter of Srilanka, why the heck should they intervene in 1987 and even now?.

India has forgotten that there is Tamilnadu which is part of India.How long could one fool?.

If no firm action is taken,the repurcussions are going to be really bad for india.Already it has lost its glitter among Tamil youth.

You guys might say that its instigated and fueled by some politicians to gain political milage, but its really not. come out and understand the ground reality instead living in your own world of utopia.

hopefully you don't censor this post of mine.

Anonymous said...

முதலில் உளறுவதை நிறுத்தவும். ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் முதல் 4 அம்சங்கள் இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை.

திருகோணமலையில் உள்ள எண்ணைக் கிடங்குகளைத் தரும்படி தான் இருந்தது.
ஒரு இந்தியனாக வெட்கப்பட வேண்டும்.





இறக்கின்ற இனத்தைக் காப்பாறுவதாககூறி இலங்கையிடம் கைக்கூலி வாங்கிய தலைவர் ராஜீவ்.

இன்று திருகோணமலை எண்ணைக்கிடங்குகள் அனைத்தும், இந்தியாவில் கையில் உள்ளது.


ஒரு குடிம‌க‌னாக‌ வெட்க‌ம் வ‌ர‌வில்லையா? முத‌லில் வெட்க‌ப்ப‌ட‌க் க‌ற்றுக்கொள்ள‌வும்.


ப‌ர‌ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பும் 100 கோடி ம‌க்க‌ள் என்ப‌து ஒரு பெரிய‌ தோற்ற‌த்தைக் கொடுக்க‌லாம்.
ஆனால் பெரிய‌ கௌர‌வ‌த்தைக் கொடுக்காது.

முத‌லில் இந்தியாவின் த‌லைமையை ஒரு இந்திய‌ன் த‌லைமை ஏற்க‌ உங்க‌ள் பேனாவைப் ப‌ய‌ன்ப‌டுத்துங்க‌ள்.

அடிக்காதே என்று கேட்கின்ற‌ ஈழ‌த் த‌மிழ‌னுக்கு அடிக்கும் உன் தேச‌ம் பாகிஸ்தானுக்கு மாத்திர‌ம் அட‌ங்கி ஏன் வாலையாட்டுது?.


முத்துகுமாரனின் மரணம் திரும்பவும் நடைபெறக்கூடாது. மாற்றுக் கருத்தில்லை. அவன் ஒரு சோரம்போகாத எழுத்தாளன். லங்காரத்னாவும் இலங்கைப் பொற்கிளியும் விரும்பாத ஒரு பத்திரிகையாளன்.

மாலன் அவர்களே! என்றாவது ஈழ மக்களின் வாழ்க்கையை நேரில் வந்து பார்த்ததுண்டா?
இந்தியச் செய்திஊடகங்களுக்கு ஊடாக ஈழத் தமிழர் நெருக்கடியைப் பார்க்காதீர்கள்.
ஈழ‌த் த‌மிழ‌னுக்கும் சிங்க‌ள‌வ‌னுக்கும் உட‌ன்பாடு வேண்டும் என்றால் அதெப்ப‌டி ராஜிவும் ஜெய‌வ‌ர்த்த‌னாவும் ஒப்ப‌ம் போட‌ முடியும்? ஈழ‌த் த‌மிழ்ர்க‌ளுக்கு கைநாட்டும் போட‌த் தெரியாத‌வ‌ர்க‌ளா?

ஒரு ஈழ‌த் த‌மிழன்

? said...

இதுவரை நான் படித்த பதிவுகளில் நிஜமாலுமே உணர்வு வயப்படாமல் இலங்கை பிரச்சனையை அனுகிய முதல் பதிவு.

SK said...

மாலன்,

> "இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம்."

உங்களது இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. We can't base our foreign policy out of fear. We have to behave as a rising and a responsible nation and decide our policy based on what is right - not on what will please our neighbours. We should not aid in the massacre by the SL govt through any form of military aid even if it is for defensive weapons. If making such a choice requires keeping up additional military vigil against one more border country (SL) in the future, so be it. That is just a consequence of doing the right thing and we should not be afraid of it.

-SK

தமிழன் said...

மாலன் நீங்கள் கருத்து சொல்லவதை நிறுத்தி விட்டு ஈழதமிழர் மத்தியில் ஏதிலிகளாக சென்று அயல்நாட்டில் வசிக்கும் அனைத்து தமிழர்களிடமும் கேளுங்கள். யார் அவர்களின் பிரதிநிதி? இந்திய தலையிட வேண்டுமா வேண்டாமா என்று?
தன் ஆதாயத்திற்காக போராளிகுழுவை தோற்றுவித்ததே இந்திய தானே.

குப்பன்.யாஹூ said...

மாலன் , பதிவு மிக அருமை., நல்ல அலசல்.

ஊடகங்கள் சமீப காலமாக வியாபார குறிக்கோள் மட்டுமே கொண்டு உள்ளன.
அதுவும் ஜூனியர் விகடன், நக்கீரன் போன்றவை விடலை பயன்களை குறி வைத்தே கட்டுரைகள், பரபரப்பு செய்திகள் வெளியிடுகின்றன.

ஒரு காலத்தில் சுதாங்கன், பிரகாஷ் எம் சுவாமி என்ற அற்புதமான கட்டுரை யாளர்கள் இருந்தார்கள ஜூ வி யில்,

ஆனால வாசகர்கள் ஏமாளி அல்ல, பொய்யான ஊடகங்களை புறக்கணிக்கிறோம்.

குப்பன்_யாஹூ

-/சுடலை மாடன்/- said...

ஒரு விசயத்துக்காக உங்களைப் பாராட்ட வேண்டும். உங்கள் கருத்தை வெளிப்படையாக உங்கள் பெயரில் சொல்லுகிறீர்கள். சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை விவாதிப்பவர்கள் பெரும்பாலும் இதைச் செய்கிறார்கள். பல ஆண்டுகளாக முகமூடி அணிந்து எழுதி வரும் நரிகளைப் புறக்கணிப்பதே நல்லது. உங்கள் வெளிப்படையான கருத்துகளைப் புறக்கணிப்பதை விட அதே போல் வெளிப்படையாக எதிர்கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.

இப்பொழுது வாதத்துக்கு வருவோம்.

//அவகாசம் கிடைத்து எழுத உட்காருவதற்குள் அந்தச் செய்தி நம்மைக் கடந்து போகும். அப்படி எழுதத் தவறியவை பல. ...ஒருவர் ஒரு செயலைச் செய்யாதது அவரது நிலையை விளக்குவதாக ஆகும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? //

ஒத்துக்கொள்கிறேன். பல நேரங்களில் நினைப்பதைச் செய்ய நேரமிருப்பதில்லை. ஆனால் அந்த விசயமே நம்முடைய தொழிலாக, வாழ்வாதாரமாக இருக்கும் பொழுது மனதுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும் பொழுது இலேசாகவாவது கோடிட்டுக் காட்டத் தோன்றும். இந்த இடுகையில் இலங்கையில் நடக்கும் போரையும் வன்முறைகளையும் பேசுகிறீர்கள். அது எப்படி புலிகளின் வன்முறைகள் பற்றி எழுதத் தோன்றும் உங்களுக்கு, உங்கள் தொழிலைச் செய்யும் நிராயுதபாணியான
பத்திரிகைத் தலைமையாசிரியரை அரசாங்கமே போட்டுத்தள்ளியதைக் குறிப்பிடத் தோன்றவில்லை? அதுவும் அப்பத்திரிகையாசிரியன் தான் கொல்லப் படக்கூடுமென்று உறுதியாக நம்பி உருக்கமான இன்னொரு ஆசிரியர் பத்தியை எழுதி வைத்துவிட்டுச் செத்துப் போயிருக்கிறான். உலகெங்கும் பிற பத்திரிகையாளர்கள் அப்பத்தியை மறுமதிப்புச் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்குப் போகிற போக்கில் கூட அதைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு உங்களுக்குள் பாரபட்சமான புலியெதிர்ப்பு இருக்கிறது.

சில அனாமத்துகள் பதிலுக்கு என்னைப் பார்த்து கேட்கின்றன, நான் ஏன் புலி வன்முறையை விமர்சிப்பதில்லையென்று. நான் நடுநிலை நாடகமெல்லாம் போடவில்லை. ஈழத்தமிழர்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகள் சீரழிக்கப் பட்ட ஒரு அவல வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களென்றால் அதற்குக் காரணமாகக் கையைச் சுட்ட வேண்டியது முதலில் இலங்கையைப் பார்த்து. அடுத்து இந்தியாவைப் பார்த்து. மூன்றாவதுதான் புலிகளைப் பார்த்துக் கையைச் சுட்டுவேன். ஏன் ஈழத்திலும், உலகெங்கும் சிதறி வாழும் தமிழரிடம் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டியதுதானே! நான் புலி ஆதரவாளனென்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.

//பத்திரிகைகளுக்கான கருத்துரிமைகள் விஷயத்தில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே படகில்தான் பயணிக்கிறார்கள் என்பதை உலகறியும். //

சரி, ஒத்துக் கொள்வோம். ஜனநாயக அரசு, இறையாண்மையென்று பீற்றிக் கொள்ளும் ஒரு அரசும், அதையெதிர்த்துப் போராடும் ஒரு அமைப்பும் பத்திரிகையாளர்களைப் போட்டுத்தள்ளுகிறார்கள், பரஸ்பரம் தலைவர்களைக் கொலை செய்கிறார்கள் என்கிற பொழுது நீங்கள் எப்படி ஒரு பக்கத்தில் அரசை மட்டும் ஆதரிக்க முடியும், இராணுவ உதவி அளிக்க முடியும். எதிர்த்தரப்பை ஒழித்துக் கட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படமுடியும்? இதிலிருந்து தெரிகிறது உங்களது பிரச்னை புலியில்லை, தமிழர்கள் உரிமைப் போரில் வென்று, மனிதர்களாக வாழக் கூடாது என்று உள்ளூர நினைத்து வஞ்சகமாகக் காய்களை நகர்த்துகிற நீங்கள் தமிழர்களின் எதிரிகளென்று.

//எல்லா உற்வுகளும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் உருவாகின்றன. அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்படுமானால் அதை இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என நம்புவோம்//

சபாஷ், இப்பொழுது உங்களுக்கு மலையகத்தமிழர் என்று அழைக்கப் ப்படுகிற இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பற்றி நினைவு படுத்துகிறேன். ஏனென்றால் மற்ற எல்லா வரலாற்றிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் அம்பிகளுக்கு தமிழர் வரலாறு என்றால் மட்டும் புத்தி மந்தமாகி விடுமே. 1948ல் இந்திய வம்சாவளித் தமிழர்களுடைய குடியுரிமையை இலங்கை பறித்தது. இப்பிரச்னையைத் தீர்க்க 1964ல் இந்தியா இலங்கையுடன் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தைப் போட்டது. அதன்படி மொத்த இந்தியத்தமிழர் 975,000 பேரில், இந்தியா 525,000 பேரையும், இலங்கை 300,000 பேரையும் பிரித்துக் கொண்டு மீதி 150,000 பேரை பின்னால் பார்த்துக் கொள்ளலாமென்று விட்டனர். இந்தியா தன் பங்குக்கு 525,000 பேரை ஏற்றுக்கொண்டது. 1974 ல் இந்திரா இன்னொரு ஒப்பந்தம் போட்டு மீதமிருந்தவர்களிலும் பாதியை (75000)பேரை ஏற்றுக் கொண்டது. இந்தியா ஏற்றுக் கொண்ட தமிழர்களையெல்லாம் ஆடுமாடுகள் போல் பங்கு போட்டு இந்தியாவின் பல மானிலங்களில் விசிறி அடித்தது இந்தியா என்பது ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய பக்கத்தை அமல்படுத்தியது என்று சொல்லலாம். இலங்கை மீதமிருந்த தமிழர்களுக்குக் குடியுரிமை கொடுப்பதாகச் சட்டமெல்லாம் இயற்றி அவற்றைக் குப்பையில் போட்டு இன்று வரை அவர்கள் நாடற்றவர்கள் என்ற உண்மை இந்திய அம்னீசியா மூளைகளுக்குத் தெரியுமா? இதுக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாமைக்கு புலிகள் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்வது போல். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தம். இந்தியத் தமிழர்கள் எந்த வன்முறையிலும் இன்றுவரை ஈடுபடவில்லை. அவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் பொறுப்பு.

பின் எந்த இலட்சணத்தில் *தமிழர் விரோதி* இந்தியா அப்போது சரியாகவே கையாளும் என்று நம்பச்சொல்லுகிறீர்கள்? அப்போதும் உங்களைப் போன்ற பார்ப்பனியப் பாசாங்குகள் இதே புலியின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வீர்கள். சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவி வேசதாரிகள் மிகை உணர்ச்சியில்லாமல் பல்வித பரிமாணங்களுடன் அணுகுவார்கள். இருபதைந்து ஆண்டுகளாக அவர்களுடைய அக்கா தங்கைகள் இராணுவத்தினரால் பாலியல் வன்புணரப் படுவார்கள் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்கள் மிகை உணர்ச்சிகளைக் காட்டாமல் பல பரிமாணங்களைத் தேடி அலைவார்களோ என்னவோ.

யாரை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

நன்றி - சொ.சங்கரபாண்டி

மாலன் said...

அன்புள்ள சுடலைமாடன்,

>>உங்கள் கருத்தை வெளிப்படையாக உங்கள் பெயரில் சொல்லுகிறீர்கள். . . .. உங்கள் வெளிப்படையான கருத்துகளைப் புறக்கணிப்பதை விட அதே போல் வெளிப்படையாக எதிர்கொள்ளுதல் அவசியம் என நினைக்கிறேன்.<<

நன்றி. நான் என் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்வது மட்டுமல்ல, அவை குறித்த விமர்சனங்கலையும், அவை குறித்து என் மீதான விமர்சனங்களையும் கூட அனுமதிக்கிறேன். அதற்குக் காரணம் என் கருத்துக்கள் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை. என் கருத்துக்களை வைக்கும் போது அவற்றிற்கு இட்டுச் சென்ற ஆதாரங்களையும், தரவுகலையும் அவற்றின் மூலங்களையும் கூடவே வைக்கிறேன் என்பதையும் நீங்கள் கவனித்திருக்கக் கூடும். நான் முன் வைக்கும் கருத்துக்கள் உணர்ச்சித் தளத்தில் எழுந்தவை அல்ல.

>>ஆனால் உங்களுக்குப் போகிற போக்கில் கூட அதைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றவில்லை<<

இது குறித்து நான் ஏற்கனவே என் நிலையை விளக்கிவிட்டேன். பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துரிமைக்காகப் போராட வேண்டியது அதிகார அமைப்புகளுக்கெதிராகத்தான். It is between them and establishment. அதைப் பொதுப் பிரசினையாக்கி அனுதாபம் தேட வேண்டியதில்லை. பத்திரிகையாளர்கலைவிட உரிமை பறிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் எந்த சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகப் பத்திரிகையாளர்கள் பொது அரங்குகளில் குரலெழுப்புவதே மூறையானது. என் சுய சரிதையாக அல்ல, ஒரு தகவலுக்காக சொல்கிறேன்: இந்தியா டுடேயில் இருந்த போதும் குமுதத்தில் இருந்த போதும் ஜெயலலிதாவின் வழக்குகளை நான் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அதைப் பொதுப் பிரசினையாக்கி மக்கலிடம் கொண்டு செல்லவில்லை. நீதிமன்றத்தில்தான் போராடினேன்.

என்னிடம் இருப்பது குறைந்த நேரம், குறைந்த சக்தி (energy, குறைந்த வளங்கள் (resources) என்பதால் எதை எங்கு பேச/செயல்பட வேண்டுமோ அங்கு அதைச் செய்ய வேண்டும் என எண்ணுபவன் நான்.இந்தப் பதிவில் எழுதியிருப்பவற்றை நான் ஏதேனும் ஒர் இதழில் கூட எழுதியிருக்க முடியும். ஆனால் இதை நான் இணணய வெளியில் எழுதியதற்குக் காரணம் இது உலகத் தமிழர்களிடையே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால்.

>>நீங்கள் எப்படி ஒரு பக்கத்தில் அரசை மட்டும் ஆதரிக்க முடியும், <<
நான் எங்கே இலங்கை அரசை ஆதரித்து எழுதியிருக்கிறேன்? 'எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும்' "இலங்கைப் படைகள் கண் மண் தெரியாமல் சிவிலியன்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" "இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை" இவையெல்லாம் இலங்கை அரசை விமர்சிக்கும் வரிகள். ஆதரவான வரிகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள் எனச் சுட்டிக்காட்டக் கோருகிறேன்.

ஒரு வேளை இந்திய அரசை ஆதரித்து எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறீர்களோ? இன்றைய சூழலில் இந்தியாவிற்கு அதிகம் optionகள் இல்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இன்றைய சூழலில் இந்தியாவிற்கு வேறு என்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன.

வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அரசு நம்புதற்குரியதல்ல எனச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் வரலாற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பார்த்த்தால் எல்லாத் தரப்பிலும்- இந்தியா உள்பட- பெரும் பிழைகள் நிகழ்ந்திருக்கின்றன. JVPயின் எழுட்சியை நசுக்க இந்தியா உதவியது, ஆபரேஷன் பூமாலை, ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, சிங்களத் தீவிரவாதிகள் இந்தியா நம்பற்குரியது அல்ல எனச் சொல்லலாம். IPKFஉடன் போரிட பிரேமதாசா உதவியது காரணமாக இலங்கை அரசு நம்பற்குரியதல்ல என இந்தியா கருதலாம் IPKF அனுபவங்களின் அடிப்படையில் புலிகள், இந்தியா நம்பற்குரியது அல்ல எனக் கருதலாம். ராஜீவ் படு கொலை காரணமாக புலிகள் நம்பற்குரியவர்கள் அல்ல என இந்தியா கருதலாம். IPKFஉடன் போரிட பிரேமதாசா உதவியது காரணமாக இலங்கை அரசு நம்பற்குரியதல்ல என இந்தியா கருதலாம் வரலாற்றின் வண்மங்களைச் சுமந்து கொண்டே நடப்பது யாருக்கும் உதவாது. (விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு வன்மத்தை சுமந்து திரிந்ததும் ஒரு காரணம்) அண்மைக்காலங்களில் இலங்கை அரசு இந்தியாவிற்கு செவிமடுக்கிறது. 13வது சட்டத் திருத்தத்ததை அது மேற் கொண்டது, இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியது போன்றவை சில எடுத்துக்காட்டுக்கள். இனி வரும் காலங்களில், (புலிகள் முடக்கப்பட்டதற்குப் பிறகு) இலங்கை அரசு அதிகம் இந்தியாவோடு இணக்கம் கொள்ளும் என்பது என் கணீப்பு

>>உங்களது பிரச்னை புலியில்லை, தமிழர்கள் உரிமைப் போரில் வென்று, மனிதர்களாக வாழக் கூடாது என்று உள்ளூர நினைத்து வஞ்சகமாகக் காய்களை நகர்த்துகிற நீங்கள் தமிழர்களின் எதிரிகளென்று <<

தமிழர்கள்= புலிகள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்பது என் எண்ணம். புலிகள் வீழ்வதன் மூலமே இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற முடியும் என்பது என் கருத்து.

மாலன் said...

dear sk,
>>We can't base our foreign policy out of fear.<<

It is not fear. It is prudence. Prudence is the best part of the valor.

மாலன் said...

Dear Cogito,

>>why should they play a double game?.

Where is the double game? War is against terrorists, and call for grant of civil rights is for people.

Until terrorism is incapacitated there won't be any political stability, and in the absence stability no solution is sustainable. Hence one is integrated to other.

LTTE said when Kili fell that it is making a tactical retreat to drag the SL Army into its forte and finish them. At the time Tamilnadu politicians were crying here for cease fire. If there would be a cease fire army couldn't have move into the forte and then there is no question of wiping out. This is double talk

மாலன் said...

அன்புள்ள அநாமதேயம்,

>>முதலில் உளறுவதை நிறுத்தவும். ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்படிக்கையில் முதல் 4 அம்சங்கள் இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை.திருகோணமலையில் உள்ள எண்ணைக் கிடங்குகளைத் தரும்படி தான் இருந்தது.ஒரு இந்தியனாக வெட்கப்பட வேண்டும்.<<

1.ராஜிவ் -ஜெய்வர்த்தனே உடன்படிக்கை இப்படித்தான் ஆரம்பிக்கிறது:
"The President of the Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Mr. J.R. Jayawardene, and the Prime Minister of the Republic of India, His Excellency Mr. Rajiv Gandhi, having met at Colombo on July 29, 1987.

Attaching utmost importance to nurturing, intensifying and strengthening the traditional friendship of Sri Lanka and India, and acknowledging the imperative need of resolving the ethnic problem of Sri Lanka, and the consequent violence, and for the safety, well being, and prosperity of people belonging to all communities in Sri Lanka.

Have this day entered into the following agreement to fulfill this objective. "

இது இரண்டாவது பத்தியிலேயே இலங்கையின் இனப் பிரசினையை விரைந்து தீர்க்க வேண்டிய அவசியம் இருப்பதைப் பேசுகிறது (the imperative need of resolving the ethnic problem of Sri Lanka)

இப்போது சொல்லுங்கள் உளறுவது யார்?

அந்த ஒப்பந்தத்தின் முதலாவது ஷரத்து (1.2) "Acknowledging that Sri Lanka is a "multi-ethnic and a multi-lingual plural society" consisting, inter alia, of Sinhalese, Tamils, Muslims (Moors) and Burghers:" என்று இலங்கையைக் குறிப்பிடுகிறது. அதையடுத்து முதலாவது ஷரத்தின் 4ம் உட்பிரிவு (1.4) Also recognising that the Northern and the Eastern Provinces have been areas of historical habitation of Sri Lankan Tamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups: என்றூ குறிப்பிடுகிறது. அதன் இறுதி ஷரத்து.அதாவது 2.18வது ஷரத்து தமிழும் ஓர் அரசு மொழியாக இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. 'The official language of Sri Lanka shall be Sinhala. Tamil and English will also be official languages.' என்று குறிப்பிடுகிறது 2.11 ஷரத்து ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுக்கு பொதுமனிப்பு வழங்குவதை உருதி செய்கிறது"The President of Sri Lanka will grant a general amnesty to political and other prisoners now held in custody under the Prevention of Terrorism Act and other Emergency Laws, and to Combatants, as well as to those persons accused, charged and/or convicted under these Laws. The government of Sri Lanka will make special efforts to rehabilitate militant youth with a view to bringing them back into the mainstream of national life. India will co-operate in the process.

இப்போது சொல்லுங்கள்: 'இலங்கைத் தமிழன் குறித்து எழுதப்படவில்லை' என்று உளறுவது யார்?

1.நீங்கள் சொல்வது போல அந்த ஒப்பந்தம் பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்தமல்ல. மூன்று ஷரத்துகள், 23 மூன்று உட்பிரிவுகள் கொண்ட, (5+18)நீளம் அதிகம் இல்லாத ஒப்பந்தம்.
2. அதில் திருகோணமலை எண்ணைக் கிணறுகள் பற்றி எங்கும் பேசப்படவில்லை

திருகோணமலை எண்ணைக் கிணறுகள் குறித்து ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்த்தனேவிற்குமிடையே ஒரு கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. அதில் எண்ணைக் கிணறுகலள 'தரும்படி' இந்தியா கேட்கவில்லை. இரு நாடுகளும் சேர்ந்து புனரமைத்து இயக்கும் என்றுதான் குறிப்பிடப்பட்டது. (The work of restoring and operating the Trincomalee Oil Tank will be undertaken as a joint operation between India and Sri Lanka) இரு நாடுகளும் சேர்ந்து என்பதைக் கவனிக்க. அது எண்ணைக் கிணறுகளை முன்னிட்டு இந்தப் பகுதியில் வல்லரசுகள்- குறிப்பாக அமெரிக்கா நுழைந்து விடக்கூடாது என்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதை கடித்ததின் மற்ற பகுதிகளைக் கொண்டு ஊகித்துக் கொள்ளலாம். "Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests." "Sri Lanka's agreement with foreign broadcasting organisations will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka are used solely as public broadcasting facilities and not for any military or intelligence purposes." "Your Excellency and myself will reach an early understanding about the relevance and employment of foreign military and intelligence personnel with a view to ensuring that such presences will not prejudice Indo Sri Lanka relations." இதோ கடிதங்கள்:


July 29, 1987

Excellency,

Please refer to your letter dated the 29th of July 1987, which reads as follows:-

Excellency,

Conscious of the friendship between out two countries stretching over two millennia and more, and recognising the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other's unity, territorial integrity and security.

2. In this spirit, you had, during the course of our discussion, agreed to meet some of India's concerns as follows:-

I) Your Excellency and myself will reach an early understanding about the relevance and employment of foreign military and intelligence personnel with a view to ensuring that such presences will not prejudice Indo Sri Lanka relations.

II) Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.

III) The work of restoring and operating the Trincomalee Oil Tank will be undertaken as a joint operation between India and Sri Lanka.

IV) Sri Lanka's agreement with foreign broadcasting organisations will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka are used solely as public broadcasting facilities and not for any military or intelligence purposes.

3. In the same spirit, India will:

I) Deport all Sri Lankan citizens who are found to be engaging in terrorist activities or advocating separatism or secessionism.

II) Provide training facilities and military supplies for Sri Lanka security services.

4. India and Sri Lanka have agreed to set up a joint consultative mechanism to continuously review matters of common concern in the light of the objectives stated in para 1 and specifically to monitor the implementation of other matters contained in this letter.

5. Kindly confirm, Excellency, that the above correctly sets out the Agreement reached between us.

Please accept, Excellency, the assurances of my highest consideration.

Yours sincerely, sgd Rajiv Gandhi

His Excellency,
Mr. J.R. Jayawardene,
President of the Democratic Socialist Republic of Sri Lanka,
Colombo.

This is to confirm that the above correctly sets out the understanding reached between us.

Please accept, Excellency, the assurances of my highest consideration.

sgd J.R.Jayawardene President

உண்மைகளைத் திரித்து பிரசாரம் செய்ய நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும்.

ஈழநாதன்(Eelanathan) said...

மாலன்
வலைப்பதிவுகளில் எதுவும் எழுதுவதில்லை என்ற மௌனத்தை உங்கள் பதிவுக்காகக் கலைக்கவேண்டியிருக்கிறது.இலங்கை இந்திய அரசாங்கங்கள் கூட்டாகச் சேர்ந்து ஈழத்தில் தமிழ் மக்களைக் கொல்வதை போர் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை பாம்பும் சாகவேணும் தடியும் உடையக் கூடாது என்று பார்த்தால் முடியாது என்றவாறே அனுமன் பாக்கு நீரிணையைத் தாண்டிய மாதிரி தாண்டிவிடும் நீங்கள் விடுதலைப்புலிகள் செய்பவற்றை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்கவில்லையே என அங்கலாய்க்கிறீர்கள் போராட்டம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்ற நியாயம் தானே அவர்களுக்கும்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கை விமானிகள் விமானத்தை ஓட்டி இலக்குத் தவறாமல் குண்டு வீசவில்லை.இந்தியாவில் பயிற்சி பெற்ற இந்திய இராணுவத்தின் விமானப் படையினர் தாம் இலக்குத் தவறாமல் அகதிகள் மீது குண்டு வீசுகிறார்கள்.அது நீங்கள் சொல்கிற முத்துக்குமாருக்கும் தெரியும் என்பதைத் தான் அவர் கடிதமே சொல்கிறதே.

சரி நீங்கள் சொல்கிறபடி இந்தியா உதவவில்லையாயின் மற்ற நாடுகள் இலங்கையைத் தம்பக்கம் இழுத்துவிடும் ஆகவே இந்தியா உதவி செய்கிறது.நியாயம் தான் ஆனால் இப்போதும் மற்ற நாடுகள் உதவி செய்கின்றனவே இந்தியா செய்வதை விட அதிகமாகச் செய்கின்றனவே.சிவசங்கர் மேனன் சிறீலங்கா போய் கெஞ்சி மன்றாடி விழுந்து கும்பிட்டு நாங்களும் ரௌடி தானப்பு என்று சொல்லிவிட்டு வந்தால் பாகிஸ்தான் சொடக்குப் போட்டு கோத்தபாயவைக் கூப்பிடுகிறது அவரும் போய் நானும் நீங்களும் எப்பவும் ஒட்டு இந்தியாவைச் சும்மா எடுப்புக்கு வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டு வருகிறார்.இப்போது சொல்லுங்கள் யார் பெரிய ரௌடி

போர் முடிந்ததும் சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு குண்டி காட்டப் போகிறதே அப்போது இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கிறது குண்டியைக் காட்டினாலும் கழுவிவிட்டாவது பிழைக்கலாம் என்று நினைக்கிறதா?அப்போதும் நீங்கள் இந்தியாவுக்கு வேறு வழியில்லை மற்ற நாடுகள் கழுவி விடுமுன் நாங்கள் கழுவி விட்டால் தான் இலங்கையிடம் நல்ல பெயர் கேட்கலாம் என்று நியாயப் படுத்துவீர்களா?

பெருமையாக இருக்கிறது என்னதான் இலங்கை அரசு தமிழனை ஒறுத்தாலும் இத்தனை நாடுகள் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலையில் அல்லவா ஒவ்வொரு இல்ங்கைக் குடிமகனும் இருக்கிறான்.அப்படிப் பார்த்தால் நாம் தான் தெற்காசிய வல்லரசு.யாரங்கே சோனியாவை ஒரு பீட்சா கொண்டுவரச் சொல்லு உடனடியாக வரவேணும் இல்லாவிட்டால் பாகிஸ்தானிலிருந்து ஓடர் பண்ணிவிடுவேன்

-/சுடலை மாடன்/- said...

உங்கள் பதில்களுக்கு நன்றி.

நீங்கள் ஒத்துகொள்கிற கருத்துக்களை மட்டும் இங்கு மற்றவர்களின் பார்வைக்குத் தொகுத்துத் தருகிறேன்.

1.மூர்க்கத்தனமான கண்மூடித்தனமான வன்முறைகளிலும், கொலைகளிலும் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் வேறுபாடில்லை.

2.மூன்று தரப்பும் – இந்தியா உள்பட – பெரும்பிழைகள் செய்திருக்கின்றன.

3.வரலாற்றின் அடிப்படையில் இலங்கை அரசும், புலிகளும் நம்பத்தகுந்தவர்களல்ல. இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியதாக வரலாறில்லை. புலிகள் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிடினும் நழுவி விடுகின்றனர்.

4.சுண்டைக்காய் நாடாக இருந்தாலும் இலங்கையை வல்லரசான இந்தியா ஒப்பந்தங்களை நிறைவேற்றுமாறு நிர்ப்பந்திக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுக்கு உதவ சீனா, பாகிஸ்தான் வந்துவிடுவார்கள். அதனால் இலங்கையைக் கெஞ்சுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் (options) இந்தியாவுக்கு இல்லை. ஆனால் புலிகளை மட்டும் தமிழர்களின் முதுகெலும்பை முறித்தாவது இந்தியா நிர்ப்பந்திக்க முடியும்.

5.சுண்டக்காய் இலங்கையின் ஆளும் வர்க்கத்துக்கு அடியாள் வேலை செய்ய – அது ஜேவிபி எழுச்சியை ஒடுக்குவதாக இருந்தாலும், புலிகளை அழிப்பதாக இருந்தாலும் – வல்லரசான இந்தியா ஒடோடிச் செல்ல வேண்டும். இதுதான் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

6.தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள் வந்து இலங்கையின் கடற்படையினர் தாக்கினாலும் இந்தியா பொறுமையுடன் கையாள வேண்டும்.

இப்பொழுது மூன்று குற்றவாளிகள் – இலங்கை, இந்தியா, புலிகள் – இருக்கின்றனர். இரண்டாவது குற்றவாளிக்கு முதல் குற்றவாளியை ஆதரிப்பதை விட்டால் வேறு வாய்ப்பில்லை. எனவே முதல் இரண்டு குற்றவாளிகளும் இணைந்தே செயல்படுகின்றனர்.

நீங்கள் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை ஆதரிக்கிறீர்கள், நிரந்தரத் தீர்வாகும் என்கிறீர்கள், காரணம் ஒன்றேயொன்றுதான் – நீங்கள் இரண்டாம் குற்றவாளியின் விசுவாசக் குடிமகன்.

நான் மூன்றாவது குற்றவாளியான புலிகள் அழிக்கப் படுவதை எதிர்க்கிறேன், காரணங்கள் இரண்டு – (1) முதல் குற்றவாளியின் ஒடுக்கு முறையை எதிர்த்து உருவானதுதான் இரண்டாவது குற்றவாளி. (2) ஆரம்பத்தில் முதல் குற்றவாளியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி, பின்னால் இந்த மூன்று குற்றவாளிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு இருபத்தைந்தாண்டுகளாக சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து வரும் அப்பாவித் தமிழர்களில் பெரும்பான்மையினர் மூன்றாம் குற்றவாளிகளான புலிகளை தங்களது பாதுகாப்புக்காக ஆதரிக்கின்றனர்.

உங்கள் நியாயம் உங்களுக்கு, என்னுடைய நியாயம் எனக்கு. படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இலக்கிய மேதாவிகளான சுரேஷ் கண்ணன் போன்றவர்களுக்கு என்னுடைய பார்வை ஒற்றைப் பரிமாணமாகவும், உணர்ச்சிவயப்பட்டதாகவும் தோன்றலாம். உணர்ச்சிவயப்படுவதற்குக் கூடக் கொஞ்சம் இரக்க உணர்வு வேண்டும். மனித நேயம் வேண்டும்.

இதற்கு மேல் இங்கு என் வாதத்தைத் தொடர நேரமில்லை.

நன்றி - சொ.சங்கரபாண்டி

மாலன் said...

>>நீங்கள் விடுதலைப்புலிகள் செய்பவற்றை மட்டும் ஊடகங்கள் விமர்சிக்கவில்லையே என அங்கலாய்க்கிறீர்கள் போராட்டம் என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்ற நியாயம் தானே அவர்களுக்கும்.<<

புலிகள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துவதற்கும், சகோதர தமிழ்ப் போரளிகளைக் கொன்றதற்கும் எந்த நியாயமும் கிடையாது.
>>பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இலங்கை விமானிகள் விமானத்தை ஓட்டி இலக்குத் தவறாமல் குண்டு வீசவில்லை.இந்தியாவில் பயிற்சி பெற்ற இந்திய இராணுவத்தின் விமானப் படையினர் தாம் இலக்குத் தவறாமல் அகதிகள் மீது குண்டு வீசுகிறார்கள்<<
நான் சொல்வதற்கு ஆதாரம் ராய்ட்டர் செய்தி.பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் கூற்றுக்கு ஆதாரமென்ன? (
>>போர் முடிந்ததும் சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு ----- காட்டப் போகிறதே<<
அனுமானங்களுக்கு பதில் சொல்ல இயலாது

>>என்னதான் இலங்கை அரசு தமிழனை ஒறுத்தாலும் இத்தனை நாடுகள் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலையில் அல்லவா ஒவ்வொரு இல்ங்கைக் குடிமகனும் இருக்கிறான்.<<
That's the point. LTTE has no crdibility

Anonymous said...

மாலன் சிறப்பான பதிவு.

நான் முன்னரே உங்கள் பதிவில் எழுதியது போல, புலிகளின் முடிவுரை இன்னமும் எழுதப்படவில்லை. இது போல நெருக்கடியான பல நிலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை பலிகொடுத்து பிரபாகரன் மீண்டுள்ளார். அதே போல இன்னொருமுறையும் மீளலாம்.

இன்று உலகில் தீவிரவாதத்துக்கு ஆதரவாக துணிந்து கருத்தை சொல்லலாம். ஆனால், அதனை எதிர்த்துதான் கருத்து சொல்ல முடியாது என்பதுபோன்ற ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இது தாலிபானை எதிர்த்து கருத்து சொல்லும் பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர்களிலிருந்து புலிகளை எதிர்த்து கருத்து சொல்லும் இந்திய பத்திரிக்கையாளர்கள்வரை அச்சுறுத்தலுக்கு இடையேதான் வாழ வேண்டியுள்ளது. இது அரசாங்கம் பலவீனமாக இருக்கும் பல நாடுகளிலும் இதுவே நிலை. இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக் படம் எடுத்த வான்கோ கூட ஐரோப்பாவில் தீவிரவாதத்தின் வன்முறையிலிருந்து தப்பமுடியவில்லை.

ஆகவே பாண்டி அடித்து ஆடுவது கேவலமானது.

இலங்கை அரசு இன்று no causality polity என்பதன் மூலம் சாதாரண சிவிலியன்கள் எக்காரணம் கொண்டும் கொல்லப்படக்கூடாது என்ற முனைப்புடன் போர் நடத்தி வருகிறது. அதனால்தான் கடந்த இரண்டு வருடங்களாக போர் நடந்தும், இதுவரை உலக ஊடகங்களில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை. 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்று AP வழி வந்த செய்தி தவறு என்று அது அந்த செய்தியை வாபஸ் வாங்கிவிட்டது. பொதுவாக மேற்கத்திய ஊடகங்கள் மீது இலங்கை அரசு நம்பிக்கை இழந்துவிட்டது. முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகள் மீதும் ஆசிய நாடுகள் மீதும் பிபிஸி போன்ற ஊடகங்கள் செலுத்தும் ஊடக வன்முறை பற்றி தனி கட்டுரையே எழுதலாம். இன்று மனித உரிமை என்பது மேற்கத்திய நாடுகள் மற்ற நாடுகள் மீது ஆதிக்கம் புரிய ஏற்ற ஒரு உபகரணமாக ஆகியுள்ளது. அதே வேளையில் இந்த மேற்கத்திய நாடுகள் தங்களது அசிங்கங்களை மறைக்கவும் இதே ஊடகங்களையே பயன்படுத்திக்கொள்கின்றன. உதாரணம் terror on Americaவுக்கும், terror in mumbaiக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுணரலாம். இந்தியாவில் நடந்த பயங்கரவாதத்துக்கு ஏதோ இந்தியர்களே காரணம் என்பதுபோல எழுதும் இந்த ஊடகங்கள், அவர்களது நாட்டில் நடக்கும்போது எப்படி எழுதுகின்றன என்பதை பாருங்கள்.

இலங்கையில் புலிகள் துரத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் புலிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஆதரவாக உள்ளார்கள். கிழக்கு மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு ஜனவரி 30இல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டது போன்ற இலங்கை ராணுவத்துக்கு எதிரான ஹர்த்தாலை அறிவித்தது. ஒன்றுமே நடக்கவில்லை. ஹர்த்தால் படு தோல்வி அடைந்தது. அதனால், அந்த செய்தியை புலி ஆதரவு ஊடகங்களும், தமிழக ஊடகங்களும் இருட்டடிப்பு செய்தன.

யாழ்ப்பாணத்தில் நேற்று புலிகளை எதிர்த்தும் அவர்கள் பொதுமக்களை விடுவிக்கவேண்டும் என்று கோரியும் பேரணி நடத்தினார்கள். நடத்தியது டக்ளஸ் தேவானந்தா கட்சி என்றாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளதை இணையத்தில் பார்க்கலாம்.

கவனியுங்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் வெளியேற்றப்பட்டபோது இது போல கூப்பாடு போடப்படவில்லை. தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், இனப்படுகொலை நடக்கிறது என்ற கூப்பாடு இல்லை. இன்று ஏன் நடக்கிறது. ஏனெனில், இன்று புலித்தலைமையை வன்னியிலேயே தாக்க வந்திருப்பதால்தான் இந்த கூப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றுதானே தெளிவாகிறது? கிழக்கு மாகாண மக்கள் மீது இலங்கை அரசு போரா நடத்தியது? இல்லை. புலிகளைத்தான் விரட்டினார்கள். இன்று கிழக்கு மாகாண மக்கள் மீது இலங்கை அரசு கொலையா செய்கிறது? எல்லோரும் வழக்கம்போல சென்று காய்கறி வாங்கி வீட்டில் சமையல் செய்கிறார்க்கள்.

மாவிலாறு ஆற்றங்கரையில் புலிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளும் கற்பழிப்புகளும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். அதே போல லசந்தா கொலையின் பின்னணியும் ஒருநாள் வெளியே வரும்.

தினமலர், தி இந்து , துக்ளக் தவிர எல்லா பத்திரிக்கைகளும் (பிராம்மணர்களது மற்ற பத்திரிக்கைகள் உட்பட) புலி ஜால்ராவாகவே இருந்தாலும், இந்த மூன்று பத்திரிக்கைகளையும் எதிர்த்து நடக்கும் பிரச்சாரம் எப்படி கண்மூடித்தனமாக நடக்கிறது என்று பாருங்கள். இந்த மூன்று பத்திரிக்கைகள் சொல்லும் எதிர்கருத்தைக்கூட தாங்க முடியவில்லை இவர்களால். இவர்களா கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்?

நாம் தமிழர் என்பதால், தமிழர் செய்யும் அனைத்து அசிங்கங்களையும் பேசக்கூடாது என்பது மாபெரும் சுய சென்ஸார். தெரிந்தோ தெரியாமலோ அதில் விழக்கூடாது. பேசுபவர்கள் மீது என்ன அடிவருடி பட்டம் கட்டப்பட்டாலும் எதிர்த்து முனகவாவது செய்யும் அனைவருக்கும் என் நன்றிகள்.

மாலன் said...

>>இதற்கு மேல் இங்கு என் வாதத்தைத் தொடர நேரமில்லை<<

எனக்கும்தான்.

விவாதம் இத்துடன் நிறைவடைகிறது. இனி வரும் பின்னூட்டங்கள் ப்திப்பிக்கப்படமாட்டாது.
விவாதிக்க முன்வந்த அனைவருக்கும் நன்றி