Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts
Showing posts with label விடுதலைப் புலிகள். Show all posts

Friday, January 30, 2009

முத்துக்குமார்

தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அக்டோபர் மாத மத்தியில் தமிழக அரசியல்கட்சிகள் இலங்கைப் பிரசினையில் மேற்கொண்ட மிகை உணர்வு நிலையின் உச்சம் நேற்று முத்துக்குமார் என்ற இளைஞனின்
தீக்குளிப்பு. அவரைத் தற்கொலைக்கு உந்தியதில், இலங்கைப் பிரசினை நெருப்பில் குளிர்காய முயன்ற தமிழக ஊடகங்களுக்கும் பங்குண்டு.

இரண்டாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 2006) செஞ்சோலையில் குழந்தைகள்
இலங்கை விமானங்களின் தாக்குதலுக்கு பலியான போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன என்பதையும் இப்போது பிரபாகரன் பற்றிய தொடர், இலங்கை அரசியல் வரலாறு, குட்டிமணி ஜகன்
பற்றிய பழைய தொடரின் மீள்பிரசுரம் எனக் கடை விரித்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் அக்கறை எதன் மீது எனப் புரியும். தங்கள் அரசின் நிர்வாகத் தோல்விகளால் (மின்வெட்டு, பணவீக்கம்,
விலைவாசி, எரிபொருள் தட்டுப்பாடு) மக்களிடையே ஏற்பட்டிருந்த சினத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு ஆளும் கூட்டணி இலங்கைத் தமிழர் பிரசினையைக் கையிலிடுத்துக் கொண்டதும்,
ஊடகங்கள் இந்த மிகை உணர்வுச் சூழலில் ஒரு 'மார்க்கெட்' இருப்பதை உணர்ந்து கொண்டு களமிறங்கின. தங்கள் பத்திரிகையின் வாசகர்களை (நுகர்வோர் என வாசிக்கவும்) மிகை உணர்வு நிலையிலேயே வைத்திருக்கும் வகையில் செய்திகள்/பேட்டிகள் வெளியிட்டன. அதன் விளைவு நேற்று சாஸ்திரி பவனில் கொழுந்துவிட்டு எரிந்தது.

இன்று என் கவலை எல்லாம், இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான்.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான
அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி ) ஒரு சம்பவம் ஒரு Syndrom ஆக மாறுவதில் ஊடகங்களுக்குக் கணிசமான பங்குண்டு.
இலங்கைப் பிரசினை விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்குமான மோதல் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எளிமைப்படுத்தியே பெரும்பாலும் ஊடகங்களில் (வலைப் பதிவுகள் உள்பட) பார்க்கப்படுகிறது. ஆனால்
உண்மையில் அது பல தளங்கள் கொண்டது.

அரசுப்படைகளுக்கும், புலிகளுக்குமிடையே மோதல் நடக்கிறது என்பது கண்ணிற்குத் தெரியும் உண்மை. ஆனால் மோதல் எதன் பொருட்டு? தமிழ் மக்கள் சிங்களர்களுக்குச் சமமான சிவில் உரிமைகளைப் பெறும் பொருட்டு என எளிதாக ஊடகங்கள் எழுதவும் பேசவும் செய்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்த்க் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக
நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் அதிகாரம் பெற்றால் தமிழர்கள் அதிகாரம் பெறுவார்கள் என்பது முற்றிலும் சரியல்ல என்பதைக் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்கிறது. தங்கள் அதிகாரத்திற்கு எதிரான கருத்துக்
கொண்டவர்களை -அவர்கள் தமிழர்களே ஆன போதிலும்- அவர்கள் பலமுறை ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக்
கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ்-ஜெயவர்த்தன திட்டத்தில்
(scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு 'தேனிலவு' கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப்
புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல, தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.

எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை ராணுவத்தின் மூர்கத்தனத்திற்கும், எத்தனை தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை தாங்கள் அதிகாரம் பெற வேண்டுமென்ற விடுதலைப்புலிகளின் முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே சாராம்சத்தில் அதிக வேறுபாடுகள் இல்லை.

இந்த மூர்க்கத்தனத்திற்கும், முரட்டுப் பிடிவாதத்திற்குமிடையே இலங்கையை விட்டும் வன்னியை விட்டும் வெளியேறச் சக்தியோ, விருப்பமோ இல்லாத பொதுமக்கள் மாட்டிக் கொண்டு பலியாகி வருகிறார்கள்.எந்த ஒரு
போரிலும் இது போலப் பொதுமக்கள் crossfireல் மாட்டிக் கொள்வது நடக்க்கிற ஒன்றுதான் என்பதை அண்மையில் இராக்கில் உலகம் கண்டிருக்கிறது.

என்றபோதிலும் இலங்கைப் படைகள் கண் மண் தெரியாமல் சிவிலியன்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படும் அதிகமான இழப்பிற்கு புலிகளின் போர் அணுகுமுறையும் ஒரு காரணம் என அங்கிருந்து வரும்
செய்திகள் உணர்த்துகின்றன.
"We are urgently requesting the Tamil Tigers not to station themselves among the people in the safety zone and fire their artillery - shells and rockets at the army. This will only increase more and more the death of civilians thus endangering the safety of the people," states the Bishop of Jaffna Rt. Rev. Dr. Thomas Savundaranayagam in a letter to President Mahinda Rajapaksa"

இது ஜனவரி 26ம் தேதி வெளியான PTI செய்தி. (இது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் எழுதிய தலையங்கத்தைக் காண: http://www.dailynews.lk/2009/01/28/main_Editorial.asp)

"The ICRC urgently appeals to both sides to allow and facilitate the safe and voluntary movement of civilians out of the combat zone."

இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஜனவரி 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் (ICRC News Release No. 09/02) காணப்படும் வரிகள். (அழுத்தம் என்னுடையது) வேண்டுகோள் இரண்டு தரப்பிற்கும் விடப்பட்டிருப்பது விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் வெளியேற்றத்தை மறித்து வருகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இதை உறுதி செய்வது போல், இன்று (ஜனவரி 30) தமிழக சட்டமன்றத்தில் தமிழக நிதி அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர்
அன்பழகன் "இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசு முன்வந்துள்ள நிலையில், விடுதலைப் புலிகள் ஏன் அதை மதிக்கவில்லை. இலங்கை அரசின் தற்காலிக போர் நிறுத்தத்தை ஐநா கூட வரவேற்றுள்ளது. போர் நடைபெறும் பகுதியிலிருந்து அப்பாவி மக்கள் வெளியேற புலிகள் அனுமதிக்காதது ஆச்சரியமளிக்கிறது." என்று பேசியிருக்கிறார் (தினமணிச் செய்தி)
அப்பாவிப் பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் இறப்பதற்கும் துயருக்குள்ளாவதற்கும் காரணம் என்ன என்பதை ஊடகங்கள் எடுத்துரைத்திருந்தால் ஒரு வேளை முத்துக்குமார் தன்னை மாய்த்துக் கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும். பொதுமக்களின் துயர் குறித்து அக்கறை கொள்ளாத பயங்கரவாத இயக்கத்தின் ஊதுகுழலாகத் திகழ்ந்த நம் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் உணர்ச்சி வெறியேற்றி ஓர் இளைஞனைக் கொன்றுவிட்டன.

மூர்க்கத்தனத்திற்கும் முரட்டுக் கோபத்திற்குமிடையே இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்க முடியும்? போரை நிறுத்திவிட்டு இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுதலைப் புலிகளிடம் ஒரு பகுதியைக்
கொடுத்துவிடுங்கள் என இலங்கை அரசை வற்புறுத்துகிற நிலைப்பாடா? அது தமிழர்களை ஒரு சர்வாதிகர அமைப்பின் கீழ் தள்ளுவதாகாதா? அல்லது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் நாங்கள் உங்கள் சார்பாக இலங்கை அரசிடம் பேசுகிறோம் என்ற நிலைப்பாடா? அந்த நிலையைத்தானே அது ராஜிவ் காலத்தில் மேற்கொண்டது? அப்போது இந்தியாவிற்குப் புலிகளிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்புக் கிடைத்தது
என்பதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னால் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் பிரசார பிரங்கிகள் என்ன சொல்லிக் கொண்டிருந்தன? " ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக இந்தியா தலையிட வேண்டுமென்று
நாங்கள் கேட்கவில்லை. ஈழத்தை யாருடைய உதவியும் இன்றி புலிகளே வென்றெடுப்பார்கள். இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்யாமல் இருந்தால் போதும் என்றுதான் கேட்கிறோம் ( திருமாவளவனின் நடிகர் சங்க பேச்சு)

அதாவது இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதுதான் பிரசினை. ஆனால் இன்று (ஜனவரி 30) திருமாவளவன் சொல்வது என்ன? "ஒரு விடுதலைப் போராட்டக் குழுவை எதிர்க்க அல்லது அடக்க ஒன்றல்ல... இரண்டல்ல...
ஏழுநாட்டுப் படைகளும், ஏராளமாய் ஆயுதங்களும், போதாததற்கு இனத் துரோகிகளும் வேலை பார்த்துவரும் கொடுமையை உலகில் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே... அது இலங்கையில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது."
(http://thatstamil.oneindia.in/news/2009/01/30/tn-thiruma-hails-prabhakaran.html)

அதாவது இலங்கைக்கு ஏழு நாடுகள் ராணுவ உதவி அளித்துக் கொண்டிருக்கின்றன. எந்த மாதிரியான நாடுகள்?

அதையும் அவரே சொல்கிறார். "பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களவர்களுக்கு துணைபோகின்றன."

இந்தப் பின்னணியில் 29ம் தேதி சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தரும் இந்த செய்தியையும்
(http://in.reuters.com/article/topNews/idINIndia-37728120090129)
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்:

"While domestic political sensitivities over the fate of Sri Lanka's Tamils forced India to ease its leverage, rivals China and Pakistan stepped into the breach, offering Colombo military assistance in its war against the Tamil Tiger rebels.
China has sold Jian-7 fighters, anti-aircraft guns and JY-11 3D air surveillance radars to the resurgent Sri Lankan army as it seeks to finish one of Asia's longest-running wars by squeezing the Liberation Tigers of Tamil Eelam fighters in a shrinking patch of jungle in the north.
Pakistan also supplied the army small arms, multi-barrel rocket launchers and trained Sri Lankan air force in precision guided attacks against the rebels, strategic analysts said.
"There have been several shipments of weapons from Pakistan. What has made a real difference to the outcome of the war is the Sri Lankan air force which has been rigorously trained by Pakistan in precision-guided attacks.," retired Indian army major general Ashok Mehta said.
India, by contrast, has limited its military assistance to the Sri Lankan army to "defensive weapons".

இந்தச் செய்திகள் சொல்வதென்ன?
1.இலங்கைக்கு ஏழு நாடுகள் உதவி வருகின்றன. (எனவே இந்தியா இலங்கைக்கு உதாவமல் இருப்பதால் அதன் பலம் குன்றி விடப் போவதில்லை. மாறாக பின்னால் என்றேனுமொரு நாள் இந்தியா மீது அதன் கோபம் திரும்பக் கூடும்)

2.சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவி வருகின்றன.இரண்டும் இந்தியாவின் நட்பு நாடுகள் அல்ல. ஏற்கனவே இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து உதவி வருகிறது. இனி இலங்கையும் ஒரு தளமாக மாறும் ஆபத்து இருக்கிறது

3) சரி நாம் இலங்கைக்கு உதவி செய்திருக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும்? அதை கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. நாம் உதவி செய்வதை சற்றே தளர்த்தின 'சைக்கிள் கேப்'பில் பாகிஸ்தான் நுழைந்து விட்டதையும் செய்தி சொல்கிறது.

இலங்கையின் வான்படை வெற்றிகளைக் குவிக்கக் காரணம் அதற்கு பாகிஸ்தானில் கிடைத்த பயிற்சி இந்தியா அல்ல, என்ற தகவல் எட்டியிருந்தால் முத்துக்குமார் ஒருவேளை தன்னை எரியூட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார்.

இலங்கையின் கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதில் சீனா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் செய்தி சுட்டிக் காட்டுகிறது:
"The strategic battle in Sri Lanka is seen as part of a wider power struggle in South Asia, involving not only India and Pakistan but also China, which seeks to gain influence in the important economic region.

China has made strides developing strategic assets, like the Gwadar port in Pakistan, the Sri Lankan port of Hambantota and assets in Yangon, part of a strategy to protect shipping lanes.

Sri Lanka sits next to shipping lanes that feed 80 percent of China's and 65 percent of India's oil needs. "

இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு நாடு என்ற அளவில் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யாமல் இருந்தால் அது தற்கொலைக்கு சமம். ராணுவ உதவிகள் செய்யும் அதே நேரம் அங்குள்ள தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும் அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் நம் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் எடுத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் முத்துக்குமார் எரிந்து போகாமல் காப்பாற்றியிருக்கலாம்.

இன்னொன்றையும் ஊடகங்கள் நினைவுபடுத்தியிருக்க வேண்டும். இந்தியாவும் இலங்கையும் தமிழ் பேசும் இரு வேறு நாடுகள். ஒரு மொழி பேசும் பல நாடுகள் உலகில் இருக்கின்றன, உதாரணம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஆங்கிலம் பேசுகின்றன. காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உருது பேசப்படுகிறது. வங்காளத்திலும் வங்கதேசத்திலும் வங்காளம் பேசப்படுகிறது. சீனத்திலும் சிங்கப்பூரிலும் சீனம் பேசப்படுகிறது.அதே மொழியைப் பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு
விஷயங்களில் தலையிட முடியாது. தலையிடக் கூடாது.

ஆனால் ஒரு பக்கம் தொப்புள் கொடி உறவென்றும் மற்றொரு பக்கம் தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்றும் நம் அரசியல் வாதிகள் செளகரியம் போல் பேசி வருகிறார்கள். அதைத் தவிர்த்திருந்தால் முத்துக்
குமர்கள் கருகியிருக்க மாட்டார்கள்.

Tuesday, March 04, 2008

தடுமாறுகிறார் முதல்வர். ஏன்?

‘தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்சநீதி மன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் ‘தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது' என்ற கேள்வி எழுந்திருக்கும்.

கருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் ‘தடை செய்யப்பட்ட இயக்கம்', ‘பயங்கரவாத இயக்கம்' என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் (Unlawful activities (Prevention) Act 1967) ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும்? ஆனால் இந்தப் பிரசினையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரசினையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.

சரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது?((AIR2004SC 456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று mens rea. ‘Mens rea' என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘குற்ற மனப்பான்மை' என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக் கூடாது, குற்றம் செய்யும் மனப்பானமையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரை குற்றம் புரிந்தவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.

பொடா சட்டத்தின் 20,21,22 ஆகிய பிரிவுகள் செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது, அந்தச் சட்டபிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசவே, அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். (AIR 2004 SC 456) சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், ‘வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்' என்பதுதான்

திருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல், (அதாவது ‘தெரியாமல்' )அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா? கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துக்களின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்து விட்டதாக எண்ண இயலவில்லை. “விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அலிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா? ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா?

எனவே கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுக்களுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளை சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து (quoting out of context) திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.

இன்னொரு விஷயமும் கவனிக்கத் தக்கது. முதலில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பைச் சுட்டி நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால், ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார். அதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒருகாலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர் இப்படித் தலைகீழான மாற்றத்திற்கும் தயாரானது எதன் பொருட்டு? விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.

இதில் இன்னொரு வேடிக்கை, திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாட்கள் முன்னதாக காவல் துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி? சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச் செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில்? அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா? அப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா? இந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப்புலிகளுக்கு பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா? மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருந்திருக்க வேண்டும்?. தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்

தமிழ்ச் செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப் படையில் இருந்த பலர் போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணின் இந்திய நாட்டைப் பிரதிநித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது..

தமிழ்ச் செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிக்களுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்?

விடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை, வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற ‘ரிஸ்கை'யும் பொருட்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ திமுகவோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?

20.2.2008 அன்று எழுதி, 3.3.2008ல் தினமணியில் வெளியான கட்டுரை