Wednesday, March 16, 2005

கருப்பை அரசியல்

மாமியா இது?

புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல் மழித்தெறியப்பட்டிருந்தது. ஆபரணங்கள் எதையும் காணோம். பிறந்ததிலிருந்தே பட்டு தவிர வேறெதுவும் உடுத்திய அறியாத உடம்பு கனத்த காவித் துணியைத் தரித்திருந்தது.

மாமியா இது?

மாமிதான். அவர் சித்தார்த்தனாக, அரண்மனையில் இளவரசனாக வளர்ந்த போது அவரை சீராட்டிக் கொஞ்சி உணவளித்துப் பேணி வளர்த்த மாமி கோதமிதான். முடியை மழிக்கலாம். துணியை மாற்றலாம். முகத்தை மாற்ற முடியுமா?

" என்ன மாமி இது?"

"எனக்கும் சந்நியாசம் கொடுத்துவிடு. நானும் ஒரு பிக்குணியாக மாறி உன் உபதேசங்களை ஊருக்கு எடுத்துச்

சொல்கிறேன்"

"மாமி நீங்கள் எத்தனையோ முறை கேட்டுவிட்டீர்கள். நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். எங்கள் புதிய மதத்தில், குடும்பப் பெண்களுக்குத் துறவறம் கொடுப்பதில்லை"

" அதுதான் ஏன்?"

புத்தர் பேசவில்லை. கல் போல் அங்கு ஓர் மெளனம் இறுகிக் கிடந்தது.

"சரி நீ எனக்கு பதில் சொல்ல வேண்டாம்.ஆனால் நீ எனக்கு சந்நியாசம் கொடுக்கும் வரை இந்த இடத்தைவிட்டுப் போகமாட்டேன்."

" இப்படியே நீங்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தால் நான் உங்களை சந்திப்பதையே தவிர்க்க நேரிடும். எனக்கு வேறு வழியில்லை"

அருகில் இருந்த ஆனந்தர் பதறிப்போனார்.

" சுவாமி அவசரப்பட்டு அப்படி ஏதும் செய்துவிடாதீர்கள். நீங்கள் இங்கு வைசாலியில் உள்ள மகாவனத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்பதைக் கேள்விப்பட்டு நெடுந்தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள். அவர்களது கால்கள் வீங்கிக் கிடப்பதைப் பாருங்கள். உங்களைப் போலவே அவர்களும் அரண்மனையை, அதன் வசதிகளை, செல்வத்தைத் துறந்து காவி அணிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு சில நாள்கள் இருக்கட்டும். யோசித்து முடிவு
சொல்லலாம் சுவாமி"

புத்தர் அப்போது ஏதும் பேசவில்லை. ஆனால் பிறகு தனியாக ஆனந்தரிடம் சொன்னார்: " ஆனந்தரே, பெண்கள் இல்லற வாழ்வை விட்டு, நாம் விதித்த விதிமுறைகள், ஒழுக்கங்களுக்கேற்ப, வீடற்ற நிலையை எய்த வேண்டும் என்பதற்கு இசைவு அளிக்காமலிருந்திருந்தால், இந்த மதம் பலகாலம் நிலை பெற்றிருந்திருக்கும். இந்த நல்ல
விதிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உறுதியாக நிலை பெற்றிருந்திருக்கும். ஆனால் இப்போது பெண்கள் துறவு பூணுவதற்கு இசைவு பெற்று விட்டமையால் இந்தத் தூய்மையான மதம் நீண்ட நாள் நிலைத்திருக்காது. இந்த மதம் ஐநூறு ஆண்டுகள்தான் உறுதியாக நிலை பெற்றிருக்கும்."

புத்தரின் இந்தக் கூற்று, மாக்ஸ்முல்லர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ' Sacred book of the East (vol xx) என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது.

பெண்கள் துறவறம் மேற்கொள்வதை புத்தர் அனுமதித்தார் என்றாலும் அதை அவர் முழு மனதாக ஏற்கவில்லை என்று கருத இது ஒரு சான்று. தமிழிலிலேயே கூட தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை, பெண்களில் மணிமேகலை ஒருவரையே பெளத்த துறவியாகவும், கவுந்தி அடிகள் ஒருவரையே சமணத் துறவியாகவும்
இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

பெண்கள் துறவிகளாவதை மட்டுமல்ல, அவர்கள் பூசாரிகள் ஆவதைக் கூடப் பெருமபாலான மதங்கள் அனுமதிப்பதில்லை, ஊக்குவிப்பதில்லை. சந்நியாசியாகி புற உலகச் செயல்களிலிருந்து விலகி, உள்முகமாகத் திரும்பி, ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது என்பது ஒன்று; பூசாரிகளாகி, மதங்கள் விதித்துள்ள நெறிகளின்படி சடங்குகளை நடத்தி வைப்பது, கோவில்களில் பூஜை செய்வது என்பது வேறு. ஆனால் இந்த சடங்குகளை நடத்தி வைக்கக் கூடப் பெண்களைப் பெரும்பாலான மதங்கள் அனுமதிப்பதில்லை.

இந்தப் பின்னணியில், அண்மையில் வந்தவொரு செய்தி, ஆச்சரியமும் மகிழ்வும் அளிப்பதாக அமைந்திருந்தது.

தமிழகச் சட்டமன்றத்தில் கோவில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்களா என்று ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். ஆகம விதிகள் படித்தறிந்த, தகுதியான, பெண்கள் இருந்தால் அவர்களை அரசு நியமிக்கும் என்று அமைச்சர் பதிலளித்தார். இது ஆகம விதிகளுக்கு எதிரான செயல் என்று விஸ்வ இந்து பரிஷத் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

ஆனால் ஆதிகாலத்தில் சமயச் சடங்குகளைப் பெண்களே நிறைவேற்றி வந்திருக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள ஆதிகுடிகளிடையே இதை இப்போதும் பார்க்கலாம். விளைநிலம் சார்ந்த சடங்குகளை- தானியம் விதைப்பது, இயற்கையைத் தொழுது பாடுவது, விளைச்சலுக்கான வண்மை சேர்ப்பது இவற்றையெல்லாம் பெண்கள்தான் செய்து

வந்திருக்கிறார்கள். இப்போதும் சில வேளாண் சமூகங்களில் செய்கிறார்கள். கோவை மாவட்டம் பேரூருக்கு அருகில் வேளாண் வகுப்பினர், பயிர்த் தொழிலைத் துவக்கும் முன் பத்து நாட்களுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவில் சடங்குகளைப் பெண்களே செய்கிறார்கள். இந்தியா முழுவதும் மழை வேண்டி நடக்கும் சடங்குகளைப் பெண்களே செய்கின்றனர். ஊருக்கு ஊர் இந்த சடங்கு முறையிலே மாற்றம் இருந்தாலும், சடங்குகளைப் பெண்கள் செய்வது என்பதிலே மாற்றம் இல்லை.

ஆதி மரபுகளை விட்டுவிட்டு வேதமரபுகளை எடுத்துக் கொண்டால் வழிபாடுகளில் முதனமையான பாத்திரம் வகிப்பவை மந்திரங்கள். ரிக்வேதம் 'வாக்' என்று ஒரு பெண்ணைத்தான் ஒலிக்குரிய தேவதையாகக் குறிப்பிடுகிறது. 'பிரபஞ்சம்
முழுமையும் தன் ஆணையால் ஒன்றுபடுத்தும் தெய்வம்' என்று அது அவளின் இயல்புகளைக் குறிப்பிடுகிறது.

ஞானம் தருபவையாக, ரிக் வேதம், மூன்று தெய்வங்களைக் குறிப்பிடுகிறது இலா, சரஸ்வதி, பாரதி ஆகிய அந்த மூவரும் பெண்கள். அதில் இலா வேள்வி செய்யும் முறையை மனிதர்களுக்கு போதித்த ஆசான். பாரதி நாவன்மையின் தேவதை. கவிதைகள் பிறக்க இவள் அருள் வேண்டும்.அறிவு, விவேகம், சாதுரியம், கற்பனை வளம்,
படைப்பாற்றல், புதிய கண்டு பிடிப்புகள், நுண்கலைகள் அனைத்தையும் பாதுகாக்கும் ஞான தேவதை சரஸ்வதி.

ஆனால் இந்த சரஸ்வதி பூஜையைக் கூட இன்று பெண்கள் செய்யமுடியாது. வேள்விகளை செய்வதற்குரிய முறைகளைக் கற்பித்த ஆசான் பெண். பூஜையின் ஆதாரமாக உள்ள மந்திரங்கள் பெண். அதற்கான நாவன்மையும், படைப்பாற்றலும் தருபவள் பெண்.ஆனால் அவள் பூசை செய்ய முடியாது!

ஆண்களை விடப் பெண்களுக்கு பக்தி அதிகம். நான் ஆண்களில் நாஸ்திகர்களை சந்தித்த அளவு பெண்களில் சந்தித்ததில்லை. சுயக்கட்டுப்பாடுகள் பெண்களிடத்தில் அதிகம். விரதம் இருக்கும் காலங்களில் தேநீர் கூடப் பருகாமல் பணியாற்றுகிற பெண்களை நான் பார்த்திருக்கிறேன். அதே போல 'மாலை போட்டுக்கொண்ட' நாட்களில் கூட புகைப்பதை விட முடியாத ஆண்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனாலும் ஆண்கள் பூசாரிகளாகப் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அது மறுக்கப்படுகிறது.

ஏன்?

'கருப்பை அரசியல்'தான் காரணம்.

பெணகள் தங்கள் உடலியல் அமைப்புக் காரணமாக மாதததில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாதவிலக்கை சந்திக்கிறார்கள். அந்த நாட்களில் அவர்கள் தூய்மை குறைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பூஜை செய்வதற்கு அருகதை அற்றவர்களாகி விடுகிறார்கள் என்று சிலர் வாதிடுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது என நான் சந்தேகிக்கிறேன். ஒருகாலத்தில் சமூகத்தலைமை, அரசியல் தலைமை ஆகியவை பெண்களிடம் இருந்தன. நாடு சார்ந்த அரசுரிமையைக் குறிக்கும் சொல் 'தாயம்' ( திருவாங்கூர் அரசு மருமக்கள் தாயம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்) தாய் என்ற அடிச் சொல்லில் இருந்து பிறந்த சொல் தாயம்.

புறநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியாரின் கவிதையாக ஒரு பாடல் இருக்கிறது. 'கெடுக சிந்தை, கடிதிவள் துணிவே' என்று துவங்கும் அந்தப் பாடல் நமக்கு ஒரு கதை சொல்கிறது. முதல் நாள் போருக்குத் தன் தந்தையையும் சகோதரனையும் போருக்கு அனுப்புகிறாள் ஒரு பெண். அவர்கள் போரில் இறந்து விட இரண்டாம் நாள் தன் கணவனை அனுப்புகிறாள். அவனும் பெரும்படையை எதிர்த்துப் போரிட்டு மாய்ந்து போகிறான். இத்தனைக்கும் பின்,
போர்ப்பறை கேட்டவுடன் தன் ஒரே மகனை போருக்கு அனுப்பி வைக்கிறாள். இவள் துணிவு வலுவானது.இவளுக்கு புத்தி கெட்டுப் போக என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள் ஒக்கூர் மாசாத்தி.

இதில் நான் முன்று செய்திகளைப் பார்க்கிறேன்.
1. யார், என்று போருக்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கிற அதிகாரம் பெண்ணிடம் இருந்தது.
2. போருக்கு ஆண்கள் அனுப்பப்பட்ட வரிசை.
3. அந்தக் காலக் குடும்ப அமைப்பு. ஒரு பெண்ணுடன் அவளது தந்தை, உடன் பிறந்தவர்கள், கணவன், அவளது குழந்தைகள் என்று குடும்பம் அமைந்திருந்தது ( இன்று இதற்கு நேர் மாறாக கணவன், அவனது பெற்றோர்கள், அவனது உடன் பிறந்தோர்,
மனைவி, குழந்தைகள் என்று ஆணை மையப்படுத்தி அமைந்திருப்பதைக் கவனித்தால் குடும்பத்தில் பெண்ணிற்கு இருந்த முக்கியத்துவம் புரியும்)

குழந்தை என்பது ஆண் பெண் கலப்பினால் உருவாகிறது என்ற உண்மை புலப்படாமல், ஆதி சமூக மனிதன், இறந்து போனவர்கள் பெண்களின் மூலமாக மறு பிறப்பு எடுக்கிறார்கள் என்று கருதிய போது பெண்களுக்கு தெய்வத் தன்மைகள் கொடுக்கப்பட்டன. அவர்களைக் குறித்து ஓர் அச்ச உணர்வு இருந்து வந்தது.

வேட்டை சமூகம்- வேளாண் சமூகம்- நிலவுடமை சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்டபோது 'அரசியல்' துவங்கியது. வேள்வி செய்பவருக்கே சொத்துரிமை என்பது ஏற்பட்டபோது, சொத்துரிமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காகப் பெண்களுக்கு வேள்வி செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. பின் அதற்கு ஆதராமான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பின் சொத்துக்கள் அவள் தேர்ந்தெடுக்கும்
ஆணின் வசம் போய்விடக் கூடாதென்பதற்காக அவளே தன் துணையை வரித்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.

இது எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும், இதைக் குறித்துக் கேள்விகள் எழாமல் தடுக்கவும், ஆணிடம் இல்லாத பெண்ணிடம் மட்டுமே உள்ள கர்ப்பப்பை முன்னிறுத்தப்பட்டது. பெண்ணினுடைய பிறப்பின் பயனே குழந்தை பெற்றுக் கொடுப்பதுதான் என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன. சிறுவயதிலிருந்தே பெண்கள் தங்கள் உடமபைப் பற்றிய உணர்வு (பிரஞ்கை) ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டார்கள்.

அதில் ஒன்று மாதவிலக்கு என்பது 'தீட்டு' என்ற கருத்தாக்கம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ்நாட்டில், குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொள்ளாத பிராமண சமூகங்களில். அந்த அசெளகரியமான நாட்களில் பெண்கள் தீண்டத்தகாதவர்களைப் போலவே நடத்தப்பட்டு வந்தார்கள். படித்து வேலைக்குப் போகும் நிலை ஏற்பட்டு, அதிக இடம் இல்லாத அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுவிட்ட பிறகும்
கூட இது ஏற்படுத்தியுள்ள மனத் தடுப்புக்களைத் தாண்டி வரமுடியாத பெண்கள் பலர் இப்போதும் இருக்கிறார்கள்.

பிறரிடம் இல்லாத செல்வம் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத கல்வி தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத படைப்பாற்றல் தன்னிடம் இருந்தால், பிறரிடம் இல்லாத தொழில் நுடப அல்லது வணிக அறிவு தன்னிடம் இருந்தால்,பிறரிடம் இல்லாத அழகு தன்னிடம் இருந்தால் மனிதர்கள் பெருமை கொள்கிறார்கள்.ஆனால் ஆண்களிடம் இல்லாத மனித உயிரைப் பிறப்பிக்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பது குறித்துப் பெண்கள் கர்வம்
கொள்வதற்குப் பதில் கூச்சம் கொண்டதால் அடிமைப்பட்டுப்பட்டுப் போனார்கள்!

பெண்களைப் பூசாரிகளாக நியமிக்கிற காலம் வந்தால் அவளது மனத் தடைகள் கரையும்.பல விலங்குகள் உடைபடும். சமூகம் ஒரு முறை குலுங்கித் தன்னை சமன் செய்து கொள்ளும். அப்படி ஒரு நாள் வருமா?அல்லது

அரசின் எத்தனையோ அறிவிப்புக்களைப் போல இதுவும் இன்னுமொரு அறிவிப்பாகவே நின்றுவிடுமா?

10 comments:

Thangamani said...

இந்தச் செய்தியைப்படித்தவுடன் நானும் எழுத நினைத்தேன். நன்றி. இந்தக் கருப்பை அரசியல் இன்னும் கட்டுடைக்கப்பட்டால், அதில் புனிதம்- மாதவிலக்கு என்ற கருத்தாக்கமும் உடைக்கப்படவேண்டி இருக்கும்; மாதவிலக்கு நாட்களிலும் பூசை செய்யவதும்/ ஒரு தலித் தஞ்சைபெரியகோவிலிலோ, சிதம்பரத்திலோ பூசை செய்வதும் ஒன்றுதான். ஆனால் அது சாதி மற்றும் ஆணாதிக்க அடக்குமுறையை அடியோடு தகர்ப்பதாக ஆகும். அதனால் நடப்பது சந்தேகம்தான்.
உடல்-இன்பம்-சுத்தம் போன்றவற்றின் மீது நுட்பமாகக் கட்டப்பட்ட இந்த சதி அவ்வளவு எளிதாக நொறுங்கிவிடுமா?

பாலு மணிமாறன் said...

பெண் அர்ச்சகர்கள் என்பதை கால மாற்றத்தின் இன்னொரு அடியாக,படியாகவே பார்க்க முடிகிறது. இது இன்றைய உலக ஓட்டத்தில் எந்த சக்தியாலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாத சங்கதி. இன்னும் முப்பது, நாற்பது வருடங்களுக்குப் பிறகு - பெண்களைப் பற்றி நாம் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்ததே அன்றிருக்கும் தலைமுறைக்கு நகைச்சுவையாகப் போய்விடக்கூடும்...

"அந்த வருடங்களில்" ரோஜர் ·பெடரரை ஜெயிக்கக்கூடிய செரீனா வில்லியம்ஸ்கள் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் காஸ்பரோவை ஜெயிக்கக்கூடிய ஜுடிட் போல்கார்கள் கட்டாயம் கணக்கில்லாமல் கிடப்பார்கள் !

நாலாவது கண் said...

அருமையான கட்டுரை. வரலாற்றுப் பின்னணியில் தொடங்கி, இன்றைய நிலைக்கு வந்ததை பற்றி ஒரு சிறந்த Logical argument.

//வேட்டை சமூகம்- வேளாண் சமூகம்- நிலவுடமை சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்டபோது 'அரசியல்' துவங்கியது வேள்வி செய்பவருக்கே சொத்துரிமை என்பது ஏற்பட்டபோது, சொத்துரிமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காகப் பெண்களுக்கு வேள்வி செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. பின் அதற்கு ஆதராமான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. பின் சொத்துக்கள் அவள் தேர்ந்தெடுக்கும்
ஆணின் வசம் போய்விடக் கூடாதென்பதற்காக அவளே தன் துணையை வரித்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.//

தங்களது கட்டுரையின்படி - பெண்கள் தங்களது மேலாதிக்கம்... குறைந்தபட்சமாக சமநிலையை இழந்தது, இந்த கட்டத்தில்தான் என்று புரிகிறது. ஆனால் அந்த மாற்றம் நடந்தது எப்போது? அதை பெண்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? தனது பெண்டு, பிள்ளைகளிடமே, அதுவரையில்லாத ஒரு அரசியல் பண்ணத் தொடங்கிய அந்த தந்தை வம்சம் யார்? அதற்கான நெருக்கடி என்ன? எப்படி இதை மற்ற பகுதிகளுக்கும் அவர்கள் பரப்பினர்?

இந்த கட்டுரையைப் படிக்கும்போதே... இப்படி பல கேள்விகள் என்னுள் எழுகிறது.

தௌதவான, ஒரு argument வைக்கும் நீங்கள் - அந்த மாற்றம் பற்றி மேல் தகவல்களையும் தந்தால் மகிழ்வோம். மற்ற யாரும் கூட இது குறித்து நம்பகமான தகவல் எதாவது கிடைத்தால் பதிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

- சந்திரன்

மீனாக்ஸ் | Meenaks said...

மிகச் சிறந்த பதிவை அளித்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துகள் மிக அருமையானவை. மிக அறிவுபூர்வமானவை. மிக முக்கியமானவையும் கூட. நான் முழுமையாக உடன்படுகிறேன்.

Dr.N.Kannan said...

மாலன்: இந்த மாதவிடாய் சமாச்சாரத்தை உடைக்க வைணவம் கொஞ்சம் முயன்று இருக்கிறது. ஸ்ரீவசனபூஷணம் எனும் புத்தகத்தில் கண்ணன் பாஞ்சாலிக்கு சரணம் கொடுத்த பொழுதில் அவள் மாதவிடாயாக இருந்தாள் என வரும். எனவே இறை ஒழுக்கத்திற்கு இது தடையல்ல என்று வைணவம் சொல்கிறது. ஆயினும் நடைமுறையில் ஆணாதிக்கமே கோலோட்சுகிறது. வானமாமலை ஆலயத்தில் கோஷ்டி சொல்லும் போது பெண்கள் கருவறையில் அனுமதிக்கப்படவில்லை. கொதித்துப்போய் கேட்டேன். அரசாங்க சட்டம் வந்தால் மாறலாம். இல்லை இன்னொரு புதிய இராமானுஜர் வரவேண்டும். நல்ல கட்டுரை.

பத்மா அர்விந்த் said...

மாலன்
அற்புதமாக எழுதி யிருக்கிறீர்கள். மாதவிலக்கை பற்றி பெண்களே (சதவிகிதம் அதிகம்) இன்னும் சரியாக புரிந்து கொள்ளாத வெளையில் அருமையான வாதத்தை துவக்கியிருக்கிறீர்கள். எழுத துவங்கிய பதில் மிகவும் நீளமகிப் போனதால், பின்னூட்டம் இட முடியவில்லை. எனவே தனிப் பதிவாகவே எழுதிவிட்டேன்

Aruna Srinivasan said...

பெண்கள் வழி குடும்பம்தான் ஆதி காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் என் ஊகமும். சென்ற வார என் பதிவு ஒன்றில் நான் கூறியிருந்ததுபோல் இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களிலும், பல பழங்கிடியினரிடமும் பெண்களை முன்னிறுத்திதான் குடும்ப அமைப்பு. இந்த வழக்கம், நடுவில் எப்படி திசை மாறிப்போயிருக்கலாம் என்பதை நீங்கள் அலசிய விதம் நன்றாக இருக்கிறது மாலன். அது சரி, புத்தர் ஏன் பெண்களுக்கு துறவறம் வேண்டாமென்றார் ? அவர் காலம் வரும்போது ஏற்கனவே ஆண்கள் ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டதா? பெண்கள் துறவறம் மேற்கொள்ள லாயக்கில்லை என்று அவர் நினைத்தாரா?மனிதர்களிடையே வித்தியாசம் பாராட்டாதவர் என்றுதான் அவரை பற்றி நினைத்திருந்தேன்.

முதன் முதலில் மஹாராஷ்டிராவில்தான் ஒரு பெண் பூசாரி / அர்ச்சகர் ஆனார் என்று ஞாபகம். ஆனால் அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாகதான் கேள்விபடுகிறோமே தவிர, - ( http://www.indiatogether.org/women/worklife/priest.htm ) பெருமளவில் இன்னும் பெண்கள் இந்த துறையில் காணோம். அதுவும் தமிழ் நாட்டில் எனக்கு தெரிந்து இல்லவே இல்லை. பல இடங்களில் கண்ணாடிக் கூரையைத் தகர்க்கும் பெண்கள், இன்னும் தகர்க்காமல் இருக்கும் ஒரு கோட்டை இது - சமூகக் கோட்பாடுகள் என்ற கோட்டை. ஏன் மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை? முன்வரும் பெண்களும் அதிகம் இல்லையோ? அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? காலம் காலமாக இருந்த / இருக்கிற சமூகத்தடைகளை மீற முயலாததுதான் காரணமோ? அல்லது தொழில் என்று பார்த்தால் வேதியம் என்பது இன்று அத்தனை ஆர்வமாக கற்கப்ப்டாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. வேதியத்தைத் தொழிலாக மேற்கொள்ளும் ஆண்களும் குறைந்து வருகின்றனர் என்பதுதான் இன்றைய நிலை. தொழில் நுட்பம், மருத்துவம், கணக்காளர் என்று மற்ற தொழில்களுக்கு இருக்கும் ஒரு சமூக status வேதியத்துக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேளை இதன் காரணமாகவும் அதிகம் பெண்கள் வேதியம் கற்று இந்தத் தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டாமல் இருக்கலாம். ஆனால் அப்படி ஆர்வம் காட்டும் பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்குமா என்பதற்கான கேள்விக்குதான் அந்த சட்டமன்ற விளக்கம். சட்டத்தின் பக்க பலமும், சமூக சிந்தனையில் மாற்றமும் இருக்கும்போது மாறுதல்கள் பரவலாக ஏற்படும் என்று நினைக்கிறேன். தமிழில் அர்ச்சனை, கச்சேரிகளில் தமிழ் பாட்டுகள் என்பதுபோல் விரைவில் பெண் அர்ச்சகர்களும் தோன்றலாம்.

கண்ணன், வானமாமலை ஆலயத்தில் கருவறையில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினீர்கள். பல ஆலயங்களில் இதே நிலை. திருப்பதியில் ஜீயர் சேவை என்ற கூட்டம் கோவில் உள்ளே போகும்போது அந்தக் கூட்டத்தில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இன்னும் இதுபோல் பல உதாரணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

Anonymous said...

நன்றாகச் சொன்னீர்கள் மாலன். மாதவிடாய் பற்றி (படித்த)பெண்கள் கூட இன்னும் பிடிவாதமாகவே இருக்கிறார்கள். இதுபற்றி எனக்கு ஏற்பட்ட அனுபவமொன்று.
அண்மையில் உறவினர் வீடொன்றில் சிலருடன் (அனைவரும் பெண்களாயிருந்தது தற்செயலாய் நடந்தது) கதைத்துக்கொண்டிருந்த போது மதம் பற்றின கதை எப்படியோ வந்துவிட்டது. அதிலிருந்த அனைவரும் என் உறவினரே. அதில் தற்போதைய திருச்சபையின் பெண்குருத்துவத்துக்கு எதிரான நிலைப்பாடு பற்றி என் எதிர்ப்பை வெளியிட்டபோது அதுபற்றிய கதை தொடங்கியது. வேடிக்கையென்னவென்றால் அதிலிருந்த 6 பெண்களுமே பெண்குருத்துவத்தை ஏற்கவில்லை. பாப்பரசருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தனர். எனக்கு ஆச்சரியமாய்த்தானிருந்தது. (இதுக்குள்ள ஒருத்தி சிற்றருக்கு (கன்னியாஸ்திரி) படிக்கப் போகப்போறா).

"இன்னும் சிறிது காலத்தில் திருச்சபை தவிர்க்கவியலாமல் பெண்குருத்துவத்தை ஏற்கத்தான் போகிறது, காலஓட்டத்தில் இது தவிர்க்க முடியாது” என்று நான் சொன்ன போது, ஒரே குரலில் எல்லோரும் மறுத்தனர். சரி அவர்கள் பெண்குருத்துவம் சரிவராது என்பதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் என்று வினவியபோது அவர்கள் ஏகமனதாகச் சொன்னது, இந்த மாதவிடாய்ப்பிரச்சினை தான். அவர்களே அது ஒரு 'தீட்டு" என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். சொந்தக்காரர்கள் என்பதால் ஆழமாக என்னால் அவர்களுடன் இதுபற்றி விவாதிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வெளிப்படையாக அது ஒரு தீட்டு என்ற பொருளில் தான் கதைத்தார்கள். வெளிநாடுகளில் திருமணமான பெண்களை நற்கருணை (திருப்பலியில் கொடுக்கப்படும் சிறிய அப்பம்) கொடுப்பதற்கு அனுமதித்ததற்கு காரசாரமான எதிர்ப்பை அவர்கள் வெளியிட்ட போது விளங்கிவிட்டது, இதுகள் சரிவராது என்று. "உனக்கு கடவுள் நம்பிக்கையில்ல எண்டு போட்டு இப்பிடித்தான் உளறிக்கொண்டு திரியிறாய்" என்று என்மீது அவர்களின் கோபம் திரும்பியதோடு இனி அவர்களோடு கதைப்பதில் பலனில்லை என் விட்டுவிட்டேன்.

aathirai said...

வெளி மாநிலத்தவர் வசதிக்காக வேதமும், ஆகமும்தான் அர்ச்சகரின் தகுதி என்று தெளிவாகவே

வரையறுத்துவிட்டார்கள். பாலிடெக்னிக் படிப்பு அறிமுகப்படுத்தினாலொழிய இது போன்ற

சட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாது. குழந்தைத் தொழிலாளர் சட்டம் போல் இதுவும் ஒரு ஓரத்தில்

தூங்கப் போகிறது.

Dr.N.Kannan said...

கலந்துரையாடல் அறிவுபூர்வமாக போய்க்கொண்டு இருப்பதால் இன்னொரு கோணம். மனிதன் தவிர்த்து அத்தனை விலங்கிலும் வல்லமை கொண்ட ஆண் விலங்குகளே (alpha male) 'ஹேரம்' (குடும்பம்?) அமைக்கின்றன. விலங்கிலிருந்து விகாரமடைந்த மனித வாழ்விலும் இந்த நியதி தொடர்வதற்கு சாத்தியங்கள் உண்டு. மனிதன் சிந்தனை விலங்கு என்பதால் இந்த மாற்றங்கள் பின் பரிணாமமுற்று பெண்களுக்கு சம உரிமை கோரும் நிலை வந்திருக்கலாம். சங்கம், வேதம் காலத்தில் பெண்களின் நிலை செமத்தியக் கோட்பாட்டிற்குள் (puritanism) விழுந்துவிட்ட இன்றைய நிலையை விட பரவாயில்லை என்று தோன்றுகிறது. நிற்க. கணேசன் சொல்வது போல் இதையெல்லாம் பிராமணர்களின் சூது என்றால் பிராமண ஆதிக்கத்தில் இல்லாத கிராமப்புர கோயில்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுகிறதா? சாதியத்தின்/ஆணாதிக்கத்தின் ஆணி வேர் எங்கிருக்கிறது? பிராமணர்களைச் சூக்காட்டிவிட்டு மற்றவர் ஒளிந்து கொள்வதால் ஏது பயன். ஜேகே சொல்வது போல் choiseless awareness வேண்டும். தளைகள் அற்ற முழு மானுட விடுதலை குறித்த நோக்கு வேண்டும்.கையை நீட்டுவதற்குப் பதில் நம்மை நோக்கி பார்த்துப் பழக வேண்டும். இதை ஒவ்வொருவரும் செய்தால் நலமான மாற்றம் மானுடத்திற்கு வரும் என்று தோணுகிறது!