Sunday, March 13, 2016

தேர்தல் 2016:: கை நழுவிய கனி



கை நழுவிய கனி


 கனிந்து விடும் என்று காத்திருந்தது கிளி. இலவம் மரத்திலிருந்த தனது பொந்திலிருந்து வெளியே வந்து அந்தக் காயைச் சுற்றிச் சுற்றிப் பறந்து  பார்த்துக் கொண்டிருந்தது.காயின் நிறம் முற்றியதும் கனிந்தே விட்டது என்று களி கொண்டு உலகிற்கு அறிவித்தது. ஆனாலும் காற்றுக்கு சந்தேகம். கனிந்து விட்டது நிச்சயம்தானா என்று கிளியைக் கேட்டது, நிச்சயம் நிச்சயம் என இறக்கைகளைக் கொட்டிக் குதூகலித்தது கிளி.

அதன் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. கனி கிடைத்து விட்டால் பசி நீங்கிவிடும்.அது நெடுநாளையப் பசி. கிளி மட்டுமல்ல கிளியின் குழந்தைகளும் பசித்திருக்கிறார்கள்

கனி ஒரு நாள் வெடித்தது. வெடித்தது? ஆம்! கிளி நினைத்தது போல அது உண்ணும் கனியல்ல. அதனுள்ளே இனிப்போ சாறோ கிடையாது. அதனுள் இருந்ததெல்லாம் வெறும் பஞ்சு. பின்னே,இலவ மரத்தில் பழமா பழுக்கும்?

இலவு காத்த கிளிக் கதை தமிழுக்கோ தமிழருக்கோ புதிது அல்ல. நிச்சயம் கருணாநிதிக்குப் புதிது அல்ல. 2006 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி கண்ட மதிமுக இட ஒதுக்கீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினையால் அதை விட்டு வெளியேறி எதிர் அணிக்குப் போனது. பழம் நழுவிப் பாலில் விழுந்த பின்பும்  அது கை தவறிக் கொட்டிவிடவும் கூடும் என்பதை அவர் அனுபவப் பூர்வமாக அறிந்தவர்தான். என்றாலும் இலவு காத்த கிளியை எண்ணிக் கொண்டுதான் வியாழன்  இரவு படுக்கைக்குப் போயிருப்பார்

நிச்சயம்  கூட்டணிக்கு வருவார் என்று நினைத்திருந்த விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது 'இந்த முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம்' என்ற உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்த  திமுகவிற்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.  காரணங்கள் பல

1 திமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தால்  அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளில் கணிசமான அளவு அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். தேமுதிகவினரின் வாக்குகள் அதிமுகவிற்கு விழப் போவதில்லை. கூட்டணி இருந்திருந்தால்  திமுக  போட்டியிடும் இடங்களில், அவை திமுகவிற்கு விழுந்திருக்கும் . இப்போது அந்த வாக்குகள் கிடைக்காது.

ஆனால், தேமுதிகவிற்கு இருக்கக் கூடிய வாக்குகள் 5 முதல் 8 சதவீதத்திற்குத்தான் இருக்கும். அதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடாது என்று திமுகவினர் சொல்கிறார்கள். 2006 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. அப்போது அது  3 தொகுதிகளில் 20% வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15%லிருந்து 20% சதவீத வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% 15% வாக்குகளையும் பெற்றது. பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்ட இந்தத்  தேர்தலில் இந்த அளவு வாக்குகளை அந்தத் தொகுதிகளில் அல்லது சில தொகுதிகளில் பெற்றால் அவை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை

2. திமுகவிற்கு இழப்பு ஏற்படும் அதே நேரம் அதிமுகவிற்கு இழப்பு ஏதுமில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவது அதற்கு சாதகமாக ஆகலாம்


3.பாமக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக, என அநேகமாக எல்லாக் கட்சிகளும் திமுக அதிமுக இரண்டையும் விமர்சித்து வருகின்றன. இப்போது தேமுதிகவும் அந்த வரிசையில் இணைகிறது.மற்ற கட்சியினரைப் போல் அல்லாது, தேமுதிக குறி வைப்பது, கிராமப்புற, அதிகம் படிப்பறிவில்லாத, சினிமா கவர்ச்சியில் தன்னை இழந்த, வாக்காளர்களை.அதனால் திமுக மீதான விமர்சனங்கள்  வேறு ஒரு தளத்திற்கும் செல்கின்றன. திமுக இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். வெறுமனே அதிமுகவை விமர்சித்து மாத்திரம் அதன் பிரசாரத்தைத் தொடர முடியாது.

4. அதிமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணி என்று திமுக கூட்டணிக்கு ஏற்பட்டிருந்த பிம்பம் கலைவது

5. அதன் வெற்றி வாய்ப்பு, கடந்த கால அனுபவங்கள், கணக்குகளின் அடிப்படையில் கேள்விக்குரியதாகிறது. விஜயகாந்த்தின் கட்சி கூட்டணிக்கு வரவில்லை என்பதால்  , திமுக  கிட்டத்தட்ட 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத்  திரும்பி வந்துவிட்டது. அப்போது அதனுடன் பாஜகவைத் தவிர வேறு எந்தப் பெரிய கட்சியும் கூட்டணியில் இல்லை. பாஜகவைத் தவிர சில ஜாதிக் கட்சிகள் மட்டுமே அப்போது அதனுடன் இருந்தன. இப்போது பாஜகவிற்கு பதில் காங்கிரஸ் இருக்கிறது.  தமிழகத்தில்  காங்கிரஸ் பாஜக கட்சிகளிடையே உள்ள வாக்கு வித்தியாசம்  2முதல் 3 சதவீதம் இருக்கும். 2014 தேர்தலுக்குப் பின் காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அநேகமாக இரண்டு கட்சிகளின் வாக்கு பலமும் சமமாக மாறியிருக்கலாம். அதனால் 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத் திமுக கூட்டணி திரும்பியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத்  தேர்தலில்  183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வென்றது திமுக

விஜயகாந்த்தின் முடிவு வேறு சில கட்சிகளையும்  சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வியாழன்று நடந்த பொதுக்கூட்டத்தில், தெளிவாகச் சொல்கிறேன்,  தனித்துப் போட்டியிடுவேன் என மூன்று முறை சொன்ன பின், அவரது அனுமதி பெற்று  பேசிய,  அவர் மனைவி பிரேமலதா, எங்கள் தலைமையை ஏற்பவர்கள், எங்களுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள் எங்களுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வரலாம் என்று அறிவித்தார். இது விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்குப் பிரசினை ஏதுமில்லை என்று அறிவித்த மக்கள் நலக் கூட்டணியை இப்போது என்ன செய்வது என்ற திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு இருந்த கட்சிகள் எல்லாமும் அதை விட்டு விலகி விட்டன. பாஜக தனியாகவோ, அல்லது சிறுகட்சிகளுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதாவது பாஜக 15 ஆண்டுகளுக்குப் பின்- 2001க்கு முன்பு இருந்த நிலைக்கு- தள்ளப்பட்டுவிட்டது.


என் வழி தனி வழி என்பது ரஜனிகாந்த்தின் திரைப்பட வசனமாக இருக்கலாம். ஆனால் இப்போது அது விஜயகாந்த்தின் தேர்தல் முழக்கம்!

தமிழ் முரசு (சிங்கப்பூர்) 13.3.2016

No comments: