Tuesday, April 28, 2009

இலங்கை : ஒரு மறு சிந்தனை

இலங்கைச் சிக்கலுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, போர்நிறுத்தம் கோரி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாவிரதம் இவற்றை அப்படியே நம்பிவிடக்கூடாது ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நமக்கேற்றவாறு சமைத்துக் கொள்ள வேண்டும், இவை தேர்தல்கால நிர்பந்தங்களின் காரணமாக எழுந்தவை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் இதற்கு வேறு கோணங்களும் இருக்க முடியும் என நான் கருதுகிறேன். என்னுடைய சொந்த அனுப்வங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

விடுதலைப் புலிகள் தமிழர்கள் அதிகாரம் பெறுவதன் பொருட்டுப் போராடுகிறவர்கள் அல்ல, தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதன் பொருட்டு ஆயுதம் ஏந்தியிருக்கிற அமைப்பு என்கிற எண்ணம் எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் உண்டு. அப்படிக் கருதுவதற்கு விடுதலைப் புலிகளின் கடந்த காலச்செயல்கள் காரணமாக அமைந்தன.அவர்கள் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் உயிர்வாழ எந்த நியாயமும் இல்லை எனக் கருதுபவர்கள் எனபதை அவர்கள் பலமுறை தங்களது
செயல் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள்.பன்முகத் தன்மையை, மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கிற அரசியலை அங்கீகரிக்கிற இந்தியாவில் வளர்ந்த எனக்கு அவர்களது இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள இயலாததாக இருந்தது./இருக்கிறது

சிவில் உரிமைகளைப் பெறுவதற்கு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அணுகுமுறைகள் அவர்களது முதிர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தன. அவர்கள் காந்திய வழி அறப்போராட்டத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் என நான் சொல்ல வரவில்லை. இலங்கை அதிகார அமைப்பிற்கு எதிராக அது பலன் தராது. ஆயுதப் போராட்டம் என்பதோடு, ராஜரீக வழிகள், அறிவுலகின் ஆதரவு, பொதுக்கருத்தை உருவாக்குபவர்களோடு உறவு (Diplomatic avenues, enlisting support of intellectuals and lobbying with opinion makers) மற்ற வழிகளையும் அவர்கள் மேற்கொண்டு இலங்கை அரசுக்கெதிரான ஒரு கருத்தை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ் சமூகத்திற்கு அப்பால் அவர்கள் அத்தகைய முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவில்லை. ஆரம்ப நாட்களில் அது போன்ற முயற்சிகளில் அவர்கள் முனைந்ததுண்டு. ஆனால் பின்னர், குறிப்பாக பாலசிங்கம் போன்றவர்கள் மறைவுக்குப் பின், அதை அவர்கள் கை விட்டுவிட்டார்கள். அல்லது அதற்கு அவர்களிடம் ஆட்கள் இல்லை.

இதன் காரணமாக அவர்கள் மீது பயங்கரவதிகள் என்ற முத்திரை விழுந்த போது அதை அவர்களால் அகற்றமுடியவில்லை

அதே நேரம் தமிழ்ச் சமூகத்திற்குள் விடுதலைப் புலிகள் வேறு, அங்குள்ள தமிழ் மக்கள் வேறு என்ற தெளிவு இருக்கத்தான் செய்தது. ஆனால் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கிற அனுதாபத்தை விடுதலைப் புலிகள் தங்களுக்கான ஆதரவாக அவர்களது ஊடகங்கள் மூலம் கட்டமைத்துக் காட்டுகிற அபாயம், அதை அவர்களது பயங்கரவாதத்திற்கான ஆதரவாக மாற்றிக்காட்டுகிற அபாயம் இருக்கத்தான் செய்தது.

பயங்கரவாதிகள் எனத் தெரிந்தும் அங்கே ஒரு மாற்றுத் தலைமையை, ஒரு மாற்று அரசியலைக் கட்டமைக்க சக்தி அற்றவர்களாக இலங்கைத் தமிழர்கள் இருந்தது சலிப்பைத் தந்தது. இந்திய மக்கள் தங்கள் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் போது அவர்கள் எத்தனை பெரிய தலைவர்களாக இருந்தாலும் தூக்கி எறிகிற தீரத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். எமெர்ஜென்சிக்குப் பின் இந்திரா காந்தி, 1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் (பாண்டிச்சேரியையும் சேர்த்து 2 இடங்களில் மட்டுமே வெற்றி) 1991 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி, 2004
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆகியவை உதாரணங்கள்.

ஆனால் இதனையெல்லாம் விளங்கிக் கொள்ளாமல், இலங்கைத் தமிழர்களில் சிலர், இந்தியத் தமிழர்களை 'விசிலடிச்சான் குஞ்சு'களாகவும், இந்திக்காரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களாகவும் ஏளனம் செய்து கொண்டிருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.

தாங்கள் நம்பிய தலைமை தங்களை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போர்ச் சூழலில் சிக்க வைத்து விட்டது எனத் தெரிந்தும் அந்தத் தலைமையைத் தூக்கி எறிவது இலங்கைச் சூழலில் நடக்கவில்லை. அதற்கு மக்கள் பயங்கரவாதிகளை நம்பியது காரணமாக இருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு வேறு வழியில்லாதிருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் 'சரி, அது அவர்கள் தலையெழுத்து' என்ற ஒரு resigned மனோபாவமே தமிழகத்தில் உள்ள பலரிடம் நிலவியது

ஆனால் கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல், விடுதலைப் புலிகள் மீது விமர்சனங்களைக் கொண்டவர்களிடம் கூட அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள்,
பொதுமக்கள் என வேறுபாடில்லாமல், நிராயுதபாணியான மக்கள், குழந்தைகள், சிறுவர்கள் என எல்லோர் மீதும் சகட்டு மேனிக்குக் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதல் திடுக்கிடச் செய்தது.நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பது போல் பயங்கரவாதிகள் இருக்கும் சமூகத்தில் collateral damage இருக்கும் என்ற நிலையையும் தாண்டி இலங்கை ராணுவத்தின் தாக்குதல்கள் இருந்தன.

இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ராஜபக்க்ஷே சகோதரர்கள், ஜார்ஜ் புஷ்ஷைப் போல, நிக்சனைப் போல போர் வெறியர்கள் (War Mongers) என்பது தெளிவாகத் தொடங்கியது.

இலங்கை அரசின் மூர்க்கத்தனத்தால், மனதில் அரசியல் கேள்விகள் பின் செல்ல, அனுதாபத்தின் காரணமாக எழுந்த ஒரு தார்மீக எழுட்சி, ஏற்கனவே கொண்டிருந்த நிலைகளை மறுபரிசீலனை செய்ய உந்தின.விடுதலைப் புலிகளின் மீதிருக்கும் விமர்சனத்தின் காரணமாக, பொதுமக்கள் படும் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது சரிதானா என்ற கேள்விகள் மனதில் எழுந்தன. விடுதலைப் புலிகள் மீதான விமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு உணவுக்கும் மருந்துக்கும் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பின.

இதே போன்ற மாற்றம் அரசியல் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஊடகங்கள் புலி ஆதரவு புலி எதிர்ப்பு என்று அணி பிரிந்து செய்திகளை மிகைப்படுத்தியும், அலட்சியப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டதன் காரணமாக
உண்மை நிலையைப் புரிந்து கொள்வது சிரமமாகவே இருந்தது. இந்த நிலையில் அரசியல்வாதி அல்லாத, இலங்கைப் பிரசினையில் எந்த நிலையும் எடுத்துக் கொள்ளாத ஸ்ரீரவி சங்கர் போன்ற ஒருவர் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து வந்து சொல்லும் போது, மாறத் துவங்கியிருக்கும் மனதில் மாற்றம் விரைவு படுத்தப்படுகிறது

இந்தச் சூழ்நிலையில் இன்னொரு கேள்வியும் எழுந்தது. இந்தனைக் கொடூரத் தாக்குதலுக்குப் பின் தமிழ் மக்கள் அங்கு சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்தல் சாத்தியமா? ராஜபக்க்ஷே நடத்திய போரின் ரணங்கள், இன்னும் ஒரு
தலைமுறைக்கு, முப்பது நாற்பது வருடங்களுக்கு, தமிழ் மக்கள் மனதில் இருக்கும். அதை ஆற்றக் கூடிய விருப்பம் அந்த அரசுக்கு இருக்கும் எனக் கருத இடமில்லை. அங்கு நிலவும் அரசியலும் அதற்கு இடமளிக்காது.

இந்தச் சூழ்நிலையில் இனி அவர்களது எதிர்காலத்திற்குத் தனி ஈழம்தான் தீர்வாக அமையும்

சரி, தனி ஈழம் அமைவது சாத்தியமா?

இந்திய ஆட்சியாளர்கள் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு வாய்ப்புண்டு. விடுதலைப் புலிகள் செய்யத் தவறிய, ராஜரீக ரீதியில் ஆதரவு திரட்டுவது, அறிவுலகின் மனசாட்சியை உசுப்புவது, உலகில் ஈழத்திற்கு ஆதரவாக ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவது ஆகிய வேலைகளை இந்திய ஆட்சியாளர்களால் செய்ய முடியும். நமீபியா இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்த போது அதைத் தனிமைப்படுத்துகிற வேலையை இந்தியா நன்றாகவே செய்தது. மண்டேலாவிற்கு ஆதரவாக தென்னாப்பிரிக்காவோடும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடனும் அது உறவை விலக்கி வைத்திருந்ததுண்டு. ஆனால் அவற்றை செய்வதற்கு அன்று ஆட்சியில் இருந்தவர்களிடம் ஒரு அரசியல் உறுதி இருந்தது.

1983ல் இந்திராகாந்தி மாநிலங்களவையில் இலங்கை பிரசினை ஒரு இன அழிப்பு -Genocide என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்- என்று முழங்கி இலங்கைத் தமிழர் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க முன்வந்ததில் எம்.ஜி.ஆருக்குக் கணிசமான பங்கு உண்டு. அன்று இந்திராவிடம் எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்னதைப் போல சோனியாவிடம் கருணாநிதி எடுத்துச் சொல்லியிருந்தால் இந்தியாவின் அணுகுமுறை வேறுமாதிரி இருந்திருக்கலாம். சோனியாவிற்கு இலங்கைத் தமிழர்களால் ஒரு தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி அவரிடம் பேசுவது rubbing on the wrong side ஆகிவிடக் கூடும் என அவர் தயங்கியிருக்கக் கூடும். தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி அதிகாரம் காங்கிரசின் கையில் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.

சரி இதை ஜெயலலிதாவால் செய்ய முடியுமா?

முடியலாம்.நான் கவனித்த வரையில் ஜெயலலிதாவின் +பாயிண்டுகளில் ஒன்று அவரது மன உறுதி. பிடிவாதம் என்று அவரது விமர்சகர்களால் வர்ணிக்கப்படும் மன உறுதி. பொதுவாக இந்திய அரசியலில் தலைவர்கள், ஒரு பெரும் வெற்றிக்குப் பிறகு, வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்ற ஆசையால் உந்தப்படுவார்கள். அப்போது அவுட் ஆஃப் பாக்ஸ் ஐடியாக்களை நடைமுறைப்படுத்த முனைவார்கள்.இந்திராகாந்தி வங்கிகளை தேசியமயமாக்கியது, ராஜமானியத்தை ஒழித்தது, எம்.ஜி.ஆர் விமர்சனங்களுக்கிடையில் சத்துணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ராஜீவ் அசாம், பஞ்சாப் பிரசினைகளில் உடன்பாடுகள் ஏற்படுத்திக் கொண்டது இப்படி சில உதாரணங்கள் உண்டு. ஜெயலலிதாவிடமும் இந்தக் குணம் உண்டு. 67 சதவீத இட ஒதுக்கீடூ, பொருளாதார சீர்திருததங்கள் இவற்றில் இதன் சாயலைக் காணலாம்.


அவரால் தனி ஈழம் விஷயத்தில் எந்த அளவிற்கு செய்ய முடியும் என்பது மத்தியில் எத்தகைய ஆட்சி அமைகிறது என்பதைப் பொறுத்தது. அது எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பது விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக இலங்கையில் எத்தகைய தலைமை உருவாகிறது என்பதைப் பொறுத்தது. என்றாலும் அவர் முயற்சிக்கக் கூடும் என்றுதான் தோன்றுகிறது.

15 comments:

தீப்பெட்டி said...

நல்லாத்தான் இருக்கு...

Sitrodai said...

உங்களை போன்றவர்களால்தான் இலங்கை தமிழர்கள் இன்று இந்த நிலையில் இருக்கிறார்கள். தனி நாடு என்று அவர்களை உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டு அவர்கள் இன்று செய்வது அறியாது நிற்கிறார்கள். அவர்களின் இன்றைய நிலைமைக்கு உங்களை போன்றவர்களும் ஒரு காரணம்.

இன்னுமா நீங்கள் திருந்தவில்லை?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கண்ணுக்கெட்டிய தொலைவில் வி.புலிகளுக்கு மாற்றாக யாரும் தென்படவில்லையே..இந்த சூழலில் ஜெ எங்கிருந்து தொடங்குவார்,அவர் முயற்சிக்ககு கூடுமெனினும்?

இந்த அவரது கருத்து அவரது இதுநாள் வரையான நிலைபாட்டிற்கு முற்றிலும் வேறான ஒருநிலை என்பது எப்படி எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது?

அவரது இதுவரையான இலங்கை நிலைப்பாடு என்பதும் கூட பொறுக்கி எடுக்கப்பட்ட சில மீடியா நிறுவனங்கள் அல்லது கட்டமைப்புகளின் வழி வந்தது என்ற எண்ணம் பொதுவாக நிலைபெற்றிருக்கும் தமிழகத்தில் அவரது இந்த யூ டர்ன் எப்படி அந்த மீடியா கட்டமைப்புக்காளால் பார்க்கப்படுகிறது? நீங்கள் கூட அதே வித கருத்தைத்தான் இதுவரை கொண்டிருந்தீர்கள் என்றே நினைக்கிறேன்....

மு.க வைப் பற்றி ஒப்பீடு அவசியமில்லை.எனது பார்வையில் அவரது இலங்கைப் பிரச்னை அணுகுமுறை என்பது ஆரம்பத்திலிருந்தே,அதாவது 70 களில் இருந்தே,சுயமான ஒரு கருத்தின்பாற் பட்டதில்லை;அது தமிழக அரசியல் நிலைக்கேற்ற ஒரு ரெஸ்பான்ஸிவ் நிலைப்பாடுதான் என்பது என் புரிதல்.இதை கடைந்தெடுத்த உடன் பிறப்புகள் மறுப்பார்கள் எனினும்..

PS:Why don't you remove word verification?

குழலி / Kuzhali said...

சோனியாவிற்கு இலங்கைத் தமிழர்களால் ஒரு தனிப்பட்ட இழப்பு ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி அவரிடம் பேசுவது

இலங்கைத் தமிழர்களால் அல்ல புலிகளால் என்று எழுதுவதே சரி... நீங்கள் இலங்கை தமிழர்களால் என்று எழுதியிருப்பதை நீங்கள் அறியாமல்/தெரியாமல்/புரியாமல்/கவனக்குறைவாக எழுதிவிட்டீர்கள் என நிச்சயம் நான் நம்பவில்லை... இதன் அரசியல் மாலனின் அரசியல்...

இதை இன்னும் வரிசையாக சொல்வதென்றால் ராஜீவால் புலிகள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இழப்பு, சோனியாவிற்கு புலிகளால் தனிப்பட்ட இழப்பு, சோனியாவால் மீண்டு புலிகள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இழப்பு

Anonymous said...

மாலன் அவர்கட்கு,
தங்கள் பதிவிற்கு நன்றி.உங்கள் பதிவின்படி
அன்ரன் பாலசிங்கம் போன்றோர் இருந்திருந்தால் இப் பிரச்சனைகளுக்கு தீர்வு வைத்திருப்பார்கள்.என்கிற வாதம் தப்பார்த்த வாதமாகும். நீங்கள் ஈழஅரசியலை அவதானிப்பவர் என்கிற எனது கணிப்பில் சிறிது தடுமாற்றமேற்படுகிறது..கடந்தகால வரலாற்றில் தமிழர்கள் சார்பில் பல நல்ல சாத்தியப்பாடுகளையெல்லாம் புறந்தள்ளி இப்போதய இக்கட்டுக்குள் தள்ளியவர்களின் வரிசையில் என் அளவில் அன்ரன் பாலசிங்கம் முதன் மையானவர்.
தொடர்க.
தமிழன்

மாலன் said...

அன்புள்ள அறிவன்,

>>இந்த அவரது கருத்து அவரது இதுநாள் வரையான நிலைபாட்டிற்கு முற்றிலும் வேறான ஒருநிலை என்பது எப்படி எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது?<<

இலங்கை பிரசினை குறித்து எல்லாக் கட்சிகளுமே -காங்கிரசிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வரை- தங்கள் நிலைபாடுகளை/அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதை நான் தவறு என்று கருதுவதில்லை. முடிவுகளை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன.சூழ்நிலைகள் மாறும் போது முடிவுகளும் மாறும். இதை விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கலாம்.ஆனால் விளங்கிக் கொண்டால் ஏற்றுக் கொள்வதில் சிரமம் இராது.

இலங்கை ராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலில் இறங்கி அதைட் தொடர்ந்து கொண்டிருப்பதால் என் போன்றவர்கள் இதுநாள் வரை கொண்டிருந்த நிலை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. அநேகமாக் அந்த மறுபரிசீலனை பல தளங்க்ளில் நடந்து கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

>>கண்ணுக்கெட்டிய தொலைவில் வி.புலிகளுக்கு மாற்றாக யாரும் தென்படவில்லையே..இந்த சூழலில் ஜெ எங்கிருந்து தொடங்குவார்,<<

யோசிக்க வேண்டிய ஒரு அம்சம்தான். ஆனால் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்ல்லை.

உங்கள் ஆலோசனைக்கேற்ப word Verificationஐ எடுத்துவிட்டேன்.

மாலன்

மாலன் said...

அன்புள்ள குழலி,

>>இலங்கைத் தமிழர்களால் அல்ல புலிகளால் என்று எழுதுவதே சரி... நீங்கள் இலங்கை தமிழர்களால் என்று எழுதியிருப்பதை நீங்கள் அறியாமல்/தெரியாமல்/புரியாமல்/கவனக்குறைவாக எழுதிவிட்டீர்கள் என நிச்சயம் நான் நம்பவில்லை...<<

ராஜீவ் கொலையைப் புலிகள் செய்தார்களா என்று இன்றுவரை விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அவர்கள் புலிகளா இல்லையா என்பதில் சந்தேகமிருக்கலாம். ஆனால் சிவராசனும் தாணுவும் இலங்கைத் தமிழர்கள் என்பதில் தகவல் பிழை (Factual error) எதுவும் இல்லை.

கூடிய மட்டும் சர்ச்சையைத் தவிர்க்கலாம் என்ற எண்ணத்தில்தான்
அப்படி எழுதியிருக்கிறேன், நீங்கள் உள்நோக்கம் கற்பித்து விவாதத்தை திசை திருப்பாதீர்கள், ப்ளீஸ்.

இது போன்ற Hair Splitting வாதங்கள் இப்போது தேவையா?

மாலன் said...

அன்புள்ள் அனானி,
>>அன்ரன் பாலசிங்கம் போன்றோர் இருந்திருந்தால் இப் பிரச்சனைகளுக்கு தீர்வு வைத்திருப்பார்கள்.என்கிற வாதம் தப்பார்த்த வாதமாகும்.<<

இருக்கலாம். நான் சொல்ல முற்பட்டது, பாலசிங்கத்திற்கு சில நாடுகளின் தூதரக அளவில் தொடர்புகளும் மரியாதையும் இருந்தது. அதன் காரணமாக அவர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு diplomatic channelஐ உருவாக்கித் தரும் சாத்தியம் கொண்டவராக இருந்தார் என்பதே.
மாலன்

அன்பரசு said...

மாலன் உங்கள் கருத்துக்களுடன் பெரும்பாலான இடங்களில் ஒத்துப் போக முடிகிறது. ஆனால் தனி ஈழம் அமைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இந்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான போக்கு ராஜிவ் காந்தி கொலையினால் மட்டும் ஏற்பட்டதல்ல. 90களுக்குப் பின் காஷ்மிர் பிரச்சனை தீவிரமடைய தொடங்கியதும், ராஜிவ் கொலையை சாக்காக வைத்து இந்திய உளவு நிறுவனங்கள் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலையிட துவங்கின.

புலிகளை தனிமைப்படுத்துவது மற்றும் வேறு போட்டிக்குழுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது, தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்திற்கோ, புலிகளுக்கோ அனுதாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்ற நிறைய வேலைகளை 'ரா' நடத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது காஷ்மிர், அஸ்ஸாமில் உல்பா, மற்றும் நக்ஸலைட்டுகள் போன்று பிரிவினைவாதம் உயிரோடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே இந்தியாவின் உதவியுடனோ அல்லது வேறு வழியாகவோ தமிழ் ஈழம் அமையுமானால் அது முதலில் இந்தியாவின் ஒற்றுமையைத் தான் பாதிக்கும். தனிநாடு கோரிக்கைகள் ஆங்காங்கே எழ தொடங்கிவிடும் (முக்கியமாக தமிழ்நாட்டில், 60களில் அடங்கிய தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை மீண்டும் உயிர் பெற்று விடும்).

மேலும் இந்தியா தலையிட்டு தனி ஈழம் அமைத்துக் கொடுத்தால் இனி காஷ்மிர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல இயலாது மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுவிடும். காஷ்மிரை இழக்கவும் நேரிடலாம்.
அதனால் இந்தியா ஒருபோதும் தனி ஈழத்தை இனி ஆதரிக்கப்போவதும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை அமையவும் அனுமதிக்கப்போவது இல்லை. அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி. இதில் ராஜிவ் காந்தி கொலையின் காரணமாக புலிகளைப் பழி வாங்கவே காங்கிரஸ் அரசு இலங்கை அரசை ஆதரிக்கிறது என்பதெல்லாம் ஒரு வெளித்தோற்றமே. இது நம் அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரிந்த விசயமே. என்ன செய்வது இந்நேரம் பார்த்து தேர்தல் வைத்து விட்டார்கள். அவர்கள் அவர்களுடைய பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.
நன்றி!

குப்பன்.யாஹூ said...

இப்பொழுது புரிகிறதா காந்தியின் அகிம்சா போராட்டத்தின் வலிமை.

குப்பன்_யாஹூ

குழலி / Kuzhali said...

மாலன் இலங்கை தமிழர் என்ற வார்த்தை பிரயோகம் மயிர் பிளக்கும் விவாதமாக நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை... படிக்கும் போது மிக தெளிவாக தவறான செய்தியை தருகிறது...

சோனியாவுக்கு இலங்கை தமிழர்கள் இன்னல்கள் செய்தனர், அதன் தொடர்சியாக இலங்கைதமிழர்களுக்கு சோனியா இன்னல் தருகிறார் என்று அர்த்தப்படுத்துவதற்கு இடம் தரும்

Anonymous said...

Well!! your artical shows 100% reality about Srilankan politics and war.
why ltte is loosing everything?
1.Pirabaharan had a over confidence in all things.Because of they have got 95% of public suport(there is no doubt about it)

2.So he started to think only tamil eelam(this is a wrong way that he fellowed.Bcoz without any country suport they can't reach that.actually there is no country suporting them)
3.
In 2000 peace talk he could get some political solution but he ignored it.this is big mistake he heve done.(if he got any solution
then he will get recognization then he could reach what people want.
4.
India is fighting with ltte indirectly!so srilankan government got good opertunity to dystroy ltte now they using it.

5.In pece talk period Ltte made quick improve infrastructure,it makes others jelous.if you visit klinochi you can see that.

6.They started to make own weapons,some basic matirial from other countries.when you see the weapons which captured from ltte by srilankan forces,70% local maked.
7.they maked submarine,flights,fighting boats ect... (these maked other countries angry and jelous)

8.so all countries are started to depress ltte,by political and defence,thats why they baned during peace talk.

pirabaharan thought i have all so i can win this war!! but that was wrong analyse which he have done!!
but all countries are alltogether fucking to pirabaharans ass!!!
He never listen others advice,this is one of the way good but not always.
But tell the truth there is nobody to protect tamils in srilanka.

9.so tamils have a choice of ltte only its good or bad.but pirabaharan should change his habbit.
10.Now people who came from vanni now blaming piraba,i think its not for a long time,bcoz other parties treatment now ok,but they will show their habbit very soon.wait and see!!!!
11.we hope if Jayalalita do good for tamils,SHE WILL BE A "KAVAL TEIVAM" FOR SRILANKAN TAMIL FOREVER!!!
wait and see!!!!! no body can't tell what will happen in future!!

Unknown said...

நல்ல பதிவு மாலன். ஆனால் யார்மீதும் எதன் மீதும் நம்பிக்கையற்றுப் போனது..Eventhough i contradict your statement abt prabakaran, i liked the clarity in this post. well written. Its true that J has got indominatable confidence, adomantine nature..lets always hope for the best in this issue..

பாரதி தம்பி said...

எந்த ஒரு தேசிய இனத்துக்கும் ஒரு நாட்டுடன் சேர்ந்து வாழவும், பிரிந்து போகவுமான உரிமை உண்டு. இதை அங்கீகரிப்பதுதான் தேசிய இனங்களின் தன்னுரிமை. ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளும் இதை வலியுறுத்துகின்றன. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஒரு தேசிய இனப் பிரச்னையாகவே பார்க்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளின் ஜனநாயகமற்ற பாசிச போக்கை ஒரு காரணமாக வைத்து இதுநாள் வரை ஒட்டுமொத்தமாக‌ தமிழீழம் என்ற கோரிக்கையின் நியாயங்களையே நிராகரித்தவர் ஜெயலலிதா.

உலகத்தின் வேறு சில நாடுகள் இலங்கையின் இன சுத்தீகரிப்புத் தாக்குதலைக் கண்டித்தபோதும் ஜெயலலிதாவின் வாய் மௌனமாகவே இருந்தது. ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்னும் இந்திய ஆன்மிக மரபின் தேவபிதா இலங்கையில் நடப்பதைக் கண்டறிந்து சொன்னப் பின்னர்தான் ஜெயலலிதாவுக்கு அங்கு நடப்பதே தெரிந்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய மோசடி?

அதைப்பற்றி ஜெயலலிதா கூட்டங்களில் பேசும்போது, குருஜி கொடுத்த சி.டி.யில் இருந்த காட்சிகளைப் பார்த்து தான் மிகவும் அதிர்ந்து போனதாகவும், அதன் பிறகுதான் இலங்கையில் நடக்கும் யுத்தத்தின் கொடூரங்களை முழுமையாக அறிந்துகொண்டதாகவும் பேசுகிறார். (செய்தித்தாள்களில் வந்திருக்கிறது). ஒரு கார்பொரேட் ஆன்மிக சாமியார் சொல்லி யுத்தத்தின் கொடூரத்தை தெரிந்துகொள்ளும் அளவுக்குதான் இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகுதான் தனி ஈழம் என்று சாமியாடிக் கொண்டிருக்கிறார். பிரபாகரனே இனி தனி ஈழம் வேண்டாம் என்று சொன்னாலும் ஜெயலலிதா விடமாட்டார் போலிருக்கிறது. புலிகளிடன் சுயேச்சையான சுயசார்புள்ள ஒரு அரசியல் கருத்தில்லை என்பதால்தான் கால் நூற்றாண்டுக்கு மேலான ஆயுதப் போராட்டம் இன்று ரவிசங்கரிடம், ஜெயலலிதாவிடமும் சரணடைந்திருக்கிறது. விளைவு, ஒரு போதும் தனி ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்காத உதடுகளும், எழுதாத ஊடகங்களும் இப்போது பேசுகின்றன/எழுதுகின்றன.

தினமலரும், தினமணியும் இன்ன பிற அறியப்பட்ட தமிழ் இதழாளர்களும் இன்று ஜெயலலிதாவின் வார்த்தைகளை நியாயப்படுத்தும் கருத்துக்களை உற்பத்தி செய்து ஊடகங்களில் உலவவிடுகின்றனர். எனக்கு ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. வாஸந்தி, என்.ராம், குருமூர்த்தி, சோ, லிட்டில் ஆனந்த், வைத்தியநாதன், ஞாநி, நீங்கள் என்று எல்லோரும் எப்படி இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டும் ஒரே விதமான மய்யக் கருத்தில் ஒன்றுபடுகிறீர்கள்? உண்மையில் தமிழ் ஊடகங்களின் முடிவெடுக்கும் பொறுப்புகளில் இருந்த/இருக்கும் இவர்களே இலங்கை பிரச்னைப்பற்றி பக்க சார்பான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புகின்றனர்.

Ragztar said...

Maalan,

LTTE is solely responsible for whatever happened so far; including killing of Prabhakaran