Wednesday, September 26, 2007

சேது: 'பந்த்'தும் பாலமும்

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காக திமுக பந்த் அறிவித்திருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறையிடம் உள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.பாலு. தனது கட்சி அமைச்சர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவில்லை என திமுகவே போராட்டம் நடத்துகிறதா? திட்டம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதில் வேறு மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஜனவரிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக திமுக கருதுமானால், அதற்கு மத்திய அரசு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் இந்தப் போராட்டம் மத்திய அரசை எதிர்த்தா? மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகிக்கிறதே? ஒருவேளை உச்சநீதி மன்றத்தின்
இடைக்காலத் தடையை எதிர்த்தா? இடைக்காலத்தடை ராமர் பாலம் பகுதிக்குத்தான், மற்றப் பகுதிகளில் பணியைத் தொடர தடை இல்லை எனத்தடை வழங்கப்பட்ட அன்று பாலு சொன்னாரே, அப்படியானால் மற்றப் பகுதிகளில் வேலையைத் தொடர்ந்து நடத்தித் தாமதத்தை தவிர்க்கலாமே? அல்லது இந்தப் போராட்டம் உச்ச நீதிமன்றத்தை நிர்பந்த்திப்பதற்கா? அல்லது அதை அச்சுறுத்துவதற்காகவா? வழக்கு நிலுவையில் இருக்கையில் இது போல் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பந்த் சிரிப்பை வரவழைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கான அல்லது திசை திருப்புவதற்கான முயற்சி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி, என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுண்டு.ராமன் போன்ற 'கற்பனைப் பாத்திரங்களுக்கு' அது போன்ற சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஆளும், வரலாற்று நாயகர்களான தலைவர்களிடம் அத்தகைய குணங்களை எதிர்பார்ப்பதற்கில்லை.

மத்திய அரசு, ராமன் என்றொரு நபர் வாழ்ந்ததாக வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதி மன்றத்தில் சொன்ன இரு நாள்களுக்குள், அந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதே தினம், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ராமன் இந்திய வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் எனச் சொன்னார்.

'ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என வற்புறுத்தவில்லை, எந்தப் பாதை என்பது முக்கியமில்லை, வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை' என முதல்வர் கருணாநிதி சொல்லி 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு, சேது சமுத்திரத் திட்டத்தை வேறு பாதையில் நிறைவேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேட்டியளிக்கிறார். முதல்வர் மாற்றுப் பாதை குறித்து ஆட்சேபம் இல்லை எனச் சொல்லியிருக்கிறாரே எனச் செய்தியாளர்கள் கேட்ட போது, ராமர் பாலத்தைத் தகர்க்கப் போகிறீர்களா எனத் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டதால் கடுப்படைந்து அப்படிச் சொல்லியிருக்கிறார் (Asked about DMK president and Tamil Nadu Chief Minister M
Karunanidhi's remark that he was not averse to an alternative RPT alternative alignment, the Minister said his leader had made that remark "out
of anguish" when he was repeatedly asked whether he was bent upon "destroying" the Ram Sethu.-PTI sept 22)

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதே பாதையில் திட்டம் அமைய அனுமதி அளித்த பாஜக இப்போது பாதை மாற்றத்தை வற்புறுத்துகிறது

அரசியல் பாலம்

நம்முடைய தலைவர்கள் ஒரே நிலையை எடுத்துக் கொள்ள இயலாமல் போனதற்கு சேது சமுத்திரத் திட்டம் 'அரசியலாகி' விட்டதுதான் முக்கியக் காரணம்.பாக் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு, நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக் கொணர்ந்து விட்டது.

எந்த நேரத்திலும் நாடளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்ற சூழ்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலும் இன்னும் சில மாதங்களில் வர இருக்கிற நிலையில், ராமனிடம் தோற்றுப் போகக் காங்கிரஸ் தயாராக இல்லை. எதுக்கு ரிஸ்க் என்ற அச்சம் அதனை இயக்குகிறது.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடக்கும் கட்சியை ஒருங்கிணைக்கவும், ஆர்.எஸ்.எஸ்.சுடன், நேர்து விட்ட விரிசலைச் சீர் செய்யவும் ராமர்பாலம் உதவாதா என பாஜக எண்ணுகிறது. மூன்றாவது அணி என்ற ஒன்று முளையிலேயே கருகிவிட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி அமைக்க இந்த ராமர் பாலம் உனர்வு ரீதியாகக் கை கொடுக்கலாம் என ஜெயலலிதா கருதுகிறார்.

திராவிட இயக்க பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற போது ராமன் மீது ஏற்பட்ட கசப்புணர்வை இத்தனை நாளைக்குப் பின் வெளியே கொட்டுகிறார் கலைஞர். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? வரலாற்று ஆதாரம் உண்டா? மது அருந்துபவர், மாமிசம் உண்பவர், என்பது போன்ற கேலிகளும், விவாதத்திற்குத் தயாரா என்ற சவால்களும் அவரது ஆரம்ப திராவிடக் கழக நாட்களை நினைவூட்டுகின்றன. ஆனால் இதை அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசுவதுதான் பொருத்தமானதாக இல்லை.

மன்னராட்சியா?

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது சொந்த நம்பிக்கைகளை அரசு இயந்திரத்தின் மூலம் திணிப்பது என்பது மன்னராட்சிக்கால நடைமுறை. அதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை.மக்கள் ஆதாரமற்ற மூடத்தனமான நம்பிக்கைகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்கள் அதை உதறிவிட்டு வரவேண்டும் எனக் கருதக் கருணாநிதிக்கு உரிமை உண்டு. அவர் அப்படிக் கருதும் பட்சத்தில் அது குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அவர் அதை அரசுப் பணத்தில் செய்ய இயலாது. தனது கட்சியின் மூலம் எந்தத் தடையுமில்லை. இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்பது போல் கட்சியில் ஒரு பகுத்தறிவாளர் அணியை அமைத்து அவர் பிரசாரம் செய்யலாம். பெரியார் போல் இன்று அவர் ஊர் ஊராகப் பயணம் செய்யக்கூட வேண்டியதில்லை. தனது கலைஞர் தொநலக்காட்சியில் தினம் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சி நடத்தலாம். தனது வாக்கு வங்கி பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை மக்கள் மூட நம்பிக்கையி
லிருந்து விடுபடுவதுதான் முக்கியம் என அவர் கருதுவாரேயானால் அவர் இதைச் செய்ய முன்வருவார். ஆனால் செய்ய முன் வருவாரா?

நம்பிக்கைகள்- நிரூபணங்கள்

ஒரு சமூகத்தில் நிலவுகிற நம்பிக்கைகள் முற்றிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அமைவதில்லை. வரலாறு, தொன்மம், இலக்கியம்,அரசியல் நிலைப்பாடுகள், அறிவியல் காரணமாக அமையும் மனோபாவம் இவை எல்லாம் சேர்ந்துதான் ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. அதிலும் எல்லா சமூகங்களிலும் கடவுள் நம்பிக்கை என்பது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலோ, அறிவியல் நிரூபணங்களின் அடிப்படையிலோ உருவாவதில்லை. அடுத்து என்னாகும் எனத் தெரியாத அநிச்சியமான நிலையில் வாழ்க்கை ஏற்படுத்தும் அச்சத்தை, எதிர்கொள்ளும் தைரியத்தை இறை நம்பிக்கை தருகிறது. Faith Heals Fear என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவம் உண்டு. அதனால்தான் இறைவன் மீது நம்பிக்கை கொள்பவர், வேறு எந்தச் சான்றுகளையும் தேடிச் செல்வதில்லை. மதம் ஒரு அபின் என்று கருத்துக்கு நம்மை இட்டும் செல்லும் முன் அதை விளக்கும் முகமாக, 'மதம் என்பது ஒடுக்கப்பட்ட ஜந்துகளின் பெருமூச்சு, இதயம் இல்லாத உலகின் இதயம் (Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, just as it is the spirit of a spiritless situation. It is the opium of the people.) என்று சொல்கிறார் மார்க்ஸ் (ஹெகலின் உரிமையின் தத்துவம் Philosophy of right என்ற நூல் பற்றிய முன்னுரை) வலியில் இருப்பவர் அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து கிடைத்தால் போதும் என எண்ணுவதைப் போல, அல்லது பழக்கத்தின் காரணமாக அதை நாடிப் போவது போலத்தான் பெரும்பாலானவர்களின் இறை நம்பிக்கைகள் துவங்குகின்றன.

எதையும் வரலாற்றின் வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது என்பது ஒருவகையில் மேற்குலகிலிருந்து நாம் கற்றுக் கொண்ட வழக்கம். கீழ்த் திசை நாடுகளில் வாழ்வை வரலாற்றை விட இலக்கியத்தில் பதிவு செய்வது என்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. வரலாறு என்பது ஆள்வோரைப் பற்றியும், அரசு நடவடிக்கைகளைப் பற்றியதுமாக இருந்திருக்கிறது என்பதையும், இலக்கியம் என்பது மக்களைப் பற்றியதாகவும், வாழ்க்கையைப் பற்றியதாகவும் இருந்திருக்கிறது என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

கருணாநிதி கண்ணகி மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு அடிப்படை வரலாறு அல்ல, இலக்கியம்தான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கண்ணகிக் கோட்டத்திற்குக் கல் கொண்டு வநத கனக விசயன், அதியமான், ஓளவை, பாரி, குமரிக் கண்டம், போன்ற பலநம்பிக்கைகளுக்கு ஆதாரம் இலக்கியம்தான், வரலாறு அல்ல.

இன்று சிறு தெய்வங்களாக வழிபடப்படும் பல கடவுளார்களை, சுடலைமாடன், மதுரை வீரன் போன்றவர்களை, வரலாற்றில் காணமுடியாது. ஆனால் அவர்களை நாட்டார் கதைப்பாடல்களில் காணலாம். இன்னும் சொல்லப்போனால், அண்மைக்காலமாக உலகெங்கும் வரலாறுகள், இந்த நாட்டார் இலக்கியங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. உதாரணம்:மருதநாயகம்.'ஆராய்ச்சி' வானமாமலை மக்களிடையே வழங்கி வந்த பாடல்
களைத் திரட்டி, தொகுத்து மதுரைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட கான்சாகிப் பாடல்கள்தான் மருதநாயக வரலாற்றின் ஆதாரம்.

ராமாயணம் வரலாறா?

ராமனின் கதையும் நாட்டார் வழக்கிலிருந்து பெறப்பட்டதுதான். இதைக் குறித்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் போன்றோர் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். (கம்பன் ஒரு புதிய பார்வை, வானதிப்பதிப்பக வெளியீடு) இந்திய மொழிகள் பலவற்றில் இராமாயணம் சிற்சில மாற்றங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்னொரு ஆதாரம். பல்வேறு வகையான ராமாயணங்களைப் பற்றி ரிச்மேன் என்பவர் ஒரு நூலே எழுதியிருக்கிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பக வெளியீடாக அது வந்துள்ளது((Many Ramayanas, Richman, Oxford University Publications)

இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினரிடமும் இராமாயணம் காணப்படுகிறது. பெளத்தர்களின் ஜாதகக் கதையாக விவரிக்கப்படும் ராமாயணத்தில் தசரதர் அயோத்தியின் அரசர் அல்ல. வாரணசியின் அரசர். அதில் சீதை ராமனின் மனைவி மட்டுமல்ல, சகோதரியும் கூட. சத்திரியர்கள் தங்கள் இனத் தூய்மையைக் காக்க சகோதரிளை மணம் செய்து கொள்ளும் வழக்கம் சில சத்திரிய இனக்க்குழுக்களிடம் இருந்ததாக இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. இந்தக் கதையில் ராமர் ஒரு பெளத்தர். சமணர்களிடமும் ஒரு ராமாயணம் இருக்கிறது. அதில் ராமர் பிராமணீயத்திற்கு எதிரான சமணக்கருத்துக்களைப் பேசுகிறார். தெலுங்கு பிராமணப் பெண்களிடம் வழங்கும் ஒரு சீதாயணத்தை ரங்கநாயகியம்மா என்பவர் திரட்டித் தொகுத்திருக்கிறார். அது பெண்கள் பார்வையில் ராமாயணத்தை விவரிக்கிறது. அதில் இறுதி வெற்றி சீதைக்குத்தான்.

இப்படிப் பல வகையான ராமாயணங்கள் இருப்பதே, அவை நாட்டார் வழக்கிலிருந்து கிளைத்தவை என்பதைத்தான் சுட்டுகிறது. எங்கோ, எப்போதோ இருந்த ஒரு 'ஹீரோ'வின் கதைதான் பல மாற்றங்களுடன், பல கை மாறி இராமாயணமாக உருவாகியிருக்க வேண்டும். இனக்குழு சமூகங்கள் அரசுடமைச் சமூகங்களாக ஆன தருணத்தில், வாரிசுரிமையின் அடிப்படையில் அரசுரிமை தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கருத்தாக்கத்தையும், அதை ஒட்டிப் பெண் ஆண் ஒருவனது உடமை என்ற கருத்தையும், பரப்பவும், வற்புறுத்தவும் தோன்றிய கதையாக இராமாயணம் தோன்றி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். தசரதனுக்குப் பல்லாயிரம் மனைவிகள் எனத் துவங்கும் கதை இராமனுக்கு ஒரு மனைவி எனத் தொடர்கிறது. இராமாயணத்தில் தண்டிக்கப்படுபவர்கள் மூவர். வாலி, சூர்ப்பனகை, இராவணன். மூவரும் அடுத்தவர் மனைவிக்கு அல்லது கணவனுக்கு ஆசைப்பட்டவர்கள். ராவணன் மற்றப்படி உயர்வாகவே பேசப்படுகிறான். 'வாரணம் புகுந்த மார்பன், வரையினை எடுத்த தோளன், நாரத முனிக்கு நயம்பட உரைத்த நாவன், வீரமும் சங்கரன் கொடுத்த வாளும்' களத்திலே போட்டுவிட்டுத் தோற்றுத் திரும்பியதாக கம்பன் வர்ணிக்கிறான். அநேகமாக எல்லா ராமாயணங்களும் ராவணனை அறிவுத் தாகமும் தேடலும் கொண்டவனாகவே சித்தரிக்கின்றன. நாட்டார் வழக்கில் இருந்த ராமாயணங்கள் பின் அவரவர் தேவைக்கேற்ப, காலத்திற்கு ஏற்ப ஆங்காங்கு மாற்றம் கண்டிருக்கின்றன.

ராமன் பாலம் கட்டினானா?

ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினான் என்ற கலைஞரின் கேள்வி, இந்தியப் பாரம்பரிய அறிவாற்றல் மீது வீசப்பட்ட எள்ளல், ஏளனம். கல்லூரிகள் என்ற அமைப்பு ரீதியாகக் கல்வி பயிற்றுவிக்கிற முறை ஐரோப்பியர் வருகையை அடுத்து இந்தியாவில் அறிமுகமானது. அப்படி ஒரு முறை அறிமுகமாகும் முன் இந்தியர்கள் 'காட்டுமிராண்டி'களாக வாழ்ந்தார்கள் என்பது ஆங்கிலேயர்களின் எண்ணம். (உதாரணம் மெக்காலே). ஆனால் தமிழகம் எங்கும் நெடிதுயர்ந்து நிற்கும் கோபுரங்கள், வட இந்தியாவில் காணப்படும் மொகலாயர்களின் அரண்மனைகள், மராட்டியர்களின் கோட்டைகள், நாயக்கர்களின் மாளிகைகள், காவிரியின் குறுக்கே கல்லணை, யமுனையின் அருகே தாஜ்மகால், எல்லாம் ஆங்கிலேயர்கள்
வரும்முன்னரே கட்டப்பட்டுவிட்டன. பூம்புகாரின் நகரமைப்பை சிலப்பதிகாரம் விவரிக்கிறது (சிலப்பதிகாரம் கதைதான், வரலாறு அல்ல எனக் கலைஞர் வாதிட முற்படமாட்டார் என நம்புகிறேன்) கப்பல் கட்டுவது பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையில் காணப்படுகின்றன. இதைக் கட்டியவர்கள் எல்லாம் எந்தப் பொறியியற் கல்லூரியில் சேர்ந்து, சிவில் என்ஜினியரிங், டவுன் பிளானிங், ஷிப் பில்டிங் போன்ற படிப்புக்களைப் படித்தார்கள்? ஐரோப்பியர் வருகைக்கு முன் சிறிதும் பெரிதுமாக ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் வாள் போன்ற ஆயுதங்கள் உருக்கில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் மெட்டலர்ஜி படித்தவர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. ஐரோப்பியர் வருகைக்கு முன்னால் இந்தியாவில்
நடைமுறையில் இருந்து வந்த தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபால் என்பவர் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

ராமன் பாலம் கட்டினான் என்று சொற்றொடருக்கு அவனே ஒவ்வொரு கல்லாக எடுத்துப் போட்டுக் கட்டினான் என்பதா பொருள்? ஸ்டாலின் மாநகாரட்சி மேயராக இருந்த போது மேம்பாலங்கள் கட்டினார் என்றால் அவர் பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டா கட்டினார்? ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினான் என்றால், ஷாஜஹானா கல்லை அடுக்கிச் சாந்து பூசினான்? திருமலை நாயக்கர் மதுரையில் மகால் கட்டினார் என்றால் அவரா ஒவ்வொரு தூணையும் அமைத்து அதைப் பளிங்கு போல் பூசினார்? நான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். அடுத்த வாரம் புதுமனை புகு விழா என்று நாம் ஒருவரை அழைத்தால் அதற்கு நாமே செங்கல் அடுக்கிக் கட்டினோம் என்றா பொருள்? இங்கெல்லாம் கட்டுவித்தார்கள், கட்டுவித்தோம் எ
ன்பதுதான் கட்டினார்களாக கட்டினோமாக வழங்கப்படுகிறது.

ராமனும் பாலம் கட்டுவித்தான் என்றுதான் கம்பன் எழுதுகிறான். கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில், சேதுபந்தனப் படலம் என்று ஒரு பகுதியே இருக்கிறது. அதில் 'குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதீர்' என்று சொல்லிவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துவிடுகிறான் ('சென்றனன் இருக்கை நோக்கி') என்கிறார் கம்பன். (கம்ப ராமாயணம் -கம்பன் கழக வெளியீடு பக்கம் 1044)ராமனின் ஆணையை நிறைவேற்றி வைத்த பொறியாளர் ('வானரத் தச்சன்') நளன் என்பவர். பாலம் கட்டி முடித்தபின், சுக்ரீவனும் மற்றவர்களும் ராமனிடம் சென்று பாலம் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறார்கள்.பாலத்தின் அளவும் அப்போது ராமனிடம் சொல்லப்படுகிறது (யோசனை ஈண்டு ஒரு நூறு இவை ஐ இரண்டின் அகலம் அமைந்திடச் செய்
ததால் அணை' - கம்ப ராமாயணம் கம்பன் கழக வெளியீடு பக்கம் 1045) இப்படித்தான் ராமன் பாலம் கட்டினான், ஸ்டாலின் பாலம் கட்டியதைப் போல, கருணாநிதி சமத்துவபுரங்கள் கட்டியது போல.

ராமர் பாலம் எனப்படும் ஆடம் பாலம் ஏழு மணல்திட்டுக்களால் அமைந்த முப்பது கிலோமீட்டர் நீளமுள்ள பகுதி.இந்தத் திட்டுக்களின் கீழ் சுண்ணாம்புக் கற்களின் படுகை இருக்கிறது என நிலவியல் சர்வே (geologigal survey) ஆய்வுகள் சொல்கின்றன. அவை மியோசின் யுகத்தை (miocene era) சேர்ந்தவை என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தெரியகலா என்பவர் எழுதியுள்ள வரலாற்றுக்கு முந்திய இலங்கை ( The pre-history of Sri
Lanka by S.U.Deraniyagala) என்ற நூலிலும் இந்தத் தகவல் காணப்படுகிறது. மியோசின் யுகம் என்பது 1லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது..மியோ சின் என்ற கிரேக்கச் சொற்களுக்கு அருகில் அல்லாதது எனப் பொருள்.ராமர் திரேதா யுகத்தில், அதாவது லட்சத்து 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே காலகட்டத்தில்தான், (மியோசின்) இலங்கையில் மனிதர்கள் குடியேறியதன்
அடையாளங்கள் காணப்படுவதாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல்லையோ, அது புராதனமானது என்பதை நிராகரிக்க இயலாது.

சுற்றுச் சூழல் ?

சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு மதவாதிகளிடமிருந்து மட்டுமல்ல சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. அப்போது இந்தத் திட்டத்தினால் சுற்றுச் சூழலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி நாக்பூரில் உள்ள நீரி (National Environmental
Engineering Research Institute - NEERI) ஆய்ந்து ஓர் அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின்படி, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் போது, ஆடம் பாலம் எனப்படும் ராமர் பாலத்தில் ஆறு சதுர கி.மீ பரப்பு நிரந்திரமாகச் சேதமுறும் என்கிறது. அந்த அறிக்கையில் நடைமுறை சாத்தியமில்லாத பல யோசனைகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு ஒன்று: சேதுக்கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் அங்கு வாழும் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு சேதம் விளைத்திடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சூழலியலில் பயிற்சி பெற்ற ஒரு நபர் கப்பலில் செல்ல வேண்டும், அவர் கடலைக்
கண்காணித்து வரவேண்டும் என்கிறது நீரி அறிக்கை. இது நடைமுறையில் சாத்தியமா? சரி இரவில் அல்லது மேகமூட்டம் மிகுந்த அவர் எப்படிக் கடலைக் கண்காணிப்பார்? எண்ணைக் கப்பல்கள் செல்லும் போது கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது. சரி தற்செயலாகவோ,ஒரு விபத்துப் போலோ எண்ணைக் கசிவு ஏற்பட்டால் என்ன தீர்வு என்பதை நீரி சொல்லவில்லை. ஓரிடத்தில், (பத்தி 6.1) கடலில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் 84.5 மில்லியன் கனமீட்டர் மண்ணில் ஒரு 'சிறு பகுதி' பாம்பன் தீவிலும் மற்றவை வங்கக் கடலிலுமாகக் கொட்டப்படும் என்று சொல்கிறது (கடலில் எவ்வளவு, தீவில் எவ்வளவு என்று சொல்லப்படவில்லை) ஆனால் இன்னொரு பகுதி ( பத்தி 6.2) அந்த மண் களிமண், மற்றும்
தூர் ஆக இருக்கும் என்பதால் கடலில் கொட்டப்படாது என்றும் சொல்கிறது. என்ன முரண்பாடு!

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

பாக் நிரிணைப் பகுதியை அகழ்ந்து கால்வாய் அமைப்பதனால் ஏற்படும் அரசியல், சூழலியல் பிரசினைகளைப் பார்க்கும் போது அந்தத் திட்டம் குறித்த மாற்றுச் சிந்தனைகள் அவசியமாகிறது. சேதுக்கால்வாய் திட்டம் அமைந்தாலும் அதன் வழியே பெரிய கப்பல்கள் செல்ல இயலாது. சிறிய கப்பல்களும் மெதுவாகச் செல்ல வேண்டியிருக்குமாதலால், ஒரு நாளில் அதிக எண்ணிக்கையில் செல்ல இயலாது. எனவே அதனால் கிடைக்கும் பொருளாதார ஆதாயங்கள் பெரிதாக இராது.

எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிற யோசனையைப் பரிசீலிக்கலாம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதி மீது ஓர் பாலம் அமைத்து இலங்கையை ஓர் சாலை மூலம் இணைக்கலாம். அந்த முயற்சிக்கு இத்தனை செலவும் ஆகாது. தக்க உயரத்தில் அமைத்தால் கீழே படகுகள் செல்லத் தடையிராது. மீன் பிடித் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது. ராமர் பாலத்தைக் காப்பாற்ற முடியும். சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக் குறைவாகவே இருக்கும். கடல் மீது ஒரு பாலம் அமைப்பது சவாலான காரியமாக இருக்கலாம். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்பங்களைப் பார்க்கும் போது இது சாத்தியமற்ற காரியம் அல்ல.

இலங்கையும் இந்தியாவும் சாலை வழி இணைக்கப்படும் போது, தென்மாவட்டங்களில் உள்ள வணிகர்களுக்கு சந்தை வாய்ப்பு அதிகரிக்கும். ஏற்கனவே அவர்கள் அண்மைக்காலம் வரை வள்ளம் எனப்படும் தோணிகள் மூலம் சரக்குகள் அனுப்பி இலங்கையோடு வாணிகம் செய்து கொண்டிருந்தவர்கள்தான்.இலங்கை வணிகர்களுக்கும் வாய்ப்புக்கள் பெருகும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில், அதற்குப் பின்னும் 15 -20 ஆண்டுகள் வரை, இலங்கைக்கு ரயில் மூலம் செல்லும் வசதியிருந்தது. அதாவது ராமேஸ்வரம் வரை ரயில். அங்கிருந்து தோணி. இரண்டுக்கும் சேர்த்து எழும்பூரிலேயே டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். சென்னையிலிருந்து செல்லும் அந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்க்கு 'போட் மெயில்' என்று கூட ஒரு பெயர் உண்டு.

ஆனால், அப்படி ஒரு பாலம் அமைந்தால், இன்றுள்ள சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி எழலாம்.ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?

புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் தேவை.

22 comments:

கால்கரி சிவா said...

திமுக கட்சியை சேர்ந்த அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்க திமுக பந்த். மக்களின் பணத்தால் திமுகவினர் போராட்டம். தமிழக மக்களே உங்களுக்கு இளிச்சவாயர்கள் என இன்னொரு பெயரும் உண்டோ?

ஹரன்பிரசன்னா said...

Malan, Nice one.

//வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதே பாதையில் திட்டம் அமைய அனுமதி அளித்த பாஜக //

Any proof for this? Just I want to know.

Thanks.

கானகம் said...

அன்பு மாலன்..

நல்ல கட்டுரை.

//எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பந்த் சிரிப்பை வரவழைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கான அல்லது திசை திருப்புவதற்கான முயற்சி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. //

இதை உணர்ந்தே செய்கிறார்கள். தமிழர்கள் மீதும் அவர்களது பொது அறிவு மீதும் அவ்வளவு நம்பிக்கை. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக கொண்டு இயங்குபவை. அவர்களுக்கும் வேறு மாற்று இல்லாததால் மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுக்கிறார்கள் அவ்வளவே.

//Asked about DMK president and Tamil Nadu Chief Minister M
Karunanidhi's remark that he was not averse to an alternative RPT alternative alignment, the Minister said his leader had made that remark "out
of anguish" when he was repeatedly asked whether he was bent upon "destroying" the Ram Sethu.-//

எனவே ஆட்சியிலிருப்பவர்கள் கோபப்பட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பின்னர் கோபம் தனிந்த பின்னர் சொன்னதை மாற்றிக்கொள்ளலாம்.


//அதே தினம், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ராமன் இந்
திய வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் எனச் சொன்னார்.//

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்னர் காங்கிரஸ்லிலிருந்த எந்த தலைவருக்கும் இது பற்றி தெரியவில்லை. அல்லது கல்லெறிந்து பார்க்கலாம் இந்துக்களின் சுயமரியாதைமீது என நினைத்திருக்கலாம்.


//இப்படித்தான் ராமன் பாலம் கட்டினான், ஸ்டாலின் பாலம் கட்டியதைப் ஧
பால, கருணாநிதி சமத்துவபுரங்கள் கட்டியது போல.//

இதெல்லாம் கருனாநிதிக்கு தெரியாதா என்ன?? மைனாரிட்டி ஓட்டை பெறுவதற்கும், வரப்போகின்ற கமிஷனை ராமன் தடுத்து விடுவானோ என்ற ஆத்திரத்தில் வருவது இது போன்ற வார்த்தைகள். மாறன் குழுமத்தைவிட பெரும் பனக்காரனாகும் வாய்ப்பை வழங்கும் இத்தகைய திட்டத்தை ராமன் பெயரால் தடுக்கப்படும்போது என்னதான் சொல்வது???



// இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?

புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் தேவை.//

நல்ல யோசனை. பாரதியின் கனவும் நனவாகும்.

மொத்தத்தில் ஒரு நடுநிலை பார்வை கொண்ட கட்டுரையை வாசித்த நிறைவையும் குருட்டுத்தனமான மற்றும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்களுக்கு எப்படி பதில் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு நல்ல உதாரனம் உங்கள் கட்டுரை.

வாழ்த்துக்கள் மாலன்.

ஜெயக்குமார், தோஹா, கத்தார்

மாலன் said...

அன்புள்ள பிரசன்னா,

பல்லாண்டுகளாகத் தூங்கிக் கிடந்த சேது சமுத்திர திட்டம், வாஜ்பாய் தலைமையில் அமைந்த தே.ஜ.கூ அரசின் ஆட்சியில்.2000-01 ஆண்டுக்கான பட்ஜெட்டில், அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்சின்கா, 4.8 கோடி ரூபாய் ஒதுக்கியதை அடுத்து வேகம் பெற்றது. திட்டம் குறித்த சாத்தியம் பற்றி ஆராய இந்தப் பணம் ஒதுக்கப்பட்டது. (feasability report)

அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அருண்ஜட்லி 2001ம் ஆண்டு மார்ச்மாதம் 9ம் தேதி, நாக்பூரில் உள்ள நீரியிடம் feasability report தயாரித்து வழங்க உத்தரவிட்டார். அதற்காக நீரிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நீரிக்கு இது போன்ற கடல் சார்ந்த் ஆய்வுகளில் முன் அனுப்வ்ம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

நீரி அக்டோபர் 2002ல் அறிக்கை அளித்தது.அதற்குள் அமைச்சர் மாறியிருந்தார். போக்குவரத்துத் துறை அமைச்சராக கோயலும், அந்த அமைச்சகத்தின் துணை அமைச்சராக திருநாவுக்கரசரும் இருந்தார்கள். திருநாவுக்கரசர் நீரியின் அறிக்கை பற்றி ஆராய அக்டோபர் 23, 2002ல் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் ஆறு வழிகள் ஆராயப்பட்டன. அதில் ராமர் பாலத்தைக் குறுக்கிட்டுச் செல்லும் வழியே சுற்றுச் சூழல் நோக்கில் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை எழுத்து மூலமாக அக்டோபர் 25ம் தேதி திருநாவுக்க்ரசர் கோயலுக்குத் தெரிவித்தார். அதில் சில திருத்தங்கள் செய்த கோயல், திட்டத்தை விரைந்து முடிப்பதை ஒருங்கிணைக்க ஒரு குழுவையும் அமைத்தார்.

இந்தத் தகவல்கள் மக்களவையில் இந்த ஆண்டு மே16ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் முன் சத்ருகன் சின்கா அமைச்சராக இருந்த்போது, மாநிலங்களவையில் அளித்த பதிலிலும் சேதுக் கால்வாய் ராமர் பாலத்தின் குறுக்காச செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தகவல்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் உண்மைக்கு மாறாக இருக்க வாய்ப்பில்லை)

இந்தத் தக்வல்கள் சமீபத்திய அவுட்லுக் இதழிலும் பிரசுரமாகி உள்ளது. அதன் சுட்டி:
http://www.outlookindia.com/full.asp?fodname=20071001&fname=Cover+Story+(F)&sid=2

Hari said...

திரு.மாலன்,
மிக நல்ல கட்டுரை. உங்களது பதிவில் உள்ள கருத்துகளும், செய்திகளும் வெகுஜன மக்களை சென்றடைய வேண்டும்.

பினாத்தல் சுரேஷ் said...

எல்லாப்பக்கங்களையும் தெளிவாக அலசிய கட்டுரை மாலன். தெளிவுக்கு வர உதவும்.

//நம்முடைய தலைவர்கள் ஒரே நிலையை எடுத்துக் கொள்ள இயலாமல் போனதற்கு சேது சமுத்திரத் திட்டம் 'அரசியலாகி' விட்டதுதான் முக்கியக் காரணம்//

அதைவிட அதிகமாக எனக்குத் தெரிவது, எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் திட்டத்தை முடித்தே தீருவது என்ற திமுக (மட்டும்) வினரின் Desperation அல்லது வெறி! இதற்கு வாக்கு ரீதியிலான காரணங்களைவிட, பொருளாதார ரீதியிலான காரணங்களே அதிகமாக இருக்கும் என்பது தெளிவு! சொல்லப்போனால், இத்திட்டத்தினால் வாக்கு வங்கியில் ஓரளவேனும் பாதிப்பு இருக்குமா என்றே தெரியவில்லை!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல்லையோ, அது புராதனமானது என்பதை நிராகரிக்க இயலாது//

புரதானமானதாகவே இருக்கட்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிகாக சிரு கோடு போல பாதை போடுவதில் என்ன ஆக போகிறது?
பாலம் போன்ற மணல்மேடு குறித்த புல்லிவிவரங்களைத் தெள்ளத்தெலிவாக சொல்லிவிட்டு ஆதாரமில்லாமல் ராமரின் காலத்தையும் அதோடு முடிச்சு போட்டு, அறிவுப்பூர்வமாக(!) மக்களை நீங்களும் குழப்புவது எந்த விதத்தில் நியாயம்?

உங்களைப்போன்றவர்களே இப்படிப் பேசத்தொடங்கினால் வருங்காலத்தில் நடைபாதையில் கட்டப்படும் கோவில்களைக்கூட அகற்ற முடியாது போகும்.

அரசியல்வாதிகளைக் கிண்டல் பண்ணுவது சாதாரண நிகழ்வு. ஆனால் உங்களைப் போன்ற அரசியல் விமர்சகர்கள் மக்களைக் குழப்பி இல்லாததை இருப்பதாகக்காட்டுவது கொடுமை சார்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிற யோசனையைப் பரிசீலிக்கலாம்.//

தற்போது இந்தியாவின் அரசியல் சூழ்நிலைக்காக நீங்கள் சொல்லும் யோசனையில் இலங்கையின் அரசியல் சூழ்நிலையை எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. இதனால் இந்தியாவிற்க்குல் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் நீங்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. சேதுக் கால்வாஇக்காக மண்ணள்ளுவதிலிருந்து மாற்றியோசிப்பதாக நினைத்து ஏன் இப்படிக் அதிகமாக உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்???

மாலன் said...

அன்புள்ள கவுதமன்,

>>புரதானமானதாகவே இருக்கட்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிகாக சிரு கோடு போல பாதை போடுவதில் என்ன ஆக போகிறது?<<

'ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக' என்பது உறுதி செய்யப்படாத ஓர் அனுமானம்தான். அதிலும் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தி மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இராது. சூழலை அதிகம் பாதிக்காத வண்ணம் மாற்றுத் திட்டங்களுக்கு வாய்ப்பு இருந்தால் அவறறைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரசினை?

>> தற்போது இந்தியாவின் அரசியல் சூழ்நிலைக்காக நீங்கள் சொல்லும் யோசனையில் இலங்கையின் அரசியல் சூழ்நிலையை எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. இதனால் இந்தியாவிற்க்குல் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் நீங்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. சேதுக் கால்வாஇக்காக மண்ணள்ளுவதிலிருந்து மாற்றியோசிப்பதாக நினைத்து ஏன் இப்படிக் அதிகமாக உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்???<>

என்னுடைய கட்டுரையில் உள்ள கீழ்க்காணும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லை போலும்:
" அப்படி ஒரு பாலம் அமைந்தால், இன்றுள்ள சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி எழலாம்.ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?"

அன்புடன்
மாலன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Maalan,
Good analysis,but you may face the wrath of 'kazakak kanmanikal' again for this...
BWT my posting on the same subject..
http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_22.html

seethag said...

malan overall your article was informative. however i am not sure an experienced person like you need to analyse mr.mks 'intellectual' remarks.i wish you had not wasted your time so much. in regards to mr. aiyar's article again some of the bloggers dont want to believe because of surname!!!,not realising his wife is a muslim ,(i could be wrong).

sadly environmental concern or the real issues get sidelined because of our collective hightstrung nature.till date none of us has a clue about nuclear deal.

Unknown said...

Malan,
Thanks for the informative and unbiased article.

-Ramya.

ஜடாயு said...

மாலன், அருமையான பதிவுக்கு நன்றி.

சேது கால்வாய்க்குப் பதில் பாலம் என்பது நல்ல கண்ணோட்டம். இத்தகைய கடற்பாலங்கள் இன்று உலகில் கணிசமான இடங்களில் கட்டப்பட்டு பாதுகாப்பாகப் பயன்படுத்தப் பட்டும் வருகின்றன.

முதல்வர் கருணாநிதியின் உளறல்களை நீங்கள் கண்டித்த விதம் நன்று - "கடிதோச்சி மெல்ல எறிக" என்ற குறளை நினைவூட்டியது :))

// ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி, என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுண்டு.ராமன் போன்ற 'கற்பனைப் பாத்திரங்களுக்கு' அது போன்ற சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஆளும், வரலாற்று நாயகர்களான தலைவர்களிடம் அத்தகைய குணங்களை எதிர்பார்ப்பதற்கில்லை. //

இந்துமுன்னணி தலைவர் இராம. கோபாலன் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார் - "சத்திய சந்தனாகவும், மக்களை மதித்த மன்னனாகவும், குறிப்பாக ஏகபத்தினி விரதனாகவும் வாழ்ந்த ராமனை திமுக உள்ளிட்ட கழகக் கட்சிக் காரர்கள் வெறுப்பதற்குக் காரணம் இருக்கிறது - "எங்களுக்கு தமிழ் நாடெங்கும் கிளைகள் உண்டு" என்று ஒளிவுமறைவில்லாமல் சொல்லிக் கொள்பவர்களாயிற்றே அவர்கள்!!"

நீங்கள் மேலே எழுதியிருப்பதைப் படித்ததும் இது நினைவு வந்தது.

"கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?" - நம்மாழ்வார்

அமிழ்து - Sathis M R said...

திரு மாலன் அவர்களுக்கு,

மன்னிக்க, இப்பதிவிற்கு இது எந்த வகையிலும் தொடர்பில்லை எனினும், தங்களது கவனத்தைக் கவரவே இங்கு பதிவிடுகிறேன். தங்களது முந்தையப் "வாழ்க வசவாளர்கள்!" பதிவுடன் தொடர்புடையது. நேரம் கிடைக்கையில் இதனை வாசியுங்கள்.
http://amizhthu.blogspot.com/2007/10/blog-post.html

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அன்புள்ள மாலன் அவர்களுக்கு,

தங்கள் பதிலுக்கு நன்றி.

//'ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக' என்பது உறுதி செய்யப்படாத ஓர் அனுமானம்தான்.//

சேதுக்கால்வாய் மூலமாக எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி குறித்து மத்திய அரசு தெளிவாகவே விளக்கியுள்ளது. பறக்கும் ரயில் போன்ற திட்டங்களில் இப்போது தோல்விபோல தெரிந்தாலும் பிற்காலத்தில் இதன் பயன் உணரப்படும். அதுபோல சேதுக்கால்வாய் திட்டத்திலும் தூத்துக்குடி போன்ற தென்னக நகரங்கள் வளர்ச்சி அடையும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ராமரை நம்பும் நாம், நம் நாட்டின் வளர்ச்சி குறித்த இத்திட்டத்திலும் நம்பிக்கையோடு இருக்கலாம்.

//ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை
வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?"//

சேதுக்கால்வாயை மேடுருத்தி இலங்கையோடு நட்புறவு பாராட்டும் தங்கள் யோசனைக்கு நன்றி. உங்கள் யோசனைப்படி சேதுக்கால்வாயை மேடுருத்தும்போதும் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படத்தான் செய்யும். வரவு - செலவு பார்த்தால் பாலத்தை பலப்படுத்தி ரோடு போடுவதை விட சிறுகோடு போடுவது நமக்கு பெரும் நன்மையல்லவா?. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல நம்முடைய கடல் எல்லையைச் சுற்றியே பாதை அமைத்துக்கொள்வது நல்லது தானே?

அன்புடன்,
கவுதமன்

மாலன் said...

அன்புள்ள கவுதமன்,

சேதுக் கால்வாய் திட்டத்தின் பலன்கள் குறித்த சந்தேகங்களுக்கு நானறிந்த வரையில் தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. என்ன சந்தேகங்கள் என்பதை கீழ்க்கண்ட சுட்டிகளுக்குச் சென்று படித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பிபிசி வானொலி தளம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/05/050520_sethusamudram.shtml

இன்னொரு தளம்:
http://blog.baranee.net/?item=39&catid=2

இந்த வலைப்பதிவையும் பாருங்கள், அதில் NDTVயில் வெளியான ஒரு பேட்டி இருக்கிறது:
http://valaipadhivan.blogspot.com/2005/07/blog-post.html
இந்தப் பின்னூட்டப்பகுதியில் KR அதியமான் Times of India வில் வந்த செய்திக் கட்டுரையைப் பின்னூட்டமிட்டிருக்கிறார் பாருங்கள்.

ராமர் சேதுவை இடிக்காமலே, ஒரு சிறு கீறல் கூடப் போடாமலே, அதற்கு இணையாகப் பாலம் கட்ட முடியும்.

அன்புடன்
மாலன்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அன்புள்ள மாலன் அவர்களுக்கு,

ஆதாரமாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்களை நானும் படித்திருக்கிறேன். இதைத்தான் எலி வளை என்று சொல்லி இருக்கிறேன். மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவினங்களோடு ஒப்பிடும்போது இதற்கான செலவும், இழப்பும் பெரிதல்ல. நாளடைவில் சரிக்கட்டி விடலாம்.

கிழக்குக் கடற்கரைச் சாலை அமைக்கும்போது கூட இதுபோலத்தான் சுற்றுச்சூழல் குறித்த அச்சம் எழுப்பப்பட்டது. இப்போதும் கூட சேதுக்கால்வாய்ப் பணியை சுனாமி பீதியோடு கலந்து பயமுறுத்தும் வேலையும் நடக்கிறது. ராமர் பாலத்தில் கனிம வளம் கொட்டிக்கிடப்பதாகவும் "குண்டக்கமண்டக்க" வதந்திகளும் இந்து அமைப்புக்களால் கிளப்பப்படுகின்றன.
மொத்தத்தில் இந்துக்களுக்கு எதிரான திட்டம் என்று இத்திட்டத்திற்கு முத்திரை குத்தும் வேலைதான் நடக்கிறது.

பிறப்பால் இந்துவாகவும், நாட்டின் வளர்ச்சியை அறிவியல் மற்றும் சமுதாயப்பார்வையோடும் பார்க்கும் எனக்கு இத்திட்டம் சரியாகவே படுகிறது.

அன்புடன்,
கவுதமன்

My D Lee said...

Thank you maalan for a very informative blog

vels-erode said...

Sorry friens.....

Sethu is not mistake of CENTRAL
GOVT.And also not a STATE GOVT.
iT IS A MISTAKE OF EVERY INDIAN.

A good plan is now with "good(?)" politicans hand.

We all are just commenting and viewing the drama.That's all.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நான் என்றும் மதிக்கும் திரு மாலன் அவர்களே,

ராமர் பாலம் பற்றிய உங்கள் பதிவு பல்வேறு பயனுள்ள தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நான் தெரிவித்த கருத்துக்களும், தங்கள் கருத்துக்களை ஒத்தே இருப்பதாகக் கருதுகிறேன். எனக்கு பட்டதை எனது பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
www.jothibharathi.blogspot.com

Mangai said...

எனக்கு ஒரு சந்தேகம்.

ஏன் இந்த பிரச்னை பார்ப்பனர் சார்புப் பிரச்சனையாக அவர்களை எதிர்க்கும் ஆயுதமாகக் கருதப் படுகிறது. இராமர் ஒரு சத்ரியராக இருக்க வேண்டும் அரசர் என்பதால். வால்மீகி ஒரு கொள்ளைக் காரன் ஆக இருந்து தெளிவு பெற்று முனிவர் ஆனதாகச் சொல்லப் படுகிறது. அப்படி இருக்க இது பார்ப்பனர் சதி என்றும் அவர்களைத் துரத்த வேண்டும் என்றும் ஏன் சொல்லப் படுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

நன்றி...