Friday, April 08, 2005

தமிழ்க் கட்டுரைக்கு ரூ 2 லட்சம்

இந்திய அரசமைப்பு என்பது மூன்று தளங்கள் கொண்டது. மத்திய அரசு, மாநில அரசு, ஊராட்சி. இதில் முதலிரண்டு அமைப்புக்கள் பற்றி ஊடகங்கள் பெருமளவில் செய்திகள் வெளியிடுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் பஞ்சாயத்தில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதால் அந்தத் தளத்தில் அவர்களின் ஈடுபாடும் செயல்பாடும் அதிகம்.

அச்சு ஊடகங்களில் அதைக் குறித்த விவாதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன், The Hunger Project என்ற சர்வதேச அமைப்பு, ஆண்டு தோறும் ஆங்கிலம், இந்தி, ஏனைய இந்திய மொழிகள் இவற்றில் பிரசுரமான கட்டுரைகளில் சிறந்த ஒரு கட்டுரைக்கு ரூ 2 லட்சம் பரிசு அளிக்கிறது. ஒவ்வொரு மொழிக் கட்டுரைக்கும் ரூ. இரண்டு லட்சம் பரிசு. ஜூலை 15க்கு முன் பிரசுரமான கட்டுரைகள் பரிசீனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்கான நடுவர்கள் குழுவில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒருவர் இடம் பெறுகிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நடுவர் குழு:

திருமதி அபர்ணா சென்: கல்கத்தா: பிரபல திரைப்பட இயக்குநர். திருமதி சுஷ்மா அய்யங்கார் - குஜராத் ( கார்னைல் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பி, இவர் கட்ச் பகுதியில் சமூகப் பணி ஆற்றிவரும் பெண்மணி. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அண்மையில் வெளியான இந்தியா டுடே இதழ் இந்தியாவின் 30 சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளது. திருமதி. மிருணாள் பாண்டே, தில்லி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர். மற்றும் மாலன் சென்னை.

கடந்த ஆண்டு தமிழ் இந்தியா டுடேயில் வெளியான ' நிஜமான புரட்சித் தலைவிகள்' என்ற அருண்ராமின் கட்டுரை ஏனைய மொழிகளுக்கான பரிசைப் பெற்றது.

சென்ற ஆண்டு, அஜீத் பட்டாசார்யா, என்.எஸ்.ஜகன்நாதன், கல்பனா ஷர்மா, ஜார்ஜ் மாத்யூ ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

இன்னும் மூன்று மாத அவகாசம் இருக்கிறது. வலைப்பதிவர்கள் இந்தப் பரிசுக்கு முயன்று பார்க்கலாமே?