Saturday, May 30, 2009

தமிழ் இதழ்கள் -ஓர் ஆய்வு

தமிழ் இதழ்கள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளேன்.

உங்களின் பதில்கள் எனக்குப் பயன்படக்கூடும்

கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் ஒரு படிவம் தோன்றும். அதில் விடையளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அதிக நேரம் பிடிக்காது. பதிலளிக்க மிகச் சில நிமிடங்களே ஆகும் வகையில் படிவம் உருவாக்கப்பட்டுள்ளது

http://www.surveymonkey.com/s.aspx?sm=YElCNLuiOwqDdxo2_2bKLcIA_3d_3d

உங்கள் பதில்களை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்

நன்றி

Tuesday, May 19, 2009

தேர்தல் தீர்ப்பு: வென்றதும் வீழ்ந்ததும்

அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்த அம்சவேணி மெல்ல முறுவலித்தார்..தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாகப் பணியாற்ற அவருக்கு ஆணை விடுக்கப்பட்டிருந்தது. அம்சா ஒரு பள்ளி ஆசிரியை. சிறு வயதிலிருந்தே அவருக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. கடைவீதிக்குப் போய் வரும் போது, அப்பா முரசொலியும், அண்ணன் தீக்கதீரும் வாங்கி வருவார்கள்.கையில் கிடைக்கிற காகிதத்தை எல்லாம் வாசிக்கும் ஆர்வம் ததும்பும் வயசு அது..வீட்டில் அப்பாவும் அண்ணனும் அவ்வப்போது அரசியல் பேசுவார்கள்.பேச்சு எதிர்பாராத நேரத்தில் சூடேறி குரல்கள் உயர்ந்துவிடும்.

அம்சாவை பக்கத்தில் வந்து நின்றால் பேச்சு நின்றுவிடும்.'என்னம்மா' என்பார் அப்பா. அரசியல் பேச்சாக அம்சா ஏதாவது சொன்னால் ‘பொம்பிளைப் பிள்ளை உனக்கெதுக்குமா அரசியல், போய் வேலை இருந்தா பாருமா' என்பார். ‘அவங்க ஓட்டு மட்டும் உங்களுக்கு வேணும், ஆனா அவங்க அரசியல் பேசக்கூடாதாக்கும்' என்று அண்ணன் மடக்கினால், ‘அவ குழந்தைடா. நாளைக்கு கல்யாணம் காட்சினு நடந்து இன்னொருத்தன் வீட்டுக்குப் போக வேண்டிய பொம்பளைப் பிள்ளைடா' என்பார். அவர் இதைச் சொல்லும் போது மன்றாடுவது போல் குரல் குழைந்து கிடக்கும்.அதற்குப் பிறகு அண்ணனும் மெளனமாகிவிடுவான்.

மறுக்க மறுக்க ஆர்வம் துளிர்த்தது.பாடப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் படித்த அரசியல், தேர்தல் என்றதும் ஆர்வத்தைக் கிளறியது. வாக்குச் சாவ்டிக்குப் போய் விரலைக் கறை படுத்திக் கொண்டு திரும்பிய அனுபவத்தையும் தாண்டி, ஒரு தேர்தலை அருகிலிருந்து, ஆங்கிலத்தில் ring side view என்று சொல்வார்களே அது போல, மிக அருகிலிருந்து பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே உள்ளூற ஒரு பரவசத்தை தந்து கொண்டிருந்தது..கார்ப்பரேஷன் தேர்தல்தான். என்றாலும் அதுவும் தேர்தல்தானே!

அதிகாலையிலேயே தயாராகிவிட்டார் அம்சா. வாக்குச் சாவடிக்குச் சென்று, கொடுக்கப்பட்ட சாதனங்களை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகிவிட்டார். கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வந்து மரியாதையுடன் வணக்கம் சொன்னார்கள். மேடம் மேடம் என்று அழைத்தார்கள். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் மிஸ் மிஸ் என்பதைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு அது வித்தியாசமான இனிமையாக இருந்தது. அந்த ஏஜெண்டுகளைப் பார்க்கும் போது அண்ணன் ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அவன் வயசுதான் இருக்கும்.

பதினென்றரை பனிரெண்டு மணி வரை குனிந்த தலையை நிமிர்த்த முடியாமல் வாக்குப் பதிவு சுறு சுறுப்பாக இருந்தது. ஒரு மணிக்கு வெளியே தகரத்தை பரப்பியது போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு கிழ தம்பதிகள் படியேறி வந்து கொண்டிருந்தார்கள்

திடுதிடுவென்று பத்துப் பனிரெண்டு பேர் அந்தக் முதியவர்களை இழுத்து விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்கள். கறுப்பு முழுக்கால் சட்டையும், வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார்கள்.சொந்த வீட்டிற்குள் நுழைவதைப் போல தயக்கமின்றி நுழைந்தவர்களில் இருவர் வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பை நோக்கி விரைந்தார்கள். வேறு இருவர் அம்சவேணி அமர்ந்திருந்த நாற்காலியின் இரு புறமும் நின்று கொண்டார்கள். ‘மேடம், கண்டுக்காதீங்க’ என்றான் சுருக்கமாக. அம்சா வாக்குப் பதிவு எந்திரத்தின் பித்தான்களை இயக்க அனுமதிக்கும் கட்டுப்பாட்டு எந்திரத்தை அருகில் இழுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொண்டார். ‘பிரசினை பண்ணாதீங்க, அப்புறம் உங்களுக்குத்தான் பிரசினை ஆயிடும்’ என்று வந்தவர்களில் ஒருவன். சட்டையை உயர்த்திக் காண்பித்தான். அவன் இடுப்பில் கால் சட்டை பெல்டில் கத்தி ஒன்று செருகியிருந்தது. அம்சா உதவிக்கு பூத் ஏஜெண்ட்கள் உட்கார்ந்திருந்த பக்கம் பார்த்தாள். கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் எல்லோரும் எழுந்து ஒடியிருந்தார்கள். சொல்லி வைத்தாற்போல வாசலில் இருந்த காவலரையும் காணோம்.அம்சா செல்போனை எடுக்கக் கைப்பையைத் தேடினாள். அது பத்திரமாக வந்திருந்த ஒருவன் கக்கத்தில் முடக்கப்பட்டிருந்தது. அம்சாவிற்கு உதவியாக அனுப்பப்பட்டிருந்த இன்னொரு ஆசிரியர், நடுவயதுக்காரர், ‘மேடம் விட்ருங்க. உசிரைக் காப்பாத்திக்கங்க, இவங்க என்ன வேணா செய்வாங்க’ என எச்சரித்தார். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்னைத் தவிர என்ற எண்ணம் மனதில் ஓடிய போது அம்சாவிற்குள்ளேயே ஒருவித சுய இரக்கம் பொங்கியது. நடக்கிற அக்கிரமத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பாமல், அறையின் நிலை அருகே நின்று கொண்டு வெள்ளை வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் கூசின. சிறு வயது முதல் தான் பார்த்து வந்த அரசியலின் இன்னொரு கோர முகத்தை இத்தனை அருகில் பார்க்க நேர்ந்த அருவருப்பில் மனமும் உடலும் கூசின.

இரண்டு வாரங்கள் கழித்து, பணி நேரத்தில் தனது இடத்தை விட்டு வெளியே போனதற்காகவும், வாக்குப் பதிவு செய்த வாக்காளர்களின் ரிஜிஸ்தரை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டியதற்காகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு அம்சாவிற்கு நோட்டீஸ் வந்தது

*
இது கதை அல்ல. சென்னை மாநகராட்சித் தேர்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர், ‘என்ன சார் ஜனநாயகம்’ எனக் கசப்பு வெளிப்பட பகிர்ந்து கொண்ட தகவல்.

இந்த முறை வேறு ஒரு நண்பர் தேர்தல் முடிவுகள் வெளீயான மறுநாள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்:

“மக்களுக்கு பொதுப் பிரச்னைகளில் ஈடுபாடு குறைந்து வருகிறது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என நினைக்கிறேன். அதைவிட வருத்தமான விஷயம், பணத்துக்காக தங்கள் வாக்கை விற்றது. பல இடங்களில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் கொடுக்கிறார்கள் எனத் தெரிந்து, பேருந்து ஏறிப்போய் அந்த ஐம்பது ரூபாயை கேட்டு வாங்கிய சம்பவங்களும் தேனியில் நடந்திருக்கின்றன. கள்ள ஓட்டுகளும் பெரிய அளவில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. பல தொகுதிகளில் மதியம் 3 - 4 மணி வரைக்குமான நிலவரங்களைப் பார்த்தால் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருக்கிறது. ஆனால், கடைசி ஒரு மணி நேரத்தில் அது வேகமாகக் கூடி 60 - 65 சதவிகிதத்தைத் தாண்டுகிறது. ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, மூன்று மணிக்கு உள்ளே புகுந்த ஒரு கும்பல் 5 மணி வரைக்கும் அந்த வாக்குச் சாவடியை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தன எனச் சொன்னார். “அண்ணன் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என அறிவித்துவிட்டார். எனவே, எல்லா ஓட்டுகளையும் எங்களையே குத்தச் சொல்லியிருக்கிறார். தடுத்தால் உங்களையும் குத்துவோம்” என்றார்களாம். இதையெல்லாம் எழுதுங்கள்”

தமிழ்நாட்டில் இந்த முறை பணப்பட்டுவாடா, தனிநபர்கள் வழியே மட்டுமில்லாமல், மதநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் வழியேயும் நடைபெற்றதாக தகவல்கள் சொல்கின்றன

தேர்தலில் வன்முறை, பணம் இவற்றின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. முறை கேடாக பணம் செலவழித்து வெற்றி பெற்று, பதவிக்கு வந்து, முறைகேடாகப் பணம் சம்பாதித்து, அதை மறுபடியும் முறைகேடாக செலவழித்து வெற்றி பெறுகிற ஒரு விஷச் சுழற்சியில் இந்திய ஜனநாயகம் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கரையான் போல இது ஜனநாயகத்தை உள்ளிருந்தே அரித்து விடும் என்ற கவலையும், அதைத் தடுத்து நிறுத்தக் கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்ற சுய பச்சாதாபமும் அம்சாவைப் போல் என்னையும் தின்கிறது.

இந்தத் தேர்தலின் ‘எதிர்பாராத’ முடிவுகளை உற்று நோக்குகிற போது வேறு சில அரசியல் கோணங்களும் புலனாகின்றன. வாக்களிப்பில் நாடு முழுக்க ஒரு patern தெரிகிறது. அது: சில தேர்தல்களுக்கு முன்புவரை, ஆட்சியில் இருப்பவர்களுக்கெதிரான உணர்வு (anti incumbency) மங்கத் துவங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆண்ட ஆந்திரத்தில் அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது ஆளும் தில்லியிலுள்ள 7 தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது.. ராஜஸ்தானில் 25ல் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத்தில் அந்தக் கட்சி 26ல் 15ஐ வென்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்றதைவிட 3 இடங்கள் அதிகம் (கடந்த முறை காங்கிரஸ் முன்னணியில் இருந்தது [14] ) அதேபோல பாஜக அது ஆளும் கர்நாடகத்திலும் முன்னை விட ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருக்கிறது. காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக ஊடகங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் வென்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பீகாரிலுள்ள 40 இடங்களில் 20 இடங்களைப் பெற்றிருக்கிறது (கடந்த முறை அது 6 இடங்களைப் பெற்றது) ஒரிசாவில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக இடதுசாரிகள் அவர்கள் ஆண்ட மாநிலங்களில் தோல்வி கண்டிருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? ஆக்கபூர்வமாக சிந்தித்தால் எதிர்மறையான விமர்சனங்களை வாக்களார்கள் ரசிப்பதில்ல்லை. எனத் தோன்றுகிறது. இன்று எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகள் (உதாரணமாக ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பீகாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒரிசாவில் காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக) முன்பு ஆட்சியில் இருந்திருக்கின்றன. ‘அவனைச் சொல்ல வந்திட்டியே, நீ என்ன ஒழுங்கு,’ என்ற எண்ணம் மேலோங்கியிருக்கலாம். வங்கத்தில் வேறு கட்சிகள் ஆண்டதில்லை. ஆனால் இடதுசாரிகள் சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடந்து கொண்ட முறை அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குன்றச் செய்திருக்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், ‘ஒண்டிக்கு ஒண்டி’ என்ற போட்டியிலிருந்து பல்முனைப் போட்டியாக மாறியது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை, ஆளும் கட்சிக்கு உதவியிருக்கலாம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், தேதிமுக, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை ஆகியவை முதன்முறையாகக் களமிறங்கின.ஆந்திரத்தில் சிரஞ்சீவி களமிறங்கினார். பீகாரில் லாலு, நிதீஷ்+பாஜக, காங் என மூன்று அணிகள் போட்டியிட்டன. சிவசேனாவிலிருந்து பிரிந்த மகராஷ்ட்ர நவநிர்மாண் சேனா களமிறங்கியது மும்பையில் காங்கிரசிற்கு சாதகமாயிற்று

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை, ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு குன்றியது இரண்டும் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர பெரிதும் உதவியிருக்கிறது.

எதிர்மறையாக சிந்தித்தால் பணநாயகம் நாடு முழுக்க வேரூன்றி விட்டது

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அடித்தள மேலாண்மை –Micro Management- என்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் கெட்டிக்காரத்தனமாக - இதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது, எதிர்கட்சி ஏஜெண்டை விலைக்கு வாங்குவது, வாக்குச் சாவடி அதிகாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பது, வாக்காளர்களை சாவடிக்கு அழைத்து வருவது, வேண்டாதவர்கள் வராமல் பார்த்துக் கொள்வது இவை யாவையும் அடக்கம் - நிர்வகிப்பவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற நிலை நிலவுகிறது. இதில் அதிமுக தொண்டர்கள், திமுகவுடன் ஒப்பிடும் போது அவ்வளவு கெட்டிக்காரர்களாக இல்லை..இந்தத் தேர்தலில் தோற்றால் மாநில ஆட்சி போய்விடும் என்ற நெருக்கடி திமுக தொண்டர்களை அதிக முனைப்புடன் வேலை செய்ய வைத்தது. கருணாநிதி முரசொலியில் கடிதங்கள் மூலம் முடுக்கி விட்டுக் கொண்டிருந்த போது அதிமுக தனது தொண்டர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலமே தொடர்பு கொண்டு வந்தது.

அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஈழப் பிரசினையை ஜெயலலிதா மேடைக்கு மேடை முழங்கியது அவருக்கு உதவவில்லை. மாறாக அது அந்தர் பல்டியாக, சுயநலம் கொண்டதாக கருதப்பட்டு அவரது நம்பகத்தனமையை குறைத்தது. அவர் கூட்டணியே கடைசி நேரத்தில் அணி மாறி வந்த பாமக, எத்தனை அவமானப்படுத்திய பின்னும் சீட்டிற்காக ஒட்டிக் கொண்டிருந்த மதிமுக, கடந்த ஆட்சியின் போது ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு இப்போது மூன்று சீட்டுகளுக்காக அணிமாறி வந்த கம்யூனிஸ்ட்கள் என சுயநலம் பேணும் கூட்டணியாக தோற்றம் தந்தது நம்பகத் தனமையை மேலும் பலவீனப்படுத்தியது.அவர் ஜெயித்து வந்தால், காங்கிரசோடு பேரம் படியாவிட்டால், பாஜகவோடு சேர்ந்து கொள்வார் என்ற எண்ணமும் இதற்கு வலு சேர்த்தது.

இந்தத் தேர்தல் முன்னிறுத்தும் இன்னொரு கவலைக்குரிய விஷயம், ஊடகங்களுக்கும் பொது மக்களுக்குமிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளி. ஊடகங்களின் கணிப்புகளுக்கும், தேர்தல் முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி இதை உறுதிப்படுத்துகிறது. பரபரப்பான அரசியல் செய்திகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அடித்தள நீரோட்டங்களை அறிந்து கொள்வதில் காட்டப்படவில்லை.
உதாரணமாக தமிழக அரசு அளித்துள்ள இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்றவை மக்களின் வரவேற்பிற்கு/ நிராகரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஒரு பாரபட்சமற்ற ஆய்வு இதுவரை தமிழ் ஊடகங்களால் மேற்கொள்ளப்படவில்லை

இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள வாரிசு அரசியல், மாநிலக் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, பொம்மை ஆட்சி (Rule by Proxy) பணபலம், வன்முறை அரசியல் இவற்றிற்கு ஊக்கமளிப்பதாக அமைந்து விட்டது. காங்கிரஸ் பாஜக இவற்றிற்கு மாற்றான ஓர் அரசியலை உருவாக்குகிற வாய்ப்பை மக்கள் நழுவ விட்டுவிட்டார்கள்.

இந்தியா தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பைப் எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பதாகவே வரலாறு சொல்கிறது. இன்றைய நிஜத்தை ஏற்கும் அதே வேளையில் வரலாற்றின் செய்தியையும் நம்புகிறேன்.

Sunday, May 10, 2009

யாருக்கு வாக்களிப்பது-4?

மாற்று!

இது நாள் வரை சுமார் 75 சதவீத இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே ( 2004ல் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 26.53% 1999ல் பாஜக பெற்ற வாக்குகள் 23.75%) ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன. அவை அதிகாரம் செலுத்த உதவியவை மாநிலக் கட்சிகள்தான்!

இந்த முறை ஆட்சிக்கு உரிமை கோரி நிற்கும் அந்த இரண்டு பெரிய கட்சிகளின் தலையில் உள்ள கூட்டணிகளுக்கு மாற்றாக இன்னொரு அணியும் களத்தில் நிற்கிறது. இது தத்தம் மாநிலங்களில் பலம் பொருந்திய கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஓர் அணி.

கூட்டணி ஆட்சி நிலைத்த அரசுகளைத் தராது என்ற வாதத்தை 1999லிருந்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் உடைத்தெறிந்து விட்டன.இன்று அனேகமாக அனைத்துக் கட்சிகளுமே இனி இந்தியாவில் கூட்டணி அரசுகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இனி கூட்டணி ஆட்சிதான் யதார்த்தம் என்பதால், வாக்காளர்கள் கூட்டணிகளின் அடிப்படையிலதான் யாருக்கு வாக்களிப்பதை முடிவு செய்ய வேண்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட கட்சியின் அடிப்படையில் அல்ல என்பதும் அந்த யதார்த்தத்தின் ஒரு முகமாகிறது.

அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இருக்கும் மூன்று அணிகளில் மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய மாற்று அணி கீழ்க்கண்ட காரணங்களால் நம்பிக்கை தருவதாக இருக்கிறது :
  • இந்தியாவின் சாரம்சம் என நான் கருதும் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகிய அம்சங்களைப் அது இன்று பிரதிநிதித்துவப்படுத்துகிறது
  • காங்கிரஸ், பாஜக ஆகிய இரு சக்திகளுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன் வைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி,{UPA} தேசிய ஜனநாயகக் கூட்டணி {NDA} இரண்டுமே இத்தகையதல்ல. ஒன்று பாஜகவிற்கு மாற்று, மற்றொன்று காங்கிரசிற்கு மாற்று. முதன்முறையாக இரு சக்திகளுக்கும் மாற்றாக ஒரு அரசியல் Formation முயற்சிக்கப்படுகிறது. அதை ஆதரிப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என நான் கருதுகிறேன்..
    இந்தக் கூட்டணி ஒரு அணியாக நிலைபெறுவது ஒரு வேளை சாத்தியமற்றுப் போனாலும், அரசியலில் இதற்கான ஒரு வெளி ( an alternative political space) விரிவுபடுத்தப்படுகிறது
  • இது மிக முக்கியமானது. ஏனெனில் காங்கிரசோ, பாஜகவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால்தான் 1999ல் திமுக பாஜக தலைமையிலான கூட்டணியிலும், 2004ல் அதே திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் பங்கு பெற முடிகிறது.அந்தக் கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல. அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானல் கணக்குகள் தேவைப்படலாம். ஆனால் இன்று நாட்டின் குடிமகனுக்குத் தேவைப்படுவது காங்கிரஸ்- பாஜக இல்லாத மாற்றரசியல்
    ஒரு கூட்டுத் தலைமைக்கான வாய்ப்பு உருவாகிறது. வாரிசு அரசியல் என்பது வலுவிழப்பதற்கான மாற்று கூட்டுத் தலைமையும், ஒருமித்த கருத்தடிப்படையில் முடிவெடுப்பதும்தான்.(Rule by consensus)
  • இந்தத் தேர்தலின் முடிவில் காங்கிரசோ பாஜகவோ ஆட்சியமைத்தால் அது தேர்தலுக்குப் பின் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு கூட்டாக இருக்கும் (Post Poll Alliance) ஆனால் மூன்றாவது அணி என்பது ஆட்சிக்கு முந்திய கூட்டு.{Pre Poll alliance) வாக்களன் என்ற முறையில் நான் ஆட்சிக்கு முந்திய கூட்டணியையே விரும்புவேன். ஏனெனில் அது பற்றி முடிவெடுக்கும் ஒரு வாய்ப்பை அது எனக்கு அளிக்கிறது. ஆட்சிக்குப் பிந்திய கூட்டிற்கு என் அபிப்பிராயங்கள் தேவையே இல்லை
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கும் அரசுகளுக்கெதிரான கூட்டு. எந்த ஒரு அரசையும் நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ஒரு அறிவிக்கப்படாத யதேச்சாதிகாரம் நடைமுறைக்கு வந்து விடும்

இந்தக் கூட்டணியின் முன் உள்ள சவாலாக நான் கருதுவது

  • எது அதன் பலமோ அதுதான் அதன் பலவீனமும் கூட: அந்தப் பன்முகத்தன்மை. ஆனால் இந்தியாவின் பலமும் பலவீனமும் இதுதான். தீவிரமான இடது சாரிப் பாதை, அல்லது தீவிரமான மூலதனவாதம், தீவீரமான, லிபரல் அல்லது தீவீரமான அடிப்படைவாதப் பாதைக்குச் சென்றுவிடாமல் ஒரு நடுநிலைப் பாதையைப் பின்பற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்துவதும் இந்தப் பன்முகத் தன்மைதான்.இதற்குள் ஒருவித தடைகளும், சமநிலைப்படுத்தும் கட்டாயமும் (checks and balances) அமைந்திருக்கின்றன. அதே நேரம் இந்த உள்ளீடு விரைந்து செயல்படத் தடையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.
  • மாநிலங்களில் மட்டும் செல்வாக்குக் கொண்ட கட்சிகளின் கூட்டணி என்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசியல் சமன்பாடுகள் இந்தக் கூட்டணியை காங்கிரஸ் பாஜகவிற்கு எதிரான ஒரு முழுமையான மாற்றாக வளர்ச்சி பெற இயலாத நிலையை ஏற்படுத்திவிடும். அதைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரசும் பாஜகவும் ஆதாயம் தேட முற்படும். உதாரணமாக தமிழ்நாட்டில் திமுக அதிமுக மற்ற மாநிலக் கட்சிகள் எல்லாம் ஓரணியில் இருக்கும் போது காங்கிரஸ் பாஜக என்பவை தனித்தே தேர்தல்களை எதிர் கொள்ள நேரிடும். அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என ஊகிப்பது எவருக்கும் அத்தனை கடினமில்லை. ஆனால் திமுகவும் அதிமுகவும் எதிர் எதிரே நிற்பதுதான் இன்றைய யதார்த்தம். அதைப் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது. இது நாளடைவில் பிரித்து ஆள்கிற (divide and rule) சூழலை மீண்டும் அரசியலில் கொண்டு வரும்.
  • மாநிலக் கட்சிகளில் ஒருவித Cult அரசியல், அதாவது வழிபாட்டுக் கலாசாரம் இருக்கிறது. அதிமுகவிற்கு இதய தெய்வம் ஜெ. திமுகவின் காவல் தெய்வம் கருணா. பிஜேடியின் தெய்வம் நவீன் பட்னாயக். இந்த வழிபாட்டு அரசியல் நிலை பெற இது உதவலாம். ஆனால் தேசியக் கட்சிகளும் இதற்கு தப்பவில்லை. காங்கிரசில் நேற்று ராஜீவ். இன்று சோனியா, நாளை ராகுல். பாஜகவிலும் மோடி மீது இது போன்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

மாற்று அணி என்பது ஆட்சி மாற்றம் என்பதாக மட்டும் முடிந்து விடாமல் கொள்கைகளில் மாற்றம், அணுகுமுறைகளில் மாற்றம்,முன்னுரிமைகளில் மாற்றம் என்பதாகவும் விரிவடைய வேண்டும் என நான் விரும்புகிறேன், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. காங்கிரஸ், பாஜக இடையே வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகளில் அதிக வித்தியாசம் இல்லை. ஆனால் தனி ஈழம் என்ற ஜெயலலிதாவின் முழக்கம் அயலுறவுக் கொள்கையில் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்கிறது. இடதுசாரிகள் மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை முன் வைக்கின்றனர்.பயங்கரவாதம் குறித்த அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கும் எனத் தோன்றுகிறது.


Change the status quo என்பதுதான் இன்றைய இந்தியாவின் தேவை. அதனால் 3ம் அணிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறேன்.

Wednesday, May 06, 2009

யாருக்கு வாக்களிப்பது?-3

இந்தியாவில் மாநிலங்கள் எப்படி அரசியலில் பன்முகத்தன்மையை பிரதிநித்துவப்படுத்துகின்றனவோ அதே போல், மதங்கள் அக உலக நம்பிக்கைகளின் குறியீடாக அமைந்துள்ளன. பெரும்பான்மையான இந்தியர்களால் பின்பற்றப்படும் இந்து மதம் என்பதே பன்முகத் தன்மை கொண்ட ஒரு நிறுவனம்.
அந்த மதத்தின் ஒரு சிறப்பம்சம் இந்து என்பவன் எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்கக் கூடாது என்பதை மதம் வரையறுக்கவோ வலியுறுத்தவோ இல்லை என்பது. இந்து என்பவன் மதச் சின்னங்களைக் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும், இன்ன கடவுளைத்தான் வழிபட வேண்டும், கடவுளின் உருவம் இப்படி இருக்க வேண்டும், வழிபாடு இந்த முறையில்தான் அமைய வேண்டும், பிரார்த்தனைகள் இந்த மொழியில் இருக்க வேண்டும், தினம் அல்லது வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் கோவிலுக்கு வந்தாக வேண்டும், இன்னின்ன குடும்பத்தினர் இந்த இடத்திலுள்ள கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
இந்து யார் என்ற கேள்விக்கு ஒற்றைவரியில் ஓர் வரையறையைத் தந்துவிடமுடியாது. அல்லாவை வணங்குகிறவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவைக் கும்பிடுகிறவர்கள் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதைப் போல சிவனை வணங்குகிறவர்கள் இந்துக்கள் அல்லது விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் இந்துக்கள் என வரையறை செய்துவிடமுடியாது.சிவனை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். விஷ்ணுவை மட்டும் கும்பிடுகிற இந்துக்கள் இருக்கிறார்கள். இருவரையும் வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இருவரும் இணைந்த ஐயப்பனையோ சங்கர நாராயணனையோ வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தெய்வங்களை அல்லாமல் பெண் தெய்வங்களை முதன்மைப் படுத்தி வணங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களல்லாத கருப்பசாமியையோ, முனியனையோ, சுடலைமாடனையோ வணங்குகிறவர்களும் இந்துக்கள்தான்.
இறைவனை/இறைவியை மட்டுமல்லாது இயற்கையையும் வழிபடுகிற வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது.ரிக்வேதத்தின் சில பகுதிகளை மொழி பெயர்த்தால் அவை இயற்கை மீதான கவிதைகளாக அமைந்துவிடும்.(வாசிக்க: பாரதியின் மொழிபெயர்ப்புகள்).விலங்குகள், பறவைகள் இவைகள் கூட தெய்வாம்சம் பொருந்தியதாக அந்த மதத்தில் கருதப்படுகிறது. மனிதர்களுடைய எல்லா வழக்கங்களும், ஒழுக்கங்களும் கடவுள்கள் மீது ஏற்றிச் சொல்லபடுவதையும் இந்துமதம் தடுப்பதில்லை.
வேதத்தின் அடிப்படையில் தங்களை இந்துக்களாக அறிவித்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள்.வேதங்களைத் தர்க்க ரீதியான கேள்விகளோடு எதிர்கொள்ளும் உபநிஷத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள்.இதிகாசப் புராணக் கதைகளில் வடும் பாத்திரங்களைத் தங்கள் ஆதர்சங்களாக ஏற்றுக் கொண்டவர்களும் இந்துக்கள். மதச் சடங்குகளை செய்வதன் மூலம் தாங்கள் இந்துக்கள் எனக் கருதிக் கொள்பவர்களும் உண்டு. சடங்குகளை நிராகரித்து, ஆனால் கடவுளை மறுக்காத இந்துக்களும் உள்ளனர். இந்துமதம் ஒரு வாழ்க்கை முறை என டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு நூல் எழுதியிருக்கிறார். நமது மரபுகளைச் சுட்டி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியிருக்கிறார்.
எனவே இந்து யார் என்பதை ஒற்றை வரியில் வரையறுத்துவிட முடியாது. இதைச் செய்பவன்தான் இந்து, இதைச் செய்யாததால் இவன் இந்து அல்ல எனச் சொல்லிவிட முடியாது. சுருக்கமாகச் சொன்னால் இந்துமதம் ஒரு பன்முகத்தன்மைக்கு இடமளிக்கிறது. ஒருவன் தான் தீவிரமாக வழிபடும் கடவுள் உருவத்திற்கு, வழிபடும் முறைக்கு மாற்றாக வேறு ஒன்றை வழிபடுவனாக இருந்தால் அவனை நிராகரிக்க வேண்டியதில்லை என்ற அணுகுமுறையை இந்து மதம் கொண்டிருக்கிறது..
ஆனால் இந்துத்வம் என்ற கருத்தியலை தனது அடிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிற பாஜக இந்து என்பதை ஒரு ஒற்றை அடையாளமாக்க முயல்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று அது பன்முகத் தன்மையை மறுத்துப் பேசுகிறது. சாராம்சத்தில் இது, காங்கிரஸ் மாநிலங்களிடையேயான வேறுபாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிகரானது. இதன் மூலம் பாஜக ஒரு வாக்கு வங்கி அரசியலைக் கட்டமைக்கப் முயற்சிக்கிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பையும் சகோதரத்துவத்தையும்தான் போதிக்கின்றன. ஆனால் மதம், அரசியல் அதிகாரம் பெற முயலும் போது அங்கு ஒரு வெறித்தனம் பிறந்துவிடுகிறது.. அன்பே சிவம் என்று சொல்லும் இந்துக்கள்தான் சமணர்களைக் கழுவேற்றினார்கள்; சிறு புழு பூச்சிக்குக்கூட துன்பம் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதும் சமணம் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் எறிந்தார்கள். சகோதரத்துவம் பேசும் இஸ்லாமின் தீவிரவாதிகள் பாஹியான் புத்தர் சிலையைப் பெயர்த்தெறிந்தார்கள். பெளத்தர்கள் இலங்கையை ரத்தக் காடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலுவைப் போர்களும், யூத அரேபியரிடையான மோதல்களும் வரலாற்றில் பதிந்து கிடக்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது மதம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற வேட்கை. பாஜக அது போன்ற ஒரு வேட்கையைக் கொண்டிருக்கிறது
இந்து என்ற ஒற்றை அடையாளத்தை அது வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்து மதத்தின் இன்னொரு அம்சமான ஜாதிப் பிரிவுகள், அந்தப் பிரிவுகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள், இந்திய சமூகத்தில் வேரோடிக்கிடக்கிறது. அதன் நீட்சியாக இன்று அரசியலிலும் வாக்கு வங்கிகள் ஜாதி ரீதியாகப் பிரிந்து கிடக்கின்றன.
நீ இந்து என்று சுட்டிக்காட்ட[ப்படும் போது அதை உணர்ச்சி பூர்வமாக ஏற்கும் ஒருவன் அதை மறுத்து இல்லை நான் நாடார், நான் தலித், நான் பிராமணன் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.ஏனெனில் ஜாதிகள் என்பவை இந்து மதத்தின் உள்ளே அடங்கிய ஒன்று (sun-culture) என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒருவகையில் இது இந்தியன் என்ற (pan nationalist) அடையாளத்தின் உள்ளடங்கிய ஒரு அடையாளம் தமிழன் என காங்கிரஸ் வலியுறுத்துவதைப் போன்றது.
இந்து என்ற ஒற்றை அடையாளத்தைப் பயன்படுத்துவதன்.மூலம் அரசியல் ரீதியாகப் பலனடைந்திருப்பதால் அதை மேலும் பாஜக தீவீரப்படுத்துகிறது.
1984ல் பாஜக நாடாளுமன்றத்தில் இரண்டே இடங்களைப் பெற்றிருந்தது. ராமர் கோயில் பிரசினையை அது கையில் எடுத்துக் கொண்ட பிறகு 1998ல் ஆட்சியமைக்கும் அளவிற்கு வளர்ந்தது. அதே போல 2002ல் குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்தேறிய வன்முறைகள் 2007ல் அது ஆட்சியில் தொடர உதவின.
இந்த அனுபவத்தின் காரணமாக மத உணர்வுகள் கூர்மையாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே (Charged) மக்களை வைத்திருக்க பாஜக முற்படுகிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல என நான் கருதுகிறேன். இந்தியாவின் பன்முகத் தன்மை சீர்கெடுமானால் இந்தியா சமூகம் அமைதி கெடும், வன்முறை கிளம்பும். குறிப்பாக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு இவற்றில் ஒரு விரைந்து இந்தியா முன்னேற வேண்டிய ஒரு காலகட்டத்தில் இது போன்று நாட்டை உணர்ச்சி வெறியேற்றிப் பிளவு படுத்துவது என்பது பெருந்தீங்காக முடியும்.
பாஜக இன்னொரு ஏமாற்று வேலையிலும் முனைந்திருக்கிறது.அது இந்தத் தேர்தலில் முன்வைக்கும் தேர்தல் அறிக்கை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி எடுப்பது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது என்பவற்றையும் பேசுகிறது. இவற்றையெல்லாம் பாஜகவின் தனி ஆட்சி அமைந்தால் மட்டுமே செய்ய இயலும்.அது பாஜகவிற்கும் தெரியும்.1998லும், 1999லும் அது ஆட்சியில் அமரும் முன்னர் இந்த மூன்றையும் பற்றிப் பேசியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இந்த விஷயங்களில் அதனால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்போது அது , இது எங்களது தனிப்பட்ட ஆட்சியல்ல, தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி, எனவே கூட்டணிக் கட்சிகளின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என அது விளக்கமளித்தது. இந்தத் தேர்தலிலும் அதன் தலைவர்கள் பாஜக தனித்து ஆட்சிக்கு வராது, எங்கள் கூட்டணி வேண்டுமானால் ஆட்சி அமைக்கலாம் எனப் பேசி வருகிறார்கள். கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்றால் அவர்கள் இந்த மூன்று விஷயங்களையும் நிறைவேற்றுவார்கள்? முடியாது எனத் தெரிந்தும் அவர்கள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் நான் முன் சொன்னது போல இந்து என்ற ஒற்றை அடையாளத்தை முன்நிறுத்தி, வாக்களர்களை ஒரு உணர்ச்சி பூர்வமான நிலையில் வைத்திருப்பதுதான்.
பாஜக முக்கியமான பிரசினை என இந்தத் தேர்தலில் முன்னிறுத்துவது 'பயங்கரவாதம்'. மும்பையில் நவம்பரில் நடந்த சம்பவங்களை அது சுட்டிக் காட்டி, காங்கிரஸ் அரசிடம் பயங்கரவாதத்தை அடக்க வலிமையான சட்டமோ, கொள்கைகளோ, திட்டமோ இல்லை என வாதிடுகிறது. ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த போது அதனிடம் இது குறித்து எந்த விதமான அணுகுமுறை இருந்தது. காந்தகாருக்கு விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில், அன்று பாஜகவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் தீவீரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்து தன்னுடன் அழைத்துச் சென்று ஒப்படைக்கவில்லையா? நாடாளுமன்றத்தின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் பாஜக ஆட்சியில்தான் நடந்தது.
பயங்கரவாதத்தைக் கையாளும் விஷயத்தில் பாஜக காங்கிரஸ் இரண்டுமே இரட்டை வேஷம் போடுகின்றன என்பது என் கருத்து. நாடாளுமன்ற சம்பவத்தில் குற்றவாசியாக நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட அப்சல் குரு மீதான தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பான கோப்பு தில்லியின் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீக்ஷீத் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதச் செயல்களுக்குப் பணம் வரும் வாசல் எனக் கருதப்படும் பங்கேற்புப் பத்திரங்கள் (Participatory Notes) என்ற முறையை அறிமுகப்படுத்தியவர் ப.சிதம்பரம்.
இரண்டு கட்சிகளுமே பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எது என அறிந்து கொள்ளவோ அதில் அவர்கள் இழைத்த தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளவோ தயாராக இல்லை. நாட்டின்/சமூகத்தின் பன்முகத் தன்மை அங்கீகரிக்க மறுக்கப்படும் போது தீவிரவாதம் பிறக்கிறது. அதை அதிகாரத்தை அடக்குமுறையைக் கொண்டு அடக்கிவிட முடியும் என நினைப்பது புரையோடிப் போன புண்ணை புனுகு பூசி குணப்படுத்த முனைவது போன்றது.
பாஜக அதிகாரம் பெறுவது என்பது காங்கிரஸ் அதிகாரம் பெறுவதற்கு மாற்றாக ஆகாது என்பது என் கருத்து. பன்முகத் தன்மையை மறுப்பதிலும் மற்ற பல பிரசினைகளைக் கையாளுவதிலும் இரண்டும் ஒரே பார்வையைக் கொண்டிருக்கின்றன, அணுகுமுறைகளில் மாற்றம் இருக்கலாம்.
கும்பகோணம் டிகிரி காபிக்கும், ப்ரூ இன்ஸ்டண்ட் காபிக்கும் சுவை வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ஒன்றே. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
.

Monday, May 04, 2009

யாருக்கு வாக்களிப்பது-2

யாருக்கு வாக்களிப்பது?-2

இந்தியாவிலுள்ள கட்சிகளிலே மிகப் பழமையான கட்சி காங்கிரஸ். சுதந்திரத்திற்குப் பின் அது தனது தலைமையை மையப்படுத்தியே தேர்தல்களை சந்தித்து வருகிறது. தலைமை எந்தளவிற்கு ஜனநாயகத்தில், குறிப்பாக உட்கட்சி ஜனநாயகத்தில் அது நம்பிக்கை கொண்டிருக்கிறதோ அந்த அளவிற்கு மாத்திரமே அது கட்சிக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. நேருவின் காலத்தில், சுதந்திரப் போராட்டத்தின் போது பல மாநிலங்களில் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் தலைவராகத் தொடர்ந்தார்கள்.அவருக்குப் பின தலைமைப் போட்டியின் காரணமாக இந்திரா கட்சியைப் பிளந்து அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.தனது தலைமைக்குப் போட்டி நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக,மாநிலங்களில் விசுவாசிகளுக்கும், ஆமாம் சாமிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப் படுத்தினார்.அப்போதிருந்து இந்தியாவின் ஆதார பலமான பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து காங்கிரஸ் மெல்ல மெல்ல நழுவி, ஒரு குடும்பத்தின் கையில் சிக்கிய நிறுவனமாக அது மாறத் தொடங்கியது.நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஒன்று மட்டுமே கட்சியை வழி நடத்துவதற்கான தகுதியாகி விட்டது.

கூட்டாட்சியின் எதிரி

ஆனால் யதார்த்தம் என்னவென்றால் இந்தியா என்பதே மாநிலங்களின் தொகுப்பு என்பதுதான். பொதுவான அம்சங்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பு , நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்ட நாடு அல்ல இந்தியா. மாறாக பல்வேறு பிரதேசங்கள், தங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு அந்நியனை அதிகாரத்தில் இருந்து அகற்றப் போராடி,அதன் தொடர்ச்சியாக ஒரு பொது அடையாளத்தை ஏற்றுக் கொண்டதால் உருவானதுதான் இந்தியா.

சுருக்கமாகச் சொன்னால்,பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழி, கலாசாரம், தேவைகள் அரசியல் வரலாறு கொண்ட மக்களின் ஆதரவைப் பெறாமல் எந்த ஒருவரும் தில்லியில் ஆட்சி அமைக்க, அதிகாரம் பெற இயலாது. மக்களிடம் செல்வாக்கு இல்லாமல், தில்லியால் நியமிக்கப்பட்ட தலைவர்களால் ஆட்சியமைக்கும் அளவிற்கு வெற்றி தேடித் தர இயலாமல் போனதால் 1991லிருந்து மாநிலக் கட்சிகளின் துணையோடுதான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று வந்திருக்கிறது.இதற்காக காங்கிரஸ் கட்சி அந்த சிறு கட்சிகளுக்கு நன்றியோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அதற்கு மாறாக கூட்டணி என்றே பேச்சே கிடையாது, என 1998 செப்டம்பரில் பச்மார்ஹி(மத்திய பிரதேசம்)யில் கூடிய தனது அகில இந்தியக் கூட்டத்தில் தீர்மானம் போட்டது. பின்னர் 2004 தேர்தலில் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரிய வந்த நிலையில், 2003 ஜூலையில் சிம்லாக் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தைத் தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை அமைத்தது.அந்த ஆட்சி முடிந்து அடுத்த இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டிய நேரம் வந்தபோது, மீண்டும் தேசிய அளவில் யாரோடும் கூட்டணி கிடையாது என அறிவித்தது. மன்மோகன் சிங், இன்னும் ஒருபடி மேலே போய்,மாநிலக் கட்சிகள், பயங்கரவாதம், மதவாதம், நக்சலிசம் இவற்றிற்கு இணையானது என்ற ரீதியில் பேசினார்.

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ், Fedaralism என்ற கூட்டாச்சிக்கு எதிரான நிலையைக் கொண்டிருக்கிறது.வேறு வழியில்லாமல் மாநிலக் கட்சிகளை வேண்டா வெறுப்பாக சகித்துக் கொண்டிருக்கிறது.

மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமை,உட்கட்சி ஜனநாயகமற்ற, குடும்ப வாரிசுகளின் கையில் ஒப்படைக்கப்பட்ட Monolithic கட்சியின் ஆட்சி என்பது இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு ஏற்றதல்ல.காங்கிரஸ் இந்தப் பண்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும்வரை அது நிராகரிக்கப்பட வேண்டும்.

பொம்மை ஆட்சி
2004 தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் இன்னொரு வெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. அதுதான் பொம்மை ஆட்சி.(Rule by Proxy)மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு தனது ஆமாம் சாமிகளைக் கட்சியில் முன்னிறுத்திய இந்திராவை விட சோனியா ஒரு படி மேலே போய் ஆமாம் சாமியை பிரதமராக்குகிற கலாசாரத்தை ஆரம்பித்து வைக்கிறார்.இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இந்தக் கலாசாரத்தின் விளைவு இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்.யார் மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப் பட்டவரோ அவர் வசம்தான் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் உண்மையான அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலை நாளடைவில் எதேச்சதிகாரத்திற்கு இட்டுச் சென்றுவிடும்.

இந்தக் காரணத்திற்காகவும் நான் காங்கிரசை நிராகரிக்கிறேன்

கூட்டணிக் கட்சிகள்:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று காங்கிரசின் கூட்டணியில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் அங்கம் வகிக்கின்றன.

திமுக

அடிப்படையில் காங்கிரஸ் திமுக இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான கொள்கைகளைக் கொண்டவை. காங்கிரஸ் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டும், மாநிலக் கட்சிகள் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை என்ற கருத்தைக் கொண்டிருக்கும் கட்சி. திமுக அதிகாரப் பரவல், கூட்டாட்சித் தத்துவம் இவற்றை வலியுறுத்திப் பேசி வந்த கட்சி. ஆனால் இரண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, தக்க வைத்துக் கொள்வது என்ற புள்ளியில் ஒருங்கிணைகின்றன.

1967ல்ஆட்சிக்கு வரும் முன்னர் காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்த பின், 1971ல் காங்கிரசோடு கூட்டணி அமைத்துக் கொண்டது. காங்கிரசிற்கு எதிரான கூட்டணி அண்ணாவாலும், காங்கிரசுடனான கூட்டணி கருணாநிதியாலும் அமைக்கப்பட்டது. திமுக பிளவு கண்ட பிறகு, திமுக அல்லது அதிமுக இரண்டும் காங்கிரசோடு கூட்டணி கண்டே தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன.

பதிவர்கள் சிலர் கருதுவது போல,(காண்க தமிழ் சசி} எப்போதும் தமிழக அரசியல் என்பது இந்திய தேசியத்திற்கும் திராவிட அரசியலுக்குமான இடையேயான 'போராட்டமாக' இருந்ததில்லை. அது வாக்குகளைத் திரட்டுவதற்கான தேர்தல் அரசியலாகவே இருந்து வந்திருக்கிறது (Competitive Electoral Politics) சித்தாந்த அடிப்படையிலான அரசியல் என்பதிலிருந்து, தேர்தல் கணக்கு சார்ந்த அரசியலாக தமிழக அரசியலை மாற்றியதில் திராவிடக்கட்சிகளுக்கு, குறிப்பாக திமுகவிற்கு பெரும் பங்குண்டு. இது பாஜகவோடு திமுக உடன்பாடு கண்டபோது அப்பட்டமாகப் பகிரங்கப்பட்டது. அப்படி பகிரங்கப்பட்டபின் திமுக இது குறித்த நாணத்தையோ, கூச்சத்தையோ, குற்ற உணர்வையோ இழந்து விட்டது.

அதன் அடையாளம்தான் சோனியா தலைமையில் அது ஏற்றுக் கொண்டிருக்கும் கூட்டணி. ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாக தன் அமைச்சர்களை விலக்கிக் கொண்ட திமுக இன்று சோனியா காந்தியின் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பதற்கு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதொன்றே காரணம்.

அந்த அதிகாரம் கூட குடும்ப வாரிசுகளின் நலனின் பொருட்டு என்ற இலக்கை நோக்கி அந்தக் கட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. வாரிசுகளின்வசம் கட்சி அதிகாரம், ஆட்சி அதிகாரம் இரண்டையும் ஒப்படைப்பதில் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன.

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல், அதிகாரத்தை அனுபவிக்கலாம் (Power without accountability) என்ற காங்கிரஸ் அணுகுமுறையின் தமிழகப் பதிப்பாக அழகிரி விளங்குகிறார்.

இலங்கைப் பிரசினையில் திமுக நடந்து கொண்ட விதம் அதன் சுயநல நோக்குகளை அம்பலப்படுத்தி விட்டன.இத்தனை வயதுக்கு மேல், சமரசம் செய்து கொண்டாவது, ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என எண்ணுவதற்குக் காரணம், அந்த அதிகாரம் தன் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்குத் தேவை என்பதற்காகதானிருக்க வேண்டும். இந்த முன்னுதாரணமும் தமிழகத்திற்கு நன்மை பயப்பதாக இருக்காது.

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலைச் சிறுத்தைகளிடம் வாரிசு அரசியல் இல்லை. ஆனால் அவர்களின் சமரசம் திமுகவின் சமரசத்திற்கு சற்றும் குறைந்ததல்ல.இந்த சமரசத்தின் மூலம் அது அடையப் போகும் பலன் ஆட்சி அல்ல. அதிக பட்சம் நாடாளுமன்றத்தில் இரண்டு இடங்கள்..இன்னும் சொல்லப்போனால் கட்சி தோன்றி 25 ஆண்டுகளுக்குப் பின் திமுக சென்றடைந்த இடத்தை விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் களத்திற்கு வந்த சில ஆண்டுகளிலேயே சென்றடைந்து விட்டது அதன் உள்ளீடற்ற பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துகிறது.

கட்சி அறிவித்த போராட்டங்களுக்காகச் சிறை சென்ற தொண்டர்கள் (சிலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை சந்தித்தவர்கள்)விடுதலைச் சிறுத்தைகளில் உண்டு. ஆனால் விழுப்புரம் தொகுதியின் வேட்பாளராக கட்சி முதலில் தேர்ந்தெடுத்தது, கட்சி மாநாடுகளில் கூடக் கலந்து கொள்ளாத ஒரு கோடீஸ்வரரை. அவர் வாதத் திறமையோ, ஆங்கில அறிவோ இல்லாதவர். அவரின் ஒரே தகுதி அவர் ரியல் எஸ்டேட் வணிகம் மூலம் கோடிகளைப் பார்த்தவர் என்பது ஒன்றே. அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதும் அவர் மாற்றப்பட்டார். அப்போதும் அந்த இடம் ஒரு தொண்டனுக்கு அளிக்கப்படவில்லை. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. உதைபடத் தொண்டன்! சுகம் பெற கனவான்கள்!

கட்சி, ஆட்சி என்ற எந்தக் கோணத்தில் பார்த்தாலும் காங்கிரஸ் தலைமை ஏற்றுள்ள அணி நிராகரிக்கப்பட வேண்டியதே.

பாஜக அணி பற்றிய அலசல் அடுத்த பதிவில்

Sunday, May 03, 2009

யாருக்கு வாக்களிப்பது? -1

அகில இந்திய அளவில் அலைகள் ஏதும் இல்லை எனக் கருதப்படும் இந்தத் தேர்தல் நம் முன் சில வாய்ப்புக்களை வைக்கின்றன. அவை:

1.ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையை (governance) மதிப்பிடுவது
2.இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்துவது
3,காங்கிரஸ், பாஜக ஆகியவற்றிற்கு மாற்றாக உருவாகி வரும் அரசியல் வெளியை நிலைப்படுத்துவது (To increase and stabilse a political space for a third alternative)

அலை வீசுகிற தேர்தல்களில் இதற்கு வாய்ப்புக்கள் இல்லை.அலை வீசுகிற நேரங்களில் ஒரு பிரசினை மீது மக்கள் உணர்ச்சி பூர்வமாக உந்தப்பட்டு, ஆட்சிக்கு நேர்மறையாக (உ-ம்:1984 நாடாளுமன்றத் தேர்தல், இந்திரா படுகொலை ராஜீவ் ஆதரவு) அல்லது எதிர்மறையாக (2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் வாக்களித விதம்) வாக்களிக்கிறார்கள் என்பதால் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவோ பன்முகத்தன்மையையோ, மாற்று அரசியல் தளங்களை வலுப்படுத்தவோ வாக்குகள் பலனளிப்பதில்லை. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். இந்தக் கருதுகோளின் அடிப்படையிலேயே நான் வாக்களிக்க இருக்கிறேன்.

அதே நேரம் இந்த முறை நாம் நம் முன் இருப்பவற்றில் சிலவற்றை நீக்குவதன் மூலம் மற்றொன்று தேர்வு (Selection by elimination) பெறும் முறையைத்தான் கடைப்பிடிக்க முடியும்.

எனவே நாம் முதலில் தீர்மானிக்க வேண்டியது யாருக்கு வாக்களிப்பது என்பதை அல்ல. யாருக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதைத்தான்.

நம் முன் காங்கிரஸ் தலைமையேற்கும் ஒரு அணி, பாஜக தலைமையேற்ற்கும் ஒரு அணி, கூட்டுத் தலைமை கொண்ட இன்னொரு அணி ஆகியவை உள்ளன.லாலு பிரசாத்தின் நான்காவது அணிக்கு தமிழகம் பங்களிக்கவில்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் விஜயகாந்த்தின் அரசியல் கட்சி,யும், வேறு சில கட்சிகளும் வாக்குக் கோருகின்றன. இவை தவிர சுயேட்சைகள் சிலரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆளும் கட்சியாகத் தேர்தலை சந்திப்பதால் நான் முதலில் காங்கிரஸ் அணியை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். அதனுடைய ஆட்சி, அந்தக் கட்சி, அதன் அணியில் உள்ள கட்சிகள் என்று மூன்று அம்சங்களாகப் பகுத்துக் கொண்டு பரிசீலிக்க விரும்புகிறேன்

ஆட்சி:

சகிக்கமுடியாத சமரசங்கள்

கடந்த ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சி நிலையானதாக இருந்தது என்பது ஒன்றுதான் அதன் பிளஸ் பாயிண்ட். ஆனால் இந்த நிலைத்த தன்மையைப் பெற அது பலவிதமான சமரசங்களையும் மேற்கொண்டது என்பதும் உண்மை. ஆட்சியைக் காப்பாற்ற அது கூட்டணிக் கட்சிகளுடன் மேற்கொண்ட சமரசங்களை விட அது ஆளுகையில் (governance) செய்து கொண்ட சமரசங்கள் கவலை தருபவை. அணுசக்தி ஒப்பந்தம் ஓர் உதாரணம்.

ஹைட் சட்டத்தின் ஷரத்துக்கள் இந்தியா மீது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றன. அவை இந்தியாவை அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் நிலையில் (accountable to US) வைக்கின்றன. சில இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சுயேச்சையான முடிவுகள் எடுக்க இயலாத நிலையை ஏற்படுத்துகின்றன.அதைவிட மோசம் அமெரிக்கா எடுக்கும் நிலையைக் கட்டாயமாக ஆதரித்தாக வேண்டும் என்கின்றன அப்படி இந்தியா ஆதரிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது ஹைட் சட்டம்.(India is working with and supporting the United States and international efforts to prevent the spread of enrichment and reprocessing technology to any state that does not already possess full-scale, functioning enrichment or reprocessing plants Section 104-b-5, Henry J. Hyde United States-India Peaceful Atomic Energy Cooperation Act of 2006’) இந்தச் சட்டப்பிரிவு வெறுமனே working என்று மட்டும் கூறாமல் supporting எனக் கூறுவதையும் கவனிக்க வேண்டும். எனவே ஈரான், கொரியா போன்ற விஷயங்களில் இனி இந்தியா தனித்து முடிவு எடுக்க முடியாது

இதே ஹைட் சட்டம் இந்தியா இனி அணு ஆயுதங்கள் செய்வதற்கும் தடை விதிக்கிறது. அப்படி செய்தால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் சலுகைகளும் ரத்து செய்யப்படும் (“shall cease to be effective if the President determines that India has detonated a nuclear explosive device...” Sec.106) எனத் திட்டவட்டமாகத் தெளிவாகக் கூறுகிறது சட்டம்.

இந்தியா அணு ஆயுதங்கள் செய்யக் கூடாது என்பதுதான் என் நிலையும். ஆனால் அந்த முடிவை நாம் சுயேச்சையாக எடுக்க வேண்டும். இன்னொருவரின் நிர்பந்தத்தின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்படக்கூடாது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு விரிவாக விவாதிக்க இடமில்லை. ஆனால் ஒரு உதாரணம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஊடகங்களுக்குச் சில சுய நெறிகள் வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அதுவே அரசுத் தணிக்கை மூலம் வற்புறுத்தப்படுமானல் அதை எதிர்ப்பேன்.

இது இப்படியிருக்க இந்தியா அணு ஆயுத சோதனை செய்ய எந்தத் தடையுமில்லை என பிரதமர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார். ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என பிராணாப் முகர்ஜி சொல்கிறார். ஆனால் காண்டலீசா ரைசின் கருத்து அதற்கு நேர்மாறாக இருந்தது.( It will have to be completely consistent with the obligations of the Hyde Act… ) சரி, ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப்படுத்தாது என்ற வைத்துக் கொள்வோம். ஆனால் அது அமெரிக்க ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும். அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில் அவர் அதற்குக் கட்டுப்பட்டவர். அமெரிக்க அரசின் அதிபர் என்ற வகையிலும் கட்டுப்பட்டவர். அப்படிக் கட்டுப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்தியா இன்னென்ன செய்ததா என அறிக்கை அளிக்க வேண்டும் என அந்தச் சட்டம் சிலவற்றை வகுத்திருக்கிறது.அதன் காரணமாக அது இந்தியாவை மறைமுகமாக கட்டுப்படுத்துகிறது.

மூடி மறைத்தல்

இதில் சினமூட்டும் இன்னொரு அம்சம் என்னவென்றால் அரசு இந்த ஒப்பந்தம் பற்றி வெளிப்படையாக இல்லை. இத்தனை கடுமையான ஷரத்துக்கள் கொண்ட ஒப்பந்தம் குறித்து, அது கையெழுத்திடப்படும் முன் பெரிய அளவில் விவாதிக்கப்படவோ, மக்கள் கருத்தறியவோ முயற்சிகள் மேற்கொள்ளவில்லை

இதே போன்ற வெளிப்படையான அணுகுமுறையை அது இலங்கை விஷயத்திலும் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காண்கிறோம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கைக்கு ஆயுத உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காங்கிரஸ் தலைமையிலான அரசின் நிலை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்ல அதற்குத் தயக்கம் ஏன்? ஆனால் அது அதற்கு மாறாக ஒருபுறம் இலங்கை அரசுக்கு உதவிக் கொண்டு, மறுபுறம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற இலங்கை அரசோடு சமாதானப் பேச்சுகள் நடத்துவது போல பாவனை செய்து கொண்டிருந்தது.

இந்தியாவின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொண்ட இந்தியா, இலங்கையின் இறையாண்மையில் தான் தலையிட முடியாது எனச் சாக்குச் சொல்வது ஏமாற்று வேலை. இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது என்றால் அதை ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கொடுத்திருக்கலாம், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தாக தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்க முடியுமே?

சேதுக் கால்வாய் திட்டத்திலும் இது போன்ற ஒரு இரட்டை நிலையைப் பார்க்க முடிந்தது. அது உச்ச நீதி மன்றத்தில் முதலில் தாக்கல் செய்த பிரமாண[ப்பத்திரத்தில் ஒரு நிலையையும், பின்னர் அதற்கு நேரெதிரான நிலையையும் மேற்கொண்டது.

அடித்தள மக்கள் மீது அக்கறையின்மை

இவற்றையெல்லாம் விட ஐக்கிய முன்னணி அரசின் மன்னிக்க முடியாத மாபெரும் தவறு அது அடித்தள மக்கள் வாழ்வின் மீது அக்கறை காட்டாமல் ஆட்சி நடத்தியது.அநேகமாக அது அந்த மக்களைக் கைவிட்டுவிட்டது. ஒரு உதாரணம்: அமைப்புசாரா தொழில்கள், தொழிலாளர்கள் குறித்து ஆராய அரசு டாக்டர் சென்குப்தா தலைமையில் அமைத்த National Commission on Enterprises in the Unorganised Sector- (NCEUS) 2007ல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அது இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் வருமானத்தில் வாழ்கிறவர்களின் எண்ணிக்கை 83 கோடியே 60 லட்சம் பேர் என்கிறது. 110 கோடி மக்கள் உள்ள ஒரு தேசத்தில் 83 கோடிப் பேருக்கு மேல் இநத நிலையில் வாழ்கிறார்கள் என்றால் அது அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் பலன்கள் அடித்தள மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

வறுமையை ஒழிப்பதற்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்து, நான் தினமணி ஆசிரியராக இருக்கும் போது அவற்றை வற்புறுத்திக் கட்டுரைகள் வெளியிட்டு வந்தேன். (தினமணி ஆகஸ்ட் 2, 1994) தீர்வுகளில் ஒன்று வேலை உத்தரவாத சட்டம், மற்றொன்று விவசாயம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் (தினமணி ஆகஸ்ட் 2 1994). இதற்கு ஆதரவு சேர்க்க, மேதா பட்கர் போன்றவர்களை பேட்டி கண்டு பிரசுரித்து வந்தேன்

இன்று இந்த இரண்டு தீர்வுகளும் 13 ஆண்டுகளுக்குப் பின் ஏதோ ஒரு வடிவில் நிஜமாகி விட்டன. ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் இரண்டும் இந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் வந்துவிட்டன. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசு சொதப்புகிறது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் மசோதாவில் குறைந்த பட்சக் கூலி, ஓய்வூதியம் இவை நிர்ணயிக்கப்படவில்லை

வறுமை என்பதை அரசு புத்தகப் பார்வையிலேயே (academic outlook) அணுகுகிறதோ என எண்ணும் விதமாகவே அது நடந்து கொள்கிறது
அடித்தளத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அரசுக்கு ஏதும் தெரியாதோ என்ற கேள்வி அதன் செயல்பாடுகளைக் காணும் போது எழுகிறது. விவசாயிகளுக்கு அது அறிவித்த கடன் தள்ளுபடி ஒரு உதாரணம். வங்கிகளில் கடன் பெற்றுப் பயிர்த் தொழில் செய்யும் 'விவரமான' விவசாயிகளைவிட, தனியார்களிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கித் திணறும் விவசாயிகள்தான் கை தூக்கிவிடப் பட வேண்டியவர்கள். ஆனால் அரசின் கடன் தள்ளுபடி எந்த விதத்திலும் பயன் தராது என்பதுதான் வருத்தமான விஷயம்

ஜனநாயகத்தில் ஒரு நல்ல அரசின் லட்சணம் என்பது, அதன் சுயாதீனம், (soverignity) வெளிப்படையான அணுகுமுறை (Transperancy) பதில் சொல்லும் கடமை (accountability) ஆகியவையே. இந்த மூன்றிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு மிக மோசமாகத் தோற்றுவிட்டது. அத்துடன் அது அடித்தள மக்களைக் கை விட்டுவிட்டது

கட்சி பற்றி அடுத்த பதிவில்