Sunday, July 08, 2007

தொட்டுப் போனவர்களுக்கு நன்றி

நா. கோவிந்தசாமியும் நானும்
நன்றி சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவு. இதை ஒரு பின்னூட்டமாகப் போடாமல் பதிவாகப் போடக் காரணம் உண்டு. அது அப்புறம்.

முதலில் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதற்காக? இரண்டு தவறுகள் நேர்ந்துவிட்டன.
1."படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான டாக்டர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார்." என்று எழுதியிருந்தேன். நா.கோ. செய்த வேலைகளுக்கும் அதற்குப் பின் இருந்த கடுமையான உழைப்பிற்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்தான். ஆனால் யாரும் கொடுக்கலையே. வசூல் ராஜாவிற்கெல்லாம் டாகடர் பட்டம் கொடுக்கிற போது மெய்யான அறிஞரான அவருக்கும் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் கொடுக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவரை 'டாக்டர்' கோவிந்தசாமி என்று நான் எழுதியது தவறுதான். பேராசிரியர் நா.கோவிந்தசாமி என்றுதான் எழுத வந்தேன். அதற்குள் ஏதோ தொலைபேசி அழைப்பிற்குக் காது கொடுத்துவிட்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தபோது, அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டேன்.அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அந்தத் தவற்றை என் பதிவில் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
இந்த தவற்றைப் பெயரில்லா பெரிய்மனுசன் ஒருவர், எள்ளலோடு ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி. அந்தப் பெயரில்லாப்
பெரியமனுசன், என் பதிவுக்கு வந்து பின்னுட்டம் போட்ட்டுச் சொல்லலை. எனக்கு ஒரு மின்னஞசல் மூலமும் தெரிவிக்கவில்லை.தானாக ஒரு பதிவு எழுதியும் பதிவு செய்யவில்லை. போகிற போக்கில், வேறு ஒரு பதிவில்,
கிடைத்த சந்துக்குள் சந்தடி செய்துவிட்டுப் போயிருக்கிறார். என்றாலும் அவருக்கு நன்றி.

2. " காசியும் அவரது நண்பர்கள் உதவியோடு நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார்" என்று தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த
வரிகளை மீண்டும் படிக்கிற போது, காசி தன் நண்பர்களோடு சேர்ந்து தமிழ்மணம் திரட்டியை ஆரம்பித்தார் என்று சிலர் அர்த்தம் கொள்ள
வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படிப் புரிந்து கொண்டால் அது தவ்றாகிவிடும். காசி த்னியொருவராக உழைத்துத்தான் அந்தத் திரட்டியை
நிறுவினார். அவ்ர் அதை நிறுவிய பின் அதை நிர்வகிக்கும் பொறுப்பில் அவரது நண்பர்கள் இணைந்து கொண்டார்கள். அந்த நண்பர்கள் நிர்வாகத்தில்
செலுத்திய உழைப்பும் ஆர்வமும் கணிசமானதுதான். ஆனால் தமிழ்மணத்தை ஆரம்பித்தது காசிதான். இதையும் பதிவில் சரி செய்திருக்கிறேன்.
இனி இரண்டு பதிவுகளுக்குமான நன்றி. ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி நன்றி சொல்ல வேண்டும்தான். ஆனால் இந்தப்பதிவுகளையே, அல்லது
எட்டுப் போடுகிற விளையாட்டையே ஏதோ இமேஜை நிலைநிறுத்திக்கிற உத்தி என்றெல்லாம் ஒன்றிரண்டு பேர் முணுமுணுத்துக் கொண்டு
இருக்காங்க. அப்படியிருக்கும் போது பெயர் சொல்லி நன்றி சொல்ல ஆரம்பித்தால் ஏதோ பின்னூட்டமிட்டவர்களது நல்ல புத்தகத்தில் நான் இடம் பெற முயற்சிப்பதாகவோ, அல்லது ரசிகர் மன்றம் ஆரம்பிப்பதாகவோ புரளி கிளப்பலாம். எனவே தனித்தனியாகப் பெயர் சொல்லிப் பின்னூட்டம் போட்டு,
(பின்னூட்டத்தின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிக் கொண்டு) நன்றி சொல்லப்போவதில்லை. சிலரது பின்னூட்டங்கள் சிந்தனையைக் கிளப்பின. அந்த சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
கலக்கிட்டீங்க, அசத்திடீங்க, சூப்பர், சுவாரஸ்யமாக இருந்தது, என்றெல்லாம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய
செந்தழல் ரவிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, ஒரு சில வார்த்தைகள்.இது போன்ற அனுபவங்கள் ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கிற
அனுபவங்க்ள். நான் பத்திரிகையாளனாக இல்லாமல் கணினி நிரல் எழுதுபவனாகவோ, வங்கிக் கணக்கு எழுதுகிறவனாகவோ பணியாற்றியிருந்தால் இந்த அனுபவங்கள் கிடைத்திருக்காது. இது மாலனுக்குக் கிடைத்த அனுபவங்கள் அல்ல்.மாலன் என்ற பத்த்ரிகையாளனுக்குக் கிடைத்த அனுபவங்கள். நீங்களும் ஒரு பத்திரிகையாளனாக 25, 30 வருஷம் குப்பை கொட்டினால் உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்க்லாம்.

'நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத்தின் பழங்களைத்தான் நாங்கள் இன்று சுவைக்கிறோம்' என்று இலவசக் கொத்தனார் (சங்கப் புலவர் மாதிரி
என்ன ஒரு பெயர்!) தெரிவித்திருக்கிற நன்றியோ, மகிழ்ச்சியோ எனக்குரியது அல்ல.கணினியில் தமிழ் இடம் பெற உழைத்த பெருமக்கள் பலர். முதல்
தமிழ் எழுத்துருவை உருவாக்கிய முனைவர் ஆதமி ஸ்ரீநிவாசன், பேராசிரியர்.ஜார்ஜ் ஹார்ட், மயிலை எழுத்துருவை உருவாக்கிய
முனைவர்.கல்யாணசுந்தரம், பாரதி என்ற நிரலியை உருவாக்கிய முத்துக்கிருஷணன், .இணையத்தில் தமிழ் தோன்ற உழைத்த பேராசிரியர்
நா.கோவிந்தசாமி, கணியில் தமிழில் எழுதுவதை எளிமையாக்கிய முத்து நெடுமாறன், பாலாபிள்ளை, முகுந்தராஜ், அன்பரசன், வலைப்பதிவுகள்
வலுப்பெறக் காரணமான பத்ரி, காசி, மதி என் அந்தப் பட்டியல் நெடியது. நீங்கள், நான், எதிர்காலத் தலைமுறை எல்லாம் நன்றி பாரட்ட வேண்டியது
இவர்களுக்குத்தான். மதுமிதா வலைப்பதிவுகள் பற்றி ஒரு நூல் எழுதப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாராவது கண்னியில் தமிழ் வந்த வளர்ந்த வரலாற்றை எழுதலாம். அதை வலைப்பதிவுகளில் எழுதினால் உடனுக்குடன் தகவல் பிழைகள் ஏற்படாமல் சரி செய்து கொள்ள முடியும்.

"தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பாடுகளை பார்க்கையில், மறுபடியும் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாமா என்று கூடத்
தோன்றுகிறது. ஆனால் இன்னொரு ஓரத்தில் " அடப் போங்கப்பா..நம்முடைய நேரத்தை உபயோகப்படுத்தி வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா
என்றும் தோன்றி விடுகிறது. இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இணையத்தில் கோஷ்டியும் அரசியலும் மலிந்த பிறகு முன்னைப் போல உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் எழுத முடிவதில்லை. தமிழனின் சாபக்கேடு அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வசதிகளையே அவன் உபயோகிக்க விடாது.." என்ற மூக்குசுந்தரின் மனச் சோர்வு, பலருக்கும் தோன்றி மறைகிற ஒரு சோர்வு. "வலைப் பூக்களில் என்ன ரிப் வான் விங்கிள் மாற்றம்?அதே சாதி அரசியல் தான்.அதே அசிங்க,மிரட்டல் பின்னோட்டங்கள்தான்!" என்ற சீனியின் ஆதங்கமும் இப்படிப்பட்ட ஒரு மனச் சோர்வின் வெளிப்பாடுதான்.எனக்கும் கூட இந்தச் சோர்வு ஒரு தருணத்தில் ஏற்பட்டதுண்டு.இது போன்ற மனச்சோர்வின் காரணமாக வலையில் எழுத வந்த பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டார்கள்.வேறு வெளியீட்டு வாய்ப்புப் பெற்றவர்கள் ' என்னத்துக்கு? தலையெழுத்தா?' என்ற எண்ணம் தோன்றி விலகிப் போவது இயல்புதான். இங்கு எழுதாததால் அவர்களுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.
இது ஒருவகையான கலாசாரப் பிரசினை என்று எனக்குத் தோன்றுகிறது.நம் சமூகத்தில் சில நோய்க்கூறான அம்சங்கள் நாளுக்கு நாள் வலுப்
பெற்றுவருகின்றன. விவாதங்களில் பங்கேற்பதற்கான குறைந்தபட்சத் தகுதிகளான, பொறையுடமை, (tolerance) சமனநிலை (Balance) ஆகியவற்றை
விரைவில் இழந்துவிடும் நிலையக் காண்கிறேன். ஒரு பிரசினையில், ஒரு விஷயத்தில் தான் மேற்கொண்டுள்ள நிலைக்கு மாறாக இன்னொருவருக்கு
வேறு கருத்து, நிலைப்பாடு இருக்குமானால், அப்படி ஒரு மாற்று நிலை எடுத்ததற்காக் அவரைக் கண்ட துண்டமாக வெட்டிக் காக்காய்க்குப் போட்டுவிட வேண்டுமெனத் துடிக்கிறார்கள். 'If you are not with me you are against me' என்ற பயங்கரவாதக் குழுக்களின், Fundamentalist குழுக்களின் மனோபாவம் வலைப்பதிவுகளுக்கும் வந்துவிட்டது.

பொது அரங்கில் ஒருவரது கருத்துக்களை தன்னுடைய கருத்துக்களால் வெல்ல முடியாது என்ற நிலை வரும்போதோ, அல்லது அப்படி ஒரு பதற்றம் ஏற்படும் போதோ, எதிராளியை personal levelல் devalue செய்யத் துவங்குகிறார்கள். அப்படி அந்த நபரை devalue செய்வதன் மூலம் அவரது
கருத்துக்களை devalue செய்ய முடியும் என்றோ, அல்லது செய்துவிட்டதாகவோ மனநிறைவு கொள்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வலைப்பதிவுகளை எழுதுபவராகவோ, படிப்பவராகவோ இருப்பதில்லை என்பதால் அவருக்கு பதிலளிக்க வாய்ப்பே தரபடாமல் இந்தத் தாக்குதல் தொடரப்படுகிறது. அவர் பதிலளிக்க மாட்டார் என்ற தெம்பில் மேலும் மேலும் அவர் மீது எள்ளலும் கேலியும் தொடர்கிறது. சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை.நம்முடைய அரசியல் கலாசாரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு சமூக விளைவு இது
இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? 1.இவற்றிலிருந்து விலகி நிற்கும் பொருட்டு வலைப்பதிவுகளிலிருந்தே விலகி நிற்பது; 2.'சண்டைக்கார'
பதிவுகளைத் திறந்தே பார்க்காமல் அலட்சியப்படுத்துவது; 3.சண்டைக்காரர்களை உசுப்பிவிடும் விஷயங்கள் பற்றி வாயே திறக்காமல், முக்கியமில்லாத விஷயங்கள், சின்னஞ் சிறுகதைகள் பேசிப் பொழுதைக் கழிப்பது; இந்த மூன்றில் ஏதோ ஒன்றை அவரவர் வசதிப்படி செய்து கொண்டிருக்கிறோம்.
நான்காவதாக இந்தப் பதிவுகளுக்கு பதிலாக் ஆரோக்கியமான பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.ஆனால் இது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல. பாலில் தண்ணீர் அதிகம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், தண்ணீர் கலக்காத பாலையோ, பால்பவுடரையோ கூடுதலாகச் சேர்த்துப் பாலின் தரத்தை உயர்த்த முடியும். ஆனால் பாலில் விஷம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், அந்தப் பாலைக் குப்பையில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.ஊரில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதென்றால் அவற்றிடமிருந்து விலகிப் போவது ஒரு வழி. அவ்ற்றைப் பிடிக்க நகர்மன்றத்திடம் மன்றாடுவது ஒரு வழி. நகர்மன்ற்ம் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மறுத்ததென்றால் நகர்மன்றத்தையே மாற்ற முயற்சிப்பது
இன்னொரு வழி. தனிந்பர் துதிகளுக்கோ, தாக்குதல்களுக்கோ இடமளிக்காத பதிவுகளை, சுயக் காதலைத் துறந்த பதிவுகளை, ஜல்லியடிக்காத,
கும்மியடிக்காத சாரமுள்ள பதிவுகளை மட்டும் அனுமதிக்கிற ஒரு திரட்டியை உருவாக்கமுடியாதா? திரட்டியைப் பற்றி யோசிக்க வேண்டிய காரணம்,
அது வெறும் தொழில்நுட்ப வசதி அல்ல, ஒரு பொது அரங்கு என்பதால்.

அப்படி ஒரு 'இலட்சியப் பொது அரங்கு' ஏற்படுகிற வரை சில நடத்தை நெறிகளை நாம் நமது பதிவுகள், பின்னூட்டங்களைப் பொறுத்தவரை
பின்பற்றலாம்: அவை:
  1. தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.
  2. எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்
  3. மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;
  4. ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
  5. தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
    அனுமதியேன்.
  6. வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்
    ஓசை செல்வா, நீங்கள் கேட்டிருந்த " Many to Many communication ல் (web/blog/groups etc) உள்ள சவால்கள்" பற்றிய கேள்விக்கான விடைகளில் சில மேலே உள்ளன. இவற்றைத் தொடர்ந்து இன்னொருநாள் விவாதிப்போம்- ஒர் தனிப்பதிவாக
    "எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள் மீது எந்த ஒரு பிடிப்போ நம்பிக்கையோ இருந்தது கிடையாது, உங்களை மட்டும் அல்ல இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அந்த பட்டியலில். ஆனால் உங்கள் எட்டுப்பதிவை படித்த பிறகு ,எனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்று தோன்றுகிறது. இது நாள் வரையில் சன் டி.வியில் தங்களை காணும் பொழுது எல்லாம் வந்துடாங்கய்யானு தான் சலித்துக்கொள்வேன் :-)) " என்று வவ்வால் எழுதியிருந்தார்.
    நன்றி வவ்வால். உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்து என்ற ஒன்று இதுவரை எழுதப்படவே இல்லை. பாரதி மீதும், திருவள்ளுவர் மீதும், ஷேக்ஸ்பியர் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்பட்டதுண்டு. இதற்குப் பல காரணங்கள். பெரும்பாலும் ஒருவரது எழுத்தைப் படிக்கும் முன்னர் அவரைப் பற்றி ஏதோ ஒரு விதத்தில் கேள்விப்பட்டுவிடுகிறோம். அல்லது அவரை வேறு ஒரு தளத்தில் 'சந்தித்து' விடுகிறோம். இது அவரது எழுத்தைப் பற்றி நமக்குள் அதைப் படிக்காமலேயே ஒருவித மனச்சாய்வை ஏற்படுத்தி விடுகிறது. அவரது மூக்கு, அல்லது அவரது ஜாதி, அல்லது அவரது அரசியல் சார்பு, அல்லது அவர் தனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரைப் பற்றி வெளியிட்டிருந்த கருத்து ஏதோ ஒன்று அவருக்கு எதிரான ஓர்
    மனோபாவத்தைத் தோற்றுவித்துவிடுவதுண்டு. பெரும்பாலும் நாம் ஒரு தனிநபரை ஊடகங்கள் ஏற்படுத்திய சில பிம்பங்கள், பிரமைகளுக்கு அப்பால் காண்பதில்லை. என் எழுத்துக்களையோ அல்லது என்னையோ உங்களுக்குப் பிடிக்காமல் போனதற்கும் காரணங்கள் இருக்கலாம். நான் கேட்டுக் கொள்வதெல்லாம், என்னை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பாளியையும் அவனது ப்டைப்புக்களைப் படித்து, ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது அவனை நீங்கள் நிராகரிக்கக் கூடச் செய்யலாம்.ஆனால் அது ஒரு தேர்ந்த முடிவு.(Discerning opinion). ஒருவேளை நீங்கள் என்னைப் படித்ததற்குப் பின்தான், உங்களது முடிவுகளுக்கு வந்திருந்தீர்கள் என்றால் அதுவும் எனக்கு உடன்பாடுதான். உங்கள் கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை உண்டு.

நான் அழைப்பு விடுத்தவர்களில் உதயச் செல்வி, நிலா, மதுமிதா, ராம்கி, ராகவன் தம்பி ஆகியோர் எழுத இசைந்திருக்கிறார்கள்.உண்மைத் தமிழன் எழுத ஒன்றுமில்லை என நாசூக்காக மறுத்துவிட்டார். அண்ணாக்கண்ணன், பாலுமணிமாறன் ஆகியோரிடமிருந்து எதிர்வினைகள் ஏதுமில்லை. இதுதான்
இன்றைய எழுத இசைந்தவர்களுக்கும், எழுத இயலாது போனவர்களுக்கும் கூட நன்றி
. .


17 comments:

  1. மாலன் சார்,
    இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறில் அலெக்ஸ் "வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்? என்ற தலைப்பில் ஒரு பதிவுப் போட்டு
    இருந்தார். அதில் நான் போட்ட கமெண்ட் இது.

    //காலையில் பார்க்கிறேன் கிராண்ட் பிரிக்ஸ், பார்முலா ரேசில் கலந்துக் கொண்டவர், அலட்டிக் கொள்ளாமல் எட்டுப் போட்டு இருக்கிறார் :-) (ஜெசிலாவுக்கும், அருணாவுக்கும் நன்றி) தமிழ் பதிவுகளின் வளர்ச்சி ஆரோக்கியமாகவே உள்ளது.//

    ஏதோ கத்துக்குட்டிகள் விளையாட்டு என்று ஒதுங்கிப் போகாமல் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டது, என்னைப் போன்று பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. நீங்கள் எழுதியதை யாராவது கிரிடிசைஸ் செய்வார்கள் என்று நினைத்தேன், நடந்துவிட்டது. மூன்று வருட வலைப்பதிவு அனுபவம் தந்த பாடம். இருக்கட்டும், இது எல்லாம் உங்களுக்கு/ நமக்கு புதியதா என்ன :-)

    ReplyDelete
  2. அவ்வப்போது சலசலத்தாலும், முன்பிற்கு இப்போது, தமிழ் வலையுலகம் பண்பட்டிருப்பதாகத்தான் படுகிறது. சொல்ல வேண்டியதைத் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அன்பிற்கினிய மாலன்,

    காலையில் உங்களின், ஓகையின் பின்னூட்டங்களைப் பிரசுரித்துவிட்டுச் சென்றவள் இப்போதுதான் தமிழ்மணத்தின் மறுமொழியப்பட்ட ஆக்கங்களில் வந்து சேர்ந்துவிட்டதா எனப் பார்க்கக்கூட வரமுடிந்தது. அப்போதுதான் எதேச்சையாய் இப்பதிவைப் பார்த்தேன். பெயரிலி என் பதிவில் இட்ட கடைசிப் பின்னூட்டத்தில் "நா.கோவிந்தசாமி பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம்" என எழுதியிருந்ததை வெறுமனே அவருக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத்தான் நினைத்தேன். ஏனென்றால் உங்களின் எட்டுப் பதிவுகளை நான் வாசிக்கவில்லை. முதல் பதிவை எட்டிப்பார்த்தேன். அவசரத்தில் பாதியிலேயே நகர்ந்திருந்தேன். அவர் பின்னூட்டத்திலிருக்கும் அரசியலை இப்போதுதான் அறிகிறேன். இதை அவர் எதற்குச் செய்தார் எனத் தெரியவில்லை.

    நான் நேற்றிலிருந்து என் எல்லாப் பின்னூட்டங்களிலும் என் நேரப் போதாமையையும் சொல்லிவந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்பதிவில் உங்கள் கடைசிப் பின்னூட்டத்திற்கு வருத்தத்திற்குப் பதிலாகச் சொல்வதிலும் நிறைய இருக்கின்றன. என்றாலும் இப்போதைக்கு உங்கள் வருத்தங்களுக்கு நானும் ஒரு காரணம் என்ற முறையில் அவசரமாய் ஒரு மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

    இங்கே நீங்கள் நினைப்பது மாதிரி லட்சியப் பதிவர்கள் என்றும், பரிசுத்தமானவர்கள் என்றும் அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் ஒன்று இருக்கிறதா என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. ஏனென்றால் எல்லோரும் தான் சுத்தமானவர்கள் என்று சொல்லிக்கொள்வதைச் சரியாகக் கடைப்பிடிப்பவர்கள்தானா என்பதை ஒவ்வொருவர் பதிவுக்கும், அவர் எங்கெங்கு என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதையும், பின்னூட்டம்கூட எழுதாமல் திரைமறைவில் என்ன அரசியல் செய்கிறார் என்பதையும் அறிந்துவிடமுடியுமென்று நான் நினைக்கவில்லை. இதில் ஒரு எள்ளலுக்கு (அது வருத்தமளிக்கக்கூடியது என்பதிலும், கண்டிக்கப்படவேண்டியது என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை) நீங்கள் இவ்வளவு விசயங்களை முன்வைக்க வேண்டி இருக்கிறது!

    என் பதிவில் என்மீதான தாக்குதல் ஒன்று பற்றி எழுதியிருக்கிறேன். அதைப் படித்துப்பாருங்கள். அதிலிருந்து உங்களுக்குத் தெரியப்போவதைவிட அதை எழுதியதால் என்ன நடந்தது என்பதை நான் எங்கும் எழுதிவைக்கவில்லை நேரவிரயமென்று. அப்போது அரசியல் நடத்தியவர்களில் சிலர்கூட இப்போது ஓடோடி வந்து பரிசுத்தம் பற்றிப் பேசலாமாயிருக்கும். அதற்குக் காரணம் நீங்கள் இங்கே முன்வைத்திருக்கும் விசயங்களின் தார்மீகக் காரனங்களாக மட்டும் இருக்குமென்றில்லை. அதற்குக் காரணம் அவர் வேறெங்கோ வேறெதற்கோ அடிவாங்கிய அரசியலாகவோ, அதற்காக இப்போது இன்னொருவரை அடித்து வீழ்த்தத் துடிக்கிற அரசியலாகவும் இருக்கலாம் என்பதை நான் சொல்லிப் புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளவர் அல்ல நீங்கள். இதில் ஆண், பெண் பதிவர்கள் என்ற பேதமும் இல்லை என்பது உபகுறிப்பாய்.

    சமீபத்தில் ஒரு பதிவில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது "எங்கு என்ன பூக்குமென்று யாருக்குத் தெரியும்?". இது எல்லோருக்கும் பொருந்தும். நன்றி மாலன்.

    ReplyDelete
  4. அனுபவங்களைச் சொன்னதுக்கும், அதுக்கும்மேலான சில உண்மை அறிவுரைகள் சொன்னதுக்கும்
    நன்றி.

    வலைப்பதிவுகள் ஆரம்பக் கட்டத்துலே இருக்கறதாலே இப்படி சில கொந்தளிப்புகள் இருக்கு. பதிவர்கள்
    எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆர்வம்தான் காரணம். நாளாக ஆக இது அடங்கி, நல்ல தரமான பதிவுகள்
    வரத்தொடங்கும். அதுவரை எல்லாரும் காத்திருக்க வேணும். எல்லாரும் பொறுமை என்னும் நகையை
    அணிஞ்சுக்கலாம். இப்பத்தான் ஆண்களும் நகை போட்டுக்கறது ஃபேஷனா ஆயிருக்கே:-)

    ReplyDelete
  5. வாங்க மாலன் சார்!

    ReplyDelete
  6. மாலன்,
    திரும்ப வலைபதிவுலகத்துக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி...

    நீங்கள் சொன்ன பதிவு/பின்னூட்ட நாகரீக்கமெல்லாம் வலைப்பதிவுலகில் வந்தா ரொம்ப நல்லாயிருக்குமே..

    இப்ப என்ன.. செங்கோட்டை பாசஞ்சர் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் போற மாதிரி எல்லாம் கலந்த ஒரு அனுபவம் தான் கிடைக்குது..

    நீங்க சொன்ன மாதிரி தனி நபர் தாக்குதல்கள் அதிகம்...

    கேட்டா கருத்துச் சுதந்திரம்-னு வாங்க.....

    என்றாவது விடியும்.. தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் வானளாவ இருக்கிறது..

    வாழ்த்துக்கள்..

    சீமாச்சு...

    ReplyDelete
  7. வணக்கம். நீங்கள் கூறியவற்றில் பல கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். முக்கியமாய் மாற்றுக்கருத்துடையவரை எதிரியாகவே பார்க்கும் சகிப்புத்தனமை இல்லாமை மற்றும் ஒருவருடைய கருத்துக்களை devalue செய்ய அந்த மனிதரையே Devalue செய்வது இது போன்றவைகள் எல்லாமே முகத்திலறையும் நிஜம்.

    என்ன செய்வது. உலகம் முழுதுமே அழுக்காக இருக்கிறது. அவன் சரியில்லை, இவன் சரியில்லை அவன் எழுத்து குப்பை, இவன் படம் கேவலம் என்று சொல்லிக் கொண்டு, தனது பதிவில், ஆபாச வார்த்தைகளை உபயோகித்துப் பதிவு போட்டும் அல்லது கேவலமான அல்லது மட்டமான, பதிவிற்கு சம்பந்தமேயில்லாத தனி நபரை அசிங்கப்படுத்தும், அனானியின் பின்னூட்டங்களை உலா வர அனுமதித்தும் வருகின்றனர். மற்றவர்களை உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு என்ன வேணாலும் சொல்லுவோம். ஆனால் நாங்கள் மாற மாட்டோம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    சொல்லப்போனால் ஒரு சில பதிவுகளில் காணப்படும் சம்பந்தமேயில்லாத மோசமான பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இதை அவரது பதிவில் அனுமதித்ததன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. ஒருவேளை "நான் சகிப்புத்தன்மை அதிகமுடையவன், பார் இந்த பின்னூட்டத்தை கூட முறுவலோடு ஏற்றுக்கொள்கிறேன்" உலகிற்கு சொல்ல நினைக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது.

    இது இணையம், இப்படித்தான் இருக்கும். கட்டுடைத்தல், உனக்கு சகிப்புத்தன்மை குறைவு, என்று ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொன்னாலும், நான் சார்ந்த ஒரு தளம் சற்றே தரம் தாழ்ந்திருக்கிறதே என்று கழிவிரக்கம் கொள்வது என் தனிப்பட்ட உரிமையாகையால்......

    ReplyDelete
  8. Anonymous11:04 am

    Welcome back Maalan.

    Inaiyaththil - Thamizh - some details were covered here.

    If you have time, please check out
    http://alexpandian.blogspot.com/2005/06/1.html

    and

    http://alexpandian.blogspot.com/2005/06/1a.html

    and
    http://alexpandian.blogspot.com/2005_06_12_archive.html

    ReplyDelete
  9. ""வீடு என்று எதை சொல்வீர்
    அதுவல்ல என்வீடு!!"

    என்று துவங்குவது போன்ற ஒரு கவிதை நீங்கள் எழுதியதாய் ஒரு கதையில் திரு.பாலகுமாரன் அவர்கள் குறிப்பிடுவார்.

    என் மனதில் தைத்த வரிகள் அவை.

    யாருமற்ற வேளைகளிலும்,பலர் நிறைந்திருக்கும் போதினுலும் என் மனதில் "இதுவல்ல என் வீடு! " என்ற வரி ஓடிக் கொண்டிருக்கும்...!!

    அக்கவிதையை பதிவீர்களா ? இங்கு??

    நன்றி. மீண்டும் பதிய துவங்கைமைக்கு...!!

    வாழ்க ! வளமுடன்!!

    ReplyDelete
  10. //அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வலைப்பதிவுகளை எழுதுபவராகவோ, படிப்பவராகவோ இருப்பதில்லை என்பதால் அவருக்கு பதிலளிக்க வாய்ப்பே தரபடாமல் இந்தத் தாக்குதல் தொடரப்படுகிறது. அவர் பதிலளிக்க மாட்டார் என்ற தெம்பில் மேலும் மேலும் அவர் மீது எள்ளலும் கேலியும் தொடர்கிறது. சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை//

    200% correct.

    You only introduced me into Blogger world.I've come up with new post agin only because of you.

    http://rajniramki.blogspot.com/2007/07/blog-post_08.html

    If you are not with blogger world, count me also.

    ReplyDelete
  11. நம்முடைய எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கும், இருக்க வேண்டும் என்ற கொள்கையை நம்புகிறவன் நான்.

    ஆனால் அந்த மாற்று கருத்தை சிலர் பதிகின்ற விதம் சில சமயங்களில் என்னையும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் செய்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

    தரக்குறைவாகவும், தனிமனித நோக்கங்களை குறை கூறியும் (சில சமயங்களில் hitting below the belt என்பார்களே அதுபோல்) எள்ளி நகையாடியும் பதிகின்றபோது என்னை நானே சில சமயங்களில் இழந்துபோயிருக்கிறேன். எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறேன். சில சமயங்களில் என்னுடைய பக்க வாதத்தையே முன் வைப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறேன்.

    வாதப் பிரதிவாதங்கள் நியாயமாக நடைபெறும் பட்சத்தில் அதில் தவறேதும் இல்லை என்பது என்னுடைய கருத்து. ஆனால் அதற்கு மனப்பக்குவம் தேவை. அது நம்முடைய வலைப்பதிவர்கள் சிலருக்கு இல்லாமற் போனது வருந்த வேண்டிய விஷயம்தான்.

    என்ன செய்வது? துளசி அவர்கள் கூறியுள்ளதுபோல காலப்போக்கில் இதில் மாற்றம் தோன்றலாம்...

    காத்திருப்போம் விடிவு காலம் விரைவில் வரும் என்று...

    ReplyDelete
  12. பதிவர்களிடையே சுய தணிக்கை இருந்தாலே ஆரோக்கியமான சூழல் உருவாகும். நம் பதிவை வாசிக்க வரும் வாசகனுக்கு தரமான வாசிப்பை நாம் தரவேண்டும் என்ற எண்ணம் மிகவும் அவசியம். என்ன இது போன்று கொள்கைப் பிடிப்போடு இருந்தால் சில அசெளகர்யங்களும் உண்டு. ஒன்று பரவலான அறிமுகம் கிடைக்காமல் போகலாம். எதிர்பார்த்த எதிர்வினைகள்/பின்னூட்டங்கள் கிடைக்காது போகலாம். என் பதிவில் இதுவரை பதிவிற்கு சம்பிந்தமில்லாத பின்னூட்டங்களை வெளியிடாமலே இருந்திருக்கிறேன். குறைவான பின்னூட்டங்களோடு, ஓரளவு கவனிப்போடு நிறைவாக இருக்கிறேன். :-).

    நகைச்சுவை/கும்மிப் பதிவுகள் பாவகரமான செயல்கள் இல்லை. எனினும் கவனிக்கப்பட வேண்டிய பல பதிவுகள் இந்த கும்மியலைகளினால் அடித்துச் செல்லப்படுவது வருந்ததக்க ஒரு நிகழ்வுதான். இலட்சிய அரங்கு என்பதை எளிமைப்படுத்தி பதிவுகளை/பின்னூட்டங்களை வகைப்படுத்துவதில் மாற்றங்கள் செய்தால் உபயோகமாக இருக்கும். வாசிப்பைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சுதந்திரம். அதை புனித பிம்பக் கட்டுக்குள் அடைப்பது தேவையற்ற ஒன்று.

    நா.கோவிந்தசாமி போன்றோரின் அரும்பெரும் உழைப்பை உங்கள் பதிவின் வாயிலாக அறியமுடிந்தது மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  13. Anonymous1:59 pm

    உங்களுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகக்கூடிய எனது ஆதங்கப்பதிவு

    http://veyilaan.wordpress.com/2007/05/25/

    ReplyDelete
  14. உங்கள் வலைப்பூவை இப்பொழுதுதான் முதன்முறை படிக்கிறேன். நீங்கள் மூத்தவலைப்பதிவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வலைப்பூவைத் தொடருங்கள். ஏனென்றால் இதுவும் ஒருவகை ஊடகம். உங்களைப் போன்ற பிரபல ஊடகர்கள் இங்கும் வருவது இருவகை ஊடகங்களுக்கும் பாலம் உருவாக்கும். நீங்கள் சொன்ன கட்டுப்பாடுகளுக்குட்பட்டே இயங்குங்கள். அது போதும்.

    வலைப்பூ என்பது இந்த உலகத்தைப் பிரதிபலிக்கிறது என்றே நினைக்கிறேன். உலகத்தில் என்னென்ன தவறுகள் சரிகள் நடக்கிறதோ அதெல்லாம் இங்கும் இருக்கிறது. sampling theory. என்ன இங்கு கூட்டம் குறைவாக இருப்பதால் வினைகளும் எதிர்வினைகளும் நமக்கு எளிதாகத் தெரிந்து விடுகின்றன. உலகத்தில் நமக்கு எல்லாம் தெரிவதில்லை. அதே நேரத்தில் எதிர்க்கருத்தை எதிரியின் கருத்தாக நோக்காமை என்ற ஆரோக்கிய சூழல் கண்டிப்பாக வளர வேண்டும். வரும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  15. //சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை.// கண்டிப்பாக அப்படியல்ல பேசாமல் போனால் உற்சாகம் பெறுகாது மாறாக 'மலையை பார்த்து ஞாளி குரைக்கும்' நிகழ்வாக மாறிவிடும். வசைபாடும் பின்னூட்டங்களை பிரசூரிக்காமல், அனானிகளை கண்டு கொள்ளாமல் 'செவிட்டு தவளையாக' நல்லதை மட்டும் பார்த்து, கேட்டு, பேசி வந்தால் வாக்குவாதம் தொடராமல் 'பழம் புளித்ததாக' திரும்பி சென்றுவிடுவர்களே தவிர வசை தொடராது. நீங்கள் சொன்னது போல் சகிப்புதன்மையும் பொறுமையும் இருந்தால் வென்றுவிடலாம்.

    உங்கள் பதிவில் எங்கேயும் நான் பதிவதை நிறுத்த போகிறேன் என்று சொல்லாத போது ராம்கி ஐயா //If you are not with blogger world, count me also.// இப்படி எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை. கண்டிப்பாக அதே சகிப்புதன்மையின் துணையோடு தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  16. மாலன்,

    தமிழ் வலைப்பூக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தமிழ் அரசியல், சமூக சூழலின் சில மோசமான கூறுகளை தமிழ் இணையம் பிரதிபலிப்பதாக தாங்கள் கூறியிருப்பது, இணையத்தில் எழுத ஆரம்பித்து இத்தகைய முத்திரை குத்துதல் மட்டும் அப்பட்டமான சாதீய வெறுப்பியல் வசவுகளால் காணாமல் போன படைப்பாளிகளின் மௌனக் குரல்களை ஒரு வகையில் எதிரொலிப்பதாக உள்ளது.

    நமது ஞான மரபில், விவாதம் என்பது புதிய விஷயமல்ல. ஆதி சங்கரர் காலத்திய விவாதங்களில் யாருடைய மாலை சீக்கிரம் வாடிவதங்குகிறதோ அவர் தோற்றதாகக் கொள்ளப்படுவார். இதில் ஒரு அழகிய பாடம் உள்ளது: தன் சிந்தனையை சூடாக்கி அந்த உஷ்ணத்தை எதிராளியை நோக்கித் திருப்ப நினைப்பவருக்குத் தான் இது நிகழும், இத்தகைய செயலே அவரை விவாதத் தளத்தில் இருந்து நீக்கி விடுகிறது! தமிழ் இணையம் எப்போது இந்தப் பாடங்களைப் படிக்கப் போகிறது??

    // தனிந்பர் துதிகளுக்கோ, தாக்குதல்களுக்கோ இடமளிக்காத பதிவுகளை, சுயக் காதலைத் துறந்த பதிவுகளை, ஜல்லியடிக்காத,
    கும்மியடிக்காத சாரமுள்ள பதிவுகளை மட்டும் அனுமதிக்கிற ஒரு திரட்டியை உருவாக்கமுடியாதா? //

    இணைய நண்பர்கள் வேறு சிலரும் சமீபகாலமாக எண்ணிவருவது தான் இது. ஒரு பதிவர், தனக்காக இப்படி ஒரு திரட்டியை உருவாக்கி, அதைப் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக் நண்பர் எஸ்.கே "தமிழ் பாரதி" என்று உருவாக்கியிருக்கிறார் -
    http://www.pageflakes.com/skichu/11059236
    இந்த ஐடியாவை விரிவாக்கி ஒரு பெரிய திரட்டியாகக் கூட மாற்றும் சாத்தியம் இருக்கிறது.

    // 'If you are not with me you are against me' என்ற பயங்கரவாதக் குழுக்களின், Fundamentalist குழுக்களின் மனோபாவம் //

    உண்மையில் இது பைபிளில் உள்ள, இயேசு கூறுவதாக வரும் ஒரு வாசகம் (Matthew 12:30). பயங்கரவாத மனநிலையை எவ்வளவு சுருக்கமாக. தெளிவாக சித்தரிக்கிறது பாருங்கள் :))

    ஒரு கூற்று அது பயன்படுத்தப் படும் இடத்திற்கேற்ப எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் படமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    ReplyDelete

Comments irrelevant to the posts will not be published. Admins decision is final . இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்